Wednesday, January 29, 2014

நச்சைத் தூவிய காவிப்பூனைகளுக்கு பால் கசக்கிறதாம்.....



நேற்று முன் தினம் தமிழருவி மணியன் பற்றி நான் இட்ட பதிவிற்கு கொஞ்சமும் தொடர்பில்லாமல் கே.கோபாலன் என்று ஒரு சங் பரிவார ஆதரவாளர் பல கேள்விகளைக் கேட்டிருந்தார். அந்த கேள்விகள் இங்கே.
இப்போது உள்ளவர்களில் மோடிதான் தகுதி உள்ளவர் என்பது அவர் கருத்தாக இருக்கும். என் போன்றவர்களின் கருத்தும் அதுதான்.

நீங்கள் கூறும் மத வெறி என்பதன் அர்த்தம் என்ன.

50
பேரை கொளுத்தும் அளவுக்கு துணிவு அந்த மிகச்சிலருக்கு எங்கிருந்து வந்தது. திருப்பி அடித்தால் மதவாதி என்று பெயர் வைப்பீர்களா. (அங்கு நடந்த கொடுமைகளுக்கு முதல் காரணம் யார்). இஸ்லாமின் பெயர் கொண்ட கட்சிகள் மத்வாதக் கட்சிகள் இல்லையா.

யாருமே பொய்த் தொழாத ஒரு இடத்தை இடித்தால் (அதைக் கட்டுவதற்கான பணத்தை அவர்கள் எங்கிருந்து கொண்டுவ்ந்தார்கள் என்று யாரும் கேட்டவில்லை) அதற்கு பதிலடி மும்பையில் 150 உயிரை வாங்குவதுதானா. அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள் என்று கூறி மழுப்புவீர்களா. (ஒரு உயிரை எடுப்பது பெரிய பாவம் - யார் செய்தாலும்)

சிறுபான்மையினர் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பதை சர்ச்சுகளும் மசூதிகளும் தீர்மானிக்கின்றன என்பது இங்குள்ள ஒரு குழந்தைக்குக் கூடத் தெரியும். நாம் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் வாழுகிறோம் என்று உங்களால் கூற முடியுமா.

மதங்களோடு மற்ற கட்சியினர் எப்போதும் சாதிகளை ஏன் இணைக்கிறார்கள் (பிஜேபி ஒரு பிராமணர் கட்சி என்று ஒரு பெண்மணி தொலைக்காட்சியில் கூறினார்). நீங்களும் இவரில் ஒருவரா. சாதி, மத்ங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு வேட்பாளரை இந்தியாவில் எந்தக் கட்சி இதுவரை நிறுத்தியிருக்கிறது.

வேலை காலியில்லை என்ற போர்டுகள் போய். ஆள் தேவை என்ற போர்டுகள் வந்ததற்கு அன்னிய முதலீடு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியுமா. மோடியும் அதையே விரும்புகிறார்.

மோடியின்மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் எத்தனை.

எங்களிடம் எல்லாம் இருக்கிறது எனும் நீங்கள் இதற்கெல்லாம் பதில் கூற முடியுமா.

கே. கோபாலன்
அவருக்காகவே இந்த ஸ்பெஷல் பதிவு.

மத அடிப்படைவாதத்தை நான் எதிர்க்கிறேன். அது இந்து மத அடிப்படைவாதமாக இருந்தாலும் சரி, இஸ்லாம், கிறித்துவ அடிப்படை வாதமாக இருந்தாலும் சரி. அடிப்படைவாதம் மேலாதிக்கத்தை தக்க வைக்கவும் ஒடுக்க முறையை நீடிக்க வைக்கவுமே ஆசைப்படும் என்பதுதான் நான் கற்றுக் கொண்டது. நடைமுறையில் காண்பது. மதத்தை பின்பற்றுபவர்கள் எல்லோரும் அடிப்படைவாதிகள் அல்ல. ஆனால் அடிப்படைவாதிகள் தாங்கள்தான் எல்லோருக்கும் குத்தகைதாரர்கள் என்ற ரீதியில் நடந்து கொள்வார்கள்.

