Wednesday, December 30, 2015

நாங்கள் கம்பீரமானவர்கள்...

  தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் அவர்கள் எழுதிய மிக முக்கியமான கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நாங்கள் கம்பீரமானவர்கள்





அரசியலிலும் சமுதாயத்திலும் மாற்றம் வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்புள்ள மக்களிடையே, இன்றைய அரசியல் இயக்கங்கள் எதுவும் சரியில்லை என்ற எண்ணத்தை விதைத்து, அரசியல் பங்கேற்பற்ற ஒரு சமூக வெளியைக் கட்டமைக்கிற வேலை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
சில நேர்மையான அதிகாரிகள் உள்ளிட்ட தனிமனிதர்களை முன்னிறுத்தி அவர்கள் தலைமையேற்க வேண்டும் என்ற சிந்தனை அவ்வாறு கட்டமைப்பதற்கான வண்ணப்பூச்சாகத் தீட்டப்படுகிறது. அரசியலை அசூயைக்கு உரியதாக்கிவிட்ட சில கட்சிகளின் மீது மக்களுக்கு உள்ள கசப்புணர்வும் பிரதிபலிக்கப்படுகிறது, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திடும் கட்சிகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிற கைங்கரியமும் செய்யப்படுகிறது.

அண்மையில் ‘தி இந்து’ தமிழ் நாளேட்டில் கட்டுரையாளர் சமஸ் எழுதிய ஒரு பதிவு வெளியானது. அது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது. நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாக காமராஜரை மட்டும் குறிப்பிட்டு எழுதுகிறபோதெல்லாம் இடதுசாரி தோழர்கள் தொடர்புகொண்டு கம்யூனிஸ்ட் தலைவர்களைக் குறிப்பிட்டு அவர்களெல்லாம் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் என்று சமஸ் கூறியிருக்கிறார். என். சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, ஜி. ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், சி. மகேந்திரன் ஆகிய சில தலைவர்களையும் அவர்களது தன்னலமற்ற பணிகளையும் குறிப்பிட்டு, அவர்களைப் போன்றவர்கள் ஆட்சியமைத்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் அங்கீகரித்திருக்கிறார். நன்மாறன், சுகந்தி, வீரபாண்டியன் ஆகியோரையும் குறிப்பிட்டிருக்கிறார்.பொதுவாக கம்யூனிஸ்ட் தலைவர்களது வாழ்வையும் பணியையும் பல ஊடகங்கள் ஏதோ நேர்ந்துகொண்டது போல இருட்டடிக்கிறபோது, அவர்களை சமஸ் நல்ல வெளிச்சத்தில் காட்டியிருப்பது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியதுதான்.

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ளப் பாதிப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மாதக்கணக்கில் இரவுத்தூக்கமில்லாமல் உழைத்தது பற்றியும், மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆவணங்களோடு சென்று தலையிட்டது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மழைவெள்ளக் காலத்தில் எந்தக் கட்சியும் எதுவும் செய்யவில்லை என்ற சித்திரத்தைப் பல ஊடகங்கள் வரைந்துகொண்டிருக்கிறபோது, இந்த உண்மைக் காட்சியைக் க hட்டியிருப்பதற்காகவும் நன்றியை உரித்தாக்கலாம்.இன்றளவும் மார்க்சிஸ்ட் தோழர்கள் பலவகையான வாழ்வாதார மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

தங்களது வீடுகளும் நீரில் மூழ்கி, இழப்புகள் ஏற்பட்ட நிலையிலும் பொதுமக்களைக் காக்கிற முனைப்பை உணர்வுப்பூர்வமாக மேற்கொண்டவர்கள் அவர்கள். சொல்லப்போனால், ஊடகங்கள் எட்டிக்கூட பார்க்காத இடங்களில் அடித்தட்டு மக்களின் வெள்ளத் துயர் துடைப்பதற்குத் தங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். மழைவெள்ளம் சுழற்றியடித்த தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கட்சி அலுவலகங்களில் பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதார மீட்பு நடவடிக்கைகளையும் மறுவாழ்வுக்கான நிவாரணங்களையும் ஒருங்கிணைக்கிற பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.சமஸ் விரும்பினால் அவர் எழுதுவதற்கு இப்படிப்பட்ட உண்மைக் கதைகளை நிறையவே எடுத்துக்கொடுக்க முடியும்.பெருமிதத்திற்குரிய வேறு பல முன்னுதாரணங்களும் உண்டு.

