Wednesday, January 14, 2026

குன்றம் எங்கள் நிலமடா, சுவாசமடா

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளரும் சிறந்த ஓவியக் கலைஞருமான தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். 

அவசியம் முழுமையாக படியுங்கள். திருப்பரங்குன்றம் இன்னொரு அயோத்தியாகும் என்ற சங்கிகளின் சதி  நிச்சயம் பொய்த்துப் போகும். . .




மலையும் மலைசார்ந்த வாழ்வும்

_______________________________
திருப்பரங்குன்றம் மலை எங்கள் இன்னொரு தாய்மடி. ஒருபுறம், இரண்டு மூன்று மண் குவியல்களை முன்னும் பின்னுமாகக் கொட்டி வைத்தது போன்ற தோற்றப் பொலிவுடனும் மறுபுறம், ஒரு யானை காலை மடக்கி படுத்திருப்பது போன்ற கம்பீரத்துடனும் காட்சியளிக்கும் எங்கள் மலை, எம் குன்றத்து மக்களின் அரணாகவும் இருக்கும் அழகு யாருக்கும் வாய்க்காது. இயற்கை வளத்துடன் சுதந்திரமான, எவ்வித இடையூறும் இல்லாத எங்கள் மலை எப்போதும், எல்லோரையும் அணைத்துக்கொள்ளும் துடிப்புடனே சிலகாலம் முன்புவரை இருந்திருக்கிறது.
அது ஒரு காலம்...
மலையேறுவது என்று முடிவு செய்துவிட்டால் நேரம் காலமெல்லாம் பார்க்காமல் குபீரென கிளம்பிவிடுவோம். பெரும்பாலும் பத்துப் பன்னிரண்டு பேருக்கு குறையாமலும், இரவாகவும் அது இருக்கும். சிறு தீனிகள், தண்ணீர் கேன்களுடன் இரவு பத்து மணிக்கு மலையேறினால், இறங்கி வரும்போது பழனியாண்டவர் கோவில் தெருவின் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள்!
நாங்கள் மலையேறும்போது இரவு நேர ரோந்துப் பணியில் இருக்கும் காவல்துறை நண்பர்கள் பார்த்துவிட்டால், சில நிமிடங்கள் நின்று எங்களைப் பார்த்துவிட்டு, "ஓ. நீங்களா... உங்களுக்கொல்லாம் தூக்கமே வராதா?" என்று சொல்லி சிரித்தபடி கிளம்பிவிடுவார்கள். தமிழகத்தின் கலை இலக்கிய ஆளுமைகள் பலரும் எங்களோடு மலையேறிய ஏகாந்தமான நாட்களை எண்ணிப்பார்க்கிறேன்... கலை இலக்கியம் அரசியல், பாடல்கள், கதைகள், கவிதைகள் என நீளும் பொழுதுகளில் குன்றத்து மலையே எங்களுடன் அமர்ந்து கூடிக்களித்திருப்பது போன்ற உணர்வுகளுடனேயே விடிகாலை பிரியா விடைகொடுத்து கீழிறங்குவோம். அதிலும், பௌர்ணமி நாட்களில் மிளிரும் மலையின் அழகை நடந்துணர்வதற்காகவே மலைமுழுவதும் அலைந்து திரிவோம். அப்படி ஒருநாள், யார் கண்ணிலும் படாத அழகிய குளம் ஒன்றுக்கு 'சாகுந்தலா குளம்' என்று சு.வெங்கடேசன் பெயர் சூட்டியதும், மற்றொரு நாள் மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 'இனியவை நாற்பது' போல், 'நிலா நாற்பது' படைக்கப் போவதாக மலையின் மெலமர்ந்து அறிவித்ததும் பசுமையாக நினைவிலிருக்கிறது.
சிலநேரங்களில் படிகளின் வழியே மலை ஏறாமல், பழனியாட்டவர் கோவில் பின்புறமுள்ள சரிவான நீள் பாறை வழியாக உச்சிப்பிள்ளையார் கோவில் சென்று, அங்கிருந்து செங்குத்தாக உள்ள பாறையில் இறங்கி நெல்லித் தோப்பை அடைவோம். அங்குள்ள சுமார் பத்தடி உயரத்தில் வெட்டிப் பிளந்ததுபோல் சிறிது சாய்வாகவும் செங்குத்தாகவும் உள்ள ஒற்றைப் பாறையில், 20 30 அடிகள் பின்னால் போய் ஓடிவந்து ஏறி திறமையைக் காட்டுவோம். (அது அவ்வளவு எளிதானதல்ல. பல முறை உச்சிக்குப் போகாமல் பின்னோக்கி சரிந்தபடியே கீழே வந்து விழுவோம்) பிறகு மறுபடியும் படிகளைப் பயன்படுத்தாமல் பாறைகள் வழியாகவே, காசிவிஸ்வநாதர் கோயில், அங்கிருந்தபடியே பின்புற பாறை வழியாக சிக்கந்தர் தர்கா, அங்கிருந்து இறங்கி, தூண் இருக்கும் பாறை, ஒற்றை மரம் என மலை முழுவதும் அரட்டையடித்துவிட்டு கீழிறங்கவும் பொழுது விடியவும் சரியாக இருக்கும்.
