Tuesday, July 29, 2025

எங்கள் மனதில் தேசம். உங்கள் மனதில் ?????

 எங்கள் மனதில் தேசம் உள்ளது .

உங்கள் மனதில் தேர்தல் உள்ளது .



- ஆப்பரேசன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் எனது உரை
அவைத் தலைவர் அவர்களே உங்களுக்கு எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பகல்ஹாம் தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒன்றுபட்டு நிற்கிறது. வீழ்ந்த ஒவ்வொரு உயிரும் ஏற்படுத்திய வலியும் வேதனையும் ரணமாய் நிற்கிறது.
அந்த தாக்குதலுக்கு எதிராக இந்தியா தொடுத்த எதிர்வினை அதுசார்ந்த விவாதத்தை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு இந்த அவையிலே நடத்துவதற்கு எதிர்கட்சிகளாகிய நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த முயற்சி இன்றைக்கு நேற்றைக்கு அல்ல , கடந்த இரண்டு மாதங்களாக இந்த முயற்சியை எதிர்கட்சிகள் பொறுப்புணர்ச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மாதங்களாகவும் பொறுப்புணர்ச்சி என்றால் என்ன என்ற விலை கேட்பதைப் போல ஆளுங்கட்சித் தரப்பு தொடர்ந்து வினையாற்றிக் கொண்டிருக்கிறது. அவற்றினுடைய ஒரு சான்று தான் இந்த அவையிலே இப்போதும் நடந்திருக்கிறது என்பதை முதலில் நான் பதிவு செய்கிறேன்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்த விவாதத்தை துவக்கி வைத்துப் பேசினார். 2016 ஆம் ஆண்டு உரி தாக்குதல் நடந்த போது ஆளுங்கட்சி என்ன சொன்னதோ , 2019 ஆம் ஆண்டு பதன்கோடு தாக்குதல் நடந்த பின்னணியில் ஆளுங்கட்சி என்ன சொன்னதோ அதையே தான் இன்றைக்கு மீண்டும் இவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் பேசிய இவ்வளவிற்கும் பிறகு இந்தத் தீவிரவாதத் தாக்குதல் பகல்ஹாமில் எப்படி நடந்தது ? தாக்குதல் துவங்கி ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு தான் உதவியோ , தகவலோ அரசுக்கு கிட்டியிருக்கிறது என்ற செய்தி எவ்வளவு பெரிய வெட்கக்கேடானது . இது மூன்றடுக்கு பாதுகாப்பின் தோல்வி. இராணுவத்தின் தோல்வி , CRPF யினுடைய தோல்வி , ஜம்மு - காஷ்மீர் காவல்துறையினுடைய தோல்வி என மூன்றினுடைய தோல்வி. இதற்கு யார் பொறுப்பேற்கப் போவது ? அதிகாரிகளா ? அமைச்சரா ? ஒரே தேசம் ஒரே தலைவர் என்று நீங்கள் சொல்கிற மாண்புமிகு பிரதமர் அவர்கள் இதற்கு பொறுப்பேற்கப் போகிறாரா ? யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் ?
நீங்கள் உங்கள் ஆட்சிக்கு முன்புவரை நடந்த எல்லா சம்பவங்களுக்கும் நேரு துவங்கி மன்மோகன்சிங் வரை பொறுப்பேற்க வேண்டும் என சொல்லுவீர்களே , இப்போது நீங்கள் யாரைக் கையைக் காட்டப் போகிறீர்கள் என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்புகிறோம் . இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்த போது சவுதி அரேபியாவிலே இருந்த நம்முடைய மாண்புமிகு பிரதமர் அவர்கள் தனது பயணத் திட்டத்தைக் குறுக்கிக் கொண்டு உடனடியாகப் புறப்பட்டார்.
