Monday, October 24, 2016

சற்றே நீண்ட, ஆனால் முக்கியமான . . . .



முக்கியமான இந்த நேர்காணலை மின்னஞ்சலில் அனுப்பிய பத்திரிக்கையாளர் தோழர் விமலவித்யா அவர்களுக்கு நன்றி.  கொஞ்சம் பொறுமையோடு முழுமையாக படித்து விடுங்கள்.





தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும், மார்க்சிய அறிஞருமான எஸ்.வி.ராஜதுரை அவர்களை மார்க்சிஸ்ட் மாத இதழ் சார்பாக என். குணசேகரன் , மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் பத்ரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கனகராஜ் ஆகியோர் சந்தித்து உரையாடினர்.

அந்த உரையாடலின் சுருக்கம் :

மார்க்சிஸ்ட் : கடந்த சட்ட மன்ற தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளும் எழுபது சதவீதம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளதால் திராவிட கருத்தியல் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக பலர் எழுதி வருகின்றனர். இது சரியான கருத்தா?

எஸ்.வி.ஆர்: இப்படி எழுதி வருவதே தவறானது. கருத்தியல் என்ற சொல்லுக்கு பதிலாக நான் கருத்து நிலை என்ற சொல்லை பயன்படுத்துகின்றேன். கருத்தியல் என்பது ஒரு கருத்தைப் பற்றிய ஆய்வு. எனவே ideology என்ற வார்த்தையை கருத்து நிலை என்ற சொற்றொடர் கொண்டே நாம் பயன்படுத்த வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் திராவிட இயக்க கருத்து நிலைக்கும் தற்போது என்ன தொடர்பு? இவர்களின் நிகழ்ச்சி நிரலே வேறு. கவர்ச்சி திட்டங்கள், நவதாராளமய கொள்கைகளுக்கான ஆதரவு, அந்நிய மூலதன ஆதரவு (இதில் நீயா? நானா? எனற போட்டி கூட இவர்களுக்குள் உண்டு) ஆகியவைதான் இவர்களது இன்றைய செயல்பாடு.

இந்த நாட்டிலுள்ள முதலாளி வர்க்கத்தை, பன்னாட்டு மூலதனத்தை வளர்ப்பதுதான், இந்த இரண்டு கட்சிகளின் கருத்து நிலை. தற்போதைய நிலையில் திராவிட கருத்து நிலைக்கும் இவர்களுக்கும் தொடர்பு கிடையாது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் சேர்ந்து 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை வாங்கியிருக்கிறார்கள் என்றால், அது அந்த கட்சிகளுடைய வெற்றியே தவிர, திராவிட கருத்து நிலைக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது.

மார்க்சிஸ்ட்: இரண்டு கட்சிகளின் வெற்றி காரணமாக தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான சாத்தியப்பாடு குறைந்துள்ளதாகவும் பேசப்படுகிறது

எஸ்.வி.ஆர்: நாளைக்கே சோசலிசம் வந்து அதனுடைய கனிகளை சுவைக்க வேண்டும் என்று எந்த கம்யூனிஸ்டும் போராடுவது இல்லை. எப்போதும் எதிர்காலத்தை நினைத்தே போராடுகின்றனர்; கனவு காண்கின்றனர்; மரணத்தை கூட எதிர்கொள்கின்றனர். எனவே ஒரு தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு மாற்று அரசியலுக்கான ஆதரவு மக்களிடம் இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

எந்த கொள்கையும் இல்லாதவர்களை நாம் தவிர்க்க வேண்டும். அவர்கள் நமக்கு தேவையற்ற சுமையாகி விடுவார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு கொண்ட குறைந்த பட்ச செயல்திட்டம் அவசியம். இத்தகைய குறைந்த பட்ச செயல்திட்டத்தை உறுதியாகப் பற்றி நிற்கின்றவர்களைக் கொண்டுதான் அணி அமைக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளுக்கு என்று சமூகத்தில், மக்கள் மத்தியில் இருக்கின்ற நன்மதிப்பை குறைப்பதாக நமது அணி அமைந்து விட கூடாது. அவ்வாறானவர்களை தவிர்த்து விட வேண்டும்.

