Saturday, November 2, 2019

மனிதத்தை தொலைக்காதீர்



சுஜித் இறந்ததை விட துயரமளிப்பதாக உள்ளது மேலே உள்ள படம். தெரிந்தோ, தெரியாமலோ பலரும் வழக்கம் போல எல்லாவற்றையும் ஃபார்வர்ட் செய்வது போல இதையும் பார்வர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

சுஜித் சிக்கிக் கொண்ட போது “பாவாடைக்காக ஏன் இப்படி உருகுகிறீர்கள்? சாகட்டுமே” என்று  அவனின் மதத்தின் அடிப்படையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வக்கிரமாக பதிவுகள் போட்ட பல சங்கிகள் உண்டு, உழைக்கும் பெண்களை கொச்சைப்படுத்தி இன்னும் திமிரோடு அலையும் எஸ்.வி.சேகர் உட்பட.

அந்த வட்டாரத்திலிருந்துதான் இப்படிப்பட்ட மோசமான கருத்துள்ள படமும் உருவாகியிருக்கும் என்று நம்புகிறேன். மனித உயிருக்கு நிதி என்பது நிச்சயமாக இணை இல்லை. ஆனால் அது ஒரு ஆறுதலின் வடிவம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று நம்பிக்கையோடு கரம் கோர்த்துக் கொள்ளுகிற ஒரு தார்மீக ஆதரவு.

எத்தனையோ இழப்புக்களின் போதும் இது போன்ற நிதி உதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் இது போன்று வக்கிரமும் வன்மமும் வெளிப்படவில்லையே! இப்போது ஏன்?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததாலா?

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் அதைத் தாண்டி இன்னொரு இரண்டு காரணங்களை நான் உணர்கிறேன்.

ஏற்கனவே மதத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட  நச்சுப் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த படமும் சுற்றுக்கு உலவ விடப்பட்டுள்ளது.

இதைத்தாண்டி இன்னொரு முக்கிய காரணம் கவனத்தை திசை திருப்புவது.

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியவர்களை மீட்பதற்கு எந்த தொழில்நுட்பமும் நம்மிடம் இல்லை என்ற உண்மையை “அறம்” திரைப்படம் வெளிச்சம் போட்டு காட்டியது. அத்திரைப்படம் வெளி வந்து ஒரு வருடத்திற்குப் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேங்கி முடங்கிப் போயிருக்கிறோம் என்ற உண்மையை சுஜித்தின் மரணம் அம்பலப்படுத்தி விட்டது.

மீட்புப் பணியில் ஏற்பட்ட பல சொதப்பல்கள் பற்றி உண்மைகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. சில கேள்விகளுக்கு விடை இல்லை.

அதையெல்லாம் திசை திருப்பும் உத்தியாகத்தான் இப்படி ஒரு கேவலமான படம்.

ஆட்சியாளர்களின், அவர்களின் எஜமானர்களின் உள் நோக்கம் புரியாமல் இப்படத்தை ஏதோ கார்ட்டூன் போல, காமெடி போல நல்ல உள்ளம் கொண்ட பலரும் பகிர்ந்து கொண்டனரே என்பதுதான் எனக்கு மிகப் பெரிய வருத்தத்தை அளித்தது.

வந்ததை அப்படியே பகிராதீர், மனிதம் தொலைத்தவராக உங்களை பிறர் எண்ணும் வாய்ப்பை உருவாக்காதீர்.

2 comments:

  1. மனித மனத்தின் வக்கிரம் தான் இப்படி வெளிப்படுகிறது. என்ன செய்வது?

    ReplyDelete
  2. இதை, ஃபேஸ்புக்கில் கண்ட நான்,
    "ஜோக்குக்காக, கோபுலு வரைந்த படத்திற்கு இப்படி ஒரு மீம்ஸா? அராஜகம்" என்று எனது வேதனையை வெளிப்படுத்தினேன்!

    ReplyDelete