நேரடியாக அவர் பகல்ஹாமிற்கு போகப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. நேரடியாக காஷ்மீருக்குப் போகப் போகிறார் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால் அவர் நேரடியாக பீஹாரினுடைய தேர்தல் பேரணிக்குப் போனார். எங்கள் இதயங்களில் தேசம் இருக்கிறது. உங்கள் இதயங்களில் தேர்தல் மட்டும் தான் இருக்கிறது என்பதை இந்த நாடு தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்ல சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரைக் கூட்டுங்கள் என்று மீண்டும் மீண்டும் நாங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். பிரதமர் என்ன சொன்னார் ? ஜனநாயகத்தின் கோவில் இந்த நாடாளுமன்றம் என்று சொன்னார். சரி கோவிலுக்கு வாங்க என நாங்கள் கூப்பிடுகிறோம். கோவிலுக்கு வர இவ்வளவு பயப்படுகிற ஒரு பிரதமரை நீங்கள் கொண்டிருப்பது சரியா ? நியாயமா ? ஏன் அதுவும் சிறப்பு வழிபாட்டிற்கு வாருங்கள் , சிறப்பு கூட்டத் தொடருக்கு வாருங்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.
இங்கே வராமல் பீஹாருக்குப் போய் பிரதமர் பேசுகிறார் “ கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நாங்கள் நடத்துவோம்” என்றார். கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நடத்துவார் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நடத்தினார் , யார் நடத்தினார் ? அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்தினார் கற்பனையே செய்ய முடியாத ஒரு தாக்குதலை. இந்தப் பிரச்சனையில் அதிகமாகத் தோல்வி அடைந்திருப்பது உள்துறை அமைச்சகமா ? அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகமா? என்ற விவாதத்தை இந்த அவை நடத்திக் கொண்டிருப்பது எதிர்கட்சிகளாகிய நாங்கள்.
சர்வதேச நிதியம் (IMF) பாகிஸ்தானுக்கு கடன் கொடுப்பதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. அதன் நிர்வாகக் குழுவில் 25 நாடுகள் இருக்கிறது . அதில் ஒரு நாடு கூட இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. உலக அரங்கில் இந்தியாவை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் நீங்கள் என்பதை இங்கே நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதேபோல பாலஸ்தீன பிரச்சனையில் ஐநா தீர்மானத்தில் இருந்து விலகியது, ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்துப் போடாதது, ட்ரம்ப்பினுடைய பேச்சுக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றாதது , வர்றீங்க மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒரு கோழை நாடாக கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் இங்கே குற்றஞ்சாட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
எனக்கு முன்னாள் பேசிய மரியாதைக்குரிய முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்குச் சொல்வதற்கு அனைத்துக் கட்சிக் முழுசா நீங்கள் அனுப்பினீர்கள். எதிர்கட்சிகளெல்லாம் அதில் பங்கெடுத்தார்கள். என்ன விசித்திரம் தெரியுமா ? உங்களால் கடந்த காலங்களில் யாரெல்லாம் தேச துரோகிகள் என்று சொன்னீர்களோ , அந்த தேசத்துரோகிகளில் பலர் எதிர்க்கட்சி குழுவில் பங்கெடுத்தோம். ஏனென்றால் எங்களுக்கு முக்கியம் தேசம் தான். அதுமட்டுமல்ல ஒவ்வொரு குழுவிலும் ஒன்று அல்லது இரண்டு இஸ்லாமிய எம்.பிக்கள் பங்கெடுத்தார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இஸ்லாமிய எம்பிகளுக்கான பிரதிநிதித்துவத்தை கொடுத்த முதல் விசயம் இது தான் . அதைக் கொடுத்தவர்கள் எதிர்க்கட்சிகளாகிய நாங்கள்.

