Tuesday, September 19, 2017

வரலாற்றுக்கே துரோகம் - புரிகிறதா ஜெயமோகன்?




கீழடி ஆய்வு பற்றி அரசியல்வாதிகள், மேடைப் பேச்சாளர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள்

தமிழ் பாசிஸ்டுகள்,
அரை வேக்காடுகள்,
அசடுகள்

என்று தமுஎகச அமைப்பை நேரடியாக குறிப்பிடாமல் ஆனால் அவர்களைப் பற்றி ஜெயமோகன் கடுமையாக வசை பாடியிருந்தார்.  

 நேற்றைய தீக்கதிரில் தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் விரிவான நேர்காணல் அளித்திருந்தார். மத்தியில் ஆளும் பாஜக கீழடி ஆய்வை மூடுவதற்கு ஸ்ரீராமன் மூலம் முயல்வதை அம்பலப்படுத்தியிருந்தார்.

வரலாற்றில் துரோகத்தைப் பார்த்துள்ளோம். வரலாற்றுக்கே துரோகம் இழைப்பவர்கள் இவர்கள் என்ற அவரது விமர்சனத்தை துரோகச் செயலுக்கு முட்டுக் கொடுத்து எழுதிக் குவித்த ஜெயமோகனுக்கு அர்ப்பணிக்கிறேன்.

இனி நேர்காணலை படியுங்கள். 

 கீழடி: மூன்றாம் கட்ட ஆய்வும் முடித்து வைக்கும் ஏற்பாடும்


கீழடி மூன்றாம் கட்ட ஆய்வு முடிவடைந்துள்ளதாகவும் செப்டம்பர் 30 அன்றுடன் ஆய்வுக்காலம் முடிவடைவதாகவும் இந்த ஆய்வில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை என்றும் கீழடி அகழாய்வை இத்தோடு சீர்குலைத்து மூடுவிழா நடத்தும் நோக்கத்துடன் அகழாய்வுப் பணி இயக்குநர் பு.சு.ஸ்ரீ ராமன் ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் பின்னணியையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தி, கீழடியைப் பாதுகாக்க அணிதிரள்வோம் வாரீர் என அழைக்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் 

அவரது நேர்காணல்.
கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வின் முடிவுகளை அதன் பொறுப்பாளர் பு.சு.ஸ்ரீராமன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான உங்களது கருத்தென்ன?

மூன்றாம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டவுடன் கீழடி அகழாய்வு மையம் ஒரு இராணுவமுகாம் போல மாற்றப்பட்டது. அங்கு என்ன நடக்கிறது என்று எந்தவிதமான தகவலும் ஊடகத்துக்கும், பார்வையாளருக்கும் எந்தக்கட்டத்திலும் வெளியிடப்பட வில்லை. ஒளிப்பதிவு கருவிகள் எதுவும் அகழாய்வுக்குழிகளை நெருங்காமல் அதன் பொறுப்பாளர் ஸ்ரீராமன் பார்த்துக் கொண்டார். இப்பணியில் ஈடுபட்டுள்ள கடை நிலை ஊழியர்கூடபார்வையாளர்களிடம் பேச அவர் அனுமதிக்க வில்லை. சரி, என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என்றுதான் நாங்களும் காத்திருந்தோம். இப்பொழுது முழு உண்மையும் வெளிவந்து விட்டது.

இந்த ஆண்டின் ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டுள்ளார். என்ன நோக்கத்துக்காக அமர்நாத் இராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு இவர் அப்பணிக்கு அமர்த்தப்பட்டாரோ அந்த நோக்கத்தை தெளிவாக நிறைவேற்றியுள்ளார். “இவ்விடத்தில் (கீழடியில்) கட்டிடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று தெரியவருகிறது” என்ற முடிவினை அறிவித்துள்ளார். மத்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தது போல கீழடி அகழாய்வை இழுத்துமூடவேண்டிய வாசகத்தை ஸ்ரீராமன் எழுதி முடித்துள்ளார். அவரை கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவடைந்தது.

