Monday, April 27, 2026

மோடி நண்பன் ட்ரம்பை சுட்டுட்டாங்களாம்

 


அமெரிக்கத் தலைநகர் வாஷிங்க்டனில் உள்ள ஒரு விடுதியில் பத்திரிக்கையாளர்களுக்கான விருந்தில் ட்ரம்பை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்ததாம். 

தாக்குதலை நடத்திய டாமஸ் ஆலன் கைவசம் இரண்டு துப்பாக்கிகளும் எண்ணற்ற கத்திகளும் இருந்ததாம். அவன் சுட்டது புல்லட் ப்ரூஃப் உடை அணிந்த ஒரு அதிகாரி மீது பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

அதெப்படி ட்ரம்பின் நண்பன் முதலமைச்சராக இருந்த போது எப்போதெல்லாம் செல்வாக்கு குறைகிறதோ, அப்போதெல்லாம் அவரை கொல்ல தீவிரவாதிகள் வந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்களோ, அது போலவே ட்ரம்பின் செல்வாக்கு குறையும் போது அவரை கொல்லவும் முயற்சிகள் நடக்கிறது?

ஆயிரக்கணக்கான பாதுகாப்பு சோதனைகளை தாண்டி செல்ல முடிகிற துப்பாக்கி ஏந்திய கொலை காரர்களால் ஏன் இலக்கை நோக்கி கச்சிதமாக சுட முடிவதில்லை?

இதுதான் உதைக்கிறது.

இங்கேயும் அங்கேயும் ...

நாடகம் என்றே நினைக்க வைக்கிறது. 

Sunday, April 26, 2026

கேஜ்ரிவால் பகைத்துக் கொண்ட இருவர்

 


கேஜ்ரிவால் எடுத்த ஒரு முயற்சி அவரை பலி வாங்கும் என்று அச்சப்படுவதாக நேற்று நான் எழுதியிருந்தேன்.

கீழேயுள்ள நியூஸ் கார்டை படியுங்கள்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் அதே நேரம் ஆர்.எஸ்.எஸ் ஸால் காவி மயமாக்கப்பட்ட நீதிபதிகளையும் குறை சொன்னால் விடுவார்களா?

மாநிலங்களவையின் ஏழு எம்.பி க்களோடு பாஜக திருப்தி அடையாது.

பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க இப்போது கட்சி மாறிய கருங்காலிகளை பயன்படுத்தி கலகம் செய்ய கண்டிப்பாக முயற்சி எடுப்பார்கள். இப்போதாவது அரவிந்த் கேஜ்ரிவால் விழித்துக் கொள்ளட்டும். தன்னைப் பற்றிய அதீத மதிப்பீட்டிலிருந்து வெளியே வரட்டும். 


Saturday, April 25, 2026

கட்டை விரல் கவிதையை காப்பியடிக்கும் துரோணர் கூட்டம்

 


தேர்தலுக்கு முன்பாக கவிஞர் பழனிபாரதி முகநூலில் பகிர்ந்து கொண்ட கவிதை கீழே . . .


இந்த கவிதையை பலரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் ஏகலைவனின் கட்டை விரலை காவு கேட்ட துரோணர் கூட்டத்து வாரிசான பாஜக சங்கி ஒருவரும் அந்த கவிதையை பகிர்ந்து கொண்டு பாஜகவிற்கு ஓட்டு கேட்டதுதான்.




இவர்களுக்கெல்லாம் வெட்கம் என்பது கொஞ்சம் கூட இருக்காதா!


AAP - பிய்ந்த துடைப்பம்


 
அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பத்து பேரில் ஏழு பேர் அங்கிருந்து பாஜகவிற்கு தாவி தங்களை மோடி வாஷிங் மெஷின் மூலமாக புனிதமாக்கிக் கொள்கிறார்கள். 

ஆம் ஆத்மி கட்சி ஊழல் கட்சியாகி விட்டது என்று அவர்கள் குற்றம் சுமத்துவது உண்மையாக இருக்கலாம். அதற்காக அவர்கள் சென்று சேருமிடம் பாஜக என்பதுதான் காமெடியாக இருக்கிறது.