காசிவிஸ்நாதர் ஆலயத்திற்கு முன்னதாக நீள்வெட்டுத் தோற்றத்திலும், ஆலயத்திற்கு உள்ளே குளம்போலவும் தேங்கி இருக்கும் சுனைநீரை லட்சுமி தீர்த்தமென அங்கு வருபவர்கள் அள்ளிப் பருகுவார்கள். சிக்கந்தர் அவுலியா தர்காவிற்கும் அதிலிருந்து குடத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வார்கள்.
காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்குச் செல்லும் பாதையின் விளிம்பு செங்குத்தாக இருப்பதால் (யாராவது தவறி விழுந்தால் உடலைத் தேடித்தான் எடுக்கவேண்டும். பல தற்கொலைகளும்கூட அங்கு நடந்திருக்கிறது.) பக்தர்கள், பயணிகளின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் கட்டும் பணி நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது நடைபெற்றது.
ஒன்று முதல் ஐந்துவரை பெரியரத வீதியில் இருந்த கோட்டைப் பள்ளியில் நான் படித்தபோது, (இப்போது அந்தப்பள்ளி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகில் உள்ளது) இட நெருக்கடியால் இரண்டாம் வகுப்பு மட்டும் பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள மலையேறும் படிகட்டு அருகில், சாவடியில் நடக்கும். அப்போது அந்தப்பணி நடைபெற்றபோது, கட்டுமானப் பணிகளுக்கு பொருட்களை கொண்டுசெல்ல படிகளைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். சும்மா நடந்தாலே மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி, இளைப்பாறியபடிதான் செல்லவேண்டிய நிலையில் சிமெண்ட், மணல், உடைகற்களைக் கொண்டு செல்வது அவ்வளவு எளிதானதல்ல, ஆட்கள் கிடைப்பதும் கடினம்.
இந்தச் சூழலில்தான். சாவடிக்கு (பள்ளி) முன்னால் குவிக்கப்பட்ட உடைகற்களை யார் வேண்டுமானாலும் எடுத்துச் சென்று கூலியை பெற்றுக் கொள்ளலாம். எட்டு வயதில் என் வகுப்பு நண்பர்களுடன் அந்த கற்களை நான் சுமந்திருக்கிறேன். (ஒரு கல்லுக்கு 5 பைசா என்று நினைவு.) ஒரு கல்லை சுமந்து செல்வதற்குள் முழி பிதுங்கிவிடும். இதில் ஆச்சரியம் என்னவென்றால். தர்காவுக்கு பிரியாணி அண்டா மற்றும் அங்குள்ள கடைக்கு சோடா, கலர் பெட்டிகளை தலையில் சும்மாடு கூட்டி பாய்மார்கள் அசால்ட்டாக கொண்டுசெல்வார்கள்.
பிறந்ததிலிருந்தே எனக்கும், தெருப் பசங்களுக்கும் உடன் பிறந்தது மலையேறுவதும், மலையில் சுற்றித்திரிவதும்.
"டேய் இங்க பார்ரா, எவனோ பாய் தலவாணி விரிச்ச மாரி வருசயா பளபளன்னு செதுக்கி வச்சிருக்கான்" என்றுதான் அறிமுகமாகியது, கால் முளைத்து நாங்கள் முதன் முறையாக மலையேறிய போது 'சமணப் படுகைகள்'. சமணர்கள் பள்ளிகொண்ட படுகைகள் தாங்கிய குகையுடன் இருக்கும் மலையடிவாரம்தான் எங்கள் வீடும், தெருவும். வீட்டின் பக்கவாட்டு சந்துக்குள் புகுந்து கிடுகிடுவென ஏறினால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் படுகையில் இருப்போம். படியேறி இறங்குவதெல்லாம் (அதற்கும் தனியே படிகள் உள்ளன) கெளரவக் குறைச்சல் என்பது, படிக்கிற காலத்தில் எங்கள் எண்ணம். தேர்வுக்குப் படிக்க நாங்கள் தேர்வு செய்யும் இடம் சமணப் படுகை.
