Sunday, May 3, 2026

அடுத்து என்ன, அதானே மோடி????


 ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்த பின்னர் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பரிசாகவும் வாக்களிக்காதவர்களுக்கு தண்டனையாகவும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை 993 ரூபாய் அளவிற்கு உயர்த்தி உள்ளது.

அதன் விளைவாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயரும். டீக்கடைகளும் வேறு வழியின்றி விலையை உயர்த்துவார்கள். அதனால் சில டீக்கடைகள் செயல்பட முடியாமல் மூடி விடுவார்கள். அந்த தொழிலை நம்பி பிழைப்பை நடத்துபவர்கள் நடுத்தெருவில் நிற்பார்கள்.

ஒரேயடியாக எல்லா பொருட்களின் விலையை உயர்த்தி விட்டால் மக்களுக்கு தாக்குதலின் தீவிரம் புரியாது என்பதற்காக முதலில் கமர்ஷியல் சிலிண்டரின் விலையை மட்டும் உயர்த்தி விட்டார்கள். தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பது போல அடுத்து பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயரும்.

அவற்றின் பாதிப்பு இன்னும் மோசமாக இருக்கும். பேருந்துக் கட்டணம் தொடங்கி லாரிக் கட்டண உயர்வால் சங்கிலி விளைவாக எண்ணற்ற பொருட்களின் விலைகளின் உயரும்.

விலையை உயர்த்துவதற்கு முன்பாக, என்ன விலை வேண்டுமானால் விற்கட்டும், கிடைத்தால் சரி என்ற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

மோடியின் முரட்டு பக்தர்கள் வாழும் மாநிலங்கள் போல தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல், தட்டுப்பாடு இல்லை. ஆனால் சிலிண்டர் வருவதற்கு கண்டிப்பாக தாமதம் ஆனது. வழக்கமாக பதிவு செய்த நாளிலேயோ அல்லது மறு நாளே வேலூரில் சிலிண்டர் வந்து விடும். இக்காலகட்டத்தில் பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் வந்தது.

கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாடு பல உணவகங்களை மூட வைத்தது. என் சொந்த அனுபவம் ஒன்றை சொல்ல வேண்டும். சமீபத்தில் வெளியூர் சென்ற போது இரவு உணவுக்காக ஒரு பிரபல உணவகத்திற்கு சென்ற போது இடம் கிடைக்கவே ஒரு மணி நேரம் ஆகும் என்றார்கள்.  வேறு சில உணவகங்கள், உள்ளே நுழையும் முன்னே நாங்கள் மூடி விட்டோம், இனி சேவை கிடையாது என்றார்கள். ஒரே ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்றால் சப்பாத்தி மட்டுமே இருப்பதாக சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அதையே கொண்டு வரச்சொன்னால் அது வரவும் 45 நிமிடங்கள் ஆனது. 
கமர்ஷியல் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஒரே ஒரு சிலிண்டரை வைத்து சமாளிப்பதால் தாமதமாகிறது என்றார்கள்.

இதனால் மக்கள் மத்தியில் விலை உயர்ந்தாலும் பரவாயில்லை. கிடைத்தாலே போதும் என்ற மன நிலை நிலவுகிறது. இல்லையில்லை. அப்படிப்பட்ட மன நிலைக்கு மக்களை தள்ளி விட்டார்கள்  மோடி வகையறாக்கள்.

இந்த விலை உயர்விற்கும் சங்கிகள் முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மூடர்களால்தான் மோடி பிரதமராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். 


Saturday, May 2, 2026

அந்த பேனர் தப்புதானே மோடி?

 


முக நூலில் பார்த்த படம் கீழே உள்ளது.



மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை தயாரிக்கும் குழு என்று நக்கலாக பேனரில் சொல்லப்பட்டுள்ளது.

அது தவறு.

"பெண்களின் காவலர்கள்" என்று பேனரில் எழுதியிருக்க வேண்டும்.

ஆமாம்.

அவர்கள் எல்லாம் யார் தெரியுமல்லவா?

நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள் இருவர் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் இஸ்ரேல் என்ன சொன்னாலும் அதை தட்டாமல் செய்து முடிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

நின்று கொண்டிருப்பவர்கள்.

ராம் ரஹீம் சிங் - இரண்டு பாலியல் வன் கொடுமை வழக்குகளுக்காக சிறையில் இருக்கும் சாமியார். மோடியின் அரசியல் தேவைகளுக்காக அவ்வப்போது பரோலில் வெளி வருபவர்.

