Monday, March 31, 2014

நெற்றியில் துப்பாக்கியை வைத்த நிதியமைச்சர்

இப்போது எழுதுவதை படிக்கும் போது  இரு தினங்கள் முன்பாக சிவகங்கை முன்னாள் சீமான் குறித்து எழுதிய பதிவு  உங்கள்
நினைவிற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

எப்போதோ படித்த கதை இது.

அது ஒரு ஆப்பிரிக்க நாடு. எல்லா வளங்களும் இருந்தாலும்
அது எதுவும் மக்களுக்கு போகாது.  ஆட்சியில் உள்ளபவர்கள்
சுருட்டிக் கொள்வார்கள். பல முறை ஆட்சி மாற்றம், ராணுவ
ஆட்சி என்றெல்லாம் நடந்திருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும்
தோலும் எலும்புமாக குழந்தைகள் இருக்கும் காட்சி பார்ப்ப்வர்கள்
கண்ணில் நீரை வரவழைக்கும்.

அங்கே மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் வந்தது. புதிய அரசில்
நிதியமைச்சராக பொறுப்பேற்றவர்கள் தடாலடியாக பல
நடவடிக்கைகள் எடுத்தார். முன்பு ஆட்சி செய்தவர்கள் சேர்த்த
சொத்துக்களை மீண்டும் நாட்டு கஜானாவிற்கே கொண்டு வரப்
போவதாக அறிவித்தார்.

மென்மையாக பேசுபவரானுலும் உறுதியான இதயம் 
கொண்டவர் என்று அவருக்கு புகழ் கிடைத்தது. தன்னுடைய
பணி நிமித்தம் அவர் ஸ்விட்சர்லாந்து சென்று அங்கேயிருந்த
பெரிய வங்கிக்கு செல்கிறார். அந்த வங்கியின் சேர்மனை
சந்திக்கிறார்.

" எங்கள் நாட்டு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தாங்கள்
கொள்ளையடித்த பணத்தை உங்கள் வங்கியில்தான் பதுக்கி
வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். அந்த விபரங்கள்
எனக்கு வேண்டும்" என்று அவர் மரியாதையாக கேட்க,
எங்கள் வங்கியில் முதலீடு செய்பவர்கள் பற்றிய விபரங்களை
நாங்கள் தர முடியாது என்று சேர்மனும் மரியாதையாக சொன்னார்.

நிதியமைச்சர் அழுத்தமாக பேசினார், கோபமானார், மிரட்டினார்,
உங்கள் வங்கி மீது வழக்கு தொடுப்பேன் என்று என்னென்னமோ
சொல்லிப் பார்த்தார். ஆனால் சேர்மன் அசைந்தே கொடுக்கவில்லை.
பொறுத்து பொறுத்து பார்த்த நிதியமைச்சர் கடைசியில் 
ரிவால்வரை எடுத்து சேர்மனின் நெற்றியில் வைத்து " நான்
கேட்கும் தகவல்களை கொடுக்காவிட்டால் உன்னை சுட்டு 
விடுவேன்" என்று கர்ஜித்தார்.

அப்போது சேர்மன் சொன்னார்' உயிரே போனாலும் எங்கள் 
வாடிக்கையாளர்களை நாங்கள் காட்டிக் கொடுக்க மாட்டோம்".

அப்போது நிதியமைச்சர் முகத்தில் ஒரு புன்னகை. ஒரு நிமிடம்
என்று சொல்லி விட்டு அறைக்கு வெளியே போய் விட்டு வந்தார்.

மீண்டும் உள்ளே வந்தவர் கையில் ஒரு பெரிய பெட்டி.

'இதில் ஐந்நூறு கோடி டாலர் இருக்கிறது, எனக்கு ஒரு கணக்கு
தொடங்குங்கள்"

மீண்டும் சொல்கிறேன். ப.சிதம்பரம் ஸ்விஸ் அரசுக்கு எழுதிய
கடிதத்திற்கும் இக்கதைக்கும் சம்பந்தமேயில்லை.


2 comments:

  1. வேலிக்கு ஓணான் சாட்சி ! ஹஹஹா

    ReplyDelete
  2. thambi, nallaa kadhai solre, unga aalunga vandhaa idhu nadakkum

    ReplyDelete