Wednesday, December 7, 2022

நெருப்பை விழுங்க முடியாது

 


 நேற்றே பகிர்ந்து கொள்ள நினைத்த பதிவு. அர்ஜுன் சம்பத் செய்த அயோக்கியத்தனத்தால் தாமதமானது.  இந்த பதிவே அது போன்ற அயோக்கியத்தனங்களை அம்பலப்படும் பதிவுதான். அண்ணல் அம்பேத்கருக்கு காவிச்சாயம் பூச நினைக்கும் அற்ப முயற்சிகள் என்றைக்கும் நிறைவேறாது.

 இப்போது பதிவை படியுங்கள்.

 *நாளொரு கேள்வி: 06.12.2022*

 தொடர் எண்: *920*

  _அம்பேத்கர் நினைவு நாள்

 இன்று நம்மோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை ஒன்றுபட்ட ஆந்திராவில் தலைமையேற்று நடத்தியவர் *பி.வி. இராகவலு*

##########################

 *நெருப்பை விழுங்க முடியாது*

 கேள்வி: இந்துத்துவா சக்திகள் டாக்டர் அம்பேத்கர் அவர்களை உரிமை கொண்டாட முனைகிறார்களே

 *இராகவலு*

 சங் பரிவாருக்கு நன்கு தெரியும், அம்பேத்கரை எளிதாக எதிர்த்து நின்று *அவருடைய கருத்துக்களை அழித்து விட முடியாது* என்று... 

 ஆகவே அவர்கள் *இரண்டாவது வழிமுறையை* கையாள்கிறார்கள். டாக்டர் அம்பேத்கரை தங்கள் வயப்படுத்தும் செயல்களில் இறங்கியுள்ளார்கள். அம்பேத்கரின் சிந்தனை களை சிதைத்து இந்துத்துவா திட்டத்திற்கு ஏற்றாற்போல் மாற்ற முயற்சிக்கிறார்கள்.  

 அம்பேத்கரை அவர்கள் *இந்துயிசத்தை சீர்திருத்த முனைந்த ஆளுமை* என்று கட்டமைக்கிறார்கள். இன்னும் நல்ல இந்துயிசம் மலர பாடுபட்டவர் என்கிறார்கள். இஸ்லாமிய, கிறித்தவ மதங்களை நிராகரித்த பெரும் தேசியவாதி என்றும் அதனால்தான் அவர் இந்திய கலாச்சாரத்தோடு நெருக்கமான புத்த மதத்தை தழுவினார் என்று கூறுகிறார்கள்

 என்றாலும் சங்க பரிவாரங்களின் இந்த முயற்சிகள் *நாணயமற்றவை* ஆக அமைந்தது. அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் பேசிய கருத்துக்கள் இந்துத்துவா சிந்தனைகளுக்கு எதிரானதே

 அவர் வாழ்வு முழுவதும் செலவிடப்பட்டது எதற்காக? *சாதி அமைப்பை ஒழிக்கவும், சாதி அமைப்பை நிலை நிறுத்த எண்ணுகிற இந்துயிசத்தின் கருத்துக்களை, உபதேசங்களை அம்பலப்படுத்தவும்தான்அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டது.* அம்பேத்கர் உறுதியாக ஒரு கருத்தை வைத்திருந்தார். *இந்துயிசம் இருக்கும் வரை சாதி அமைப்பு இருக்கும், தீண்டாமை இருக்கும்* என்பதே

 ஆகவே இந்துயிசத்தின் பிடியில் இருந்து விடுபட்டால்தான் தலித்துகள் விடுதலை பெற முடியும் என்று கருதினார். இந்த காரணத்திற்காகவே, ஆழ்ந்த சிந்தனைகளுக்கு பிறகு, அவர் தன் தொண்டர்களுடன் புத்த மதத்தை தழுவினார்

 ஆகவே அம்பேத்கரை இந்துமத சீர்திருத்தவாதி போல சித்தரிக்கும் இந்துத்துவா சக்திகளின் எண்ணம்  யாராலும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களால் ஏற்கப்படாது

 *செவ்வானம்*

  என் குறிப்பு : அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாறிய போது எடுக்கப்பட்ட பத்து பிரகடனங்களில் ஒன்றையாவது சங்கிகள் ஏற்பார்களா? அதென்ன பத்து பிரகடனங்கள்? நாளை பார்ப்போம்.

No comments:

Post a Comment