குறுக்கு வாக்கில் நீளமாக மலையை வெட்டிப் பிளந்தது போன்ற அந்தக் குகையின் படுகைக்கு உள்ளேயுள்ள துளையில் சிரமப்பட்டு நுழைந்து அருகில் உள்ள மறு துளை வழியாக வெளியேறும் போது திகிலாக இருக்கும். ஆனால், அது எங்களுக்கு விளையாட மட்டும்தான். படிப்பதற்கென்று நாங்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு இடம் உண்டு. படுகைக் குகையின் பக்கவாட்டில் சிறிது இடறினாலும் கீழே உருளக் கூடிய பாதையில் மலையை உரசிக் கொண்டே நகர்ந்து சென்றால், ஒரு ஐந்து பேர் மட்டுமே உட்காரக்கூடிய - துப்பாக்கியால் துளைத்தது போன்ற - அந்த குகையில் ஆட்டுப் புழுக்கைகளைத் தட்டிவிட்டுப் அமர்ந்து படிப்போம். அந்தக் குகையின் அருகில் மேலும் சில சிறு சிறு பொந்துகள் இருக்கின்றன. ஆந்தைகள் அடையும் அதற்குள் ஒருமுறையாவது நுழைந்துபார்த்துவிட வேண்டும் என்பதை ஆசைப்படத்தான் முடியும். நிஜத்தில் நடக்காது. அது ஆந்தைகளின் வசிப்பிடம் என்பதுகூட எனது பெரியம்மா சொல்லித்தான் தெரியும். மலையின் வெக்கை வீசும் வீட்டு வாசலில் இரவுகளில் படுக்கும் பெரும்பாலான தெரு மக்களில் நானும் ஒருவன். அப்படிப் படுத்திருக்கும்போது நள்ளிரவு நேரத்தில் பலமுறை "ஏய்... ஏய்" என்று அடித் தொண்டையில் யாரோ ரகசியமாய் கூப்பிடுவது போன்ற ஓசையைக் கேட்டு பயந்து தூங்காமல் இருந்திருக்கிறேன். ஒருநாள் என் பெரியம்மாவிடம், "எம்மா, மலையில் பேய் இருக்கா" என்றேன். அதற்கு பெரியம்மா, "எந்த கீர முண்டடா சொன்னது" என்றது. "இல்ல ராத்திரி அங்கருத்து ஏய், ஏய்னு கூப்புடுது" என்று மலையில் உள்ள துளைகளைக் காட்டி நான் சொன்னவுடன் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, "அட அறுதப் பயலே அது ஆந்த மூச்சு விடுற சத்தம்டா" என்று சொன்ன பிறகுதான் இரவுகளில் நிம்மதியாக தூக்கம் வந்தது. அதன் பிறகு அ(ஆ}ந்த ஓசையை ரசிக்க ஆரம்பித்தேன்.
எங்கள் வீட்டிற்கு நேர் மேலே உள்ள சமணக் குகைகளும் (அதற்கு பஞ்சபாண்டவர் குகை என்று கதை கட்டியவன் எவன் என்று தெரிவில்லை.) கிழக்கே சற்று தள்ளி உள்ள உச்சிப்பிள்ளையார், காசி விஸ்வநாதர் ஆலயங்களும், மலை உச்சியில் உள்ள தர்காவும், தெற்கே அடிவாரத்தில் உள்ள ஊமையாண்டவர் கோயிலும் (கல்வெட்டுக் குகைக் கோயில்) ஏழு கன்னிமார்கள், கருப்பசாமி, உள்ளிட்ட குலதெய்வங்களும், குன்றத்து மலைக்கு எதிரில் உள்ள கூடதட்டி மலையில் உள்ள கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் போன்ற சித்தர்கள் ஜீவசமாதிகளுமாய் பலரும் வந்துசெல்லும் நந்தவனமான இருந்த குன்றம் இப்போது மதவெறி குரங்குகள் கையில் கிடைத்த பூமாலையாக சிக்கியிருக்கிறது.
பறவைகளின் வேடந்தாங்கலாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இந்து மக்களும் முஸ்லீம் மக்களும் சுதந்திரமாக வந்து சென்ற குன்றத்து மலை இப்போது உள்ளூர் மக்களுக்கே அந்நியப்பட்டு கிடக்கிறது. இரவிலும் காவல்துறையினர் சிரித்து மலைக்கு வழியனுப்பிய காலம்போய், பகலிலேயே ஆதார் கார்டு ஆதாரம் கேட்கும் குரூரம் அரங்கேறுகிறது. மதவெறியர்களின் பக்க வாத்தியங்களாகவும், ஊதுகுழலாகவும் உள்ளூர் காவல்துறையும், உயர்நீதிமன்றமும் மாறியிருக்கிறது. பக்தர்கள் எப்போதும் போல் தங்கள் வழிபாட்டை தொடரும்போது, பக்தியை வைத்து அரசியல் செய்யும் சங்கிப் பதர்கள் குன்றத்து அமைதியைக் குலைப்பதற்கு நாள்தோறும் வந்து குரைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் நம்பிக்கையிருக்கிறது...
சரவணப் பொய்கையில் நீராடி, முருகனின் திருநீரணிந்து, உச்சிப்பிள்ளையாருக்கு தீபம் ஏற்றி, காசிவிஸ்வநாதரை வணங்கிய கையோடு சிக்கந்தரிடமும் மந்திரித்துக்கொள்ளும் எம் குன்றத்து மக்கள் இந்தப் பிணைப்பில் நெருப்பள்ளி போடுபவர்களின் ஈனப் பிழைப்பில் நிச்சயம் மண்ணள்ளிப் போடுவார்கள்.
- வெண்புறா