கட்சித்தாவல் தடைச்சட்டம் என்பது இன்னொரு காமெடி.

யாரும் தனியாக கட்சி மாறக்கூடாது. மூன்றில் ஒரு பங்கு ஆட்களோடுதான் கட்சி மாற வேண்டும் என்ற விதி பாஜகவிற்கு மட்டுமே உதவிக் கொண்டிருக்கிறது.

இந்த கட்சித்தாவல் சில உண்மைகளை உணர்த்தி விட்டு போயுள்ளது.

எந்த வித கொள்கையும் இல்லாமல் வெற்று முழக்கங்கள் மூலம் உருவாகும் கட்சி கண்ணாடி போன்றது. எப்போது வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாக நொறுங்கிப் போகும். எதிர்கால தவெக நிலைக்கு இது ஒரு முன்னோட்டம்.

கொள்கைகள் அற்ற கட்சியின் உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது பாஜகவிற்கு மிகவும் சுலபம் என்று தெரிகிறது.

இப்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் எதிர்காலத்தில் பாஜக என்ன செய்யும் என்பதற்கான முன்னோட்டம் இந்த சம்பவம்.

ராகவ் சாதா என்ற அந்த சின்ன பையனுக்கு ராஜ்ய சபை துணைத்தலைவர் பதவி கொடுத்தது கேஜ்ரிவாலின் முதல் தவறு. அதை பறித்த முறை இன்னொரு தவறு. ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபை உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி அங்கே பதவியை பறிப்பதற்கு பதிலாக ராஜ்யசபை தலைவருக்கு கடிதம் அனுப்பியது ஜனநாயக நடைமுறை அல்ல. அப்போதே சிக்கல் வரும் என்று நினைத்தேன். 

அதை விட கேஜ்ரிவால் எடுத்த இன்னொரு முயற்சி அவரை பலி வாங்கும் என்று அச்சப்பட்டேன். அதுதான் நடந்துள்ளது. 

அது என்ன முயற்சி?

நாளை பார்ப்போம். 

Friday, April 24, 2026

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா?



 உலகத்தில் உள்ள,

ஏன் தமிழ்நாட்டில் உள்ள

தமிழர்கள் யாருக்குமே தெரியாத ஊரில்தானா

1972 முதல் 1982 வரை எங்கள் குடும்பம் வாழ்ந்திருந்தது!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா, அழகப்பா ஆரம்பப்பள்ளியில் மூன்றாவது முதல் ஐந்தாவது வரையிலும் அழகப்பா மாதிரி மேல் நிலைப் பள்ளியில் ஆறாவது முதல் எட்டாவது வரையிலும் படித்தேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊழில்தான் என் இரண்டு அக்காக்கள் அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் B.ED  படித்தார்கள்! 

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் அவர்கள் இருவரின் திருமணமும் நடந்தது!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் அழகப்பர் கலைக் கல்லூரியில் வள்ளல் அழகப்பர் சிலை திறந்து வைக்க திறந்த ஜீப்பில் வந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை சாலையோரத்தில் நின்று பார்த்தேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரிலா 1977 மக்களவைத் தேர்தலின் போதும் சட்டமன்றத் தேர்தலின் போதும் கலைஞர், எம்.ஜி.ஆர், சோ, ஆகியோரின் பொதுக்கூட்டங்களுக்கு என் அப்பா அழைத்துச் சென்றார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் ஜனதா கட்சியின் மாநாடு நடக்க, அந்த மாநாட்டிற்கு வந்த அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், பின்னாளில் அவரைக் கவிழ்த்து பிரதமரான சரண்சிங், பிரதமராகும் கனவில் இருந்த ஜகஜீவன் ராம், பல வருடங்கள் கழித்து வி.பி,.சிங்கை கவிழ்த்து பிரதமரான சந்திரசேகர் ஆகியோரை பார்க்க குடும்பத்தோடு சென்றோம்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா ராமவிலாசம், அருணாச்சலா, நடராஜா, நியூ சினிமா ஆகிய தியேட்டர்களில் குடும்பத்துடனும் பின்பு நண்பர்களோடும் தனியாகவும் திரைப்படங்களை பார்க்கப் போயிருந்தேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் பூச்சொரிதல் விழாவின் போது அங்கங்கே இசை நிகழ்ச்சிகள் நடக்கும்! கொப்புடையம்மன் கோயில் பக்கத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐயப்பன் பாடல்கள் புகழ் கே.வீரமணி, பைலட் பிரேம்நாத் படத்தில் வரும் "ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்?" பாடலை டி.எம்.எஸ் ஸை விட கொடூரமாக பாட  நண்பர்கள் நாங்கள் தெறித்து ஓடி வந்தோமே! 

