Sunday, December 21, 2025

என்னடா இது கந்தன்மலைக்கு வந்த சோதனை?

 


ஐகோர்ட் எச்.ராசா கதாநாயகனாக நடிக்க கந்தன்மலை என்றொரு படத்தை தயாரித்துள்ளார்கள். 

பாவம் அது விலை போகவில்லை போல.

அதனால் ஒரு யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார்கள். 



மொக்கைப் படங்களைக் கூட பார்க்கும் சினிமா வெறியர்கள் கூட ராசா நடித்த படத்தை பார்க்க துணிய மாட்டார்கள்.

பாவம் அந்த தயாரிப்பாளர்கள்!

"காக்கா பிரியாணி துன்னா உண்ணிகிருஷ்ணன் குரலா வரும்" என்பது போல  கந்தன்மலை என்ற பெயரில் ராசா நடித்தால் மத வெறி பிரச்சாரம் இல்லாமல் வேறென்ன படத்தில் இருக்கப் போகிறது!

அதற்கு சென்சார் அனுமதி கிடைத்ததா?

எனக்கு இன்னொரு அச்சமும் இருக்கிறது.

காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா டைரி போன்ற மத வெறி குப்பைகள் போல மோடி அரசு இந்த படத்திற்கும் தேசிய விருது கொடுத்து விடுமோ என்பதுதான் அந்த அச்சம். 


Saturday, December 20, 2025

இது இன்னொரு விருது சர்ச்சை

 


சாகித்ய அகாடமி விருது சர்ச்சை நடப்பில் இருக்கும் போதே அடுத்த விருது சர்ச்சை வந்து விட்டது.

மியூசிக் அகாடமி இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது வயலின் இசைக் கலைஞர் ஸ்ரீராம்குமார் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு விருதளிக்கப்பட்டதில் எந்த சர்ச்சையும் வந்ததாக நான் படிக்கவில்லை.

பின்?

விருது கொடுத்தவரை வைத்துதான் சர்ச்சையே!

யார் கொடுத்தது?

ஏ.ஆர்.ரஹ்மான்.

மியூசிக் அகாடமியின் அழைப்பிதழை முகநூலில் பார்த்த போதே சிக்கல் வரும் என்று எதிர்பார்த்தேன். அது போலவே நடந்து விட்டது.

மியூசிக் அகாடமி கம்மிகளின் கையில் போய் விட்டது, நாத்தீகர்கள் கையில் போய் விட்டது. ரஹ்மானுக்கு கர்னாடக இசை பற்றி தெரியுமா? கர்னாடக இசையின் அடிப்படை பக்தி. ரஹ்மானுக்கும் பக்திக்கும் என்ன தொடர்பு?

இதெல்லாம்தான் நான் பார்த்த கருத்துக்கள்.

முதல் கருத்து அபத்தம். மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி ஒன்றும் அவரது சகோதரர் என்.ராம் போல இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர் கிடையாது.  அதனால் முதல் இரண்டு கருத்துக்களும் அபத்தம்.

"கண்ணோடு காண்பதெல்லாம்" "சௌக்கியமா கண்ணே சௌக்கியமா" ஆகிய இரண்டு பாடல்கள் போதும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கர்னாடக இசை தெரியுமா இல்லையா என்று சொல்ல . . .

ஆஸ்கர் விருது மேடையில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொன்னவருக்கா இவர்கள் பக்தி பற்றி பாடம் எடுக்கிறார்கள்!

பிறகு உண்மையில் என்ன பிரச்சினை?

திருவையாறு தியாகராஜர் ஆராதனையின் போது கே.ஜே.யேசுதாஸ் பாட வருகையில் மக்கள் திரள்கையில் ஒரு கூட்டம் "கிறிஸ்துவன் பாடறதை கேட்க இப்படி போறாங்களே" என்று திட்டிக் கொண்டு வெளியேறும். இது நான் நேரடியாக பல வருடங்கள் பார்த்த அனுபவம். முன்பே இதனை எழுதியிருக்கிறேன்.