தளபதிக்கே ஓட்டு கிடையாதா?

 


மேலே உள்ளது அமைதிப்படை படத்தில் வரும் ஒரு காட்சி. தன் மனைவியை அமாவாசை கொல்லச் சொல்லும் போது மணிவண்ணன் பேசும் வசனம் இது.

இன்றைக்கு யார் அது போல ஓவராக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தனியாக சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

கீழேயுள்ள படத்தை பாருங்கள்.



மேலேயுள்ள படத்தில் இருப்பவர் அட்மிரல் அருண் பிரகாஷ். இந்திய கப்பற்படையின் தளபதியாக 31.07.2004 முதல் 31.10.2006 வரை செயல்பட்டுள்ளார். இவரது மொத்த பணிக்காலம் நாற்பது ஆண்டுகள். எழுபதுகளில் நடந்த இந்திய பாகிஸ்தான் போரில் நேரடியாக களத்தில் இருந்துள்ளர். அதற்காக கொடுக்கப்பட்டதுதான் "வீர் சக்ரா பதக்கம்"

அவர் பெற்ற பதக்கங்களின் விபரம் கீழே உள்ளது. 



இப்போது எதற்கு அந்த வயதான அதிகாரி பற்றி எழுதுகிறீர்கள் என்று கேட்கிறீர்களா?

பணி ஓய்வுக்குப் பிறகு அவரும் அவரது மனைவியும் கோவாவில் வசித்து வருகிறார்கள். 

ஒரு பொறுப்பான குடிமகனாக SIR க்கான படிவத்தை உரிய நேரத்தில் நிரப்பிக் கொடுத்துள்ளார்.

அவருக்கு தேர்தல் ஆணையத்திலிருந்து கடிதம் வந்துள்ளது.

என்னவென்று?

அவரும் அவரது மனைவியும் இந்திய குடிமக்கள் என்று நிரூபிப்பதற்கான ஆவணங்களோடு 18 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு வருமாறு அந்த கடிதம் சொன்னது.

இது ஏதோ ஒரு சின்ன கோளாறு. அதற்காக மோடியை அமாவாசை என்ற ரேஞ்சிற்கு  பேச வேண்டுமா என்றுதானே யோசிக்கிறீர்கள் ! 

இந்த பிரச்சினை என்றில்லை, எப்போதுமே மோடி அமாவாசைதான். அது வேறு விஷயம்.

