Saturday, November 16, 2019

கொல்லப்பட்ட பூசாரியின் வாக்குமூலம்




இன்று வாட்ஸப்பில் இந்த கட்டுரை கிடைக்கப்பெற்றது. சங்கிகளின் பக்தி வெறும் பகல் வேஷம் என்பதையும் ராமர் கோயில் என்பது வெறும் அரசியல் ஆதாயத்திற்கானது என்பதை ராம ஜென்ம பூமி கோயிலின் தலைமை பூசாரியாக இருந்த லால்தாஸ் என்பவர் அம்பலப்படுத்துகிற கட்டுரை இது.

அதனால் அவர் படுகொலை செய்யப்படுகிறார்.

சற்று நீண்ட கட்டுரை. ஆனால் மிகவும் முக்கியமானது.  அவசியம் முழுமையாக படியுங்கள், பரப்புங்கள்.



நவம்பர் 16 - அயோத்தி ராம ஜென்ம பூமி கோவில் தலைமை பூசாரி 

லால்தாஸ் கொல்லப்பட்ட தினம்

ஆனந்த் பட்வர்த்தன், ஆவணப்பட தயாரிப்பாளர், இயக்குநர்

முன்னாள்  பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டார்”  என்ற சிறிய அளவிலான செய்தி ஒன்று 1993 நவம்பர் 17 அன்று மாலை  செய்தித்தாளில்  வெளியாகி இருந்தது. அது  பூசாரி  லால்தாஸாக இருக்கக் கூடாது என்று உடனடியாக  நான் வேண்டிக் கொண்டேன்

ஆனாலும் மோசமான அந்த அச்சம் நனவாகிப் போயிற்று. அயோத்தியில்  அவரை நாங்கள்  பேட்டி  கண்டு  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ராம் கே நாம் ஆவணப்படம் பகிரங்கமாக திரையிடப்பட்டு இரண்டு  ஆண்டுகளுக்குப் பிறகு, லால்தாஸ்  படுகொலை  செய்யப்பட்டிருந்தார்.

அவரை முதலில் நாங்கள் பேட்டி கண்ட  அந்த மாலைப் பொழுதும் ஒரு சோகமான சந்தர்ப்பமாகவே  அமைந்திருந்தது

அது 1990 அக்டோபர் 30,  தனது  அரசின் பாதுகாப்பு  ஏற்பாடுகளை  மீறிஒரு பறவையாலும் மசூதி மீது பறக்க முடியாதுஎன்று முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்  பெருமை பேசினாலும், விஷ்வ ஹிந்து பரிசத்-பஜ்ரங் தளம்-

பாரதிய ஜனதா கட்சி  கூட்டணியின் தலைமையிலான  ஹிந்து  கும்பல்  பாபர் மசூதியைத்  தாக்குவதில் வெற்றி  கண்ட நாள்.

மசூதி மீதான தாக்குதலை இரண்டாவது தீபாவளி என்று கொண்டாடியவர்களால்  வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் சப்தத்தை நாங்கள் அமர்ந்திருந்த கோவிலுக்கு வெளியே  எங்களால் கேட்க முடிந்தது

விஎச்பியின்  நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து வந்த பூசாரி லால்தாஸ்  ஏற்கனவே பல மரண அச்சுறுத்தல்களையும், ஒரு கொலை முயற்சியையும்  எதிர்கொண்டவராக இருந்தார்

 பாஜக வேட்பாளரைத் தோற்கடித்த பைசாபாத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மித்ராசென் யாதவ் சில மாதங்களுக்கு முன்னர்தான் சுடப்பட்டு காயமடைந்திருந்த நிலையில், லால்தாஸுக்கு மெய்க்காப்பாளர் ஒருவரை அரசாங்கம் அளித்தது

அந்த சமயத்தில் ராம ஜென்ம பூமி  கோயிலின்  தலைமை பூசாரியாக லால்தாஸ் இருந்தார். சமீப காலமாக பிறர் மீது தாக்குதலை நடத்துகின்ற விஎச்பியின் ஆற்றல் அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டி, மீண்டும் அமைதி திரும்பும் வரை சில நாட்களுக்கு கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டிருந்தது
ஆனாலும் அமைதி ஒருபோதும் திரும்பவில்லை.

அக்டோபர் 30 அமைதியாக கழிந்து விடும் என்றே நாங்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அயோத்தி, உத்தரபிரதேசம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் வகுப்புவாத பதட்டங்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன

 லால்தாஸ் எதிர்பார்த்தவாறே, ஆயிரக்கணக்கான உயிர்கள் பறி போயின. நாட்டில் மிகவும் ஆபத்தான  துருவமுனைப்பு  ஏற்பட்டிருக்கிறது.