கம்யூனிஸ்ட் தலைவர்களில் 9 பேர் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்துள்ளனர். இவர்களில் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளோ, ஆடம்பரப் புகார்களோ கூறப்பட்டதில்லை. மக்களையோ செய்தியாளர்களையோ சந்திக்கத் தயங்காதவர்கள் அவர்கள்.திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் சொந்தவீடு கூட இல்லாதவர் என்று ஊடகங்கள் பாராட்டுகின்றன.அதே மாநிலத்தின் முதல்வர் பொறுப்பிலிருந்த நிருபன் சக்ரவர்த்தி விடைபெற்ற நாளில் ஒரு கையில் புத்தகப் பெட்டியும் இன்னொரு கையில் ஆடைகளையும் எடுத்துச் சென்றது பற்றி “அதிசயம் ஆனால் உண்மை” என்று தலையங்கம் எழுதியது ‘தினமணி’.தசரத் தேவ் நினைவுகள் திரிபுராவின் ஆதிவாசி மக்களுக்கு இன்றும் ஒரு உந்துவிசை.தனது சொத்து முழுவதையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு ஒரு முழுநேர ஊழியராய் வாழ்ந்தவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்.நாடாளுமன்றத்திற்கே சைக்கிளில் வந்துசென்றவர் பி. சுந்தரய்யா.இன்றைக்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், சாதாரண பேருந்துகளிலும் ரயிலில் இரண்டாம் வகுப்புகளிலும் பயணிக்கிற தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

தலைவர்கள் மட்டுமல்ல, உள்ளூர் கிளையிலும் இத்தகையவர்களைக் காண முடியும். வெளிச்சமூகத்தின் தாக்கத்தில் சிலர் தடம் மாறுவார்களானால் அவர்களை சரியான தடத்திற்கு மாற்றுகிற முயற்சியும் கம்யூனிஸ்ட் இலக்கணமே.இத்தகைய நற்குணங்கள் தோழர்களின் தனிப்பட்ட சிறப்பியல்புகள் அல்ல, அவர்களே சொல்வது போல் ஒவ்வொரு தோழரையும் இப்படி வளர்த்தெடுக்கிற செங்கொடி இயக்கத்தின் சிறப்பியல்பு இது.

ஆனால், சமஸ் தனது கட்டுரையை, முதலமைச்சர் நாற்காலியில் யாரை அமரவைப்பது என்ற விவகாரமாகவே முடிக்கிறார். மேற்படி தலைவர்களை விட்டுவிட்டு, வைகோ-வையோ, விஜயகாந்தையோவா அந்தப் பதவியில் அமர்த்தப்போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

ஒருவர் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவர். இன்னொருவர் மக்கள் நலனுக்காக இந்தக் கூட்டணிக்கு வருமாறு அழைக்கப்பட்டிருப்பவர்.ஆக, தனி மனித அரசியலைக் கட்டமைக்கத்தான் சமஸ் கட்டுரை விரும்புகிறதா என்றே கேட்க வேண்டியிருக்கிறது. தனிமனிதர்களின் நேர்மையும் எளிமையும் முக்கியமானவைதான்; ஆனால் அவை மட்டுமே மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போதுமானவையல்ல. நம் நாட்டின் அரசியலைப் பிடித்த கேடுகளில் ஒன்றுதான் தனி மனித ஆராதனை, தனி மனித நிந்தனை இரண்டுமே.

அடிப்படையான பிரச்சனைகளில் வதைபடுகிற மக்களை மாற்றத்திற்காக அணிதிரட்டும் முயற்சிகள் நடக்கிறபோதே, வரலாற்றைத் திருத்துவதற்காகவே அவதரித்த நாயகர்களாக சில தனித் தலைவர்களின் பக்கம் வெளிச்சத்தைப் பாய்ச்சி, அவர்களின் பின்னால் செல்லவைக்கிற திருப்பணியும் நடக்கிறது.

அதுவும் அரசியல் புலமற்ற தனி மனிதர்கள் என்றால் இன்னும் உற்சாகமாக முன்னிறுத்தப்படுவார்கள். கொள்கை சார்ந்த இயக்கமாக மக்கள் அணிதிரளவிடாமல் பார்த்துக்கொள்வதில் அவ்வளவு கவனம்.மக்கள் நலக் கூட்டணி என்பது முதல் முறையாகத் தமிழகத்தில் குறைந்த பட்ச கொள்கை உடன்பாட்டின் அடிப்படையில், மக்களுக்கான போராட்டங்கள் அடிப்படையில் - மழைவெள்ளத்தையொட்டி மக்களுக்கான சேவை அடிப்படையிலும் - உருவாகியிருக்கிறது. அந்தக் கொள்கைகள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஆட்சிக்கும் கொள்கை சார்ந்த கூட்டியக்கம் வருவதே தமிழகத்திற்கு நம்பகமான மாற்றுப் பாதையாக இருக்கும்.