இப்போது புரிகிறதா?

பிரச்சினை ரஹ்மானின் கர்னாடக இசை ஞானமோ, பக்தியோ கிடையாது. 

அவரது மதம்தான் பிரச்சினை. 

பிகு 1 : கடந்த வருடம் விருது பெற்றமைக்காக கடுமையாக திட்டப்பட்ட டி.எம்.கிருஷ்ணாவிற்கு பல கச்சேரிகளில் பக்க வாத்தியமாக வயலின் வாசிப்பவர் ஸ்ரீராம்குமார்.

பிகு 2 : கடந்த வருடம் பிரச்சினையை முதலில் உருவாக்கிய ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் ஏதாவது சொல்லியுள்ளார்களா என்று அவர்களின் முக நூல் பக்கம் பார்த்தேன். ராமர் கோயிலில் காவிக் கொடி ஏற்றுகையில் பாட வாய்ப்பு கிடைத்தமைக்காக புளகாங்கிதமடைந்திருந்தார்கள். அவர்கள் டி.எம்.கிருஷ்ணாவை எதிர்ப்பது இயல்பானது, சங்கி இயல்பானது.

பிகு 3 : தோழர் தமிழ்ச்செல்வனுக்கு இன்னும் விருது அறிவிக்கப்படவே இல்லை. அதற்குள்ளாகவே வன்ம வாந்திகளை எடுக்கத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஆசானின் அல்லக்கைகளாகவே இருப்பது யதேச்சையானதாக தெரியவில்லை. 

Friday, December 19, 2025

உங்காளுங்களுக்கு உருப்படியா எழுத . . .

 


வழக்கமாக சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்புதான் சர்ச்சை வரும். இந்தாண்டு முன்பே வந்து விட்டது.

நேற்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விருதுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் அது ரத்து செய்யப்பட்டதாக  பின்பு அறிவிக்கிறார்கள்.

காரணம் என்ன என்பதை கீழே உள்ள தமுஎகச அறிக்கை சொல்லும்.

சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது.
- தமுஎகச மாநிலக்குழு
சாகித்ய அகாதமி நிறுவனத்தால் இந்தியாவில் உள்ள 24 மொழிகளின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குரிய விருதுப் பட்டியலை அந்தந்த மொழியைச் சேர்ந்த சாகித்ய அகாதமி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுயேட்சையான குழு தேர்வு செய்து வெளியிடும்.
இந்த ஆண்டும் அதே போல் 24 மொழிகளின் குழுக்களும் தங்கள் தேர்வுப் பட்டியலை தயார் செய்துவிட்டன. அதன் அடிப்படையில் நேற்று 18.12.2025 மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெற இருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விருது அறிவிப்பு வெளியாகும் என்று இருந்தது. நாடு முழுக்க உள்ள இலக்கிய ஆர்வாளர்கள் சாகித்ய அகாதமி விருதுப் பட்டியலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தச் சூழலில் திடீரென்று அந்தச் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சாகித்ய அகாதமி குழுக்களின் தேர்வுகளில் ஒன்றிய அரசின் அமைச்சகம் தலையீடு உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது சாகித்ய அகாதமி எனும் நிறுவனத்தின் சுயேட்சையான செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இது போன்ற நேரத்தில் சாகித்ய அகாதமி நிறுவனம் தனது தன்னாட்சி அதிகாரத்தை காத்திட உறுதியோடு செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றும் அரசியல் வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதைப்போல சாகித்ய அகாதமி நிறுவனத்தின் சுயேட்சையான செயல்பாட்டை முடக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டிக்கிறது. அனைத்து மொழிகளின் குழுக்களும் தேர்வு செய்த விருத்தாளர்களின் பட்டியலை எந்தத் திருத்தமும் இல்லாமல் வெளியிடும் அதே முறையை இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமுஎகச கேட்டுக் கொள்கிறது.
*மதுக்கூர் இராமலிங்கம்*
தலைவர்
*களப்பிரன்*
பொதுச்செயலாளர்