முதலில் அவருடைய பின்னூட்டத்தில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன். ஐம்பது பேரைக் கொன்றதற்கு பதிலடி தருவது தவறா என்று கேட்கிற அவரே, மசூதியை இடித்ததற்காக 150 பேரை மும்பையில் கொன்று பதிலடி தருவது நியாயமா என்றும் கேட்கிறார். அப்படியென்றால் பதிலடி நீங்கள் மட்டும் தரலாமா? என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறது அல்லவா?

சரி, இப்போது விளக்கங்களுக்குச் செல்கிறேன்.

மத சார்பின்மை நாடு என்பது என்ன? மக்களுக்கு மதம் இருக்கலாம். ஆனால் ஒரு அரசு எந்த மதத்தையும் சாராமல் இருப்பது என்பதுதான். அரசு நிகழ்ச்சிகளில் சரஸ்வதி வந்தனமும் அவசியமில்லை, தொழுகையும் தேவையில்லை, ஜெபமும் வேண்டாம் என்பதுதான். பல்வேறு விதமான மதம், மொழி, இனம் உள்ள இந்தியா போன்ற ஒரு நாடு எந்த மத அடிப்படையிலும் தனது கொள்கைகளையோ சட்டங்களையோ வகுத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் மத சார்பின்மை. இப்படி இருக்கிறதா என்ற கேள்வி அவசியமில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும்.

இஸ்லாமிய மதக்கட்சிகள் கிடையாதா என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தலித் அமைப்புக்கள் இருக்கும் போது நாங்கள் ஜாதி சங்கம் வைத்துக் கொள்ளக் கூடாதா என்று சில அமைப்புக்கள் கேட்பது போன்ற கேள்வி இது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒன்று திரள்வதற்கும் ஆதிக்க சக்திகள் தங்களின் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அமைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் உள்ள வேறுபாடு போன்றதுதான் இது. பாஜக மதவாதத்தை ஏன் கையில் எடுத்துக் கொள்கிறது. மத உணர்வுகளை ஏன் தூண்டுகிறது. வெறும் நாற்காலிக்காக மக்களை துண்டாடுகிறதே.

இன்னொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. இஸ்லாமியர்கள் பல தார மணம் மூலம் தங்களின் மக்கட்தொகையை பல மடங்கு அதிகரித்து விட்டார்கள் என்று ஒரு விஷமப் பிரச்சாரத்தை செய்து வந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புக்கள் இஸ்லாமியர்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் வீழ்ச்சிதான் அடைந்துள்ளது என்பதை நிரூபணமாக்கி விட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, சமூக வாழ்வு ஆகியவற்றில் அவர்கள் மிகவும் பின் தங்கியுள்ளார்கள் என்பதை நீதியரசர்கள் ராஜேந்திர சச்சார், ரங்கநாத் மிஸ்ரா ஆகியோரின் அறிக்கைகளும் தெளிவுபடுத்தி விட்டன.

இந்தியாவில் மதக்கலவரங்களுக்கு ஊற்றுக்கண் யார்?

சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாத சங் பரிவாரம்தான் இந்தியாவை பிரிக்க வேண்டும், முஸ்லீம்களை இந்தியாவை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கை வைத்தது. சவர்க்கரும் கோல்வாக்கரும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தியதன் விளைவாகவே பிரிவினை கோஷத்தை முகமது அலி ஜின்னாவும் முன் வைக்கிறார்.

மசூதிகள் கட்ட பணம் எங்கே இருந்தது என்று யாரும் கேட்கவில்லை என்று நேற்று சொன்னாலும் முந்தைய பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்தார். கோயில்களை கட்ட அரசர்களுக்கு எங்கிருந்து பணம் வந்ததோ அங்கிருந்துதான் மசூதிகளை கட்டவும் பணம் வந்திருக்கும். அரசுகளுக்கோ இல்லை அரசர்களுக்கோ சொந்தமாக ஏது பணம்? எந்த மதத்து கடவுள் தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று வானைக் கிழித்து கொட்டியிருக்கிறார். எல்லாமே மக்களின் பணம்தான். வரியாக வசூலிக்கப்பட்ட பணம். அடுத்த நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணமாக இருந்தாலும் அதுவும் அந்த நாட்டு மக்கள் பணம்தான்.