மார்க்சிஸ்ட்: சாதியத்தை எதிர்கொள்வது பற்றி……

எஸ். வி. ஆர். : இந்தியாவிலுள்ள தேர்தல் முறையும் சாதி அமைப்பும் பின்னி பிணைந்துள்ளது. தேர்தல் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க, அளிக்க சாதி வலுப்பட்டே வருகிறது.1967-ல் திமுக வெற்றி பெற்ற போது, காங்கிரஸ் எதிர்ப்பு அலை இருந்தது. 1965-லிருந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தாக்கம் இருந்தது, பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில் கடுமையான உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இருந்தது. ரேசன் முறையில்தான் எல்லா உணவுப் பொருட்களும் கிடைத்தன. அரிசியும் புழுத்த அரிசியாக இருந்தது. எனவே காங்கிரஸ் எதிர்ப்பு அலை, இந்தி எதிர்ப்பு போராட்ட தாக்கம், தமிழ் தேசிய உணர்வு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் திமுகவிற்கே உரிய கவர்ச்சிகரமான அரசியல் என இவையெல்லாம் சேர்ந்து திமுக வெற்றி பெற காரணிகளாக அமைந்தன.

1971-ல் 5 ஆண்டு முடிவதற்கு முன்பே சட்டசபையை கலைத்து விட்டு கருணாநிதி தலைமையில் திமுக தேர்தலை சந்தித்தது; பெரும் வெற்றி பெற்றது. அதுவரைக்கும் கொள்கை சார்ந்து தேர்தலை சந்திக்கும் போக்கு இருந்தது. அதற்கு பிறகு, சாதி முன்னுக்கு வந்தது. சாதி சார்ந்து வாக்கு வங்கியை வளர்த்த பெருமை அதிமுகவிற்கு உண்டு. குறிப்பாக முக்குலத்தவர் வாக்கு வங்கி உருவானது.

தென் மாவட்டங்களில் முக்குலத்தவர், மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாளர் என சாதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். வன்னியர்களை பொறுத்த வரை அவர்கள் எல்லா கட்சிகளிலும் இருந்தனர். காங்கிரஸ், திமுக. அதிமுக , பாமக என இந்த அனைத்து கட்சிகளுக்கும், வன்னியர் மக்களிடம் அடித்தளம் இருக்கிறது. நாடார்கள் திமுக, அதிமுக, இரண்டிலும் சரிபாதி இருந்தனர். ஆதிக்க சாதியினரை குறி வைத்து இயங்குவது என்பதுதான் திராவிட கட்சிகளின் கருத்து நிலை.

சாதி எதிர்ப்பு போராட்டமும், பாசிச எதிர்ப்பு போராட்டமும் ஒன்றுக்கொன்று இணைந்தது. எப்படி இங்கு ஏகாதிபத்தியத்தால் சுரண்ட முடிகிறது? ஏகாதிபத்திய எதிர்ப்புணவு ஏன் இங்கு பரவலாக இல்லை? அம்பேத்கர் அடிக்கடி சொல்வார். “இந்திய மக்களிடம் ஒரு சகோதரத்துவ உணர்வே இல்லைஎன்று. எல்லா சாதியை சார்ந்த மக்களும் உலக மயமாக்கலால் பாதிக்கப்படுகின்றனர். கல்வி, மருத்துவம், போக்குவரத்து இவை தனியார் மயப்படுத்தப்பட்டு உள்ளதால், உயர் நடுத்தர வர்க்க மக்களைத் தவிர அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் நமக்கு ஏன் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவில்லை?

