வினாயகர் சதுர்த்தி சீஸன் தொடங்கி விட்டது. பெரிய பெரிய சிலைகள் வைக்க, அதற்கு பணம் வசூலிக்க மும்முரமாய் பணிகளும் தொடங்கி விட்டது.
வசூல் செய்பவர்கள் படையெடுப்பு எங்கள் பகுதியில் ஒரு வாரம் முன்பே தொடங்கி விட்டது. பெரியவர்கள் வந்தால் நம்பிக்கை கிடையாது என்று சொல்லி அனுப்பி விடுவேன். சிறுவர்கள் வந்தால் பத்து ரூபாய் கொடுத்து அனுப்பி விடுவேன்.
அப்படி வசூலுக்கு வந்தவர்கள் கொடுத்த ஒரு நோட்டீஸை பார்க்க சிரிப்புதான் வந்தது. இதோ அந்த நோட்டீஸ் உங்களுக்காக படம் எடுத்து கீழே போட்டுள்ளேன்.
எங்கள் பகுதி வினாயகர் சதுர்த்தி விழாவிற்கு தலைமை சத்துவாச்சாரி நகர திமுக துணைச் செயலாளர்.
முன்னிலை வகிப்பதோ சத்துவாச்சாரி நகர முன்னாள் செயலாளர்.
சிறப்பு விருந்தினர்கள் திமுகவின் வேலூர் ஒன்றியச் செயலாளர்.
இன்னொரு சிறப்பு விருந்தினர் ஒன்றியச் செயலாளரின் மனைவியும் திமுக சார்பில் சத்துவாச்சாரி நகராட்சியின் சேர்மனாக இருந்தவர்.
விழாவை நடத்துவது திமுக என்று போடவில்லையே தவிர எல்லோரும் திமுகவைச் சேர்ந்தவர்கள்.
திமுகவின் பகுத்தறிவுக் கொள்கைகளை அதன் உடன்பிறப்புக்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?
ஆனால் உடன்பிறப்புக்களை குறை சொல்வதும் நியாயமில்லை. குங்குமம் அணிந்து வந்த ஆதி சங்கரை இது என்ன ரத்தமா என்று கேட்டு நையாண்டி செய்த தமிழினத் தலைவரால் மஞ்சள் துண்டிற்கு விளக்கம் அளிக்க முடியவில்லையே?
சத்ய சாய் பாபா காற்றிலிருந்து வரவழைத்த மோதிரங்களை பெற்றுக் கொள்ள அவர் முன்னே கோபாலபுரம் வீட்டில் நடந்த போட்டியை அவரும் ரசித்துக் கொண்டுதானே இருந்தார்!
மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சா நெஞ்சன் தேர்தல் பிரச்சாரத்திற்கு அடிதடி, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் ஆகியவற்றை மட்டும் நம்பாமல் நரசிம்மர் ஆலயத்தில் சிறப்புப் பூஜை செய்த பின்புதானே புறப்பட்டார்!
எத்தனையோ கொள்கைகளில் நீர்த்துப் போனது போல பகுத்தறிவு என்பதிலும் திமுக நீர்த்துப் போய் விட்டது.
இனியாவது பழம் பெருமை டயலாக் பேசுவதை கலைஞர் நிறுத்தினால் கேலிப் பொருள் ஆவதிலிருந்து தப்பிக்கலாம்.






