இந்த ஆண்டு நடந்த ஆய்வினைப் பற்றிய உங்களின் கருத்தென்ன?

மூன்றாம் ஆண்டு அகழாய்வுக்கு அனுமதி மறுப்பு,பின்னர் ஆய்வின் தலைவர் அமர்நாத் இராமகிருஷ்ணன் இடமாற்றம், ஸ்ரீராமன் நியமனம், ஆய்வினை துவக்கி வைக்க வந்த மத்திய அமைச் சர்களின் பேச்சு - எல்லாமே பட்டவர்த்தனமான அரசியலாக அமைந்ததை நாம் பார்த்தோம்.
இதன் தொடர்ச்சியாகத் தான் இந்த ஆண்டு ஆய்வின் செயல்பாடு அமைந்துள்ளது என்பதையே ஸ்ரீராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து அறிய முடிகிறது. இந்த ஆண்டு அகழாய்வுப் பணி நடந்த தன்மையை எடுத்துக் கொள்வோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் 2500 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு நடந்தது. ஆனால் இந்தாண்டு ஆய்வு நடத்தப்பட்டதென்னவோ வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே.இதற்கு ஸ்ரீராமன் சொல்லும் காரணம் ஆய்வு துவங்கியதே ஐந்து மாத தாமதத்தில் தான் என்பது. முதலாமாண்டு ஆய்வு மூன்று மாத தாமதத்தில் தான் துவங்கியது. (மார்ச் 2-2015) ஆனால் அப்படியிருந்தும் அமர்நாத் இராமகிருஷ்ணனால் 43 அகழாய்வுக் குழிகளை தோண்ட முடிந்தது. ஆனால் ஐந்துமாத தாமதத்தில் துவங்கிய ஸ்ரீராமன் வெறும் 10 குழியை மட்டுமே தோண்டியுள்ளார்.

இங்கு தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தியே உள்ளது. கடந்த ஆண்டு அகழாய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை சராசரியாக 80 க்கும் மேல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 25க்கும் மேல் இல்லை. எந்த ஒரு நாளும் 80 பேர் பணியில் அமர்த்தப்படவில்லை. இது தற்செயலல்ல, இதுதான் அவர்களின் நோக்கமே. இதில் மிக முக்கியமான விசயம் என்னவென்றால், இந்த ஆண்டுக்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னும், நிதி ஒதுக்காமல் இருந்ததால், நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் குரல் கொடுத்த தன் விளைவாக மிக அதிக நிதி இவ்வாண்டு தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டில் 43 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு 10 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது.

மழையின் குறுக்கீடு அகழாய்வுக்கு இடையூறாக இருந்ததாக ஸ்ரீராமன் தெரிவித்துள்ளாரே?

இதைவிட அபத்தமான ஒரு காரணத்தை யாரும் சொல்லிவிட முடியாது. அமர்நாத் ஆய்வு மேற்கொண்ட இரண்டு ஆண்டும் கீழடியில் மழையே பெயவில்லையா? இதே செப்டம்பர் மாதத்தில் தானே அவரும் ஆய்வினை முடித்தார். இந்த ஆண்டு மட்டும் மழையை எப்படி காரணம் சொல்லமுடியும். முதலில் கூறியதைப்போல உரிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் திட்டமிட்டே வேலையை மந்தப்படுத்தும் செயல் முதல் நாளில் இருந்து நடைமுறையானதை கீழடியில் உள்ள அனைவரும் அறிவர்.இதில் மிகுந்த கவலைக்குரிய விசயம் என்ன வென்றால் இவ்வாண்டு அகழாய்வு செய்யப்பட்ட ஒரு குழிகூட இயற்கை மண்படிமம் (கன்னி மண் – Virgin soil) வரை தோண்டப்படவில்லை. அதாவதுஎந்த ஒரு அகழாய்வுக் குழியும் முழுமையடைவில்லை என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. ஒரு குழியைக்கூட முழுமையாக தோண்டாமல் தான் பல முடிவுகளை ஸ்ரீராமன் அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டுகளில் இயற்கை மண் அடுக்குகளுக்கு கீழே மணல் அடுக்குகளும் கண்டறியப்பட்டன. அதை வைத்துத்தான், வைகை நதி முதலில் இப்பகுதியில் ஓடியுள்ளது; பின்னர் நதியின் போக்கு மாறியவுடன் வளமிக்க வண்டல் மண் படிவம் தோன்றியுள்ளது; அந்த வளமிக்க மண்ணின் பரப்பில் தான் இந்நகரம் உருவாகியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறினர். 