எல்லோரையும் விட மிக மோசமாக பாதிக்கப்படுவது தலித் மக்கள்தான். தனியார் மயம் தலைதூக்கி உள்ளதால் கடந்த 15 வருடங்களாக இட ஒதுக்கீடும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசுத் துறையிலும், மாநில அரசுத் துறையிலும் தலித் மக்களுக்கான பழைய பின்னடைவு இடங்கள் கூட பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இப்படி கடுமையாக பாதிக்கப்பட்டும், அவர்களிடம் ஏன் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவில்லை? அவர்களை ஏன் வர்க்கமாக நம்மால் திரட்ட இயலவில்லை? கிராமப்புறம் மட்டுமல்ல; எங்கு சென்றாலும், நமது ஒவ்வொரு நாள் நடவடிக்கையையும் சாதி பாதிக்கிறது. உதாரணமாக, துப்புரவு தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டது என ஒரு அப்பள உறையின் மீது போட்டு விற்பனை செய்தால், விற்பனை ஆகுமா? வாங்குவார்களா?

வர்க்கப் போராட்டம் என்பது என்ன? ஒடுக்கப்பட்ட சாதியினரையும் உள்ளடக்கியது தானே வர்க்கப் போராட்டம்? தலித் மக்கள், இந்தியாவில் அடித்தட்டு வர்க்கமாக இருப்பவர்கள்; அன்றிலிருந்து இன்று வரை விவசாய கூலிகளாக, முறைசாரா தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.

1952, 57, 62 தேர்தல்களில் வேட்பாளர் தேர்வில் சாதி பெரிய பங்கினை ஆற்றவில்லை. 1952 தேர்தலில் கவுண்டர்கள் அதிகமிருந்த ஈரோடு சட்டமன்ற தொகுதியில், எண்ணிக்கை அளவில் மிகச்சிறிய மக்கள்தொகை சாதியை சேர்ந்த கே.டி ராஜு என்ற தோழரை கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆக்கியது. அவர் வெற்றி பெற்றார். அப்போது கருத்துநிலை சார்ந்து மக்கள் முடிவு எடுத்தனர். ஆனால், இப்போது அப்படி இல்லை. அதுவும் இன்றைய தேர்தல் முறையே (தொகுதியில் அதிக வாக்கு வாங்குபவரே வெற்றி பெறுபவர் என்ற முறை) சாதியை வலுப்படுத்துவதாக உள்ளது. விகிதாச்சார தேர்தல் முறை வேண்டும் என நாம் தீவிரமாக இயங்க வேண்டியுள்ளது.

மார்க்சிஸ்ட்: விகிதாச்சார தேர்தல் முறையின் அவசியம் குறித்த பல விபரங்களை திரட்டி ஆவணம் ஒன்றை தயார் செய்யும் வேலை நடந்து வருகின்றது.

எஸ்.வி.ஆர்: அது நல்ல முயற்சி . நான் பலஆண்டுகளாக அந்த முயற்சியில் உள்ளேன். இடதுசாரி கட்சி தலைவர்கள் அனைவரிடமும் வலியுறுத்தி உள்ளேன்.
மார்க்சிஸ்ட்: சாதி, சாதிய அமைப்பு என்பது முக்கிய பிரச்சனை. மறுபுறம் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளும் தீவிரமடைந்து வருகின்றன. வெகுஜன அமைப்புகள் மூலம் இவையிரண்டையுமே எதிர்த்து போராடி வருகின்றோம். இன்றைய சூழலில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டதையும் வர்க்கப் போராட்டத்தினையும் நடத்தி,மக்களைத் திரட்டுவது அவசியமாகிறது.

மார்க்சிஸ்ட்: பெரியார் சாதிப்பிரச்சனையை எதிர்கொண்டது பற்றி….

எஸ்.வி.ஆர் : 1948-ல் திராவிடர் கழக மாநாடு தூத்துக்குடியில் நடக்கிறது. ஒன்றரை லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள். மாநாட்டிற்கு திராவிடர் கழக தொண்டர்கள் குடும்பத்தோடு வர வேண்டும் என பெரியார் அறைகூவல் விடுத்திருந்தார். அப்போது இருந்த சூழலில் அவ்வளவு பெரிய கூட்டத்தை திராவிடர் கழகத்தால் எப்படி திரட்ட முடிந்தது? சடங்குகள் அற்ற, ஆடம்பரமற்ற திருமணங்களை நடத்திட கருத்து நிலை சார்ந்து திராவிடர் கழகத்தினரை சம்மதிக்க வைக்க அவரால் முடிந்தது.