நேற்றைய தினம் நம்முடைய மரியாதைக்குரிய பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்து சோழர்களுடைய பேரரசை நினைவுபடுத்தி சோழர்கள் நடத்திய போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் இணைத்துப் பேசியிருக்கிறார். நான் ஒரு வரலாற்று மாணவனாக, வரலாற்றை அறிந்த எழுத்தாளன் என்ற முறையில் சொல்கிறேன் , இந்தியாவில் இருந்த ஒரு பேரரசு கடல்கடந்த வெற்றியைப் பெற்றது என்றால் அது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் சோழப் பேரரசு மட்டும்தான்.

அந்த வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா ? ராஜ ராஜனோ, ராஜேந்திர சோழனோ தான் நடத்திய எல்லா போரையும், தான் ஆரம்பித்த எல்லா போரையும் அவன் தான் முடித்தானே தவிர பக்கத்து நாட்டு மன்னன் முடித்து வைக்கவில்லை. '

மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை முடித்து வைத்தது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்பதை 25 முறை சொன்னார். ராஜராஜன் ஆரம்பித்த போரை பக்கத்து நாட்டு மன்னன் முடித்ததாக சொல்லியிருந்தால், முதலில் அவன் கதையை முடித்திருப்பான் ராஜ ராஜனும் , ராஜேந்திரச் சோழனும்.

எனவே இன்றைக்கும் கூட இந்த அவையில் நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் விவாதத்தை ஆரம்பித்து பேசினார் . ராமன் எப்படி இலங்கையின் மீது படையெடுத்து ராவணனைக் கொன்றானோ அதேபோல இந்தப் படையெடுப்பை பிரதமர் நடத்தியிருக்கிறார் என்று சொன்னார். இன்னொரு அமைச்சர் எழுந்து சொல்கிறார் , என்ன சொன்னார் ? சிசுபாலனுடைய தலையை வெட்டுவதற்கு சுதர்சன சக்கரத்தை கிருஷ்ணன் பயன்படுத்தியதைப் போல பிரதமர் படைகளைப் பயன்படுத்தினார் என்று சொல்கிறார். "ராமன், கிருஷ்ணன் போன்ற கடவுள்களை எல்லாம் உங்கள் தோல்விகளை மறைக்க இவ்வளவு மலினமாக பயன்படுத்துவது நியாயமா? ஆத்திகவாதிகளின் மனம் புண்படாதா? இந்துக்களின் மனம் புண்படாதா? என்பதை மிக வேதனையோடு நாங்கள் இங்கு கேட்கிறோம்.

மாண்புமிகு பாதுகாப்புத்துறை அமைச்சர் தனது பேச்சில் ஒருமுறை கூட மறந்துகூட கர்னல் சோஃபியா குரேஷிக்கு ஏற்பட்ட அவமதிப்பை , மத்திய பிரதேசத்தின் உங்கள் எம்பி விஜய் ஷா அவமரியாதையாக பேசியதைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஏன் ?

அதேபோல பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற தனது உயிரைக் கொடுத்தான் குதிரை ஓட்டியான அதில் ஷா. அதில் ஷாவின் வீரத்தைப் பாராட்டி ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசவில்லை. ஒரு அதில் ஷா மட்டுமல்ல தீவிரவாதத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அதில் ஷாக்கள் இருக்கிறார்கள் என உணர்த்தியது காஷ்மீர் மக்கள் . அந்த காஷ்மீர் மக்களின் ஒருமைப்பாட்டை அங்கீகரித்து ஒருவார்த்தை நீங்கள் பேசவில்லை .

வேதனையோடு நாங்கள் சொல்கிறோம் . மதரீதியான வேறுபாடுகளை பயங்கரவாதத்தை வைத்து அதிகரிக்க முடியாது என்பதுதான் இந்தியா சொல்கிற செய்தி. அது தான் இந்தியா . அந்த இந்தியாவை உங்களால் ஒருபோதும் பிளக்கவோ, வெறுக்கவோ முடியாது .
நாங்கள் வெல்வோம் !

மக்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் முழங்கியது.

No comments:

Post a Comment