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானே சுப்ரமணியபுரம் ஒன்பதாவது வீதியில் நாங்கள் வசித்த வீட்டிற்கு எதிர் வரிசை வீட்டில் ஒரு குடும்பத்தை வசிக்க வைத்திருந்த நெடிதுயர்ந்த உருவம் கொண்ட கவியரசு கண்ணதாசன், காலை வேளையில் அந்த மனைவியின் கரம் கோர்த்து நடைப் பயிற்சி செய்வதை பார்த்து பிரமித்துள்ளேனே!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா கோடைக்காலத்தில் நடைபெறும் ராமாயண, மகாபாரத உபன்யாசங்களை கேட்டிருக்கிறேன்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான், உலகம் சுற்றும் வாலிபன் எம்.ஜி.ஆர் தொப்பியும் பஞ்சு மிட்டாய் கலரில் சட்டையும் பச்சை கலர் பேண்டும் , கிட்டத்தட்ட எப்போதுமே அதே விந்தையான கலர் காம்பினேஷனில் உடை அணிந்து எங்கள் நண்பர்கள் குழாமால் காமெடியனாக கருதப்பட்ட  அந்த பயிற்சிக் கல்லூரி விளையாட்டுத்துறை ஆசிரியர் ஹரிஹர சர்மா (இந்நாள் கலவர சங்கி எச்.ராசாவின் தந்தை) சைக்கிளில் உலவியது நினைவில் உள்ளதே!

யாருக்குமே தெரியாத  அந்த ஊரில்தானே அரச நர்த்தகியாக இருந்த சொர்ணமுகியின் நடனத்தையும் குறிப்பாக பாம்பு நடனத்தையும் கங்கை அமரன், எஸ்.பி.பி இசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்துள்ளேனே!

யாருக்குமே தெரியாத அந்த ஊரை காலி செய்து விட்டு நெய்வேலி புறப்படும் நாளின் முதல் நாளன்று நண்பன் பி.ரமேஷுடன் "ஆனந்த ராகம்" திரைப்படம் பார்த்து விட்டு சோகமாக வந்ததன் காரணம், திரைப்படம் கொடுத்த சோகமா இல்லை ஊரை பிரியும் சோகமா என்று இன்று வரை புரியாமல் இருக்கிறதே!

சரி, மேலே சொன்னதெல்லாம் சொந்தக்கதை.

இனி பொது விஷயங்களுக்கு வருவோம்.

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தானா 1948 லேயே பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (Central Electro Chemical Research Institute,) ஐ துவக்கினார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் வள்ளல் அழகப்பர், கலைக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளி ஆகியவற்றை உருவாக்கி இன்று  பல்கலைக்கழகமாக உருவெடுக்க வைத்தார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் 1977 சட்டமன்றத்  தேர்தலில் அதிமுகவின் பொ.காளியப்பனிடம் பின்னாளில் நிதியமைச்சரான ப.சிதம்பரம் 450 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்றுப் போக, ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பல கட்சி மாறிய பழ.கருப்பையா தோற்றுப் போனதும் நடந்ததே!

யாருக்குமே தெரியாத அந்த ஊரில்தான் 1939 லேயே கம்பன் அடிப் பொடி சா.கணேசன், கம்பன் விழாவை நடத்தத் தொடங்கினார்!