அவரிடம் நேர்காணலை நாங்கள் பதிவுசெய்த போது, அந்த நேர்காணல்  பகிரங்கமாகக்  காட்டப்பட்டால்  அவருக்கு  பாதுகாப்பு இருக்குமா என்று லால்தாஸிடம் நாங்கள் கேட்டோம்

தனது செய்தி மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே  தன்னுடைய மிகப்பெரிய விருப்பம் என்றும், தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்படுகின்ற விளைவுகளைப்  பற்றி தான் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் அவர்  என்னிடம் உறுதியாகத் தெரிவித்தார்.

மீண்டும் ஒரு முறை நாங்கள் சந்தித்தோம். 1992 ஜனவரியில் லக்னோவில் திரையிடப்பட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் காட்சிக்கு லால்தாஸ் வந்திருந்தார்.  

அந்த சமயம் மாநிலத்தை ஆண்ட பாஜக, கோவில் பூசாரி பதவியில் இருந்து அவரை  நீக்கியிருந்தது. ஆவணப்படத்தின் திரையிடம் முடிந்த பிறகு, ஹிந்து மதத்தில் உள்ள உலகளாவிய கூறுகள்  மீதான தனது உறுதிப்பாட்டை லால்தாஸ் உறுதி செய்தார்

அந்த படத்தை  மிகவும் நேசித்த அவருடைய பாதுகாப்பு குறித்து எனக்கிருந்த அச்சங்களை  ஒதுக்கித் தள்ளி விட்டு, அயோத்தி பகுதி முழுவதும்  அதனைத் திரையிடப் போவதாக கூறினார்

அவர் முகத்தில் இருந்த புன்னகையே அவர் முன்வைத்த ஒரே வாதமாக இருந்தது. அதுவே  அவரைப்  பற்றிய  எனது  இறுதி நினைவாகவும் இருக்கிறது.

ராம் கே நாம் (கடவுளின் பெயரால்) என்ற ஆவணப்படத்திற்காக பூசாரி லால்தாஸுடன் 1990 அக்டோபர் 30 அன்று நடத்தப்பட்ட நேர்காணலின் பகுதி இங்கே தரப்படுகிறது.

கேள்வி: கோவிலைக் கட்டுவதற்கான விஸ்வ ஹிந்து பரிசத்தின் திட்டம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

லால்தாஸ்: இது விஎச்பி விளையாடுகின்ற அரசியல் விளையாட்டு. கோவில் கட்டுவதற்கு ஒருபோதும் தடை விதிக்கப்படவில்லை.
 தவிர பாரம்பரியத்தின் படி, கடவுளின் சிலைகள் வைக்கப்படுகின்ற எந்த இடமும் கோவில் என்பதே ஹிந்துக்களின் வழக்கம். சிலை இருக்கின்ற எந்தவொரு கட்டிடமும் கோவிலாகவே ஹிந்துக்களால் கருதப்படுகிறது

தனியாக கோவிலைக் கட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அதற்காக ஏற்கனவே சிலைகள் இருக்கின்ற அமைப்பை ஏன் இடிக்க வேண்டும்?

இதைச் செய்ய விரும்புபவர்கள் உண்மையில் இந்தியா முழுவதும் பதட்டத்தை உருவாக்கி ஹிந்து வாக்குகளைப் பெறுவதிலே அதிக அக்கறை கொண்டவர்களாக மட்டுமே இருக்கின்றனர்.

 அவர்கள் இங்கே நிகழும் இனப்படுகொலை பற்றி - எத்தனை பேர் அதில் கொல்லப்படுவார்கள், எவ்வளவு சொத்துக்கள் அழிக்கப்படும் என்பது பற்றி அல்லாது முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்ற பகுதிகளில் ஹிந்துக்களுக்கு என்ன நடக்கும் என்பது பற்றியும் கவலைப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்.