தமுஎகச அறிக்கையில் குறிப்பிடாத முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. இந்த ஆண்டு தமிழுக்காக தமுஎகச வின் முக்கியமான தலைவரும் மிகச் சிறந்த எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "தமிழ்ச் சிறுகதைகளின் தடம்" நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதுதான் அந்த செய்தி.

இறுதிப்பட்டியலில் மோடியின் அல்லக்கை மாலனின் பெயரும் இருந்த போதும் ஒரு இடதுசாரி எழுத்தாளருக்கு விருது கொடுப்பதா என்பதுதான் ஒன்றிய அரசின் கடுப்பிற்கு காரணம்.

இடதுசாரிகளே விருதுகளை பெறுகிறார்கள் என்று ஆஜான் போன்ற சங்கிகள் மத்தியில் ஒரு பொறாமை எப்போதும் உண்டு.

அவர்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.

சங்கிகளும் உருப்படியாக எதையாவது எழுத வேண்டியதுதானே! தந்தை பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் அசிங்கப்படுத்துவதற்கு என்றே சோ.அதர்மன் எழுதிய "சூல்" நாவலுக்குத்தான் விருது கிடைத்ததே, அது போன்ற குப்பையைக் கூட உங்கள் ஆட்களால் எழுத முடியாத போது சிறந்த எழுத்தாளர்கள் உரிய அங்கீகாரம் பெறுவதை சகிக்க முடியாத மோடி வகையறாக்கள் எல்லாம் ஆட்சி நடத்தவே அருகதையற்றவர்கள்.

விஜய் என்ன பழைய ஸ்கூல் பையனா?

 


நேற்றைய விஜய் கூட்டத்தின் ஈரோடு கூட்டத்தின் காணொளியை நேற்று  பகிர்ந்து கொண்டிருந்தேன். அதை மறுபடியும் ஒரு முறை பார்த்த போது ஒரு விஷயம் கண்ணில் பட்டது.

அது



நான் கூட முதலில் மோடி போல டெலிப்ராம்ப்டர் பயன்படுத்துகின்றார் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. ஒரு அட்டையில் க்ளிப் போட்டு பேசுவதற்கான ஸ்க்ரிப்டை வைத்துள்ளார் என்று. 

ஏன் விஜய், இப்போ தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. அழகழகான, நவீன க்ளிப்புகள் வந்து விட்டது. அதையெல்லாம் விட்டுவிட்டு அந்த காலத்தில் நாங்கள் பள்ளியில் படிக்கும் போது பயன்படுத்திய ஆதி காலத்து க்ளிப்பை பயன்படுத்துகிறீர்களே?

உங்கள் வசதிக்கு மோடி போல நீங்களும் டெலி ப்ராம்ப்டரையே பயன்படுத்தலாம்.

ஒரே ஒரு பிரச்சினைதான்.

என்ன அது?

மேலே உள்ள படத்தை பார்க்கவும். . . .

Thursday, December 18, 2025

கிறுக்கர்கள் சூழ் தவெக . . .

 


ஒரு குறுகிய காலத்திலேயே விஜய் ரசிகர்கள், தற்குறிகள் என்று பெயர் வாங்கி விட்டார்கள். அப்படி சொல்வதால் அவர்களுக்கு கோபம். ஆனால் அது சரிதான் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கீழே உள்ள காணொளியை பாருங்கள்.



கிறுக்கத்தனமாக ஏதாவது செய்தால் விஜயின் முத்தம் கிடைக்கும் என்று ஈரோட்டுக் கூட்டத்தில் விஜய் காண்பித்துள்ளார்.

