Monday, April 20, 2026

குஜராத்தில் குழந்தைகள் குறையுது. செலவு ???????

 


குஜராத் மாநிலத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தில் 

2022-23 ம் ஆண்டில் 42,21,257 குழந்தைகளுக்காக 1,035.84 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

அதுவே

2024-25 ம் ஆண்டில் பயன் பெற்ற குழந்தைகள் எண்ணிக்கை 40,44,689. 

ஆனால்

செலவழிக்கப்பட்டதாக சொல்லப்படும் தொகை 1,626.08 கோடி ரூபாய்.

1,76,568 குழந்தைகள் குறைந்துள்ளனர்.

ஆனால் செலவு மட்டும் 590.26 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

விலைவாசி உயர்வு என்று காரணம் சொல்கிறார்கள்.  

என்னத்தான் விலைவாசி உயர்வு என்றாலும் குறைந்த குழந்தைகள் எண்ணிக்கை அதை ஈடு செய்து விடும்.

மாறாக உயர்கிறது என்றால் 

அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான்.

ஊழல்.

குழந்தைகளின் உணவைச் சொல்லி கொள்ளையடிப்பதுதான்  குஜராத் மாடல்.

இதிலே கவலையளிக்கிற ஒரு தகவலும் இருக்கிறது. காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகள் குறைகிறது என்பது பள்ளி செல்லும் குழந்தைகள் எண்ணிக்கை குறைகிறது என்பதன் அடையாளமும் கூட. 

இப்படிப்பட்ட மோசமான குஜராத் மாடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டுமா மிஸ்டர் எடப்பாடி?


சபாஷ் விஜய், சரியான வேட்பாளர்

 


விஜய்க்கு பாராட்டுக்கள். மிகச் சிறப்பான வேட்பாளரை சென்னை துறைமுகம் தொகுதியில் நிறுத்தியுள்ளார்.

அப்படியென்ன சிறப்பு?

நீங்களே காணொளியை பாருங்கள்.



மக்கள் இவரையெல்லாம் தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பினால் டாஸ்மாக் பார் காட்சிகளை சட்ட சபையிலேயே அன்றாடம் பார்க்கலாம்.

பிகு: மற்ற கட்சி வேட்பாளர்கள் மிகவும் யோக்கியமா என்றெல்லாம் யாரும் அனாமதேயமாக வந்து பின்னூட்டமிட வேண்டும். இது போன்ற மோசமானவர்கள், கம்யூனிஸ்டு கட்சிகளைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளிலும் இருக்கிறார்கள். (தவறிழைப்பவர்களை கம்யூனிஸ்ட் கட்சிகள் நடவடிக்கை எடுத்து நீக்கி விடும்) ஆனால் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ்வளவு மோசமாக யாரும் நடந்து கொண்டதில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் கௌதம் கம்பீர் கூட ஒரு டூப்பைத்தான் தனக்கு பதிலாக ஜீப்பில் நிற்க வைத்தாரே தவிர, வழக்கமான மோசமான மிரட்டல் மொழியில் பேசவில்லை.

Sunday, April 19, 2026

மகளிர் மசோதா-சரியாகத்தான் சொன்னார் பேரா.காதர் மைதீன்

 


மகளிர் இட ஒதுக்கீட்டை அமலாக்காமல் திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் தடுத்து பாவம் செய்து விட்டார்கள் என்று பொய்யாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

மகளிர் மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளிக்கச் சொல்லி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கச் சொல்லி எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அறைகூவல் கொடுத்தது. (மகளிர் மசோதாவிற்காக எங்கள் சங்கம் நடத்திய இயக்கங்கள் பற்றி மட்டுமே தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். ஒரு நூலுக்காக தொகுத்தது உள்ளது. அதனால் பகிர்வது சுலபம்)

வேலூர் எம்.பி யாக இருந்த முஸ்லீம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் அவர்களை சந்தித்தோம்.



அப்போது அவர் ஒரு விஷயத்தை தெளிவாகச் சொன்னார்.

காங்கிரஸ், பிஜேபி என்றெல்லாம் இல்லை, எல்லா கட்சிகளிலும் உள்ள ஆண் எம்.பி க்கள் மகளிருக்கான இட ஒதுக்கீடு வருவதை அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுடைய தொகுதி பெண்களுக்கான தொகுதியாக மாறினால் அவர்களின் அரசியல் முடிந்து போகும் என்ற அச்சம் உள்ளது. எல்லாராலும் லாலு தன் மனைவியை முதல்வராக்கியது போல மனைவியை எம்.பி யாக்க முடியாதல்லவா! அதனால் வாய்ப்பு குறைவுதான் என்று சொன்னவர் இன்னொரு ஆலோசனையையும் சொன்னார்.