1967-ல் குன்னூரில் திராவிடர் கழக செயலாளர் இல்லத்திருமண விழா, சாதி மறுப்பு திருமணமாக நடைபெற்றது. அதில் பெரியார் கலந்து கொண்டார். ஏராளமானோர் அத்திருமண விழாவில் கலந்து கொண்டனர். நானும் அத்திருமண விழாவில் கலந்து கொண்டேன். அவ்விழாவில்எதற்கு இவ்வளவு செலவு செய்து திருமணத்தை நடத்துகின்றீர்கள். இது சரியல்லஎன மேடையிலேயே பெரியார் கடிந்து கொண்டார். அன்றாட வாழ்வில்,கொள்கையை பின்பற்றுகின்ற விதத்தில், திராவிடர் கழக குடும்பங்களையே அவர் மாற்றினார். மாநாடு பொது நிகழ்ச்சிகளுக்கு குடும்பமாக வரவேண்டும் என்று வலியுறுத்தினார். குடும்பத்தை ஜனநாயகப்படுத்தும் விதமாக அவரது இயக்கம் இருந்தது.

இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நமது தோழர்கள் முன் மாதிரியாக வாழ்க்கையில் இருக்க வேண்டும். நுட்பமாக, மறைமுகமாக சாதியை திருமண பத்திரிக்கைகளில் குறிப்பிடும் பழக்கம் உள்ளது. அன்றாட வாழ்வில் சாதி உணர்வு நீடித்து வருகின்றது. இதை நாம் உரிய அளவில் கணக்கில் கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் : பெரியார், அம்பேத்கர் சாதி எதிர்ப்பு நிலை பற்றி

எஸ்.வி.ஆர்.: பெரியார், சோவியத் ரஷ்யாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவர் கம்யூனிஸ்ட் கருத்து நிலையை முற்றிலும் புரிந்து கொண்டவரோ அல்லது அதை விளக்கக் கூடியவரோ அல்ல. அவர் சமதர்மத்தை புரிந்து கொண்டது வர்ண தர்மத்திற்கு அது எதிரானது என்ற அர்த்தத்தில். வர்ணத்திற்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு நீதி என்ற வர்ண தர்மத்திற்கு எதிராக எல்லோருக்கும் ஒரே நீதி என்று சமதர்மத்தை அவர் பார்க்கிறார். சமூக, பண்பாட்டு, சமதர்மத்தின் நீட்சியாகத்தான், பொருளாதார சமதர்மத்தை அவர் பார்க்கிறார்.

ஒரு கற்பனைவாத சோசலிஸ்ட் ஆகத்தான் அவர் பெரும்பாலும் இருந்தார். அவர் விஞ்ஞானபூர்வ சோசலிஸ்ட் ஆக இருந்ததே இல்லை. எனவே, இல்லாத ஒன்றை சொல்லி, பின்னாளில் அவர் கைவிட்டு விட்டார் என்று சொல்வது தவறு.