ஆச்சாராம் பாபு - பாலியல் வன் கொடுமை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றவர். அவர் காலில் விழுந்து மோடி ஆசீர்வாதம் வாங்கியுள்ளார்.

மூன்றாவதாக நிற்பவர் உனாவ் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார். பாலியல் வன் கொடுமை செய்து நியாயம் கேட்ட தந்தையை கொன்று சாட்சி சொல்ல சென்றவர்களை விபத்து என்ற பெயரில் கொன்று இப்போது ஆயுள் தண்டனை பெற்றவர். மோடியும் மொட்டைச் சாமியாரும் அவரை பாதுகாக்க முயன்றார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

அடுத்து நிற்பவர் ஹர்தீப்சிங் பூரி, மத்திய அமைச்சர், எப்ஸ்டீனுடன் பழக்க வழக்கம் வைத்திருந்தவர்.

பூரிக்குப் பக்கத்தில் ப்ரஜ்வால் ரேவண்ணா, பாஜகவின் கூட்டாளியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர், முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரன், அவர் மீது பாலியல் வன் கொடுமை குற்றச்சாட்டுக்கள் கொடுத்தவர்கள் இது வரை வெறும் ஐம்பது பேர்தான். அவர் கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் மோடியோடு ஒரு போட்டோ ஷூட் செய்திருந்தார்.

ரேவண்ணாவின் பக்கத்தில் நிற்பது மோடியால் பாதுகாக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் சீண்டல் புகார் கொடுக்கப்பட்ட பிரஜ்பூஷண் சரண்சிங். இவருக்குப் பதிலாக இவர் மகனை எம்.பியாக்கி அழகு பார்த்தார் மோடி.

கடைசியாக நிற்பவர்தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன். உலகெங்கும் உள்ள சபலப் பேர்வழிகளுக்கு பிள்ளைக் கறி (விபரம் தெரியாதவர்கள் கமலஹாசன் நடித்த மகாநதி பார்க்கவும்) பரிமாறிய உத்தமன்.

இத்தனை அவதார புருஷர்களை வெறுமனே "மகளிர் மசோதா தயாரிக்கும் குழு"  என்று சுருக்கி விடலாமா?

"பெண் இனக் காவலர்கள்" என்று சொல்வதுதானே சரியாக இருக்கும் மோடி? 



2, மே, 1986/2025 -அனுபவப் பகிர்வு

 


மன்னிக்கவும். இந்த பதிவும் சொந்த அனுபவம், வசந்த அனுபவம் மற்றும் நொந்த அனுபவம்.

16.04.1986 அன்று பயிற்சி உதவியாளராக எல்.ஐ.சி யில் இணைந்தேன். 15 நாள் பயிற்சி வகுப்பு சென்னையில் நடந்து 30.04.1986 அன்று நெய்வேலி கிளையில் போய் வேலை பார் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

02.05.1986 அன்று பதற்றத்தோடு நெய்வேலி கிளை அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன். 

அன்று நாங்கள் ஒன்பது பேர் நெய்வேலியில் பணியில் இணைந்தோம். ஆனந்தன், பாஸ்கரன், ஜவஹர்,நரசிம்மன், ராமன், செல்வராஜ் என்று ஆறு ஆண் ஊழியர்களும் சித்ரா, நீலாயதாட்சி,உஷாராணி என்று மூன்று பெண் ஊழியர்களும் சேர்ந்தோம்.

ஒன்பது பேர் என்பதால் எங்களை நவ ரத்தினங்கள் என்று சொன்னவர்களும் உண்டு. நவக் கிரகங்கள் என்று கலாய்த்தோரும் உண்டு. 

அனைத்து ஊழியர்களோடும் அறிமுகம், கிளை பற்றிய விபரங்கள் பகிர்தல், தற்காலிகமாக என்ன பணி செய்வது என்று காலைப் பொழுது முடிந்தது. மதியத்திலிருந்தே வேலை தொடங்கி விட்டது. லெட்ஜர் போஸ்டிங் என்ற வேலைதான் முதலில் கொடுக்கப்பட்டது. பாலிசிதாரர் பிரிமியம் செலுத்திய ரசீதை அவருடைய லெட்ஜர் ஷீட்டில் குறிப்பது. கொஞ்சம் அலுப்பூட்டும் வேலைதான். பெரிய பெரிய லெட்ஜர்களை எடுப்பதில் கொஞ்சம் கை வலி கூட வரும். பிறகு நிரந்தரமாக அக்கவுண்ட்ஸ் பிரிவு தரப்பட்டது. ஐந்தாண்டுகள் அங்கேயேதான் இருந்தேன்.