இதிலே கூடுதலாக இன்னொன்றும் சொல்ல வேண்டும். இஸ்லாமிய மன்னர்கள் படையெடுப்பின் போது கோயில்களை இடித்தார்களே என்ற பிரச்சாரம் வேறு அவ்வப்போது செய்வார்கள். பின்னூட்டம் வருவதற்கு முன்பாக நானே அதற்கும் பதில் சொல்லி விடுகிறேன். இன்றைக்கு பல கோயில்கள், அவை எந்த மதத்தை சேர்ந்தவையாக இருந்தாலும் பணம் அள்ளும் பொக்கிஷமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் பொக்கிஷத்தை பாதுகாக்கும் காவல் அறைகளாக இருந்தது. பொக்கிஷத்தை களவாட கோயில்களை இடித்தார்கள். அது இஸ்லாமிய மன்னர்கள் மட்டும் அல்ல. இந்து மன்னர்கள் இடித்த இந்துக் கோயில்களும் ஏராளம். தமிழக மன்னர்களால் இடிக்கப்பட்ட சமண, புத்த வழிபாட்டுத் தளங்கள் இங்கேயே ஏராளமாக உள்ளது. ஆகவே அது அப்போதைய போர்களின் ஒரு பகுதி. நகையாக இருந்த செல்வங்களை அன்று கொள்ளையடித்தார்கள். இன்று அமெரிக்கா எண்ணெய் வளமாக கொள்ளையடிக்கிறது.  

வழிபடாத மசூதியை இடித்தோம் என்கிறார். அங்கே வழிபாடு நடக்க முடியாமல் ராமர் சிலையை திருட்டுத்தனமாக வைத்தது யார்?

இதிலே ராஜீவ் காந்தியின் முட்டாள்தனமும் கையாலாகததனமும் அடங்கியிருக்கிறது. பூட்டிக் கிடந்த பிரச்சினையை மீண்டும் திறந்து விட்டது அவர்தான். தலாக் செய்யப்பட்ட ஷாபானுவிற்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை செயல்படுத்த முடியாமல் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அடிபணிந்து ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தார். அதை சமன் செய்யும் பொருட்டு இந்து அடிப்படைவாதிகளை குளிர வைக்க மசூதிக்கு உள்ளே இருந்த ராமர் சிலைக்கு பூஜை செய்ய அனுமதித்தார். இதிலே ருசி கண்ட காவிப் பூனைகள் செங்கல்லை தூக்கிக் கொண்டு ரத்த யாத்திரை கிளம்பி எம்.பி சீட்டுக்களை அதிகமாக்கிக் கொண்டது. 

பாஜக முதலில் நடத்திய கர சேவையின் போது கலவரங்கள் நடந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரைக்கு எதிராக மாணவர்களை தூண்டி இன்னொரு கலவரத்திற்கு வித்திட்டது. தேசம் முழுவதும் மிக அதிகமான கலவரங்கள் நடந்தது என்பதும் நம்பிக்கையின்மையும் உருவானது என்பதும் டிசம்பர் ஆறு மசூதி இடிப்பிற்கு பிறகே. மசூதி இடிப்பிற்குப் பின்பு சிவசேனை வெறியாட்டத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை மூடி மறைத்து விட்டு மசூதி இடிப்புற்காக மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது என்று கோபாலன் திரித்து சொல்கிறார்.  குண்டு வெடிப்பு எனும் பயங்கரவாதச் செயலை நான் நியாயப்படுத்தவில்லை. விடுபட்டுப் போன ஒரு நிகழ்வை சொல்கிறேன். அதே நேரம் பரிவார அமைப்புக்கள் குண்டு வைத்ததையும் நினைவு படுத்துகிறேன்.

கோத்ரா ரயில் எரிப்பு மோசமான செயல். அதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதற்கு தொடர்பே இல்லாத அப்பாவி மக்களுக்கு பதிலடி தருவார்களா? அதுவும் ஆயிரக்கணக்கானவர்களை கொடூரமாகக் கொலை செய்யலாமா? அதை நாயின் மகன் காரில் அடிபட்டால் என்று இரக்கமே இல்லாமல் வர்ணிக்கிற ஒரு அரக்க குணம் கொண்ட மனிதரை, அந்த கொடூரங்களில் ஈடுபட்டவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்து அழகு பார்த்த இரக்கமில்லாத கொடியவரை, ஏன் இப்போது முசாபர்நகர் கலவரங்களை முன்னின்று நடத்திய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிரீடம் சூட்டி, மாலை அணிவித்து சால்வை போர்த்தி கௌரவித்த ரத்த வெறி பிடித்தவர்தான் பிரதமருக்கு தகுதியானவராம்.