1929- லிருந்தே சோவியத் யூனியன் பற்றி அவர் எழுதி வருகிறார். சோவியத்தை அவர் நேசித்ததற்கு காரணம் அங்கு சாதிய பேதம் இல்லை, பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி எடுக்கப்பட்டது, மூட நம்பிக்கைகள் இல்லை என்பதாலேயே ஆகும். சோவியத் யூனியன் பற்றி தொடர்ந்து அவர்களது பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர். போல்ஷ்விக்குகள் நீடித்து ஆள முடியுமா? என்று அமெரிக்க மார்க்சிஸ்ட்டான ஸ்காட்னியருக்கும், பெட்ரண்ட் ரஸலுக்கு நடந்து வந்த விவாதத்தை மொழிபெயர்த்து வெளியிட்டார். இரண்டாம் உலகப்போரின் போது கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைபாடான பாசிசம் முறியடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே பெரியாரும் எடுக்கிறார். ‘பாசிச எதிர்ப்பு மாநாட்டைஅவர் நடத்துகிறார். அப்போரின் போது, சோவியத் படைகள் ஒவ்வொரு நிலையிலும் பெற்ற வெற்றிகள் பற்றி குடியரசுவிலும், விடுதலையிலும் தொடர்ச்சியாக தலையங்கம் எழுதப்பட்டு வந்தது. தோழர் ஸ்டாலின் இறந்த போது வெகு சிறப்பான அஞ்சலிக் கட்டுரையை எழுதுகின்றார். சோவியத் யூனியனுக்கும், சீனாவிற்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போது, சோவியத் பக்கம்தான் அவர்கள் நின்றார்கள். சோவியத் யூனியன் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவருக்கு மாற்று பொருளாதார பாதை எல்லாம் இருக்கவில்லை.

ஜஸ்டிஸ் கட்சி, அதற்குப்பின் பெரியாரால் தலைமை தாங்கப்பட்ட நீதிக்கட்சி, அதைத்தான் அவர் திராவிடக்கழகமாக மாற்றினார். இவற்றுக்கிடையே தன்மை சார்ந்த வேறுபாடு இருக்கிறது. நீதிக்கட்சியில் பழைமைவாதிகளும் இருந்தார்கள். அதே நேரத்தில் சாதி மறுப்பாளர்களும், பகுத்தறிவாளர்களும் அதில் இருந்தனர். நீதிக்கட்சி என்பது ஒரே தன்மையுடைய கட்சி அல்ல.

1936-லேயே ஜஸ்டிஸ் கட்சி தேய்ந்து விட்டது. 1937, 38 ஆண்டுகளில் நடந்த நகராட்சி தேர்தல்களில் அது ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. 1937-ல் இந்திய அரசு சட்டப்படி நடந்த மாகாண தேர்தலில் 15 பேர் வரைதான் வெற்றி பெற்றனர். அந்தக் கட்சி செல்வாக்கு இழந்து போனது. அந்த சமயத்தில்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறைவு பெற்றிருந்தது. அந்தக் கட்சிக்கு தலைவர்களே இல்லாத சமயத்தில்தான் பெரியாரை தலைமை தாங்க அழைக்கின்றனர். 1939-ல் பெரியாரும் அதை ஒத்துக்கொள்கின்றார்.
அதன் பிறகு நடந்த போராட்டங்களால் அவர் சிறைக்கு சென்று விடுகிறார். 1942- ல் சிறையிலிருந்து வெளியே வந்தபின் கட்சியின் பெயரைதிராவிடர் கழகம்என மாற்றுகிறார். நீதிக்கட்சிக்கு இருந்த பிராமண எதிர்ப்பு அரசியல் பாரம்பரியத்தின் காரணமாக அந்த கட்சியை பெரியார் எடுத்துக் கொள்கிறார்.

தியாகராய செட்டியார், டி.எம். நாயர் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜஸ்டிஸ் கட்சிக்கு வந்தவர்கள். தேசியவாதிகள். உள்நாட்டு தொழில்கள், கைவினை பொருட்கள் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக ஆங்கிலேயரிடம் சண்டை போட்டார்கள். இட ஒதுக்கீடு என்ற விஷயத்திற்காக போராடினார்களே தவிர, அவர்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியில் பகுத்தறிவு வாதிகளும் இருந்தனர். இந்நிலையில்தான் அக்கட்சி உடைந்தது. பழைய ஐஸ்டிஸ் கட்சி என்ற ஒன்று அப்படியே இருந்து வந்தது. 1939-ல் டாக்டர் அம்பேத்கர் சென்னை வருகின்றார். அவருக்கு பழைய நீதிக்கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன் காலையில் பெரியாரை, டாக்டர் அம்பேத்கர் சந்தித்து பேசுகிறார். மாலையில் வரவேற்பில் பழைய நீதிக்கட்சியினரை அம்பேத்கர் விமர்சித்து பேசுகின்றார். “கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்ற அளவிலேயே உங்கள் செயல்பாடு உள்ளது. ஆனால் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை நீங்கள் எடுப்பது கிடையாது. நியாயமாக பார்த்தால் நீங்கள் .வே ராமசாமி அவர்கள் பக்கம் தான் நிற்க வேண்டும்என்று அவர்கள் போட்ட கூட்டத்திலேயே அவர்களை விமர்சனம் செய்து பேசுகிறார்.