மதிய வேளையில் புதிதாக சேர்ந்த ஆண் தோழர்களை அன்றைய முன்னணி சங்கப் பொறுப்பாளரும் பின்னாளில் எங்கள் கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளருமான தோழர் சுப்பராயன் அருகில் உள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்து அனைவரையும் இயல்பாக பழக வைத்தார்.

02.05.1986 அன்று நெய்வேலி அலுவலகத்திற்கு சென்ற போது விரைவில் சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்றோ அல்லது எல்.ஐ.சி முதல் நிலை அதிகாரிக்கான நேரடித் தேர்வில் வெற்றி பெற்றோ இந்த அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தேன்.

சங்கம் எனக்கு மாற்றுப் பாதையை காண்பித்தது.  மனதிற்கு மிகவும் பிடித்த பாதையாகவும் அமைந்திருந்தது. நெய்வேலி கிளையில் கிடைத்த அனுபவங்கள் பின்னாளில் கோட்டச்சங்கப் பணிகளை செய்வதற்கான அடித்தளமாக அமைந்திருந்தது. வாழ்வின் வசந்த காலத்திற்கான துவக்கப் பள்ளி 02.05.1986.

ஆனால்

02.05.2025????

முதல் நாள் மே தினம். அன்றைக்கு மே தினப் பொதுக்கூட்டத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் தோழர்கள் பேசினார்கள். நானும் அவர்களில் ஒருவன். எனக்கே என் உரை நிறைவாக இருந்தது. பல தோழர்கள் பாராட்டினார்கள். இரு சக்கர வாகனத்தை கிளப்பும் போது ஒரு போலீஸ்காரர் "நல்லா பேசினீங்க சார்" என்று கை கொடுத்தார். மறுநாள் காத்திருக்கும் அபாயம் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தேன்.

மறு நாள் அலுவலகம் செல்லும் வழியில் எப்போதும் போல நிதானமாக சாலையின் ஓரத்தில்தான் இரு சக்கரஃ வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாக பின்னே வந்து கொண்டிருந்த ஒரு வேன் மோதியது. சற்று சுதாரிப்பதற்கு முன்பாக இரண்டாவது முறையாகவும் மோத ஸ்கூட்டர் ஒரு புறம் கீழே விழ, நான் உருண்டு கொண்டும், சருக்கிக் கொண்டும் செல்கிறேன். நம் கதை இத்தோடு முடிந்தது என்று அந்த நொடியில் நினைத்தேன்.

இடது பக்கத்தில் உருண்டதற்கு பதிலாக வலது பக்கம் உருண்டிருந்தால் நிஜமாகவே கதை முடிந்திருக்கும்.   வாழ்க்கைக்கும் சரி, சாலைக்கும் சரி இடதே பாதுகாப்பு.

என் பின்னாடியே வந்து கொண்டிருந்த கோட்ட அலுவலகக் கிளைச்சங்கத் தலைவர் தோழர் ஜெயகாந்தம் மற்ற தோழர்களுக்கு தகவல் சொல்ல அப்படியே ஒரு காரில் தூக்கி வைத்து நறுவி மருத்துவமனையில் சேர்த்தார்கள். பேண்டும் சட்டையும் கிழிந்து போயிருந்தது. முழங்காலில் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. இடுப்பிலும் தோளிலும் தாங்க முடியாத வலி.

மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் மாற்றியது, பின்பு ஸ்கேன் செய்ய, எக்ஸ்ரே எடுக்க என ஸ்ட்ரெச்சரிலிருந்து மேஜைக்கு மாற்றி பின்பு ஸ்டெரெச்சருக்கு மாற்றியது எல்லாம் மரண அவஸ்தையாக இருந்தது. இடுப்பு எலும்பு முறிவு, காலர் எலும்பு நொறுங்கி விட்டது என்பது சோதனைகளின் முடிவு. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். அறுவை சிகிச்சை காரணமாக கதீட்டர் வைத்து சிறுநீர் பை வைக்க முடிவு செய்தார்கள். கதீட்டர் நுழைப்பதில் பிரச்சினை இருந்ததால் ஒரு மைனர் அறுவை சிகிச்சையும் நடந்தது. 