டி.கே.ரங்கராஜன் என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜ்யசபையில் இருக்கிறார். அவரை பாருங்கள். அந்த கட்சி வேண்டுமானால் இதற்காக குரல் கொடுப்பார்கள் என்பதுதான் அவர் ஆலோசனை.

மோடிக்கும் அமித்ஷாவிற்கும் எதிர்க்கட்சிகள் பேசினால் முகத்தை கடுப்பாகவே வைத்துக் கொள்ளும் சபாநாயகர் ஓம் பிர்லா, ஆவேசமாக பேசிய பிஞ்சிலே வெம்பிப் போன தேஜஸ்வி சூர்யா ஆகியோருக்கு மகளிர் இட ஒதுக்கீட்டில் ஆர்வம் இருந்தால் இப்போதுள்ள 543 என்ற உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப 33 % இட ஒதுக்கீட்டை அளிக்கலாமே! 

திமுக எம்.பி வில்சன் தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளாரே, அதை பாஜக ஆதரிக்கலாமே!

செய்வார்களா?

பிகு: இந்த பதிவிற்கு தொடர்பில்லையென்றாலும் இன்றுள்ள சூழலில் இதனையும் பதிவு செய்வது மிகவும் அவசியம்.

நாங்கள் திரு காதர் மைதீன் அவர்களை சந்திக்க சென்ற போது அவர் வாசித்துக் கொண்டிருந்தது "திருவாசகம்" 

அவர் மேஜையில் இருந்த இன்னொரு நூல் "நாலாயிர திவ்விய பிரப்பந்தம்" 


Saturday, April 18, 2026

மோடியே ......................என்று சொல் ஆட்டுக்காரா

 


ஆட்டுக்காரன் விடுத்திருந்த இந்த வீர தீர சவாலை இப்போதுதான் பார்த்தேன்.


இந்த ராசியில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. மோடி துவக்கி வைக்கும் திட்டங்களில் எல்லாம் சொதப்பல் ஏற்படுவதால் சிலர் அவரை  பீடை, அவருடைய ராசியால்தான் பாலம் இடிகிறது, ரோடு பிளக்கிறது, வந்தே பாரத் விபத்துக்குள்ளாகிறது என்று  திட்டுவார்கள். அது மோடி பீடை என்பதால் அல்ல, மோடிக்காக காண்பிக்கிற அவசரத்தின் விளைவு, அதனால் செய்யப்படும் தரமற்ற கட்டுமானம், ஊழல் என்று சொல்வேன்.

ஆனால் ஆட்டுக்காரனின் ராசி மீது நம்பிக்கை வைக்கலமா என்று தோன்றுகிறது.

மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள கமா, புள்ளி யைக் கூட மாற்ற முடியாது என்று சொன்ன மறு நாளே, அவற்றை மோடி திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்.

அடுத்த படியாக அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் நான் தலைவர் பதவியிலிருந்து செல்ல மாட்டேன் என்றார். ஆனால் அவரால் தற்குறி என்று திட்டப்பட்ட எடப்பாடியின் நிபந்தனைக்காக ஆட்டுக்காரனின் மாநிலத் தலைவர் பதவி மட்டும் பறி போகவில்லை, எம்.எல்.ஏ சீட் கூட கொடுக்கப்படவில்லை.

இப்போ லேட்டஸ்டாக தொகுதி மறு சீரமைப்பு சட்டத்தை யார் நினைத்தாலும் நிறுத்த முடியாது என்று சொல்ல அந்த மசோதா பரிதாபமாக தோற்றுப் போய் விட்டது.

செந்தில் ஊளையிடுவதை பார்த்து விட்டு போனால் வடக்குப்பட்டி ராமசாமி வாங்கிய கடனை வசூலித்து விடலாம் என்று நம்பிப் போன கவுண்டமணியின் நிலைமையில் உள்ளது பாஜக.

அதனால் ஆட்டுக்காரன் அவர்களே,

மோடிதான் எங்கள் நிரந்தரப் பிரதமர் என்று சொல்லுங்களேன்.