யாருக்குமே தெரியாத அந்த ஊரை, தோற்பதற்காகவே இந்த வருடம் சட்டமன்றத் தேர்தலில் நின்று பிரபலமாக்கிய சீமான் அவர்களுக்கு நன்றி. 

அவர் மட்டும் சொல்லாவிட்டால் யாருக்குமே அந்த ஊரைப் பற்றி தெரிந்திருக்காது. 

ஆமாம்.

யாருக்குமே தெரியாத அந்த ஊரின் பெயர் காரைக்குடி,

காரைக்குடி என்றொரு ஊர் இருப்பதே இப்போதுதான் மக்களுக்கு தெரிந்துள்ளது.

நன்றி சீமான் அவர்களே!

அடுத்த முறை எங்கள் வேலூரில் நின்று தோற்று எங்களூரையும் பிரபலமாக்கவும். 




Thursday, April 23, 2026

அந்த (தேர்தல்) நாள் ஞாபகம் நெஞ்சிலே . . .

 


எங்களின் வாக்குச்சாவடி மிகச் சரியாக எங்கள் வீட்டிற்கு எதிரேதான் உள்ளது. சாலையை கடந்தால் போதும். காலையிலிருந்து விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது. கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. கூட்டம் குறையும் போது வாக்களிப்போம் என்ற சிந்தனையில் உள்ளதால் இன்னும் வாக்களிக்கவில்லை.

ஆகவே ஒரு பழைய தேர்தல் நாள் (2011 சட்டமன்றத் தேர்தல்)  அனுபவத்தை இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று சொல்வது போல சொல்ல முடியாததால் ஐந்தாவது முறையாக பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் மைண்ட் வாய்ஸ் ஏற்கனவே கேட்டதால் அதற்கான பதிலும் மேலே உள்ள படத்தில் உள்ளது.

அடுத்த இரண்டு பதிவுகள் உங்களுக்கு நிச்சயமாக சுவாரஸ்யம் அளிக்கும். ஏனென்றால் அது நாங்கள் பட்ட அவஸ்தைகள். 


பள்ள இடையம்பட்டி தேர்தல் அனுபவங்கள்

 

தமிழக  சட்ட மன்றத் தேர்தலில்  அணைக்கட்டு  தொகுதிக்கு  உட்பட்ட   பள்ள இடையம்பட்டி  கிராமத்து  வாக்குச்சாவடிக்கு நுண் பார்வையாளராகபணிக்கு சென்றிருந்தேன். வேலூர் நகருக்கு மிக அருகாமையில் உள்ள கிராமம்தான்.   காலை ஐந்தரை மணிக்கு  இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு ஆறே கால் மணிக்கெல்லாம்  சென்று விட்டேன்.  அடுத்த கிராமமான மேட்டு இடையம்பட்டியாக  இருந்தால் வண்டியில்  செல்வதுசிரமமாக இருக்கும் என்றார்கள். நான் வசதியாகவே போய் விட்டேன்.   

 

வாக்குச்சாவடிக்கு உள்ளே இருக்கும் அனுபவம் வேண்டும் என்பதால் இப்பணிக்கு விருப்பம் தெரிவித்திருந்தேன். வாக்குப்பதிவு  தொடங்கும்  நேரத்திற்கு  முன்பாகவே  மக்கள்  வாக்களிக்க  திரண்டு வந்து விட்டனர். நான் பணியில் இருந்த வாக்குச்சாவடி அமைந்திருந்த பள்ளியிலேயே இன்னும் ஒரு வாக்குச்சாவடியும்  அமைந்திருந்தது. அங்கே இன்னும் அதிகக் கூட்டம். 