ஒரு வாதத்திற்காக கேட்கிறேன். ஐம்பது பேர் இறந்ததற்கு பதிலடி கொடுத்தது தவறா என்று நெஞ்சில் கொஞ்சமும் ஈரம் இல்லாமல் கேட்கிற மனிதர்கள், ஏன் இந்திரா காந்தி இறந்த போது சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றி காங்கிரசை விமர்சிக்கிறீர்கள். உங்கள் பதிலடி சரியென்றால் அதுவும் சரிதானே. ஆனால் நாங்கள் சொல்வோம். இரண்டும் தவறு. ஹெ.கே.எல்.பகத், ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் போன்றவர்களும் தண்டனைக்குரியவர்கள். அவர்களை பாதுகாப்பது காங்கிரஸ் செய்யும் அயோக்கியத்தனம்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பெரு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையையும் விட குறைவாக கொடுப்பது ஊழல் கிடையாதா? நிலக்கரி ஊழல், கிருஷ்ணா கோதாவரி படுகை ஊழல் காங்கிரஸ் செய்தது என்றால் இவர் செய்தது மட்டும் என்னவாம். இவர் மீது சி.ஏ.ஜி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை எந்த ஊடகமும் வெளியிடவில்லை என்றால் இவர் சுத்த சுயம்பிரகாசமா என்ன? இவர் மீதான ஊழல்கள் பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். அதற்கு எந்த பாஜக ஆட்களும் பதில் சொல்லவில்லை. கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திசை திருப்புவதே இவர்களின் பிழைப்பாக மாறி விட்டது.

உலகமயம் உலகெங்கும் தோற்றுப் போய்விட்டது. அது உயிரற்ற ஒரு சவம் என்றால் அந்த சவத்தை மன்மோகனின் தோளிலிருந்து இவர் தன் தோளிற்கு மாற்ற துடிக்கிறார், அவ்வளவுதான். அன்னிய முதலீடு வந்ததால் வேலையின்மை பிரச்சினை தீர்ந்து விட்டதாம். கோபாலன் சார் கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்கள். அரசாங்க புள்ளி விபரங்களே உண்மை நிலையை சொல்லும்.

உலகப் பொருளாதார நெருக்கடி வந்த நேரம், உலக வங்கி அமைத்த ஒரு பொருளாதார  நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரை என்ன தெரியுமா?

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்த நாட்டின் உள்நாட்டு சேமிப்பை அதிகப் படுவதே தீர்வாக இருக்க முடியுமே தவிர, அன்னிய முதலீடு அல்ல. உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிக்க மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அதற்கு ஏற்ற முறையில் அமைய வேண்டும்.

ஆனால் உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிப்பதற்கு பதிலாக அதனை சர்வ தேச நிதி மூலதனத்திடம் ஒப்படைக்கும் வேலையை இப்போதைய காங்கிரஸ் அரசு செய்கிறது. அதற்கு துணை போவது பாஜக. பென்ஷன் மசோதா, வங்கி மசோதா ஆகியவற்றை நிறைவேற்றிய கூட்டுக் களவானிகள் இருவரும்தான்.

ஜாதி,மதம் பார்க்காத கட்சி இருக்கிறதா என்று கேட்டுள்ளார். இதோ இடதுசாரிகள் இருக்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. எங்களை ஆதரியுங்களேன்.

பின் குறிப்பு : நான் எழுதியுள்ள விஷயங்களுக்கு தொடர்பில்லாமல் திசை திருப்பும் நோக்கோடு போடப்படும் பின்னூட்டங்கள் நீக்கப்படும்.

1 comment:

  1. கோபாலன் சார், எங்க போனீங்க, உங்களுக்காகவே மாய்ஞ்சு மாய்ஞ்சு ஒரு பதிவு போட்டா காணாம போய்ட்டிங்களே! வாங்க சார், சம்பந்தம் சம்பந்தமே இல்லாமாலவது ஏதாவது கேளுங்க

    ReplyDelete