துரத்தி விடப்பட்ட நிதீஷ்குமார் ஏதாவது செய்கிறாரா என்று பார்ப்போம். 

76 லட்ச ரூபாய் தாமோதர்தாஸ் சொத்தா மோடி?

 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒன்றிய அரசு 76 லட்ச ரூபாய் அளவில் விளம்பரங்கள் கொடுத்துள்ளது என்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.


ஏன் மிஸ்டர் மோடி,

ஆர்.எஸ்.எஸ் ஒரு பதிவு செய்யப்படாத அமைப்பு.

இரண்டு முறை தடை செய்யப்பட்ட அமைப்பு.

இந்தியாவிலேயே அதிகமாக வெளிநாட்டு நிதி பெறும் அமைப்பு.

பில்லா, ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் குரு பீடமாக ஆர்.எஸ்.எஸ் இருக்கலாம். ஆனால் அதற்காக அரசு பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்க வேண்டிய அவசியம் என்ன?

தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக முதலாளிகளிடமிருந்து மிரட்டி கொள்ளையடித்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!

பி.எம். கேர்ஸ் என்ற பெயரில் மக்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏமாற்றி சேர்த்து வைத்த பணம் உள்ளதே, அதிலிருந்து கொடுத்திருக்கலாமே!

ஒரு வேளை நீங்கள் கொடுத்த அந்த 76 லட்ச ரூபாய், உங்கள் அப்பா தாமோதர் தாஸ் சம்பாதித்த சொத்துக்களிலிருந்து கொடுத்ததா?

Friday, April 17, 2026

சதி தோற்றது -சுடச்சுட செய்தி சு.வெ யிடமிருந்து

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன், மக்களவையிலிருந்து பகிர்ந்து கொண்ட செய்தி.

இந்திய ஜனநாயகத்திற்கும், தென்னிந்திய மாநில நலன்களுக்கும், தமிழ் நாட்டின் உரிமைக்கும் பா.ஜ.க. உண்டாக்கிய அச்சுறுத்தலை நாடாளுமன்றத்தில் வீழ்த்தினோம்.

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை தற்போது இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையிலேயே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்திகிறோம்.

மகளிர் மசோதாவை கெடுத்து விட்டார்கள் என்ற அவதூறை பரப்புவார்கள். அதனையும் முறியடிப்போம்.

எடப்பாடி இழிவுபடுத்தப்படாமல் தடுத்திடுவோம்.


 மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்க்க சிவசேனை கட்சியை உடைக்க ஏக்நாத் ஷிண்டேவை தூண்டி அதற்கான ஊக்கப் பரிசாக அவரை முதலமைச்சராக்கியது.

சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகி ஷிண்டேவை துணை முதல்வராக்கி விட்டார்கள்.

பீகாரில் ஐக்கிய ஜனதாதள் கட்சியின் நிதீஷ்குமாரைத்தான் முதலமைச்சராக்கினார்கள். இப்போது அவரை மாநிலங்களவைக்குத் துரத்தி விட்டு பாஜகவின் கல்வித்தகுதி மோசடி சாம்ராட் சவுத்ரியை முதல்வராக்கி விட்டார்கள்.

நாளை அதிமுக வென்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானால் கூட பின்பு அவரை கழற்றி விட்டு தமிழிசையையோ, ஆட்டுக்காரனையோ, எச்.ராசாவையோ ஏன் கே.டி.ராகவனையோ கூட பாஜக முதல்வராக்கி விட்டு எடப்பாடியை துணை முதல்வராக்கி விடுவார்கள்.

அப்படிப்பட்ட இழி நிலை எடப்பாடிக்கு வரலாமா?

அதை நாம் அனுமதிக்கலாமா?

அதனால்

இப்போதே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (அதிமுக கூட்டணி என்று எடப்பாடிதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபாலகிருஷ்ணன் கிடையாது சப்பாணிதான் என்று பாஜக என்.டி.ஏ என்றே சொல்கிறார்கள்) முற்றிலுமாக தோற்கடிக்க வேண்டும். 

நிர்மலா அம்மையாரின் கணவர் பரகால பிரபாகர் "ஜீரோ பாஜக" என்றொரு முழக்கத்தை கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது 

ஜீரோ என்.டி.ஏ, ஜீரோ பாஜக, ஜீரோ அதிமுக, ஜீரோ பாமக, ஜீரோ தவெக

என்றே அமைய வேண்டும்.

தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்திடுவோம்.