Friday, September 30, 2016

பூங்காற்று திரும்புமா - ரசிகன்யா!!!




இளங்கோ என்ற முக நூல் நண்பர், எல்.ஐ.சி நிறுவனத்தில் வளர்ச்சி அதிகாரியாகவும் பணியாற்றுபவர், முதல் மரியாதை படத்தின் "பூங்காற்று திரும்புமா" பாடலை நுணுக்கமாக ஆராய்ந்து அனுபவித்து எழுதியுள்ளார். அதை படிக்கிற போதே பாடலை கேட்ட உணர்வு உருவானது. 

அவர் எழுதியதை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தோடு அப்பாடலின் இணைப்பையும் அளித்துள்ளேன். படித்து விட்டு பாடலையும் பார்க்கவும். 

நல்லதொரு அனுபவத்தை அளித்த நண்பர் இளங்கோவிற்கு நன்றி

 
படம்: முதல் மரியாதை
பாடல்: பூங்காத்து திரும்புமா என் பாட்டை...
எழுதியவர்: வைரமுத்து
பாடிய்வர்: மலேசியா வாசுதேவன், ஜானகி
இசை: இசை ஞானி


தன் மனைவியின் கெட்ட குணங்களாலும் நடத்தை சரியின்மையாலும் உள்ளுக்குள் புழுங்கி மன அழுத்தத்தில் இருக்கும் ஒரு மனிதரின் உணர்வுகளை மயிலறகினிலே வருடுவது போல் தேற்றிட, ஆன்மாவின் இசையை நமக்கு வழங்கிட ஞானியைத் தவிர நமக்கு வேறு யாருமில்லை.

இப்பாடலின் சூழலுக்கு முன் தன்னுடைய மனைவி(வடிவுக்கரசி) பேசிய தகாத வார்த்தைகளால் மனம் வெறுத்துப் போய் இருக்கும் கணவன்(நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) தன் மன ஆறுதலுக்குப் பாடும் பாடலில் தாய்மை பரிவுக்கும் அன்புக்கும் ஏங்குவதை வார்த்தைகளினால் விவரிக்க முடியாத வலியை இயல்பான நடிப்பில் வெளிப்படுத்தி நம்மை சோகத்தினிலே மூழ்கச் செய்து விடுவார்.
நடிகர் திலகத்தை வெகு இயல்பான கிராமத்து மனிதர் போல் நம்மிடையே உலவச் செய்த இயக்குநர் இமயம் பாரதி ராஜாவை எப்படிப் பாராட்டுவது??

சிவாஜி அவர்கள் நடித்த அழியாக் காவியப் படைப்புகளால் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த அற்புத மாபெரும் கலைஞன். உடல் மொழியை பேச வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.

இப்பாடலில் சாய்த்து கிடக்கும் மரத்தின் மீது சிவாஜி ஆரம்பக் காட்சியில் அமர்ந்து இருப்பார். பாரதி ராஜாவின் இயக்கத்தின் திறமையில் வெட்டி வீழ்த்தபட்ட மரம் வெறுத்துப் போன மனதிற்கு சமம் என்பது போல் காட்சி அமைத்திருக்கும். 

மலேசியா வாசுதேவன் குரல் சிவாஜிக்கு
கனக் கச்சிமாக பொருந்தியிருப்பது இப் பாடலின் சிறப்பு. ஜானகியின் வெள்ளந்தி குரல் ராதா பாடுவது போலவே தெரியும். 


ஆரம்பத்தில் சிவாஜி தலை குனிந்தே
"பூங்காற்று திரும்புமா?
எம்பாட்டை விரும்புமா?"

பாடி பின் மரக் கிளையை மேலேக் கண்டு
தபேலா இசையுடன்

"பாராட்ட மடியில் வச்சுத் தாலாட்ட"
பாடி பிறகு ஆட்டுக் குட்டிகள் பாசம் கண்டு
"எனக்கொரு தாய் மடி கிடைக்குமா?"
என கண்களில் ஏக்கமும் மெல்லியப் புன்னகையுமாய் வாழ்ந்திருப்பார்.