கப்பற்படை தளபதியாக இருந்தவருக்கு வேண்டுமென்றே வாக்குரிமையை மறுப்பதாக குற்றம் சாட்டுகிறீர்களா?

ஆமாம்.

ஏன்? அதற்கென்ன அவசியம்?

ராணுவத்தில் பணி நியமன முறையை மாற்றி ராணுவ வீரர்களை ஒப்பந்தக் கூலிகளாக மாற்றும் அக்னிபாத் முறையை திரு அருண்பிரகாஷ் கடுமையாக கண்டித்துள்ளார். ராணுவத்தை பலவீனப்படுத்தி விடும் என்று எச்சரித்தார்.

இது போதாதா மோடிக்கு?

கப்பற்படை தளபதியாக இருந்தாலும் அரசின் மூடத்தனத்தை சாடினால் அவர்களது குடியுரிமையை கேள்விக்குறியாக்கி விடுவார்கள். 

கேடு கெட்ட ஆட்சி இது. 


Tuesday, January 13, 2026

சங்கிக்கரடியே காரி உமிழுதே ஆட்டுக்காரா

 


ஊடகங்களாலும் தமிழ்நாட்டு அடி முட்டாள், அயோக்கிய சங்கிகளாலும் ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பமான ஆட்டுக்கார அண்ணாமலை ஒரு வெத்து வேட்டு, ஏதுமறியா மூடன், அறிவிலி, ஊழல் பேர்வழி, சுயநல ஜந்து என்று பல வருடங்களாக நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். காலமும் அதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளது.

இப்போது ஆட்டுக்காரனையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு மதிக்காதீர்கள் என்று மகாராஷ்டிர மாநில பெரிய சங்கி பட்னாவிஸ் சொல்லியுள்ளார்.



பாஜகவின் சூழ்ச்சிகளால் துவண்டு போயிருந்த சிவசேனை கட்சிக்கு ஊக்க மருந்து கொடுத்துள்ளான் ஆட்டுக்காரன்.

மேலும்

ஆட்டுக்காரன் பேசியதற்கான எதிர்வினை தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் முடியும் என்பதுதான் கவலைக்குரியது. 

உள்ளூரிலேயே விலை போகாத சரக்கை மும்பைக்கு கூட்டி வந்த முட்டாள்கள் மஹாராஷ்டிர பாஜகவினர். அதற்கான விலையை மும்பை மாநகராட்சி தேர்தலில் கொடுப்பார்கள். 


35 லட்சம் அளித்தோருக்கு மனமார்ந்த நன்றி



வலைப்பக்கத்தின் பார்வைகள் (HITS)  எண்ணிக்கை நேற்று இரவு 35 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது.

 2009 ம் தொடங்கியது இந்த பக்கம். அந்த ஆண்டு இரண்டே பதிவுகள். அதற்கு பிறகு இந்த பக்கம் தலை வைத்தே படுக்கவில்லை. 2010 மத்தியில் ஒரு விபத்து. முழங்கால் ஜவ்வு கிழிந்து நாற்பத்தி ஐந்து நாட்கள் விடுமுறையில் இருந்த போது வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கினேன். 2011 முதல் அதில் தீவிரம் காண்பிக்க வரவேற்பும் கிடைத்தது, தமிழ்மணம் திரட்டி செயல்பட்டு வந்த காலம். அதில் முதல் இருபது வலைப்பக்கங்களுக்குள் விரைவிலேயே இடம் பிடிக்க வலைப்பக்கத்தில் எழுதுவது என்பது அன்றாட செயல்பாடாக மாறியது.

 ஜூனியர் விகடன் கொடுத்த அறிமுகம், ச்ச்சினுக்கு கொடுத்த பாரத ரத்னா பற்றிய பதிவை குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் பிரசுரித்தது ஆகியவை எல்லாம் உற்சாகமளித்த விஷயங்கள்.

 ஆயிரமாவது பதிவை எழுதிய போது அன்றைய தென் மண்டலப் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் கே.சுவாமிநாதன், நான் ஆயிரம் பதிவுகள் எழுதியதை தமிழ்நாடு முழுதும் எடுத்துச் சென்றார்.