ஒரு வழியாக மறுநாள் 03.05.2025 அன்று அறுவை சிகிச்சை நடந்தது. காலர் எலும்பிற்கு பதிலாக ப்ளேட் வைக்கப்பட்டது. இடுப்பு எலும்புகளில் மூன்று ஸ்க்ரூ போட்டு முடக்கப்பட்டது. ஆறு நாட்களிலேயே  டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். இந்த காலகட்டத்தில் மருத்துவமனைக்கு வந்து பார்த்த ஏராளமான தோழர்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று நம்பிக்கை அளித்தார்கள்.

டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருவதற்கு முன்பே மருத்துவமனைக்கான அமைப்பை என் மனைவி வீட்டிலேயே செய்து வைத்திருந்தார். ஒரு செவிலியரையும் ஏற்பாடு செய்திருந்தார். என் மனைவியும் மகனும் அளித்த பராமரிப்பின் காரணமாகவே நாற்பத்தைந்து நாட்களில் வாக்கர் துணையுடன் அலுவலகம் செல்ல முடிந்தது. பணி ஓய்வு நாளன்று ஸ்ட்ரெச்சரிலோ அல்லது வீல் சேரிலோ அலுவலகம் செல்ல வேண்டியிருக்குமோ என்று அச்சப்பட்டதற்கு மாறாக வாக்கர் துணையுடன் நடந்து செல்ல முடிந்தது.

ஆனால் பாதிப்புக்கள் இன்னும் தொடர்கிறது. காலர் போன் வைத்ததால் தசை இறுகிப் போய் அவ்வப்போது வலி எட்டிப்பார்க்கிறது. அதன் காரணமாக இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்றும் இடுப்பில் ஸ்க்ரூக்கள் இருப்பதால் பின்னேயும் உட்காரக்கூடாது என்றி மருத்துவர் சொல்லி விட்டார். அதனால் 02.05.2025 க்குப் பிறகு வேன் ஓட்டுனர் முனீஷ்காந்த் புண்ணியத்தில் இரு சக்கர வாகனத்தைப் பற்றி நினைக்கவே முடியவில்லை.

ஆனாலும் அவசியமான பணிகளுக்கு ஆட்டோவில் செல்கிறேன். நேற்று கூட மே தினக் கொடியேற்று விழாவிற்கும் எங்கள் அலுவலகத்திலிருந்து பொதுக்கூட்டத்திற்கும் ஆட்டோவில்தான் சென்றேன். கூட்டத்தில் பேசி முடித்து விட்டு பின் அமர்ந்திருந்த போது வந்த நினைவலைகள் இங்கே பதிவாக.

விபத்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதை மட்டும்தான் முடக்கியது. மற்ற பணிகளையோ சிந்தனைகளோ அல்ல. எப்போதும் போல் இயங்குவேன் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறேன்.



பிகு 1 : மேலே உள்ள படம் 01.11.2025 அன்று நெய்வேலியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற போது நெய்வேலி அலுவலக வாயிலில் வரையப்பட்டிருந்த கோலம்.

பிகு 2 : நேற்று இரவு தட்டச்சு செய்யப்பட்ட பதிவு. எங்கள் கோட்ட மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளராக இருக்கிற கோட்டச்சங்க இணைச்செயலாளராக, துணைத்தலைவராக செயல்பட்ட தோழர் எஸ்.ஜெயஸ்ரீ அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்க கடலூர் செல்லும் வழியில் பயணத்தின் நடுவே பகிர்ந்து கொள்கிறேன்.

பயணம் தொடரும். 

Friday, May 1, 2026

தைலாபுரம் தோட்டத்தின் முன்னே - மறக்க நினைத்தாலும் முடியவில்லை.

 சில மோசமான சம்பவங்களை நாம் மறக்க நினைத்தாலும்  முகநூல் நினைவு படுத்திவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் 30.04.2013 அன்று நடைபெற்றது.  01.05.2013 அன்று எழுதிய பதிவை கீழே அளித்துள்ளேன். பாமக கட்சியில் அப்பா-மகன் மோதல் என்பது உட்கட்சிப் பிரச்சினை என்றாலும் ஜாதிவெறியை தூண்டி மக்களுக்கிடையே மோதலை உண்டாக்கியவர்கள் அவர்களுக்குள்ளேயே மோதிக் கொள்கிறார்களே என்பது  அற்ப சந்தோஷத்தை அளித்தது. 