1949இலிருந்து எந்தவொரு முஸ்லீமும் இங்கு எந்த பிரச்சனையையும் உருவாக்கவில்லை. ஆனால்பாபரின் புத்திரர்கள் ரத்தம் சிந்த வேண்டும்என்று இவர்கள் முழக்கமிட ஆரம்பித்த போது, முழு தேசமும் கலவரத்தில் மூழ்கி ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

 தாங்கள் உருவாக்கிய பதட்டங்களுக்கு இன்னும் அவர்களிடம் இருந்து எந்தவொரு வருத்தமும் தெரிவிக்கப்படவில்லை. ஹிந்து-முஸ்லீம்களுக்கிடையிலான ஒற்றுமை இப்போது வரை நம் நாட்டில் நிலவி வருகிறது. ஹிந்து கோவில்களுக்கு முஸ்லீம் ஆட்சியாளர்கள் நிலம் வழங்கி இருக்கின்றனர்- ஜானகி காட் மற்றும் அனுமன் கார்னியின் சில பகுதிகள் முஸ்லீம்களாலேயே கட்டப்பட்டன

இந்த சொத்துக்கள் அனைத்தையும் முஸ்லீம் ஆட்சியாளர்களே கோவில்களுக்கு நன்கொடையாக வழங்கினர்

மேலும், அமீர் அலி மற்றும் பாபா ராம்சரண் தாஸ் ஆகியோர் ஜென்ம பூமியைப் பிரித்து, முஸ்லீம்கள் ஒரு பகுதியிலும், ஹிந்துக்கள் இன்னொரு பகுதியிலும் வழிபாடு செய்து கொள்ளலாம் என்று ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் நல்லிணக்க உடன்படிக்கையை ஏற்பாடு செய்தனர்

இப்போது அந்த முயற்சிகள் அனைத்தும் வீணடிக்கப்பட்டுள்ளன.

நிதி மற்றும் அரசியல் லாபத்திற்காகவே இந்தியாவை உலுக்கிய அனைத்து வகுப்புவாதக் கலவரங்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன

ராமரின் பிறப்பிடத்துடன் அவை எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை, இன்று வரையிலும் விஎச்பியைச் சார்ந்தவர்கள் ஒரு.தடவை கூட இங்கே வழிபாடு நடத்தியதில்லை என்பதோடு  அவர்கள் ஒருபோதும் இங்கே கடவுளை வணங்கியதில்லை என்பதையும் ராம ஜென்ம பூமி கோவிலின் பூசாரியான நான் நேர்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்

அதற்கு மாறாக அவர்கள் வழக்குகளைத்  தொடர்ந்து வழிபாடுகளுக்கான தடைகளை மட்டுமே உருவாக்கினர்

இதனால் உள்ளூர் மக்கள் அவர்களை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் பேராசை கொண்ட சில பூசாரிகளை அவர்கள் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்

ராமர் கோவிலுக்கான செங்கல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர்கள் தங்களுக்கான சொந்த அறைகளையும் வீடுகளையும் கட்டிக் கொண்டார்கள். பொதுமக்களை முட்டாளாக்கி பெரிய பெரிய கட்டிடங்களை அவர்கள் உருவாக்கினார்கள்

பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் அளவிலான  நன்கொடைகளை அவர்கள் பெற்றுக் கொண்டனர். அவற்றில் சில நன்கொடைகளை  தங்களின் சொந்த வங்கி கணக்கில் பெற்றுக் கொண்டனர்

இதனால்தான் மக்கள் கொல்லப்படும் போது, அது குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. பணம் மற்றும் அதிகாரத்தின் மீது மட்டுமே அவர்களுடைய  அக்கறை முழுவதும் இருக்கிறது. நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகின்ற உயர்சாதியைச் சேர்ந்தவர்களே ஹிந்து தேசத்தைப் பற்றிப் பேசுவதும், ராமரின் பெயரால் வன்முறையை உருவாக்குபவர்களாகவும் இருக்கின்றனர்.

 தன்னல மறுப்பு, தியாகம், பொதுவாழ்வின் மீதான அக்கறை ஆகியவை ஒருபோதும் அவர்களிடம் இருந்ததில்லை. தங்கள் சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காகவே மக்களின் மத உணர்வுகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நடந்து செல்வதற்குப் பதிலாக நாம் பறக்கிறோம். முதல் வகுப்பில் பயணம் செய்து குளிரூட்டப்பட்ட அறைக்குள் வாழ்கிறோம். பொது நன்மைக்காக தியானிப்பதற்கும் வேலை செய்வதற்கும் உலக சுகபோகங்களை நாம் கைவிட்ட நேரங்கள் எல்லாம் மறைந்து போய், இப்போது உலக விஷயங்களுக்குள் முழுமையாக மூழ்கி விட்ட நம்மால் பொருளை மட்டுமே முதன்மையாகக் கொண்டு சிந்திக்க முடிகிறது