இவ்வாண்டு ஆய்வினில் சேகரிக்கப்பட்ட கரித்துகள் மாதிரிகளை கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி காலநிர்ணயம் செய்யப்படும் என்று ஸ்ரீராமன் கூறியுள்ளது பற்றி உங்களது கருத்தென்ன?

ஒரு குழி கூட இயற்கை மண்படிமம் வரை தோண்டப்படவில்லை என்பதை அவரே தெரிவித்துள்ளார். அப்படியென்றால் இவர் அகழாய்வுக்குழியின் எந்த நிலையில் எடுக்கப்பட்ட கரிமத்துகளை மாதிரிக்கு அனுப்பப் போகிறார் என்ற கேள்வி எழுகிறது.குழியின் மேற்புறத்தில் இருக்கிற மாதிரிகளை அனுப்பி கால நிர்ணயத்தை மிக அருகாமையில் கொண்டுவருவதற்கான வாய்ப்பும் இதில் உள்ளதாகவே கருதுகிறேன்.கடந்த ஆண்டு அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு,20 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப மத்தியஅரசிடம் அனுமதி கோரியது. ஆனால் மத்திய அரசுகொடுத்ததோ இரண்டு மாதிரிகளை ஆய்வு செய்வ தற்கான அனுமதிதான். மீதமுள்ள பதினெட்டு மாதிரிகள் இன்னும் ஆய்வு செய்யப்படாமல் இருக்கின்றன.அதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் இந்த ஆண்டு ஸ்ரீராமன் குழு சேகரித்துள்ள மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பக்கூடாது. தவறான கால நிர்ணயத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை அனுமதிக்க முடியாது.

கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கட்டு மானங்களின் தொடர்ச்சியோ அல்லது அதனுடன் தொடர்புடைய எவ்விதக் கூறுகளோ இவ்வாண்டு ஆய்வு செய்த குழிகளில் கிடைக்கவில்லை. எனவே இவ்விடத்தில் கட்டிடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று ஸ்ரீராமன் தெரிவித்துள்ளாரே?

இவர்களின் நோக்கம் முழுமையாக வெளிப்பட்டு நிற்கும் இடம் இதுதான். கடந்த ஆண்டு மிக விரிந்த கட்டுமான அமைப்பு கண்டறியப்பட்டது. அது குடியிருப்பல்ல; தொழிற்கூடம், ஈனுலைகள், மூன்று விதமான வடிகால்கள், சதுரவடிவ தொட்டிகள், வட்டவடிவத் தொட்டிகள் எனப் பலவும் இருந்ததைப் பார்த்தோம். அந்த கட்டுமானத்தின் தொடர்ச்சி தென்திசை நோக்கி பூமிக்குள் போயிருந்தது. 

அதன் தொடர்ச்சியை கண்டறிய வேண்டும் என்றால் தென்திசையில் குழி அமைத்திருக்க வேண்டும். ஆனால் தென் திசையில் ஒரு குழி கூட அமைக்கப்படவில்லை. அதற்கு நேர் எதிராக வடதிசையில் தான் இவ்வாண்டின் அனைத்துக் குழிகளும் தோண்டப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கட்டு மானத்தின் பிற மூன்று பகுதியில் தோண்டாமல், கட்டுமானப்பகுதியின் தொடர்ச்சி இருக்கும் தென்திசை யில் தோண்டாமல், கட்டுமானப் பகுதியின் தொடர்ச்சி இல்லாத பகுதியில் மட்டும் தோண்டியது ஏன் என்பதுதான் முக்கியமான கேள்வி.