 “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று பகவத்கீதை சொல்வது இன்று எதற்கும் பொருந்தாது. வலைப்பக்கம் எழுதுவதற்கும். யாருமே இல்லாத கடையில் டீ ஆற்ற முடியாதல்லவா? பார்வைகள் இல்லாவிட்டால் எழுதுவதற்கு எங்கே வேகம் வரும்! அந்த வித்த்தில் நான் பாக்கியவான். தொடர்ந்து பார்வைகள் வந்து கொண்டிருப்பதால்தான் தொடர்ந்து எழுதவும் முடிகிறது.

 அலுவலகத்தில் கற்றுக் கொண்ட எக்ஸல் அறிவை பதிவுகள், பார்வைகளை ஆவணப் படுத்தவும் பயன்படுத்திக் கொண்டேன். அதனால்தான் ஒவ்வொரு ஐந்து லட்சம் பார்வைகளையும் எப்போது அடைந்தேன் என்ற விபரம் உள்ளது.

நாள்

பார்வைகள்

மாதங்கள்

09.09.2013

2     லட்சம்

52

16.04.2015

5     லட்சம்

71

22.06.2017

10   லட்சம்

26

11.05.2019

15   லட்சம்

23

29.12.2020

20   லட்சம்

19

05.07.2022

25   லட்சம்

18

01.08.2024

30   லட்சம்

25

12.01.2026

35   லட்சம்

17

 

   

 

 

 

 

 

 

 



முதல் ஐந்து லட்சத்தை அடையத்தான் 71  மாதங்கள் ஆனது. அடுத்தடுத்த ஐந்து லட்சங்கள் விரைவிலேயே வந்து விட்டது.

 கடந்த வருடம் எழுதிய பதிவுகள் குறைவு. 395. ஆனால் பார்வைகள் கடந்த ஆண்டுதான் மிக அதிகம். 3,97,660. அதிலும் ஒரு பதிவு கூட எழுத இயலாத ஜுன் மாதத்தில்  மட்டும் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள்.

 நான் நம்புகிற கொள்கையின் அடிப்படையில்தான் என் அரசியல் பதிவுகள் அமைந்திருக்கும். அதில் எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. அரசியலைத் தாண்டி நூல் அறிமுகம், சமையல் குறிப்பு, திரை விமர்சனம், பயண அனுபவம், போராட்ட அனுபவம் என்று எழுதி வருகிறேன்.

 எழுதுவதற்கு விஷயம் இல்லாமல் திணறிப் போகும் நிலையை நம் இந்திய அரசியல்வாதிகள் என்றைக்கும் உருவாக்கியதில்லை. எழுத நேரமில்லாத நிலைதான் ஏற்பட்டுள்ளது.

 தொடர்ந்து வலைப்பக்கத்திற்கு வந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். உங்களின் வருகையே என்னை உற்சாகப்படுத்துகிறது. மேலும் மேலும் எழுத வைக்கிறது. மனதிலும் கைகளிலும் தெம்பு இருக்கும்வரை தொடர்ந்து எழுதுவேன், எழுதிக் கொண்டே இருப்பேன், உங்களின் ஒத்துழைப்போடு . . .

Monday, January 12, 2026

அருவி மட்டும் உறையவில்லை . . .

 






மேலே உள்ள படங்கள் எல்லாம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ட்ராங் என்ற நீர் வீழ்ச்சி. அதீத குளிரில் அருவி அப்படியே உறைந்து போய் விட்டது. பனிக்கட்டியாய் காட்சி அளிக்கும் அருவியைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்களாம். இதுதான் செய்திகளில் சொல்லப்பட்டது.

சொல்லப்படாதது ஒன்று.

காஷ்மீர் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற சிந்தனை எழாத வண்ணம் ஆட்சியாளர்களின் மூளை வெறுப்பால் உறைந்து போய் இருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற வாக்குறுதி நினைவுக்கு வராத வண்னம் மத்தியரசு முற்றிலுமாக வன்மத்தால் உறைந்து போயுள்ளது.

காஷ்மீரின் அழகு கண்ணுக்குத் தெரிவது போல அதன் கண்ணீர் கண்ணுக்கு தெரியாதது பெருந்துயரம் . . .

புவனேஸ்வர் போனாலும் ....

 


காசிக்கு போனாலும் கர்மம் தொலையாது என்பார்கள். அது போல புவனேஸ்வர் போனாலும் தெரு நாய்களின் தொல்லை நீங்கவில்லை.