வெறுமனே பொருள் ஒழுங்கை மட்டுமே நிலைநிறுத்துகின்ற இன்றைய மதத் தலைவர்களைப் பற்றி நம்மால் என்ன சொல்ல முடியும்? பெரும் வணிகர்கள்ஹிந்து மதத்தை பாதுகாக்க வேண்டும்என்று கூறுகிறார்கள் 
அசோக் சிங்கலைப் போன்ற நாட்டின் பெரும் பணக்காரர்கள், தங்களை ராமரின் பக்தர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். மக்கள் பட்டினி கிடந்து இறப்பதுதான்  ராமரின் லட்சியமா

நம் நாட்டில் இருக்கின்ற இந்த பெரும் பற்றாக்குறை குறித்து நமது மதத் தலைவர்கள் கவலைப்பட வேண்டாமா? உங்களிடம் பணம் இருக்கும் என்றால் அல்லது பணக்காரர்கள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள் என்றால், அந்த பணத்தை ஏழைகளுக்கு உதவுவதற்கு என்று நீங்கள் பயன்படுத்த வேண்டாமா

அன்னை தெரசா செய்வதைப் போல? அல்லது கடந்த காலத்தில் நமது மதத் தலைவர்கள் செய்ததைப் போல?

கேள்வி: நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்று உங்களைப் பிடிக்காதவர்கள் குற்றம் சாட்டுகிறார்களே?

லால்தாஸ்: ஒரு கம்யூனிஸ்ட் என்று என்னைச் சொல்வது எனக்கு பெருமை சேர்க்கின்ற விஷயம் ஆகும். உணவு, உடை மற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கான ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள உரிமை குறித்து கம்யூனிஸ்டுகள் பேசுவதில்லையா

பகவான் ராமரின் கொள்கைகளை நாம் நம்பினால், (ராமாயணத்தை மேற்கோள் காட்டி), “ராமரின் ராஜ்ஜியத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை, அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.” என்பது நமக்குத் தெரியும்

உணவு, உடை, அனைவருக்கும் கல்வி என்று அதையேதான் கம்யூனிஸ்டுகளும் விரும்புகிறார்கள். ராமரின் கொள்கைகளை நம்புகிற நாம், அதே விஷயங்களைச் சொல்கின்ற மற்றவர்களையும் மதிக்கிறோம்.
 குறைந்தபட்சமாகச் சொல்வதென்றால், இனப்படுகொலைகளுக்கு ஒருபோதும் கம்யூனிஸ்டுகள் அழைப்பு விடுத்ததில்லை!

அயோத்தியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் இதை எதிர்க்க வேண்டும். மற்றவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி அவர்களின் இதயங்களை நாம் ஒருபோதும் நொறுக்கி விடக் கூடாது.

கேள்வி: இன்று, நம் நாட்டில் ஒரு அலை இருப்பதாகத் தெரிகிறது - உங்களைப் போன்றவர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் வெறுப்பைப்  பேசுபவர்களுக்கு  மிகப்  பெரிய  ஆதரவு கிடைக்கிறது.

லால்தாஸ்: அது  அப்படி  இல்லை. வெள்ளத்தின் போது, சூறாவளியின் போது, ரயில்களும் கட்டிடங்களும் கீழே விழுந்து விடுகின்றன. சாலைகள், அவற்றின் பயன்பாடுகள் அழிக்கப்படுகின்றன.

 "மழை அதிகமாக இருக்கும்போது, புற்கள் மிகவும் உயரமாக வளர்ந்து சரியான பாதையை கண்டுபிடிப்பது கடினமாகிறதுஎன்ற கவிதை ராமாயணத்தில்  ஆரண்யா காண்டத்தில் இருக்கிறது
அது போன்றே போலித்தனமானவர்கள் பேசும் போது, உண்மை மறைக்கப்படுகின்றது, போதைப் பொருளை  உண்ட ஒருவர் எதற்கும் தகுதியற்றவர் ஆவதைப் போல. அவருக்கு பைத்தியம்  பிடிக்கலாம்,  

நம்மைத் தாக்கலாம், ஏன் தற்கொலைகூட செய்து கொள்ளலாம். வெறித்தனம் கொண்டிருக்கும் தருணத்தில்  ஒருவரின் சிந்திக்கின்ற திறன்  அழிக்கப்படுகிறது

ஆனாலும் இந்த மழைக்காலம் என்பது மிகவும் குறைவான காலமே. இன்று மக்கள் ஒரு வகையான வெறி கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பின்னர் உண்மையை எதிர்கொள்ளும்போது….மக்கள்  தங்களுடைய பகுத்தறிவு  திறனை  மீண்டும்  பெறுவார்கள்.

 **********************************************************************************

1994 ஜனவரி 14 ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை
********************************************************************************************

தமிழில்
முனைவர் தா. சந்திரகுரு   

1 comment: