Saturday, January 17, 2026

சுற்றுச் சூழலா? கோடிகள்தானே முக்கியம் மைலார்ட்?

 


"இப்போதெல்லாம் நீதிபதிகள் தீர்ப்புக்களை எழுதுவதில்லை. பணி ஓய்வுக்குப் பிந்தைய பதவிகளுக்கான நுழைவுத் தேர்வை எழுதுகிறார்கள்."

இன்றைய  நீதித்துறை மீது  வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இது.  

பணி ஓய்வுக்குப் பிறகு நான் எந்த பதவியையும் நாட மாட்டேன் என்று சொன்ன தலைமை நீதிபதி தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு விட்டாரோ என்று சந்தேகமளிக்கும் வகையில் ஒரு தீர்ப்பினை அளித்துள்ளார்.  சொல்லப்போனால் உச்ச நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பை திரும்பப் பெற்றுள்ளார்.

எந்த ஒரு பெரிய தொழிற்சாலையோ அல்லது வேறு எந்த பெரிய கட்டுமானப் பணியோ செய்தால் அதற்கு சுற்றுச் சூழல்  அனுமதி பெற வேண்டும் என்பது விதி. அப்படி அனுமதி பெறாத கட்டுமானங்களை இடித்துத் தள்ள வேண்டும் என்பதும் விதி. 

மோடி ஆட்சிக்கு வந்ததும் 2017 ல் ஒரு அரசாணை வெளியிடுகிறார்கள். அதன் படி சுற்றுச் சூழல் அனுமதி இல்லாவிட்டாலும் கட்டுமானப் பணி முடிந்து விட்டால் முன் தேதியிட்ட அனுமதி கொடுக்கலாம் என்பதே அந்த ஆணை. இந்த ஆணை 2018 வரை நீடிக்கிறது.

அப்படியென்றால் 2018 க்குப் பிறகு சுற்றுச்சூழல் அனுமதியோடுதான் கட்டுமானங்கள் நடந்ததா?

அதெப்படி நடக்கும்.

2017 போல 2021 லும் இன்னொரு அரசாணை வெளியிட்டு கட்டுமானத்துறை மாஃபியாக்களின் வயிற்றில் பாலை வார்த்தது மோடி அரசு.

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இவ்வாறு முன்தேதியிட்ட  அனுமதி கொடுப்பது சரியல்ல என்று ஒரு வழக்கு தொடரப்பட மே 2025 ல் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு 2017, 2021 அரசாணைகளை ரத்து செய்து அனுமதி பெறாமல் செய்யப்பட்ட கட்டுமானங்களை இடிக்குமாறு உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட் மாஃபியா மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல மூன்று பேர் அமர்வு விசாரிக்கிறது. ஒரு நீதிபதி முந்தைய தீர்ப்பு செல்லும் என்று சொல்ல தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதியும் மே 2025 தீர்ப்பை திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன தெரியுமா?

அனுமதி பெறாத கட்டுமானங்களை இடித்தால் அவற்றுக்காக முதலீடு செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வீணாகி விடுமாம். 

அதாவது சுற்றுச் சூழலை பாதுகாப்பதை விட, சட்டங்களையும் விதிகளையும் காப்பதை விட சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் முதலீடு செய்து கொண்ட ரியல் எஸ்டேட் மாஃபியாவின் நலனே முக்கியம். 

அநேகமாக நாளை போதைப் பொருட்களின் கடத்தலை நியாயப்படுத்தக் கூட ஏதாவது அரசாணை வெளிவரலாம். அதுவும் அதானியின் துறைமுகம்தான் போதைப் பொருள் கடத்தலின் கேந்திரமாக உள்ளது.  அப்படிப்பட்ட அரசாணை வந்தாலும் அதைப் பாதுகாக்கத்தான் இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

பிகு: இப்பதிவை எழுதி ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. கிட்டத்தட்ட இதே போன்றதொரு சட்ட விரோத கட்டுமானத்திற்கு பாதுகாப்பளிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதால் நீண்ட காலமாக ட்ராப்டிலேயே இருந்த பதிவை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்திய தீர்ப்பைப் பற்றி மாலையில் எழுதுகிறேன்.

Friday, January 16, 2026

எம் நினைவுகளில் எந்நாளும் வாழ்வீர்கள் . . .

 



இன்றைய நாள் ஒரு துயரச் செய்தியுடன் விடிந்தது. 

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிதாமகர், நிறுவனத் தலைவர்களில் ஒருவர்,  1955 முதல் 1994 வரை பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தலைவர் ஆகிய பொறுப்புக்களில் அகில இந்திய இன்சூரனஸ் ஊழியர் சங்கத்தை வழி நடத்தியவர். 

செப்டம்பர் 1957 ல் இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழ் தோழர் சந்திரசேகர போஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வரத் தொடங்கியது. இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழ் நவம்பர் 1997 ல் சென்னையிலிருந்து வெளிவர தொடங்கும் வரை நாற்பதாண்டுகள் அதன் ஆசிரியராக செயல்பட்டவர்.

ஹிந்துஸ்தான் கோவபரேட்டிவ் என்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். அங்கேயிருந்த சங்கத்திற்கு வேகம் கொடுக்கிறார். சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தை துவக்குகிறார். போனஸ் கோரிக்கைக்காக  போராட்டம் நடக்கிறது. ட்ரிப்யூனலுக்கு பிரச்சினை செல்கிறது. லாபம் இல்லை என்று நிர்வாகம் பொய்க்கணக்கு காண்பிக்கிறது. மிகுந்த சிரமத்துடன் உண்மையான கணக்குகளை போட்டோ எடுத்து ட்ரிப்யூனலிடம் சமர்ப்பிக்கிறார். நிர்வாகம் மட்டுமல்ல ட்ரிப்யூனலின் நீதிபதி கூட இது துரோகம் என்று கொந்தளிக்கிறார். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். என்னை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், ஊழியர்களுக்கு நியாயமான போனஸை அளியுங்கள் என்பதே அவர் நிலையாக இருந்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீண்டும் ஊழியர்களின் போராட்டத்தால் பணியில் இணைகிறார்.

நாடெங்கிலும் இருந்த பல்வேறு இன்சூரன்ஸ் கம்பெனிகளின் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க ஒரு கூட்டம் பம்பாய் நகரில் நடந்த போது மேற்கு வங்க ஊழியர்களின் சார்பாக அவர் கல்கத்தாவிலிருந்து பம்பாய் செல்கிறார். 01.07.1951 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உருவாகிறது. அகில இந்திய செயற்குழு உறுப்பினராகிறார் தோழர் போஸ். 1953 ல் முதல் மாநாடு. 1955 ல் இரண்டாவது மாநாடு. அம்மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலாளராகிறார் தோழர் போஸ்.

இதற்கிடையில் 1954 ல் ஒரு சம்பவம். மெட்ரோபாலிடன்  இன்சூரன்ஸ் கம்பெனி என்ற தனியார் கம்பெனியில் சங்கம் அமைக்க முயற்சித்த 55 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட அங்கே கல்கத்தா நகர இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக தோழர் சந்திரசேகர் போஸ் மற்றும் பின்னாளில் சங்கத்தை பொதுச்செயலாளராக வழி நடத்திய தோழர் சரோஜ் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.  கீழமை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

1956 ல் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்ட போது அதனை வரவேற்று அகில இந்திய இன்சூர்ன்ஸ் ஊழியர் சங்கம் தந்தி அனுப்பியது. அனுப்பியவர் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் போஸ். முதலாளித்துவ சிந்தனை கொண்ட சில காங்கிரஸ் எம்.பி க்களும் என்றைக்குமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பாஜகவின் அன்றைய வடிவமான ஜனசங்கும் தேசியமயத்தை கடுமையாக எதிர்த்த போது "ஊழியர்கள் ஆதரிக்கிறார்கள்" என்று அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் அந்த தந்தியை காண்பித்து உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் இது பதிவாகியுள்ளது.

ஊழியர்களுக்கான பலன்களை பெறுவதில் கவனம் செலுத்துபவர் என்றும் நிர்வாகத்தின் முன்மொழிவுகளுக்கு சரியான எதிர்வினைகளை உடனுக்குடன் தருவதில் வல்லவர் என்று எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அவர் ஒரு திறந்த புத்தகம் என்பதை அவரது தன் வரலாறு நூல் உணர்த்தியது. 

1983 . அவர் எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் சங்கத்திலிருந்து அவர் ஓய்வு பெறவே இல்லை. 1994 ல் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலும் சங்க இயக்கங்களிலிருந்து அவருக்கு ஓய்வு என்பதே இல்லை. 

அவரை முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பு 1988 ல் கிடைத்தது. அகில இந்திய தலைமையகம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறிய போது சென்னை எல்.ஐ,சி கட்டிடத்தில் பிரம்மாண்டமான கூட்டம் ஒன்று நடந்தது. பெரிய ஆரவாரம் இல்லாத தெளிவான நீரோடை போன்றது அவர் பேச்சு. அந்த தெளிவும் அழுத்தமும் இறுதி நாள் வரை மாறவே இல்லை. எங்கள் வேலூர் கோட்டத்திற்கு ஒரு முறை வந்துள்ளார்.

1998 ல் நான் வேலூர் கோட்டப் பொதுச்செயலாளராகிறேன். 2000 ம் ஆண்டு சென்னையில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது என்னை அழைத்து பேசி உற்சாகமும் நம்பிக்கையும் கொடுத்தார். அந்த காலகட்டத்தில் புதிதாக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற வேறு சிலரையும் அழைத்து உற்சாகப்படுத்தினார் என்று பின்பு அறிந்து கொண்டேன்.










ஏழாண்டுகள் முன்பாக அவரை அவரது வீட்டில் சந்தித்தேன். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்திற்கும் மேல் நடந்த சந்திப்பு அது. இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை நாவல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்ற வேட்கையில் கொல்கத்தா சென்று அவருடன் பேசி பல்வேறு விபரங்களை அறிந்து கொண்டேன். அறுபதுகளின் சம்பவங்களை முழுமையாக தன் நினைவிலிருந்து சொன்னவர் மறைந்த தன் சகாக்களான தோழர் சரோஜ், தோழர் சுனில் பற்றி பேசும் போது மட்டும் உணர்ச்சிவயப்பட்டார். 



 வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இது. தமிழ்நாட்டிலிருந்து தோழர் வந்துள்ளார். அதனால் எங்கள் இருவருக்குமே தோசை ஆர்டர் செய்து விடு என்று பேரனிடம் சொன்னார். இரவு 10.30 க்கு புறப்படுகையில் ஊபரில் டாக்ஸி புக் செய்த போது, பக்கத்தில்தான் டாக்ஸி ஸ்டாண்ட் உள்ளது. நானே ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவர் புறப்பட்ட போது அவரது வயது அதிகமில்லை, வெறும் 96 தான். 

அந்த போராட்டத்தை "முற்றுகை" எனும் நூலாகஆறாண்டுகளுக்கு முன்பாக   விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவரே வெளியிட்டது வாழ்வில் எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.



நூறாண்டுகளை கடந்த நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவர் தினமும் வந்து கலந்து கொண்டார். மாநாட்டின் போது மட்டுமல்ல அதற்கு முன்பாக மம்தாவின் அடாவடி காரணமாக தற்காலிக அரங்கம் அமைக்கப்பட்ட போது அதன் பணிகளை அன்றாடம் வந்து பார்த்து ஆலோசனை வழங்கியுள்ளார்.




அவரை நாங்கள் இறுதியாக பார்த்தது 31.12.2025 அன்றுதான். 28.12.2025 முதல் 01.01.2026 வரை புவனேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் 29.12.2025 முதல் 31.12.2025 வரை அவர் 104 வயதில் கலந்து கொண்டார். மிகவும் தெளிவான உரை ஒன்றையும் நிகழ்த்தினார். அவரது வருகையும் இருப்புமே அனைவருக்கும் உற்சாகமளித்தது, வேகம் கொடுத்தது.




அதன் பின்பு உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோழர் சந்திரசேகர் போஸ் இன்று இயற்கையுடன் இணைந்து விட்டார்.

அவர் 

எளிமையின் வடிவம்,'

தியாகத்தின் உருவம்,

உறுதிக்கு உதாரணம்,

வரலாற்றுப் பொக்கிஷம்,

இயக்கத்திற்கு எழுச்சி தந்த நாயகன்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத தலைவர்.

எந்நாளும் அவர் எங்களின் நினைவில் வாழ்வார், வழி காட்டுவார்.




அது ஒரு வீர காவியம்



 நேற்றைய பதிவில் இந்திரா காந்தி முன்னிலையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி ஒரு அறிக்கையை படிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அந்த சம்பவம் என்ன?


தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வார்த்தைகளிலேயே விவரிக்கிறேன்.


“இந்திரா அவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற பின்னும் ஜேஎன்யு வேந்தர் பதவியில் தொடர்ந்தார். அவசர நிலைக் காலம் கொண்டு வந்ததாலும் அப்போது நிகழ்ந்த அநீதிகளாலும் அவர் அந்த பதவியில் தொடரக்கூடாது என நாங்கள் கூறினோம். நான்கு பக்க குற்றப்பத்திரிக்கை ஒன்றை எழுதி அனைத்து மாணவர்களும் வெலிங்டன் க்ரெஸெண்டில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். அவசர நிலைக்காலத்தின் போது தலை மறைவாக இருந்த மாணவர்களின் கைது வாரண்டுகளை ஜேஎன்யு விடுதியில் உள்ள அவர்களின் அறைக்கதவுகளில் ஒட்டி விட்டுச் செல்வார்கள். நாங்கள் எங்கள் மனுவை அவர் வீட்டுக் கதவில் ஒட்ட நினைத்தோம்.

 நாங்கள் அங்கே சென்ற போது வி.சி.சுக்லா எங்களிடம் என்னவென்று வினவினார். நாங்கள் இந்த மனுவை அவர்களிடம் தர வந்துள்ளோம் என்று சொன்னேன்.அவர் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். ஐந்து பேர் மட்டும் உள்ளே வரலாம் என்றார். நான் முடியாது என்று மறுத்தேன்.  அனைத்து மாணவர்களும்தான் வருவோம் என்று சொன்னேன். அவர் மீண்டும் உள்ளே சென்றார்,  இம்முறை இந்திரா அம்மையாரே கதவுக்கருகில் வந்தார்.  அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். என்ன இதெல்லாம் என்று அவர் கேட்டார். நான் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர், இந்த மனுவை உங்களிடம் அளிக்க வந்துள்ளோம் என்று அவரிடம் சொன்னேன். அங்கே போலீஸ் காவல் எதுவும் இல்லை. நீங்கள் வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னேன். நீங்கள்  அப்பதவியில் தொடர்வது சரியல்ல என்றேன். அவர் அந்த மனுவை வாசிக்குமாறு என்னிடம் சொன்னார்.  நாங்கள் சற்று தயங்கினோம். ஏனென்றால் அதில் ஏராளமான வசைகள் இருந்தன. நான் படித்தேன். முகத்தில் ஒரு நிரந்தரமான புன்னகையுடன் அவர் அதனை முழுமையாகக் கேட்டார்.



 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து இந்திரா காந்தி உடன் விலகி விட்டார். 


நான் முன்பே பகிர்ந்து கொண்டதுதான். ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மெய் சிலிர்க்கும்.

நிஜ வாழ்வின் உண்மையான கதாநாயகன் இவர்தான்.

இந்த சம்பவம் ஒரு வீர காவியம்.

மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய காவியம்.

தோழர் யெச்சூரி போன்ற மிகுந்த ஞானம் கொண்ட தலைவரை இழந்தது இந்தியாவின் துயரம்.



Thursday, January 15, 2026

இந்திரா காந்தி இரும்புப் பெண்மணியாம் - என்னா பல்டி !!!!

 


மோடிக்கு மட்டுமல்ல, மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சங்கிகள், சிகண்டிகளுக்கும் நேரு குடும்பம் என்றால் எப்போதும் பிடிக்காது. 

அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நாள் வரும் போது அப்படியே பொங்கி எழுந்து ஜனநாயகக் காவலர்களாக சீன் போடுவார்கள் பாருங்கள், அப்போது நமக்கே புல்லரிக்கும். அப்போதெல்லாம் இந்திரா காந்தியை எந்த அளவிற்கு சாட முடியுமோ அந்த அளவிற்கு சாடுவார்கள்.

அவசரநிலைக்காலத்தில் அன்றைய ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் தேவரஸ், மன்னிப்புக் கடிதம் எழுதி இருபது அம்சத் திட்டத்திற்காக பிரச்சாரம் செய்தார் என்பதை மறந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் இரண்டு பதிவுகள் பார்த்தேன்.



பராசக்தி திரைப்படம் வந்த பிறகு  அது சொல்லும் செய்தி பாஜக கருத்தியலுக்கும் எதிரானது என்பதால் 

இந்திரா காந்தி இரும்புப் பெண்மணியாகி விட்டார்.

பக்தவத்சலம் பெரியவராகி விட்டார்.

காங்கிரஸிற்கும் திமுகவிற்கும் இடையில் சிண்டு முடிய இப்போது பராசக்தி படத்தை கீழிறக்கி இந்திராவை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

மோடியின் விருந்தில் பராசக்தி குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இதிலே சிவ கார்த்திகேயனும் ஜி.வி.பிரகாஷும் பாஜகவும் சேர்ந்து விட்டதாக வேறு  பாஜகவின் பெண் ரௌடிகள் கோஷ்டியின் தலைவி மயிலை ரமா பதிவிட்டுள்ளார். 

அந்த செய்தி உண்மையென்றால் இன்னும் என்னென்ன பல்டிகள் அடிப்பார்களோ?

பிகு: மேலே உள்ள படம் - அது தோழர் யெச்சூரி நடத்திய ஒரு வீரப் போர். ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். இருப்பினும் நாளை மீண்டும் பகிர்கிறேன். மீண்டும் மீண்டும் நாம் பேச வேண்டிய வீர காவியம் அல்லவா அது!

தீவிரவாதிகள் அழகாகவே இருப்பார்கள்

 


புவனேஸ்வர் புறப்படும் முன்பாக இதற்கு முன்பாக கலந்து கொண்ட அகில இந்திய மாநாட்டு அனுபவங்கள் பற்றி எழுதியிருந்தேன்.

கட்டாக் போன போது கண்ட சில அனுபவங்களை எழுத தவறி விட்டேன். அவை இப்பதிவில் . . .

கட்டாக் மாநாடு முடிந்த பின்பு நெய்வேலியைச் சேர்ந்த நாங்கள் எழுவர் மட்டும் கொல்கத்தா சென்று பின்பு மும்பை போய் விட்டு திரும்பினோம்.

புவனேஸ்வரிலிருந்து கொல்கத்தா செய்ய முன்பதிவு செய்திருக்கவில்லை. இரவு பத்து மணி அளவில் கொல்கத்தா செல்லும் ரயிலில் சாதாரணப் பெட்டி ஒன்றில் ஏற முயற்சிக்கிறோம். கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. தட்டு தட்டு என்று தட்டிய பிறகு எரிச்சலோடு திறந்தார்கள். பாதிப் பெட்டி முழுக்க போலீஸ் காரர்கள்தான். 

காலியிடத்தை தேடி அமர்ந்து எதிரில் பார்த்தால் எதிரில் ஒரு அழகான வாலிபன், மெலிந்த உருவம், நல்ல சிவப்பு நிறம், சின்னதாக மீசை, இருபத்தி ஐந்து வயதுக்குள் இருக்கும்.

எதற்கு இந்த வர்ணனை என்று கேட்கிறீர்களா?

அந்த பையனின் கைகளில் விலங்கு, கால்களிலும் விலங்கு, ஒரு சங்கிலியோடு சேர்த்து ரயிலோடு இணைத்திருந்தார்கள்.

பக்கத்தில் இருந்த போலீஸ்காரரோடு பேசிய போது "உல்ஃபா அமைப்பைச் சேர்ந்த, சில கொலைகளை செய்த, சில குண்டு வெடிப்புக்களை நிகழ்த்திய தீவிரவாதி என்றும் விசாகப்பட்டிணத்தில் கைது செய்து கௌஹாத்தி கூட்டிப் போவதாக தெரிந்தது.

நாங்கள் கட்டாக் சென்ற போது வட இந்தியப் பெண்களால் எங்கள் தோழர்கள் நிறத்தின் காரணமாக விடுதலைப்புலிகள் என்று இறக்கி விடப்பட்டார்கள். 

கட்டாக்கில் முதல் முறையாக  என்ற பழைய பதிவை தயவு செய்து படித்து விடுங்கள். 

நிஜமான தீவிரவாதி எப்படி இருந்தான் பார்த்தாயா என்று பிறகு பேசிக் கொண்டோம்.

அன்பே சிவம் படத்தில் கமலஹாசன் மாதவனிடம் சொன்ன வசனத்தை கேட்டதும் எனக்கு அந்த சம்பவம்தான் நினைவுக்கு வந்தது.


Wednesday, January 14, 2026

குன்றம் எங்கள் நிலமடா, சுவாசமடா

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளரும் சிறந்த ஓவியக் கலைஞருமான தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். 

அவசியம் முழுமையாக படியுங்கள். திருப்பரங்குன்றம் இன்னொரு அயோத்தியாகும் என்ற சங்கிகளின் சதி  நிச்சயம் பொய்த்துப் போகும். . .




மலையும் மலைசார்ந்த வாழ்வும்

_______________________________
திருப்பரங்குன்றம் மலை எங்கள் இன்னொரு தாய்மடி. ஒருபுறம், இரண்டு மூன்று மண் குவியல்களை முன்னும் பின்னுமாகக் கொட்டி வைத்தது போன்ற தோற்றப் பொலிவுடனும் மறுபுறம், ஒரு யானை காலை மடக்கி படுத்திருப்பது போன்ற கம்பீரத்துடனும் காட்சியளிக்கும் எங்கள் மலை, எம் குன்றத்து மக்களின் அரணாகவும் இருக்கும் அழகு யாருக்கும் வாய்க்காது. இயற்கை வளத்துடன் சுதந்திரமான, எவ்வித இடையூறும் இல்லாத எங்கள் மலை எப்போதும், எல்லோரையும் அணைத்துக்கொள்ளும் துடிப்புடனே சிலகாலம் முன்புவரை இருந்திருக்கிறது.
அது ஒரு காலம்...
மலையேறுவது என்று முடிவு செய்துவிட்டால் நேரம் காலமெல்லாம் பார்க்காமல் குபீரென கிளம்பிவிடுவோம். பெரும்பாலும் பத்துப் பன்னிரண்டு பேருக்கு குறையாமலும், இரவாகவும் அது இருக்கும். சிறு தீனிகள், தண்ணீர் கேன்களுடன் இரவு பத்து மணிக்கு மலையேறினால், இறங்கி வரும்போது பழனியாண்டவர் கோவில் தெருவின் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள்!
நாங்கள் மலையேறும்போது இரவு நேர ரோந்துப் பணியில் இருக்கும் காவல்துறை நண்பர்கள் பார்த்துவிட்டால், சில நிமிடங்கள் நின்று எங்களைப் பார்த்துவிட்டு, "ஓ. நீங்களா... உங்களுக்கொல்லாம் தூக்கமே வராதா?" என்று சொல்லி சிரித்தபடி கிளம்பிவிடுவார்கள். தமிழகத்தின் கலை இலக்கிய ஆளுமைகள் பலரும் எங்களோடு மலையேறிய ஏகாந்தமான நாட்களை எண்ணிப்பார்க்கிறேன்... கலை இலக்கியம் அரசியல், பாடல்கள், கதைகள், கவிதைகள் என நீளும் பொழுதுகளில் குன்றத்து மலையே எங்களுடன் அமர்ந்து கூடிக்களித்திருப்பது போன்ற உணர்வுகளுடனேயே விடிகாலை பிரியா விடைகொடுத்து கீழிறங்குவோம். அதிலும், பௌர்ணமி நாட்களில் மிளிரும் மலையின் அழகை நடந்துணர்வதற்காகவே மலைமுழுவதும் அலைந்து திரிவோம். அப்படி ஒருநாள், யார் கண்ணிலும் படாத அழகிய குளம் ஒன்றுக்கு 'சாகுந்தலா குளம்' என்று சு.வெங்கடேசன் பெயர் சூட்டியதும், மற்றொரு நாள் மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 'இனியவை நாற்பது' போல், 'நிலா நாற்பது' படைக்கப் போவதாக மலையின் மெலமர்ந்து அறிவித்ததும் பசுமையாக நினைவிலிருக்கிறது.
சிலநேரங்களில் படிகளின் வழியே மலை ஏறாமல், பழனியாட்டவர் கோவில் பின்புறமுள்ள சரிவான நீள் பாறை வழியாக உச்சிப்பிள்ளையார் கோவில் சென்று, அங்கிருந்து செங்குத்தாக உள்ள பாறையில் இறங்கி நெல்லித் தோப்பை அடைவோம். அங்குள்ள சுமார் பத்தடி உயரத்தில் வெட்டிப் பிளந்ததுபோல் சிறிது சாய்வாகவும் செங்குத்தாகவும் உள்ள ஒற்றைப் பாறையில், 20 30 அடிகள் பின்னால் போய் ஓடிவந்து ஏறி திறமையைக் காட்டுவோம். (அது அவ்வளவு எளிதானதல்ல. பல முறை உச்சிக்குப் போகாமல் பின்னோக்கி சரிந்தபடியே கீழே வந்து விழுவோம்) பிறகு மறுபடியும் படிகளைப் பயன்படுத்தாமல் பாறைகள் வழியாகவே, காசிவிஸ்வநாதர் கோயில், அங்கிருந்தபடியே பின்புற பாறை வழியாக சிக்கந்தர் தர்கா, அங்கிருந்து இறங்கி, தூண் இருக்கும் பாறை, ஒற்றை மரம் என மலை முழுவதும் அரட்டையடித்துவிட்டு கீழிறங்கவும் பொழுது விடியவும் சரியாக இருக்கும்.
காசிவிஸ்நாதர் ஆலயத்திற்கு முன்னதாக நீள்வெட்டுத் தோற்றத்திலும், ஆலயத்திற்கு உள்ளே குளம்போலவும் தேங்கி இருக்கும் சுனைநீரை லட்சுமி தீர்த்தமென அங்கு வருபவர்கள் அள்ளிப் பருகுவார்கள். சிக்கந்தர் அவுலியா தர்காவிற்கும் அதிலிருந்து குடத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வார்கள்.
காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்குச் செல்லும் பாதையின் விளிம்பு செங்குத்தாக இருப்பதால் (யாராவது தவறி விழுந்தால் உடலைத் தேடித்தான் எடுக்கவேண்டும். பல தற்கொலைகளும்கூட அங்கு நடந்திருக்கிறது.) பக்தர்கள், பயணிகளின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் கட்டும் பணி நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது நடைபெற்றது.
ஒன்று முதல் ஐந்துவரை பெரியரத வீதியில் இருந்த கோட்டைப் பள்ளியில் நான் படித்தபோது, (இப்போது அந்தப்பள்ளி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகில் உள்ளது) இட நெருக்கடியால் இரண்டாம் வகுப்பு மட்டும் பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள மலையேறும் படிகட்டு அருகில், சாவடியில் நடக்கும். அப்போது அந்தப்பணி நடைபெற்றபோது, கட்டுமானப் பணிகளுக்கு பொருட்களை கொண்டுசெல்ல படிகளைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். சும்மா நடந்தாலே மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி, இளைப்பாறியபடிதான் செல்லவேண்டிய நிலையில் சிமெண்ட், மணல், உடைகற்களைக் கொண்டு செல்வது அவ்வளவு எளிதானதல்ல, ஆட்கள் கிடைப்பதும் கடினம்.