பின் ராதா ஆற்றஙகரையோரம் ஆறுதல் தரும் ஜானகி குரலில்
"ராசாவே வருத்தமா?"
எனும் போது சிவாஜி அண்ணாந்து பார்க்க குயிலின் ஒசையை அற்புதமாக புல்லாங் குழலில் வடிவமைத்திருப்பார் ஞானியார். பின் மேகங்கள் விலகும் போது பியானோ இசையுடன் மன ஆறுதலுடன் ராதா பாடும்
"ஆகாயம் சுருங்குமா?
ஏங்காதே! அதை ஓலகம் தாங்காதே!
அடுக்குமா? சூரியன் கருக்குமா?"


உலகம் என்பதை ஒலகம் என கிராமத்து பெண் வெள்ளந்தித் தனமாக பாடுவது போல் அழகுற ஜானகி பாடியிருப்பார். அடுத்து வரும் நாதஸ்வர இசையானது சோகத்தினை ஆழமாக்கச் செய்து பின் பியானோவும், புல்லாங் குழலும் ஆறுதல் செய்து விடும்.

பிறகு சிவாஜி அவர்கள் பாடும்
"என்ன சொல்லுவேன்! என்னுள்ளம்
தாங்கலே! மெத்தை வாங்குனேன்!
தூக்கத்தை வாங்கலை!"


என்று எதிர் பாடுவது யார் என்று கூடத் தெரியாமல் தன் சோகத்தினை முக பாவனைகளால் வெளிப்படுத்தி அழகுற நடித்திருப்பார்ர். பின்னர் ராதா ஆற்றங் கரையோரம் அமர்ந்து சிவாஜி மனதுக்கு ஆறுதல் பதிலைப் போல் கன்னத்தில் கை வைத்து

இந்த வேதனை யாருக்குத் தான் இல்லை
உன்னை மீறவே ஊருக்குள் ஆள் இல்லை

என பாட பிறகு சிவாஜி அவர்கள்
"ஏதோ என் பாட்டுக்குப் பாடி
சொல்லாத சோகத்தை சொன்னேனடி"

கடைசியில் சொன்னேன(டி) அந்த ஒரு சொல்லினை ம.வாசுதேவன் அழகாக இழுத்துப் பாடியிருப்பார் பாருங்கள் ஆஹா!

பின் ராதா பாடும்
"சொக ராகம் சோகம் தானே"
ஜானகி சுக ராகம் என்பதை ஏதோ வட்டார வழக்கு பாஷை போல் சொக ராகம் என பாடியிருப்பார். அடுத்து சோகம் தானே... முடியாமல் ஜானகி இழுக்கும் வேளை குயிலின் ஓசையை புல்லாங்குழலில் வழங்கி நம்மைத் தேற்றியிருப்பார்.

பின் சிவாஜி அவர்கள் பாடும்
"யாரது போறது?"
என்றவுடன் ராதா பாடும்
"குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா?"


என பாடி பரிசலில் சென்றவுடன் பின் வரும் சரணம் முன்பு புல்லாங் குழலில் தபேலாவுடன் மனதை வருடியிருப்பார். அடுத்து எதிர்ப் பாட்டு பாடும் பெண்ணை காணும் ஆவலில் வேகமாக நடந்து மரத்தின் மீது கை வைத்து

"உள்ள அழுகிறேன்! வெளிய
சிரிக்கிறேன்! நல்ல வேஷந்தான்!
வெளுத்து வாங்குறேன்!"

எனப் பாட ராதா பதிலுக்கு
"உங்க வேஷந்தான்
கொஞ்சம் மாறனும்
இந்தச் சாமிக்கு
மகுடம் ஏறனும்"


பின் சிவாஜி அவர்கள் அந்தப் பெண்ணை காணும் ஆவல் அதிகமாகிட அவர் பாடும்
"மானே என் நெஞ்சுக்குப்
பால் வார்த்த தேனே!
பொன்னே! என் பார்வைக்கு
வா! வா! பெண்ணே!