நீதிக்கட்சியிலிருந்த பகுத்தறிவு வாதிகளும் சாதாரண மக்களும்தான் பெரியாருடன் வருகின்றனர். அவர்கள் பொருளாதார விஷயங்களை கையில் எடுக்கவில்லை. பொருளாதார திட்டம் எல்லாம் அவர்களுக்கு கிடையாதுதான். சாதி இருக்கின்ற வரை எந்தவித அடிப்படை மாற்றமும் வராது என்று அவர்கள் கருதினர். அம்பேத்கர், புலே, பெரியார் ஆகியோரை பொறுத்தவரை அவர்கள் இந்திய சமூகத்தில் பொது உரிமையே இல்லை என்று கருதினர். பொதுவுடைமையா? பொது உரிமையா? என்று வரும் போது, பொது உரிமையே முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

மார்க்சிஸ்ட் : பெரியாரின் பகுத்தறிவு வாதம் அன்று மூட நம்பிக்கைகள் மண்டிக் கிடந்த தமிழகத்தில் ஒரு அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. எனினும் அவரது பெயரால் இயங்கும் இயக்கங்களாலேயே அது கைவிடப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொன்று தமிழகத்தின் அதிகரித்து வரும் ஆன்மீகப் பிடிப்பு. இந்நிலையில் இனி நாத்திகவாதம் மற்றும் பகுத்தறிவு வாதத்தின் எதிர்காலம் என்ன?

எஸ்.வி.ஆர் : 1928-29-களில் எவ்வளவு பிற்போக்காக மக்கள் இருந்திருப்பார்கள்? அப்போதே பெரியார் மக்களை திரட்டியிருக்கிறார். எனவே இப்போதும் நம்மால் செய்ய முடியும். பகுத்தறிவு மூட நம்பிக்கை எதிர்ப்பு போன்றவற்றிக்காக செயல்படுவதற்கு பெரியார் காலத்தை விட அதிக தேவை தற்போது உள்ளது. நவீன சாமியார்களுக்கு எதிரான போராட்டம்; சாதிக்கு எதிரான போராட்டம்; பகுத்தறிவு கருத்துக்கள்; விஞ்ஞான கருத்துக்களை பரப்புவதற்கான போராட்டம் ஆகியவற்றை நடத்தவேண்டி உள்ளது. நவீன தொழில் நுட்பங்களை உள் வாங்கிக் கொண்ட இளைஞர்கள் கூட மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வி அத்தகையதாக இருக்கிறது.

நாங்கள் படித்த காலத்தில், தேசம் விடுதலைப் பெற்ற நேரம். அப்போது கல்வியிலும் மக்கள் பொது புத்தியிலும் கூட மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்கள் குறைந்த அளவுவாவது பதிந்திருந்தது. கம்யூனிசம் குறித்து பகுத்தறிவு குறித்த ஆர்வம் மக்களிடம் இருந்தது. இந்த தலைமுறையில் அது இல்லை. அமைப்பு ரீதியாக திட்டமிட்டே இவை ஒழித்துக் கட்டப்பட்டன. திமுகவும், அதிமுகவும் எந்த மாதிரியன பாடப்புத்தகங்களை தயாரித்து வழங்கியிருக்கிறார்கள்?