இந்தச் சூழலில்தான். சாவடிக்கு (பள்ளி) முன்னால் குவிக்கப்பட்ட உடைகற்களை யார் வேண்டுமானாலும் எடுத்துச் சென்று கூலியை பெற்றுக் கொள்ளலாம். எட்டு வயதில் என் வகுப்பு நண்பர்களுடன் அந்த கற்களை நான் சுமந்திருக்கிறேன். (ஒரு கல்லுக்கு 5 பைசா என்று நினைவு.) ஒரு கல்லை சுமந்து செல்வதற்குள் முழி பிதுங்கிவிடும். இதில் ஆச்சரியம் என்னவென்றால். தர்காவுக்கு பிரியாணி அண்டா மற்றும் அங்குள்ள கடைக்கு சோடா, கலர் பெட்டிகளை தலையில் சும்மாடு கூட்டி பாய்மார்கள் அசால்ட்டாக கொண்டுசெல்வார்கள்.
பிறந்ததிலிருந்தே எனக்கும், தெருப் பசங்களுக்கும் உடன் பிறந்தது மலையேறுவதும், மலையில் சுற்றித்திரிவதும்.
"டேய் இங்க பார்ரா, எவனோ பாய் தலவாணி விரிச்ச மாரி வருசயா பளபளன்னு செதுக்கி வச்சிருக்கான்" என்றுதான் அறிமுகமாகியது, கால் முளைத்து நாங்கள் முதன் முறையாக மலையேறிய போது 'சமணப் படுகைகள்'. சமணர்கள் பள்ளிகொண்ட படுகைகள் தாங்கிய குகையுடன் இருக்கும் மலையடிவாரம்தான் எங்கள் வீடும், தெருவும். வீட்டின் பக்கவாட்டு சந்துக்குள் புகுந்து கிடுகிடுவென ஏறினால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் படுகையில் இருப்போம். படியேறி இறங்குவதெல்லாம் (அதற்கும் தனியே படிகள் உள்ளன) கெளரவக் குறைச்சல் என்பது, படிக்கிற காலத்தில் எங்கள் எண்ணம். தேர்வுக்குப் படிக்க நாங்கள் தேர்வு செய்யும் இடம் சமணப் படுகை.
குறுக்கு வாக்கில் நீளமாக மலையை வெட்டிப் பிளந்தது போன்ற அந்தக் குகையின் படுகைக்கு உள்ளேயுள்ள துளையில் சிரமப்பட்டு நுழைந்து அருகில் உள்ள மறு துளை வழியாக வெளியேறும் போது திகிலாக இருக்கும். ஆனால், அது எங்களுக்கு விளையாட மட்டும்தான். படிப்பதற்கென்று நாங்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு இடம் உண்டு. படுகைக் குகையின் பக்கவாட்டில் சிறிது இடறினாலும் கீழே உருளக் கூடிய பாதையில் மலையை உரசிக் கொண்டே நகர்ந்து சென்றால், ஒரு ஐந்து பேர் மட்டுமே உட்காரக்கூடிய - துப்பாக்கியால் துளைத்தது போன்ற - அந்த குகையில் ஆட்டுப் புழுக்கைகளைத் தட்டிவிட்டுப் அமர்ந்து படிப்போம். அந்தக் குகையின் அருகில் மேலும் சில சிறு சிறு பொந்துகள் இருக்கின்றன. ஆந்தைகள் அடையும் அதற்குள் ஒருமுறையாவது நுழைந்துபார்த்துவிட வேண்டும் என்பதை ஆசைப்படத்தான் முடியும். நிஜத்தில் நடக்காது. அது ஆந்தைகளின் வசிப்பிடம் என்பதுகூட எனது பெரியம்மா சொல்லித்தான் தெரியும். மலையின் வெக்கை வீசும் வீட்டு வாசலில் இரவுகளில் படுக்கும் பெரும்பாலான தெரு மக்களில் நானும் ஒருவன். அப்படிப் படுத்திருக்கும்போது நள்ளிரவு நேரத்தில் பலமுறை "ஏய்... ஏய்" என்று அடித் தொண்டையில் யாரோ ரகசியமாய் கூப்பிடுவது போன்ற ஓசையைக் கேட்டு பயந்து தூங்காமல் இருந்திருக்கிறேன். ஒருநாள் என் பெரியம்மாவிடம், "எம்மா, மலையில் பேய் இருக்கா" என்றேன். அதற்கு பெரியம்மா, "எந்த கீர முண்டடா சொன்னது" என்றது. "இல்ல ராத்திரி அங்கருத்து ஏய், ஏய்னு கூப்புடுது" என்று மலையில் உள்ள துளைகளைக் காட்டி நான் சொன்னவுடன் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, "அட அறுதப் பயலே அது ஆந்த மூச்சு விடுற சத்தம்டா" என்று சொன்ன பிறகுதான் இரவுகளில் நிம்மதியாக தூக்கம் வந்தது. அதன் பிறகு அ(ஆ}ந்த ஓசையை ரசிக்க ஆரம்பித்தேன்.
எங்கள் வீட்டிற்கு நேர் மேலே உள்ள சமணக் குகைகளும் (அதற்கு பஞ்சபாண்டவர் குகை என்று கதை கட்டியவன் எவன் என்று தெரிவில்லை.) கிழக்கே சற்று தள்ளி உள்ள உச்சிப்பிள்ளையார், காசி விஸ்வநாதர் ஆலயங்களும், மலை உச்சியில் உள்ள தர்காவும், தெற்கே அடிவாரத்தில் உள்ள ஊமையாண்டவர் கோயிலும் (கல்வெட்டுக் குகைக் கோயில்) ஏழு கன்னிமார்கள், கருப்பசாமி, உள்ளிட்ட குலதெய்வங்களும், குன்றத்து மலைக்கு எதிரில் உள்ள கூடதட்டி மலையில் உள்ள கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் போன்ற சித்தர்கள் ஜீவசமாதிகளுமாய் பலரும் வந்துசெல்லும் நந்தவனமான இருந்த குன்றம் இப்போது மதவெறி குரங்குகள் கையில் கிடைத்த பூமாலையாக சிக்கியிருக்கிறது.
பறவைகளின் வேடந்தாங்கலாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இந்து மக்களும் முஸ்லீம் மக்களும் சுதந்திரமாக வந்து சென்ற குன்றத்து மலை இப்போது உள்ளூர் மக்களுக்கே அந்நியப்பட்டு கிடக்கிறது. இரவிலும் காவல்துறையினர் சிரித்து மலைக்கு வழியனுப்பிய காலம்போய், பகலிலேயே ஆதார் கார்டு ஆதாரம் கேட்கும் குரூரம் அரங்கேறுகிறது. மதவெறியர்களின் பக்க வாத்தியங்களாகவும், ஊதுகுழலாகவும் உள்ளூர் காவல்துறையும், உயர்நீதிமன்றமும் மாறியிருக்கிறது. பக்தர்கள் எப்போதும் போல் தங்கள் வழிபாட்டை தொடரும்போது, பக்தியை வைத்து அரசியல் செய்யும் சங்கிப் பதர்கள் குன்றத்து அமைதியைக் குலைப்பதற்கு நாள்தோறும் வந்து குரைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் நம்பிக்கையிருக்கிறது...
சரவணப் பொய்கையில் நீராடி, முருகனின் திருநீரணிந்து, உச்சிப்பிள்ளையாருக்கு தீபம் ஏற்றி, காசிவிஸ்வநாதரை வணங்கிய கையோடு சிக்கந்தரிடமும் மந்திரித்துக்கொள்ளும் எம் குன்றத்து மக்கள் இந்தப் பிணைப்பில் நெருப்பள்ளி போடுபவர்களின் ஈனப் பிழைப்பில் நிச்சயம் மண்ணள்ளிப் போடுவார்கள்.
- வெண்புறா