என ஏக்கத்தில் கரைந்து மரத்தின் ஓரத்திவ் பாடிட ராதா ஜானகி குரலில்
"எசப் பாட்டு படிச்சேன் நானே"
என பரிசல் ஓட்டிக் கொண்டே குயிலின் ஒசையில் புல்லாங்குழல் இசையுடன் பாட

பின் சிவாஜி அவர்கள்
"பூங்குயில் யாரது?"
என பாடி மரத்தினைத் தாண்டி எட்டிப் பார்க்க
ராதா பாடும்
"கொஞ்சம் பாருங்க"
பெண் குயில் நானுங்க"


பாடி பரிசலை குனிந்து ஒரு சிறிய் கட்டையில் கட்டி கைகளால் தலைமுடி கோதி நிமிரும் போது பிண்ணணி இசை இன்றி குயில்களின் ஓசையுடன் சிவாஜி அவர்கள் தோளில் உள்ள துண்டை எடுத்து வேட்டியை சற்று தூக்கி நடந்து வந்து ராதா எதிரில்

"நீதானா அந்தக் குயில்?"(குக்குக்.... கூ..)
யார் வீட்டு சொந்தக்குயில்?"(குக்குக்....கூ)

(குககுக்....கூ) குயிலின் ஓசையை புல்லாங் குழலில் இசைஞானி நன்றாக வழங்கியிருப்பார்.

பிறகு சிவாஜி அவர்கள் மெல்லிய புன்னகைக்யுடன் புருவம் உயர்த்தி ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள்! ஆஹா எந்த வயதிலும் அசத்தும் இப்பபடி ஒரு மகா கலைஞனை இனி நாம் காண முடியுமா? வாய்ப்பே இல்லை. பிறகு 

"ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததே உலகமே மறந்ததே"


என பாடி சிவாஜி அவர்கள் ராதாவை கண்களால் மேலும் கீழும் அசைத்து புன்னகை செய்வார் பாருங்கள் கொள்ளை அழகு! பின் ராதா மெல்லிய நடையுடன் வெட்கய் யார்வையுடன் மெல்லிய சிரிப்புடன் தலையாட்டி 

"நான் தானே அந்தக் குயில்(குக்குகக் கூ)
தானாக வந்தக் குயில்(குக்குக் கூ)
ஆத்தாடி மனசுக்குள காத்தாடி
பறந்ததா? ஒலகமே மறந்ததா?


என பாடி முடிக்கும் தருணம் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் கையில் உள்ள துண்டினை தன் தோளில் போடும் சமயம் இசை ஞானி, இயக்குநர் இமயம், கவிப் பேரரசு ஆகிய அனைவருக்கும் அவர் பொன்னாடை போர்த்தியது போல் எனக்கு தோன்றியது

வெகு இயல்பாக சிவாஜியின் நடிப்பும், உறுத்தாத ஒப்பனையும் இருக்கும்.திரைக் கதையில் இவர்கள் உறவில் சிறிதளவும் காமம் கலக்காமல் இயக்கிய பாரதிராஜா போற்றுதலுக்குரியவர். ஏனெனில் சிறிய் இச்சையும் கள்ளக் காதலாக மாறிட வாய்ப்புண்டு. அதை நேர்த்தியாக கையாண்ட விதம் அருமை. ராஜாவுக்கு இப்படம் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்றாலும் தனது உயிரை உருக்கி உன்னத இசையை வழங்கியுள்ளார்.

இப்பாடல் விமர்சனம் மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கும், பாடகர் மலேசியா வாசு தேவன் அவர்களது ஆன்மாவுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். ...மிகவும் பொறுமைமாக இந்தப் பதிவினைப் படித்த என் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! எனக்குத் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் நண்பர்கள் அனைவரையும் தலை வணங்குகிறேன்!!! வாழ்க வளமுடன்!!! இசைஞானியின் இசை அருளால் அனைவரது ஆயுளும் நீடிக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்!!!! நன்றி!! வணக்கம்!!!!

இங்கே பாடலைப் பாருங்கள் 

 

3 comments:

  1. கவிஞரை வாழ்த்த மனமில்லையே.. என்ன அற்புத வரிகள். அது இல்லாவிட்டால் இங்கு எதுவும் இல்லையே. ஒவ்வொரு வார்த்தையும் உள்ளத்தில் அதிர்வை தந்து உள்ளதே.

    ReplyDelete
  2. //நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்கள் கையில் உள்ள துண்டினை தன் தோளில் போடும் சமயம் இசை ஞானி, இயக்குநர் இமயம், கவிப் பேரரசு ஆகிய அனைவருக்கும் அவர் பொன்னாடை போர்த்தியது போல் எனக்கு தோன்றியது// -இருக்கு

    ReplyDelete
  3. பாரதிராஜாவை விட்டுவிட்டீர்களே. அவரின் இலக்கியம் முத்ல்மரியாதை.விஜயன்

    ReplyDelete