அறிவியல் பாடங்களையும் சமூக அறிவியல் பாடங்களையும் பிரித்து விட்டார்கள். தொழில்நுட்ப பாடங்களையும் சமூக அறிவியலையும் பிரித்து விட்டார்கள். ஒரு மருத்துவ மாணவனுக்கு, பொறியியல் மாணவனுக்கு, படிக்கிற மாணவனுக்கு சமூக அறிவியலும், மொழியியலும் மிக முக்கியமானது. ஆனால் அதை இவர்கள் திட்டமிட்டே பிரித்தார்கள். அறிவுக் கூர்மையோடு மாணவர்களை வளர்க்க வேண்டிய நேரத்தில் பழங்கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றைத்தான் இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் கற்பித்தார்கள். நவீனத்துவத்தை கல்வியில், வாழ்வில் கொண்டு வரவே இல்லை. முதலாளித்துவவாதிகள் நகரங்களில் சாலைகள் அமைப்பது, நவீன தொழிற்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுவதைத் தான் நவீனம் என்று சொல்கிறார்கள். ஜனநாயகபூர்வமான கலாச்சாரம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதைத் தான் நாம் நவீனம் என்று குறிப்பிடுகின்றோம். திமுகவும், அதிமுகவும் அவர்கள் பாணியில் நவீனத்துவத்தை கொண்டு வந்ததாக சொன்னாலும் அடிப்படையில் பழமைவாதிகளாகவே உள்ளனர்.

இரண்டு கட்சிகளின் ஆட்சி காலத்தில் அறிவியலை பரப்புவதற்கு என்று எளிய அறிவியல் புத்தகங்களை நிறைய கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் திமுக, அதிமுக செய்யவில்லை. பிற்போக்குத் தனமான கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்ற மகாராஷ்டிராவில் கூட ஏராளமான அறிவியல் பரப்பும் புத்தகங்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. தபோல்கர் அங்குதானே இருந்தார். ஏன் நம்மால் பெரியார் பிறந்த மண்ணில் தபோல்கரை போல ஒருவரை உருவாக்க முடியவில்லை? பெரியாருக்கும், திமுகவிற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது. பெரியார் மனிதனுடையசுயமரியாதைஎன்பதை முன்னுக்கு வைத்தார். திமுக, தமிழருடைய மானம், கற்பு என்பவற்றை முன்னுக்கு வைத்தது. இரண்டுமே சம்பந்தமில்லாதவை. கற்பு என்கிற மதிப்பீட்டுக்கு எதிரானவர் பெரியார். கற்பை தூக்கிப்பிடித்தவர்கள் திமுகவினர். பகுத்தறிவு அறிவியல் கருத்துக்களை இன்றைய இளைஞர்களிடம் பரப்ப நாம் மிகப் பெரிய அளவில் செயல்பட வேண்டியுள்ளது. அறிவொளி இயக்கம் போன்று இதற்கு ஒரு இயக்கத்தை நாம் விரிவான அளவில் நடத்த வேண்டும்.

நேர்காணலின் இரண்டாம் பகுதி - நாளை

2 comments:

  1. மார்க்சிய அறிஞருமான எஸ்.வி.ராஜதுரை//இவர் எப்போ மார்க்சிய அறிஞர் ஆனார் ? பல ஆண்டுகளாக குடிக்கலாச்சாரத்தை பின் நவீனத்துவம் எனும் பெயரில் ஊக்குவித்து ஒரு தலைமுறையை சீரழித்தவர். ஒரு போலி மார்க்சிய கூட்டம் இன்னொரு போலியை மார்க்சிய அறிஞர் என்கிறது அதுவும் அந்தப் போலே வேணாம் விட்ருங்க அழுத்துருவேன் என்ற பின்பும்

    ReplyDelete
  2. இந்த பதிவை பகிரும் போதே இந்த அவதூறை எதிர்பார்த்தேன். Too Late. முத்திரை அளிப்பதைத் தவிர வேறு என்ன நீங்கள் சாதித்துள்ளீர்கள்?

    ReplyDelete