தளபதிக்கே ஓட்டு கிடையாதா?

 


மேலே உள்ளது அமைதிப்படை படத்தில் வரும் ஒரு காட்சி. தன் மனைவியை அமாவாசை கொல்லச் சொல்லும் போது மணிவண்ணன் பேசும் வசனம் இது.

இன்றைக்கு யார் அது போல ஓவராக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

கீழேயுள்ள படத்தை பாருங்கள்.



மேலேயுள்ள படத்தில் இருப்பவர் அட்மிரல் அருண் பிரகாஷ். இந்திய கப்பற்படையின் தளபதியாக 31.07.2004 முதல் 31.10.2006 வரை செயல்பட்டுள்ளார். இவரது மொத்த பணிக்காலம் நாற்பது ஆண்டுகள். எழுபதுகளில் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் நேரடியாக களத்தில் இருந்துள்ளர். அதற்காக கொடுக்கப்பட்டதுதான் "வீர் சக்ரா பதக்கம்"

அவர் பெற்ற பதக்கங்களின் விபரம் கீழே உள்ளது. 



இப்போது எதற்கு அந்த வயதான அதிகாரி பற்றி எழுதுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?

பணி ஓய்வுக்குப் பிறகு அவரும் அவரது மனைவியும் கோவாவில் வசித்து வருகிறார்கள். 

ஒரு பொறுப்பான குடிமகனாக SIR க்கான படிவத்தை உரிய நேரத்தில் நிரப்பிக் கொடுத்துள்ளார்.

அவருக்கு தேர்தல் ஆணையத்திலிருந்து கடிதம் வந்துள்ளது.

என்னவென்று?

அவரும் அவரது மனைவியும் இந்திய குடிமக்கள் என்று நிரூபிப்பதற்கான ஆவணங்களோடு 18 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வருமாறு அந்த கடிதம் சொன்னது.

இது ஏதோ ஒரு சின்ன கோளாறு. அதற்காக மோடியை அமாவாசை என்ற ரேஞ்சிற்கு  பேச வேண்டுமா என்றுதானே யோசிக்கிறீர்கள் ! 

இந்த பிரச்சினை என்றில்லை, எப்போதுமே மோடி அமாவாசைதான். அது வேறு விஷயம்.

கப்பற்படை தளபதியாக இருந்தவருக்கு வேண்டுமென்றே வாக்குரிமையை மறுப்பதாக குற்றம் சாட்டுகிறீர்களா?

ஆமாம்.

ஏன்? அதற்கென்ன அவசியம்?

ராணுவத்தில் பணி நியமன முறையை மாற்றி ராணுவ வீரர்களை ஒப்பந்தக் கூலிகளாக மாற்றும் அக்னிபாத் முறையை திரு அருண்பிரகாஷ் கடுமையாக கண்டித்துள்ளார். ராணுவத்தை பலவீனப்படுத்தி விடும் என்று எச்சரித்தார்.

இது போதாதா மோடிக்கு?

கப்பற்படை தளபதியாக இருந்தாலும் அரசின் மூடத்தனத்தை சாடினால் அவர்களது குடியுரிமையை கேள்விக்குறியாக்கி விடுவார்கள். 

கேடு கெட்ட ஆட்சி இது.