 

மாதிரி வாக்குப்பதிவு, பெட்டிக்கு சீல் வைத்தல்  போன்ற சடங்குகள் எல்லாம்  முடிந்து  எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் எட்டு மணிக்கெல்லாம்  தேர்தல்  வாக்குப்பதிவு  தொடங்கியது. வரிசையில்  நிற்பதற்கோ அல்லது வரிசை மெதுவாக நகர்ந்தாலோ   ஒரு சின்ன முணுமுணுப்பு  கூட  இல்லாமல்  அமைதியாய்  இருந்தனர். வயதானவர்கள்கைக்குழந்தைகளோடு வந்தவர்களை  முன்னதாக வாக்களிக்க அனுமதித்ததை  ஒருவர் கூட ஆட்சேபிக்கவில்லை. நகரங்களில்  இது சாத்தியமில்லை  என்றே கருதுகிறேன். 

 

தேர்தல் தொடர்பாக  நாங்கள் கண்காணிக்க வேண்டியவை  என்று  ஒரு  படிவம் முப்பத்தி ஒன்பது கேள்விகளாக  தரப்பட்டிருந்தது.  அதைத்தவிர எனது பார்வையில்  நான் கண்ட சில காட்சிகள். 

 

என்பத்தி ஐந்து சதவிகித வாக்குப்பதிவு  நடைபெற்றிருந்தது. 638  வாக்காளர்களில்  540  பேர் வாக்களித்திருந்தனர். இதில் பெண்கள்தான்  அதிகம். 279 பெண்கள், 261  ஆண்கள்.  

 

பெண்களில் பெரும்பாலானவர்கள்  சுகாதாரமான, சத்தான உணவு  கிடைக்காதவர்கள். வறுமையின் பிடியில்  தவிப்பவர்கள். மஞ்சள் கயிற்றைத் தவிர  வேறு நகைகள்  எதுவும்  அணியாதவர்கள்.  ஆனால்  வாக்களிக்க ஆர்வம் காண்பித்தார்கள்.

 

ஆண்கள்   ரொம்ப யதார்த்தமாகத்தான்  இருந்தார்கள். மடித்துக் கட்டிய   வேட்டியையோ, கைலியையோ  கீழே இறக்கி விடாமல்தான் நின்றார்கள்வந்தார்கள், வாக்களித்தார்கள், சென்றார்கள். குறைந்த பட்சம்  ஐம்பது சதவிகித ஆண்கள்  குடித்து விட்டுத்தான்  ஒட்டு போடவே  வந்திருந்தார்கள்.  விடுப்பில் இருந்த  ஒரு போலீஸ்காரர் மட்டும்தான் போதையில் தகராறு  செய்தாரே தவிர மற்ற குடிமக்கள் அமைதியாகவே  வந்து போனார்கள். பல இளைஞர்கள்  வாக்களித்த பிறகுதான் பாட்டிலை தொட வேண்டும் என்று வாக்களிப்பதை  ஏதோ  விரதம் இருப்பது போல பேசிக்கொண்டிருந்தார்கள்.  டாஸ்மாக் விடுமுறைக்கெல்லாம்  எந்த மரியாதையும் இல்லை  என்று புரிந்தது.

 

வெப் காமரா மூலம் ஒவ்வொருவரும் படம் பிடிக்கப்பட்டனர். அதன்  விளைவு என்னவானது என்றால் பலரும் கையில் மையிட்டு, கையெழுத்தோகைநாட்டோ  போட்ட பின் வெப் காமரா பக்கம் போனார்களே  தவிர, வாக்களிக்கும்  இடத்திற்கு செல்லவில்லை. வோட்டு போட வேண்டாமா என்று சொல்லி சொல்லி அனுப்ப வேண்டியிருந்தது. 

 

குறைந்தது அறுபதிலிருந்து  எழுவது  பேராவது  அடையாள மையை அழித்து விட்டார்கள். அவர்களை திட்டி மீண்டும்  ஒரு முறை மை வைக்க வேண்டியிருந்தது.  

 

பாமக, தேமுதிக ஆகியோர் போட்டியிட்ட தொகுதி அணைக்கட்டு தொகுதி.  இரு கட்சிகளின் முகவர்களும்  வாக்கு பதிவு தொடங்கும்  போது அக்னி நட்சத்திரம் பிறப்பு கார்த்திக் போல உர் உர்  என்று  முறைத்துக் கொண்டே இருந்தாலும் போக போக நெருக்கமாகி விட்டனர்.