எங்கள் அகில இந்திய மாநாட்டிற்காக புவனேஸ்வர் சென்ற போது நாங்கள் KIIT என்ற பல்கலைக்கழகத்தின் விடுதிகளில் தங்க வைக்கப் பட்டிருந்தோம்.

நாங்கள் தங்கியிருந்த விடுதி தெருநாய்களின் சுதந்திரமான திரிதலுக்கு உரிமை கொடுக்கப்பட்ட இடம் போல.

விடுதியின் வாசலில் எவ்வளவு சொகுசாக அவை தூங்குகிறது பாருங்கள்.


அந்த விடுதியின் வார்டன் தெருநாய் புரவலர் போல. தூங்கிக் கொண்டிருக்கும் நாய்களை யாரும் எழுப்பக் கூடாது என்பதற்காக பிரதான கதவை பூட்டி விட்டு ஓரத்தில் இருந்த சின்ன கதவு வழியாக எங்களை போக வைத்தார்கள்.

இந்தியா முழுமைக்குமான பிரச்சினை இது. இந்தியாவில் வறுமையை ஒழிக்க முடிந்தாலும் தெருநாய்களை ஒழிக்க முடியாது போல . . 

பிகு: மேலே உள்ள படம் புவனேஸ்வரில் 01.01.2026 அன்று காலை 8.45 மணிக்கு எடுக்கப்பட்டது. அவ்வளவு மூடுபனி . . . .

Sunday, January 11, 2026

பராசக்தியால் பாஜகவிற்கு ஏன் பதற்றம்?

 


"பராசக்தி" நேற்று மதியக் காட்சி பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. விபத்திற்குப் பிறகு அரங்கில் சென்று பார்த்த முதல் படம். அதுவும் முதல் நாளில் . .  பாதுகாப்பாக உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று மகன் உறுதியளித்து அதன் படியே செய்தான்.

 படத்தைப் பற்றி விரிவாக எழுத வேண்டுமென்றால் சில விஷயங்களை தெளிவு படுத்திக் கொள்ள இன்னொரு முறை பார்க்க வேண்டும். பாகுபலி பல்வாள் தேவன் இப்படத்தில் நடித்துள்ளதே என் மகன் சொல்லித்தான் தெரிந்தது. அதனால் படம் பற்றி விரிவாக பின்பு எழுதுவேன்.

படத்தைப் பற்றி யாரெல்லாம் மோசமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். 

தவெக தற்குறிகளும் சங்கிகளும்.

ஜனநாயகனுடன் போட்டியிட தயாராக இருந்ததால் விஜய் ரசிகர்கள் எதிர்ப்பது இயல்பானது.

காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தால் அது நியாயமானது. 

ஆமாம். தமிழ்நாட்டின் மோசமான முதலமைச்சர் என்று பெயர் பெற்ற பக்தவத்சலத்தின் கொடூரத்தையும் இந்திரா காந்தியின் தந்திரத்தையும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத மண்ணாந்தைகளாக காங்கிரஸார் இருந்ததையும் (இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) படம் அம்பலப்படுத்துகிறது. 

தமிழ்நாட்டின் சசி தரூர் கதர் சங்கி மாணிக்கம் தாகூரைத் தவிர வேறு காங்கிரஸ் ஆட்கள் யாரும் எதிர்த்ததாக தெரியவில்லை. 

சங்கிகள் ஏன் எதிர்க்கிறார்கள்?

பராசக்தி சங்கிகளில் கருத்தியலான "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்" என்பதற்கு எதிரானது.

பாஜக அரசு இன்று செய்து கொண்டிருக்கிற இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானது.

இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பிடிப்பது சங்கிகளுக்கு எரிச்சலூட்டுகிறது.

இந்தி திணிப்பை  எதிராக தமிழர்கள் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, மராத்தி, கன்னடம், வங்க மொழி பேசுபவர்களும் எதிர்த்தார்கள் என்ற உண்மையை சொல்வதால் சங்கிகளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

சங்கிகள் ஒன்றை எதிர்த்தால் அதில் ஏதோ நல்லது இருக்கிறது என்று அர்த்தம். சங்கிகள் ஒன்றை அழிக்க நினைத்தால் அதை ஆதரிப்பது நம் கடமை. 

அதனால் 

பராசக்தி பார்ப்போம், 

அதுவும் திரை அரங்கில் பார்ப்போம்.