Sunday, May 20, 2012

டைரக்டர் ஷங்கர் கற்பனை, மம்தா ஒரிஜினல்



முதல்வன்  திரைப்படத்தின் முக்கியமான காட்சி ரகுவரனை
அர்ஜூன் பேட்டியெடுப்பது. நிழலில் தோன்றியது நேற்று 
நிஜத்தில் நடந்தது. மம்தா எனும் அராஜகப் பேர்வழியின்
அடாவடித்தனத்தை  மேலும் ஒரு முறை வெளிச்சம் போட்டுக்
காட்டியது.

ஒரு தொலைக்காட்சிப் பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதிலே ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மம்தாவை
கேள்வி கேட்டார்கள்.

அவர் ஆட்சியின் அலங்கோலங்கள், அத்து மீறல்கள்,
பெண்கள் மீதான தாக்குதல்கள், சீர் கெட்டுப் போயிருக்கும்
சட்டம் ஒழுங்கு, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள்,
கார்ட்டூனுக்காக கைது ஆகியவை பற்றியெல்லாம்
கேள்வி வந்ததும் அம்மையாரால் தாங்க முடியவில்லை.
பொங்கியெழுந்து விட்டார். 

உடனே மாணவர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் 
சி.பி.எம், மாவோயிஸ்டுகள். உங்கள் கேள்விக்கெல்லாம்
பதில் சொல்ல முடியாது. நீங்கள் காட்டுக்கு செல்லுங்கள்
என்றெல்லாம் சத்தம் போட்டு விட்டு காவல்துறையைப்
பார்த்து அத்தனை பேரையும் புகைப்படம் எடுத்து 
நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவு போட்டுள்ளார்.

அவரால் பதில் சொல்ல முடியாததனால் மாணவர்கள்
சி.பி.எம், மாவோயிஸ்டுகள் ஆகி விட்டார்கள். பேட்டி 
எடுத்த பெண்மணி அவர்களெல்லாம் மாணவர்கள் என்று
சொன்னதற்கு மாவோயிஸ்டுகளாவதற்காக தேர்ந்தெடுக்கப்
பட்டவர்கள் என்று மீண்டும் திட்டியுள்ளார்.

பேட்டி பாதியில் நின்று விட்டது. சகிப்புத்தன்மை சிறிது
கூட இல்லாதவர், ஜனநாயகத்தின் மீது சிறிதும் 
நம்பிக்கை இல்லாதவர் என்பது நிகழ்ச்சியில் பங்கேற்ற
மாணவர்கள் முன்வைத்த விமர்சனம். அதை தங்கள் 
பெயரோடுச் சொல்ல அவர்களுக்கு பயம். உயிரைப்
பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா?

ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திலியே இந்தக் கூத்து.
இன்னும் நான்காண்டு காலம் மேற்கு வங்க மக்கள்
என்னவெல்லாம் அனுபவிக்கப் போகின்றார்களோ?

No comments:

Post a Comment