அது மட்டுமல்ல, முதலாமாண்டு ஆய்வு மூன்று இடங்களில் தோண்டப்பட்டது, இரண்டாமாண்டு ஆய்வு ஆறு இடங்களில் தோண்டப்பட்டது. ஆனால் இவ்விரு ஆண்டிலும் கிடைத்த நிதியை விட இவ்வாண்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டும் ஒரேஒரு இடத்தில் மட்டும் தோண்டப்பட்டது ஏன்?

100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மேட்டில்எவ்வளவோ இடங்களிருந்தும் இவர்கள் தோண்ட வில்லை. கட்டிடத்தின் தொடர்ச்சியற்ற அந்த குறிப்பிட்டஇடத்தில் மட்டுமே தோண்டியுள்ளனர். அங்கும் முழுமையாக இயற்கை மண்படிமம் வரை தோண்டவில்லை.அப்படியிருக்க, இவ்விடத்தில் கட்டிடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்பெறவில்லை என்று ஆய்வாளர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ளதென்பது என்ன நோக்கத்துக்காக இவர் நியமிக்கப்பட்டாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

அருங்காட்சியம் அமைத்தல், கட்டுமானங்களை பொதுப்பார்வைக்கு கொண்டுவருதல் ஆகியப் பணிகள் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்படும் என்று ஸ்ரீராமன் கூறியுள்ளாரே?

கள அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் நிலம் மே மாதமே மாவட்ட நிர்வாகத்தால் தரப்பட்டுவிட்டது. ஆனால் இன்று வரை, அதனை ஏற்றுக்கொண்டு நிர்வாக நடவடிக்கையைக் கூட மத்திய அரசு செய்யவில்லை. அப்புறம் எங்கே இருந்து அருங்காட்சியம் அமைக்கப்படும்?

மூன்றாம் கட்ட அகழாய்வின் விபரங்களை ஆய்வாளர் ஸ்ரீராமன் தெரிவித்துள்ள பின்னணியில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

திராவிட நாகரிகத்தின் மிகமுக்கிய அடையாளம் கீழடி. உலகின் மிகச் சிறப்புமிக்க இலக்கியத் தொகுதிகளில் ஒன்றான சங்க இலக்கியம் சொல்லும் மனித வாழ்வின் வளமையை நிரூபிக்கும் ஆதாரம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் கண்டறியப்பட்டுள்ள இத்தொல்லியல் மேடு என்பது நமது வரலாற்றுக்கு மிக மிக முக்கியமான இடம்.இந்துத்துவா அரசியல் முழுவிசையோடு வரலாற்றின் கட்டமைப்புகளை குலைத்துப் போட்டுக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் கீழடியைப்பாதுகாப்பது, அதன் ஆய்வினை அறிவியல்பூர்வமாக முன்னெடுத்துச் செல்வது மிகமுக்கியம். 

தமிழகத்தில் உள்ள பலரும் சந்தேகப்பட்டது போலவே, இவ்வாண்டு அகழாய்வு என்பது அவர்களின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் பகுதியாக அமைந்துள்ளதைப் பார்க்கிறோம். ஒரு அகழாய்வில் எதுவும் கிடைக்கவில்லை என்று நிரூபிக்க என்னனென்ன வழிகளுண்டோ அத்தனை யும் இந்த ஆண்டு செய்து முடித்துள்ளனர்.எனவே மிகுந்த விழிப்புணர்வோடு இதனை அணுகவேண்டும். அகழாய்வு தொடரவேண்டும் என்பதைவிட திசைதிருப்பவிடக் கூடாது என்பதிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஸ்ரீராமன் போன்ற ஆய்வாளர்கள் ஆய்வினை திசை திருப்பும் வேலையைச் செய்து முடிப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதை அனுமதிக்கக்கூடாது.

2 comments:

  1. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. பழனிச்சாமி அரசுக்கு 25 இலட்ச்ம ஒரு பெரியதொகையா? தமிழக அரசே ஆய்வை தொடரலாம். நம் மண்ணை நாம் தோண்ட இன்னொருவன் ஆணை எதுக்கு?

    ReplyDelete