இனி வரும் கூட்டங்களில் தவெக தற்குறிகள் என்னவெல்லாம் கிறுக்குத்தனங்கள் செய்வார்களோ!

கரூர் போல நடக்காமல் இருந்தால் சரி. . .

அதிசயமாய் ஒரு நல்ல போலீஸ் . . .

 


நேற்று ஓய்வூதியர் தினம். வேலூரில் மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு சிறப்பான கூட்டம் நடந்தது. 

அக்கருத்தரங்கில் பள்ளி, கல்லூரி ஆசிரியர் ஓய்வூதியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.பர்வதராஜன் சிறப்புரையாற்ற வந்திருந்தார்.

அவர் சொன்ன ஒரு தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது.

"மத்தியரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்வேறு இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தது. இயக்கங்களின் நிறைவாக சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மிகவும் கடுமையானவர் என்று பெயர் பெற்ற பி.சி.அலெக்ஸாண்டர் ஆளுனர். 500 பேருக்கு மேல் சென்னைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று அறிவித்தார். அன்றைய போலீஸ் கமிஷனர் துரை கையில் துப்பாக்கியோடு சுற்றிக் கொண்டிருந்தார். தாக்குதல் நடத்த குதிரைப்படை போலீஸ் தயாராக இருந்தது.

முற்றுகையில் கலந்து கொள்ள நாங்கள் வேனில் சென்னை சென்று கொண்டிருந்தோம். விருதுநகரில் எங்களை ஒரு போலீஸ் அதிகாரி மறித்தார். உங்களையெல்லாம் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் எங்களுக்கு உத்தரவு. 

நியாயமான கோரிக்கைக்காக செல்லும் உங்களை திருப்பி அனுப்ப எனக்கு மனமில்லை. நான் அனுமதித்தாலும் வழியில் வேறு யாராவது மடக்கி விடுவார்கள். நீங்கள் சென்னை செல்ல ஒரு வழி இருக்கிறது.

சென்னை மெரினா பீச்சில் மெல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களின் மாநாடு நடக்கிறது. நீங்கள் இந்த ஜாக்டீ (அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு)  பேனர்களை எடுத்து விட்டு வேனில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று எழுதி விட்டு செல்லுங்கள் என்று சொன்னார்."

தோழர் பர்வதராஜன் இதை சொன்ன போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது.

தொழிலாளி வர்க்கம் எந்த போராட்டம் நடத்தினாலும் அதன் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் அந்த போராட்டம் வெற்றி பெற்றால் அதன் பலன் அவர்களுக்கும் கிடைக்கும் என்றாலும் போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்வதுதான் இன்றைய வாடிக்கையாக இருக்கையில் 

ஒரு காவல்துறை அதிகாரி போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டது அதிசயமாகவே எனக்கு தோன்றியது.

என்ன சரிதானே!



Wednesday, December 17, 2025

கேவலமான பின்னூட்டத்திற்கு சூடான பதில்

 


சங்கிகள் ராஜஸ்தானில் நிகழ்த்திய வந்தேமாதர காமெடி பற்றிய பதிவில் ஒரு அனாமதேயம் "அவங்க முட்டாப்பசங்க" என்று பின்னூட்டமிட அதற்கு இன்னொரு பின்னூட்டம் ஆங்கிலத்தில் வந்தது. "உண்டியல் குலுக்கி கோஷ்டிகள் பற்றியும் தெலுங்கு தேவதாசி கோஷ்டி பற்றியும் என்ன சொல்கிறீர்கள்?" என்பதுதான் நான் பிரசுரிக்காத அந்த பின்னூட்டம்.

நாங்கள் உண்டியல் குலுக்கிகள் என்ற பட்டத்திற்காக என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. மக்களுக்காக போராடுகின்ற கம்யூனிஸ்டுகள் மக்களிடம் நேரடியாக உண்டியல் குலுக்கி நிதி திரட்டுகிறோம். இது வெளிப்படையானது. 