கட்டுரையில் சமஸ் குறிப்பிட்ட நல்ல தலைவர்கள் சேர்ந்து எடுத்த முடிவுதான் மக்கள் நலக் கூட்டணியை அமைப்பது. அந்தக் கூட்டணியின் தலைவர்களோடு சேர்ந்து எடுத்த முடிவுதான் தேமுதிகவுக்கு அழைப்பு விடுப்பது. தமிழகத்தின் உடனடி அரசியல் சூழலில், கணிசமான மக்களின் ஆதரவைப் பெற்ற, அதிமுக-திமுக-பாஜக-காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பலத்தைக் கூட்டணிக்குப் பயன்படுத்த முயல்வதில் தவறு என்ன? அவரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தபோது குறைந்த பட்ச கொள்கை உடன்பாடு பற்றி அவரிடமும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் அறிவிக்காமலே ஒரு கட்சியின் தலைமை அவர் தங்களுடைய கூட்டணியில் நீடிக்கிறார் என்று கூறிக்கொள்கிறது. இன்னொரு கட்சி அவரோடு பேச இடைநிலைத் தூதர்களை விட்டு நோட்டம் பார்க்கிறது.மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களோ கம்பீரமாக, நேரடியாக, வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு அவரைச் சந்திக்கிறார்கள்.

முதலமைச்சர் பொறுப்பில் யாரை உட்கார வைப்பீர்கள் என்ற கோணத்தில் இதை விவகாரப்படுத்துவது கூட்டணி முயற்சியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று வேண்டுமானால், இந்தக் கூட்டணியை விரும்பாதவர்கள் மனம் மகிழக்கூடும்.

தலைவர்கள் நல்லவர்கள், கட்சி எடுக்கிற முடிவு தவறானது என்ற தோற்றத்தையும் இத்தகைய எழுத்துகள் ஏற்படுத்துகின்றன.இது கட்சியின் ஒரு உயர்மட்டத் தலைவர் தன் விருப்பப்படி எடுக்கிற முடிவு அல்ல. கூட்டுத் தலைமை, கூட்டு முடிவு, கூட்டுச் செயல்பாடு என்பதே கம்யூனிஸ்ட் கட்சி வழிமுறை. கட்சியின் அரசியல் வழிமுறைகள் பற்றி மக்கள் மனங்களில் ஐயத்தை விதைப்பதும், கட்சியைத் தனிமைப்படுத்துவதும், கம்யூனிஸ்ட்டுகள் உறுதியாக எதிர்க்கிற, சமஸ் போன்றோரும் எதிர்க்கிற, உள்நாட்டு-உலகமய சுரண்டல் சக்திகளுக்கும் மதவெறி-சாதியவெறி பீடங்களுக்கும்தான் உவப்பளிக்கும். அந்த உள்நோக்கத்துடன்தான் சமஸ் இவ்வாறு எழுதியிருப்பதாகக் கூறுவதற்கில்லை என்றாலும், அவருடைய கட்டுரையின் ஒட்டுமொத்தத் தாக்கம் இதுதான்.இத்தகைய தாக்கங்களையும் கடந்து மாற்று இயக்கம் கட்டப்படும்.

-‘தீக்கதிர்’ இன்றைய (டிச.30) இதழில் தோழர் அ.குமரேசன் அவர்களின் வந்துள்ள  கட்டுரை.

1 comment:

  1. //..மேற்படி தலைவர்களை விட்டுவிட்டு, வைகோ-வையோ, விஜயகாந்தையோவா அந்தப் பதவியில் அமர்த்தப்போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.//

    உங்க வாசகர் bandhu ன் அரசியல் பதிவு ஒன்ற படித்போது அதில் வைகோ பற்றி அவர் சொன்ன போது தான் எனக்கும் தோன்றியது,
    சமஸ் சொன்னது போல் மேற்படி எளிமையான வாழ்க்கை வாழும் நற்குணங்கள் கொண்ட தலைவர்களில் ஒருவர் முதல்வராக வருவது இங்கே மிகவும் அவசியமானது. அது முடியாமல் போனால், விஜயகாந் முதல்வராக வரலாம். அனால் இன்னொரு நாட்டிற்காக செயற்படும் வைகோவை முதல்வராவதை ஆதரிக்க சொல்வது அநீதியான வேண்டுகோள்.

    ReplyDelete