Friday, January 3, 2014

தலைவர்கள் ஓட்டிய படமல்ல, பார்த்தவை

 இன்றைய தீக்கதிர் இதழில் வெளி வந்தது. கலக்கல் காமெடி.
நீங்களும் சிரியுங்கள். கொஞ்சம் சிந்திக்கவும் செய்யுங்கள்.

தோழர் கணேஷ், சூப்பர்

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யார் போட்டது...!”


புத்தாண்டு முதல் நாள் ஏதாவது படம் பார்ப்போம் என்று தலைவர்கள் கிளம்புகிறார்கள். தியேட்டர்களுக்கு சென்றவர்கள் படத்தைப் பார்க்காமல் சிந்தனையில் மூழ்குகிறார்கள். வாருங்களேன், பார்ப்போம்.

ஜன்னல் ஓரம்

சீக்கிரமாக நிற்கப் போகிறேன் என்று சொன்னவர், உட்கார்ந்து பார்ப்பதற்கு வசதியாகவும் இருக்கும் என்று ஜன்னல் ஓரம் படத்திற்குக் கிளம்பினார் திமுக தலைவர் கருணாநிதி. ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்திருப்பதுதானே தற்போதைய தனது நிலைமை என்று நினைக்கத் துவங்கியவர், கற்பனைக் குதிரையைத் தட்டி விடுகிறார். ரோட்டில் போகும் அனைவர் மீதும் காகித ராக்கெட்டை விடுகிறார். ராக்கெட்டுகளில் “நானே கம்யூனிஸ்டுதான்“, “வாஜ்பாய் நல்லவர்”, “நேருவின் கொள்ளுப்பேரனே வருக.. வருக”.. என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தன. தன் மீது ஏதோ விழுகிறது என்று திரும்பிப் பார்த்தால், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வீசிய காகித ராக்கெட்டுகள் விழுந்து கிடக்கின்றன. ஓடிய குதிரையை நிறுத்துகிறார்.

என்றென்றும் புன்னகை

இன்னும் ஆறு மாசத்துக்கு இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்ற நினைவில் மூழ்குகிறார் மோடி. 2002 ஆம் ஆண்டு நினைவில் வந்தாலும், மக்கள் நமக்கு ஓட்டுப் போடுகிறார்களே என்பதை நினைத்துப் புன்னகைக்கிறார். மதவெறி, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல், கள்ளச்சாராயம் என்பதையெல்லாம் விளம்பர நிறுவனம் மூலம் மறைக்க முடிகிறதே என்கிறபோது அவரது புன்னகை சிரிப்பாக மாற முயற்சிக்கிறது. கழிப்பறை சுத்தம் செய்வது ஆன்மீகப்பணி என்று சொல்லி சாதிவெறிக்கு சப்பைக்கட்டு கட்டியதை நினைத்து சிரிக்கவே துவங்குகிறார் மோடி. சிரிப்பொலி அதிகமாகக் கேட்கிறது. ரொம்பதான் சிரிச்சுட்டோமோ என்று கண் திறக்கிறார் மோடி. அனைவரும் அவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

புதிய செய்திகள் உற்சாகமளிக்கவில்லை என்று சில மாதங்களுக்கு முன்பு வந்த படத்தைத் தேடிச் செல்கிறார்கள் ராகுல்காந்தியும் அவரது நண்பர்களும். “நம்ம அமைச்சரவை தீர்மானத்தையே நான்சென்ஸ்னு சொன்னதுதான் 2013 வசனங்கள்ல நம்பர் 1” என்கிறார்கள் நண்பர்கள். கற்பனையில் மூழ்கும் ராகுல், “இதுக்கே இப்படின்னு சொன்னா, எல்லாத்துக்கும் மன்மோகன்தான் காரணம் சொல்லிட்டு எஸ்கேப் ஆகுற காட்சிக்கு இவங்க என்ன சொல்லப் போறாங்க..”என்று சிரிக்கிறார். திடீரென்று தேசியக் கொடி அவரது சிந்தனையில் குறுக்கிட, ”ஊதாக்கலரு ரிப்பன் உனக்கு யார் போட்டது” என்று நடுவில் உள்ள அசோக சக்கரத்தைப் பார்த்துப் பாடுகிறார். கட்சி நிலையை மறந்து அவர் பாடியதைக் கேட்டு உற்சாகமான நண்பர்களும், கோரஸ் பாடுகிறார்கள்.

பிரியாணி

தமிழக பாஜகவினர், பாமக, மதிமுகவினர் இந்தப் படத்தைப் பார்க்க வருகிறார்கள். அருகருகில் இருக்கை எண்கள் இருப்பதால் தேமுதிக வந்தால் நாங்க உக்கார மாட்டோம்னு பாமகவினர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவங்க வருவாங்களோ, மாட்டாங்களோ... டிக்கெட் வாங்கி சீட் போட்டு வெச்சுருக்கோம்..இதுல இவங்க வேற என்று புலம்புகிறார் பொன். ராதாகிருஷ்ணன். யாருக்கு அதிகமான டிக்கெட் என்று ஒருவர் விசாரித்து நகர, அவர் தேமுதிகவுக்காக கேட்டுப் போறார் என்று கிசுகிசுத்தனர் சிலர். உடனே, மதிமுகவினர் எங்களுக்கும் அவங்க அளவுக்கு டிக்கெட் வேணும்னு ஆரம்பிக்கிறார்கள். உள்ளே படம் போட்டு, முடிந்தும் விட்டது. இவர்கள் உள்ளே போகவேயில்லை.

கற்பனை - கணேஷ்

நன்றி - தீக்கதிர் 03.01.2014

2 comments:

  1. நம்ம தா.பாண்டியன், நல்லக்கண்ணு போன்றோர் என்ன படத்துக்கு போவாங்க... - இவன் வேற மாதிரி படத்துக்கா..

    ReplyDelete
  2. இவன் வேற மாதிரி படத்துக்கா. super

    ReplyDelete