Wednesday, December 21, 2022

வாட்சுமில்லை, ரசீதுமில்லை

 


கல்லூரிப் படிப்பின் இறுதியாண்டு வரை வாட்ச் என்பது என் கைகளுக்கு வரும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  குடும்பத்தின் பொருளாதார நிலை அப்படி. என் இரண்டாவது அண்ணன் புதிய வாட்ச் வாங்கியதும் தன்னுடைய பழைய வாட்சை எனக்கு கொடுத்தான். அது நீல நிறம் என்பதைத் தாண்டி வேறேதும் நினைவில் இல்லை.

 1986 ல் எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்த பின்பும் பெரிய முன்னேற்றம் உடனடியாக வராததால் பழைய வாட்சே தொடர்ந்தது.

 இந்த நிலையில் புதிய வாட்ச் வாங்க புண்ணியம் கட்டிக் கொண்டவர் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங்தான்.

 எல்.ஐ.சி யின் ஊதியத்தில் ஒரு வினோதமான குறைபாடு இருந்தது.

 விலைவாசிப் புள்ளி என்றழைக்கப்படும் நுகர்வோர் குறியீட்டு எண்ணின் உயர்வுக்கேற்றார்போல பஞ்சப்படி என்று அழைக்கப்படும் அகவிலைப்படி உயரும்.

 அதில் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு 100 % அகவிலைப்படியும் இதர பிரிவு ஊழியர்களுக்கு 75 % அகவிலைப்படியும் தரப்படும். இதிலே என்ன பிரச்சினை வருமென்றால் நான்காம் பிரிவு ஊழியராக இருக்கிறவர் பதவி உயர்வில் பதிவு எழுத்தர் என்றாகும் போது மூன்றாம் பிரிவு ஊழியராகி விடுவார். அதனால் அவர் வாங்கும் பஞ்சப்படி 75 % ஆக மாறி சம்பளம் குறைந்து விடும். பதவி உயர்வின் காரணமாக ஊதியம் குறையும் வினோதம் இது. பழைய ஊதியத்திலிருந்து குறையும் தொகையை வருடாந்திர இண்கிரிமெண்ட்கள் மூலமாக    பழைய ஊதியத்தின் அளவை நெருங்கும் வரை வரை தற்காலிக படியாக அளிப்பார்கள்.

 எத்தனையோ வருடங்களாக இப்பிரச்சினை குறித்து விவாதித்த போதும் நிர்வாகம் அரசை கை காண்பித்து தப்பித்துக் கொண்டது. வொய்.பி.சவான், ஆர்.வெங்கட்ராமன், ஹெம்.எம்.படேல் (இவர் எல்.ஐ.சி யின் முதல் சேர்மனும் கூட) பிரணாப் முகர்ஜி போன்ற நிதியமைச்சர்கள் இது குறித்து செவி மடுக்கவே தயாரில்லை.

 ராஜீவ் காந்தி காலத்தில் நிதியமைச்சராக இருந்த விஸ்வநாத் பிரதாப் சிங் இப்பிரச்சினையை புரிந்து கொண்டது மட்டுமல்லாமல் அதற்கென்ன தீர்வு என்னவென்றும் சங்கத்தின் ஆலோசனையையும் கேட்டார்.

 அனைவருக்கும் 100 % அகவிலைப்படி என்பது கோரிக்கை. முதற்கட்டமாக அனைவருக்கும் நான்காம் பிரிவு ஊழியர்களின் அதிகபட்ச ஊதியமான 790 ரூபாய் வரை முதற்கட்டமாக 100 % அகவிலைப்படி அனைவருக்கும் அளிக்கிறேன் என்று உறுதியளித்து அரசாணை வெளியிட்டார். இத்தொகை படிப்படியாக உயர்ந்து ஒரு கட்டத்தில் அனைவருக்கும் 100 % அகவிலைப்படி கிடைத்தது.

 1986 ல்  520 ரூபாய் அடிப்படை ஊதியத்தில் உதவியாளராக இருந்த எனக்கும் ஆறு மாத காலத்திற்கு மாதம் எண்பது ரூபாய் என்று 480 ரூபாய் அரியர்ஸ் வந்தது.