பாஜக போல அமலாக்கப் பிரிவை அனுப்பி விட்டு பின்பு அந்த முதலாளிகளிடம் பணத்தை பறிக்கும் கொள்ளைக்காரக் கட்சி அல்ல கம்யூனிஸ்டுகள். அடுத்து திமுக கொடுத்த பத்து கோடி என்று ஒரு அனாமதேய கோஷ்டி வரும். அது நன் கொடை. முறையாக கணக்குகளில் பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட பணம்.  உண்டியலை நாங்கள் மட்டுமா பயன்படுத்துகிறோம்? யாரெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்று பட்டியல் போட்டால் "மனம் புண்பட்டு விட்டது " என்று புலம்பும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த பிரச்சினைக்கு வருகிறேன்.

கலைஞர் குடும்பத்தை இழிவு படுத்த சங்கிகளும் அதிமுகவினரும் ட்ம்ப்ளர்களும் இப்போது தவெக தற்குறிகளும் பயன்படுத்துகின்ற அவதூறு.

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரை ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று கட்டமைத்து அந்த பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் பரப்பி அவர்களே  உண்மை என்று நம்பத் தொடங்கி விட்டார்கள். கலைஞரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து எனக்கும ஏற்கக் கூடிய அதே நேரம் நிராகரிக்க வேண்டியது என்று இரண்டும் உண்டு. ஆனால் அவருடைய தமிழ் உணர்வையோ தமிழுக்கான பணிகளையோ யாராலும் நிராகரிக்க முடியாது. அவரது தமிழறிவின் நிழல் அளவு  கூட எம்.ஜி.ஆரை சொல்ல முடியாது என்ற கையாலாகத தனம், இந்த பிரச்சாரத்தின் பின்னணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அவரது பூர்வீகத்தை ஆராய்வது போல ஒவ்வொருவருடைய பூர்வீகத்தை ஆய்வு செய்தால் அது ஆப்கானிஸ்தானத்தை தாண்டிச் செல்லுமல்லவா! நம் எல்லோரின் பூர்வீகமுமே ஆப்பிரிக்க மூதாய்தானே!

தேவதாசி முறை என்பது இந்திய சமூகத்தின் இழிவு. மன்னராட்சிக் காலத்தின் திமிர். ஆதிக்க சக்திகளின் வெறிக்கு சில குறிப்பிட்ட சமூகங்களை பலியாக்கிய கொடுமை. 

தேவதாசி முறை தடைச்சட்டத்தை சட்டமன்றத்தில்  காமராஜரின் குரு சத்தியமூர்த்தி எதிர்க்கிறார். தந்தை பெரியாரின் ஆலோசனைப்படி  டாக்டர் முத்துலட்சுமி "இம்முறை புனிதமானது, புண்ணியம் அளிப்பது என்றால் இனிமேல் உங்கள் குடும்பப் பெண்களை பயன்படுத்துங்கள்" என்று பதிலளிக்க அவர் வாயடைத்துப் போனார்.

அந்த சமூக இழிவை ஒரு குடும்பத்தை இழிவு படுத்த பயன்படுத்துவது என்பது கேவலமான சிந்தனை. அழுகிப்போன ஜாதிய மேட்டிமை புத்தி. ஆணாதிக்க திமிர்.

அந்த அனாமதயேத்திற்கு முடிவாக ஒன்றை சொல்கிறேன்.

நான் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன் என்று உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, மகள், பெண் நண்பர்கள் ஆகியோரிடம் சொல்லவும். 

உனக்கு அவர்களிடமிருந்து செருப்படி நிச்சயம். . .

பிகு" கடைசி இரண்டு பத்திகள் அந்த ஆங்கில அனாமதேயத்திற்கு மட்டுமல்ல, அதே போல அவதூறு பரப்பும் அனைத்து ஜந்துக்களுக்கும் பொருந்தும்.