 

ஒரே ஒரு கல்லூரி மாணவன் மட்டும் வாக்களிக்க விருப்பமில்லை, 49   பயன்படுத்தப் போகின்றேன்  என்றான். தேர்தல் அலுவலர் ஒருவர் அம்மாணவனை  சமாதானப்படுத்தி   வாக்களிக்க வைத்து விட்டார்.  ஏன்  அப்படி செய்தீர்கள்  என்பதற்கு அவர் அளித்த விளக்கம் என்ன தெரியுமா?  49  ஒ போட்டால்  ஏராளமான பணி இருக்கிறது. இரண்டு மூன்று ரிஜிஸ்தர் எழுத வேண்டும், பல புள்ளி விபரம் தர வேண்டும்.  இந்த சனியனேல்லாம்  எதுக்கு ? என ஒரே போடாக  போட்டார். 

 

ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தான் வாக்களிப்பதில்  ஆர்வமாக உள்ளனர்  என்பதுதான்  எனது அனுபவம்  சொல்லும் உண்மை. 

 

நுண் பார்வையாளராக நான் பட்ட அவஸ்தைகள் உள்ளதே  அவற்றை தனியாக ஒரு பதிவில் எழுதுகிறேன்.

 

Wednesday, April 22, 2026

விஜய் ரசிகர்கள் -திருத்தப்பட வேண்டியவர்கள்

 


கீழே உள்ள காணொளியை முழுமையாக பாருங்கள்.


என்ன?

மிகவும் எரிச்சலாக இருக்கிறதா?

இவர்களையெல்லாம் போட்டு வெளுக்க வேண்டுமென்று கோபம் வருகிறதா?

ஆம்.

எனக்கும் அப்படித்தான் வந்தது.

ஆனால்

அது அவர்களின் குற்றமா?

அவர்களை உரிய முறையில் நெறிப்படுத்தாத அந்த கட்சித் தலைமையின் குற்றம்.

41 உயிர்கள் பறி போவதற்கு தன் சோம்பேறித்தனமும் தேவையின்றி செய்த தாமதமும்தான் காரணம் என்பதைப் பற்றிய குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாத விஜய், ஆணவமும் பொறுக்கித்தனமுமே குணாம்சமாக கொண்ட ஆதவ் அர்ஜுனா, சுயநலமே வடிவான புஸ்ஸி ஆனந்த், இந்த மடம் இல்லையென்றால் அடுத்த மடம் என்று தாவும் வாச்சாத்தி குற்ற பிரபலம் செங்கோட்டையன் இன்னும் பல உதிரித்தலைவர்கள் ஆகியோரைப் பார்த்து வளரும் இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்!

விஜய்யின் பொறுப்பற்ற திரைப்பட வசன பாணி பேச்சுக்களைத்தைத்தான் அரசியல் என்று கருதிக் கொள்பவர்களும் அது போலத்தானே இருப்பார்கள்!

இவர்கள் எதிர்பார்ப்பது போல விஜய் நிச்சயமாக பெரிய வெற்றி எல்லாம் பெற்று முதலமைச்சர் எல்லாம் ஆகப் போவதில்லை.

அப்படிப்பட்ட சூழலில் இவர்களின் மன நிலை என்ன ஆகும்? இவர்கள் எப்படியெல்லாம் செயல்படுவார்கள் என்பதை எல்லாம் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

தற்குறிகள், பைத்தியங்கள் என்று ஒதுக்கித் தள்ளிப் போவதை விட இவர்களோடு பேசுவதும் உண்மைகளை உணர வைப்பது, சரியான பாதைக்கு அழைத்துச் செல்வதுமே முக்கியமான பணியாகும்.

அந்த பணியை செய்யும் தார்மீகத் தகுதி இடதுசாரிகளுக்கு மட்டுமே இருக்கிறது.

அவர்களால் மட்டுமே இது சாத்தியம்.