 அந்த தொகையில் 350 ரூபாய்க்கு ஒரு ஆல்வின் வாட்ச் ஒன்று வாங்கினேன். வாரண்டி காலமான ஒரு வருடம் முடிந்த பின்பு ரசீதை தூக்கிப் போட்டு விட்டேன். எனினும் கிட்டத்தட்ட எட்டாண்டுகள் நன்றாகவே உழைத்தது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது வாட்சின் பட்டை அறுபட்டு சாலையில் விழ, பின்னால் வந்த பைக் அதன் மீது ஏறி வாட்ச் நொறுங்கிப் போனது. வாழ்க்கையில் வாங்கிய வாட்சு சாலையில் தன் வாழ்வை முடித்துக் கொண்டது.

 பிகு: இதனை எழுதும்போது நினைவுக்கு வந்த இன்னொரு விஷயத்தை குறிப்பிடாமல் இப்பதிவை நிறைவு செய்ய விரும்பவில்லை. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த தோழர் கே.வேணுகோபால், ஒரு மாநாட்டில் பேசியதை பகிர்ந்து கொள்கிறேன். அப்போது தெலுங்கானா பிரிக்கப்படவில்லை. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம்தான்.

 “ஹைதராபாத் ஆல்வின் நிறுவனமும் ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனமும் ஆந்திராவின் பெருமை மிகு பொதுத்துறை நிறுவனங்கள். இரண்டு நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி செய்தார்கள். இரண்டு நிறுவனங்களின் தொழிலாளர்களும் இம்முடிவுக்கு எதிராக போராடினார்கள்.

 ஆல்வின் நிறுவன ஊழியர்களின் போராட்டம் இறுவனத்திற்குள் மட்டும் நடந்தது. ஒரு கட்டத்தில் அது பலவீனமாகி தனியார் மயத்தை தடுக்க முடியாமல் போய் விட்டது.  கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து ஒரு கட்டத்தில் மூடப்பட்டு விட்டது.

 அதே நேரம் ஹிந்துஸ்தான் ஷிப் யார்ட் தொழிலாளர்களோ, தங்கள் போராட்டத்தை விசாகப்பட்டிணம் மக்களிடம் எடுத்துச் சென்றனர். கப்பல் கட்டும் நிறுவனம் விசாகப்பட்டிணம் நகரத்தின் பெருமை என்பதையும் அந்த நிறுவனத்தால் விசாகப்பட்டிணம் நகர மக்களின் வாழ்வாதாரம் எப்படி மேம்பட்டுள்ளது என்பதையும் விளக்கினார்கள். விசாகப்பட்டிணம் மக்கள் போராட்டக்குழு உருவானது. தொழிலாளர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக பரிணமித்தது. ஹிந்துஸ்தான் ஷிப்பிங் யார்ட் நிறுவனம் பாதுகாக்கப் பட்டது.

 எந்த ஒரு போராட்டமும் மக்களின் ஆதரவு இருந்தால் வெற்றி பெறும் என்பதற்கு விசாகப்பட்டிணம் ஷிப்பிங் யார்ட் நிறுவனத் தொழிலாளர்களின் போராட்டம் ஒரு உதாரணம்.

 

5 comments:

  1. அருமையான பதிவு தோழர்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ஏண்டா மொட்டைக் கடிதாசி பொறுக்கி, உன் மாப்பிள்ளை உன்னை செருப்பால அடிச்சு துரத்திட்டானாமே!

      Delete
  4. திருமணத்தின்போது என் மாமனார் ரூ 250/ க்குகு ஹெச் எம் டி வாட்ச் வாங்கி கொடுத்தார்.இருபது வருடங்களாக எந்த வித ரிப்பெரும் இல்லாமல் ஓடியது.பிறகு அலுவலக உதவி ஊழியருக்கு சும்மா கொடுத்தேன்.ஹெச் எம் டி நிறுவனம் பொதுத்துறை தான்.

    ReplyDelete