இந்த சம்பவம் வேறொரு நெகிழ்ச்சியான பாடத்தையும் கொடுத்தது. அதனை வேறொரு பதிவில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.

இதோ அந்த பாடம்.

அவர் என்னிடம் கடிந்து கொண்ட அனுபவமும் உண்டு. பாமக அராஜகக் கும்பலிடமிருந்து தப்பிய அனுபவத்தை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன். இந்த ஏப்ரலில் கூட மீள் பதிவு செய்துள்ளேன். தைலாபுரம் தோட்டத்திலிருந்து தப்பித்தவுடன் அந்த நிகழ்வை ஓரிரு வார்த்தைகளில் முகநூலில் பதிவு செய்திருந்தேன். “Take Care” என அங்கே பின்னூட்டம் இட்டு விட்டு உடனடியாக அழைக்கவும் செய்தார். பிறகு இன்னொரு இடத்தில் மரம் வெட்டப்பட்டதால் பயணம் தடைபட்டு விட்டது என்றும் ஒரு பதிவு எழுதியிருந்தேன்.அதிகாலை 3 மணிக்கு வீடடைந்து உறங்கியும் விட்டேன்.

 காலை 7 மணிக்கு  தொலைபேசியில் அழைத்த தோழர் சன்யால், எத்தனை மணிக்கு வீட்டிற்கு வந்தேன் என்பதை கேட்டு விட்டு, “பிரச்சினையில் சிக்கிக் கொண்டதை பதிவு போட்ட நீங்கள், ஜாக்கிரதையாக வீடு திரும்பியதை ஏன் எழுதவில்லை, எவ்வளவு கவலையாக இருந்தது தெரியுமா? இனி இது போல செய்யாதீர்கள்என்று உரிமையோடு கண்டிக்க என் தவறு புரிந்தது.

இதிலே குறிப்பிட்டுள்ள அவர் மறைந்த தோழர் பி.சன்யால், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத்தலைவராக, இணைச்செயலாளராக, மத்திய மண்டலக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்த வேகமும் உற்சாகமும் நிறைந்த தலைவர். 

அதன் பின்பான பயணங்களின் போது தைலாபுரம் தோட்டத்தை கடக்கும் போதெல்லாம் தூங்க முயற்சிப்பேன். பெரும்பாலும் முடிவதில்லை.  அங்கே நடந்த சம்பவத்தையும் தாண்டி எனக்கு எரிச்சலூட்டும் விஷயம் கீழே உள்ளது.

பாமகவின் கொள்கைகளுக்கும் செயல்பாட்டிற்கும் கொஞ்சமும் பொருந்தாத அந்த மூவரின் சிலைகள் எதற்கு அங்கே? 



இப்போது பழைய பதிவை பாருங்கள்.


பாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்பினேன், புல்லரிக்கும் நேரடி அனுபவம்


நேற்று காலை நன்றாகவே தொடங்கியது. மாலையில் கடலூரில்  இன்சூரன்ஸ் துறையில்   அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும்  முடிவிற்கு எதிராக பொதுக் கூட்டம். திருவண்ணாமலையிலும்  திருக்கோயிலூரிலும் இரண்டு முன்னணி தோழர்களின் பணி நிறைவு.  வேறு ஒரு கிளையில்   தோழர்களோடு பேச வேண்டிய அவசியம்  இருந்தது.


திருவண்ணாமலையிலும் திருக்கோயிலூரிலும் ஓய்வு பெற்ற
  தோழர்களை வாழ்த்தி சங்கத்தின் சார்பில் கௌரவித்து விட்டு  இன்னொரு கிளையிலும் பணி முடித்து விட்டு கடலூர் உழவர் சந்தை அருகே பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக ஐந்தரை மணிக்கு வந்தேன். காவலர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. என்னவென்று விசாரித்தால் மருத்துவரை கைது செய்ததால் போடப்பட்டுள்ள பாதுகாப்பு என்றார்கள்.


கூட்டம் சிறப்பாகவே நடந்து முடிந்தது. வேலூர் திரும்ப வேண்டும்.
   எனது சொந்த வாகனத்தில் ஒரு டிரைவரோடு வந்திருந்தேன். புதுவை, திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு சாலை  நன்றாக உள்ளதால் அந்த வழியில் திரும்ப முடிவு செய்தோம்.

புதுச்சேரியிலிருந்து ஒரு இருபது கிலோ மீட்டர் தூரத்திற்கு
   எந்த பிரச்சினையும் இல்லை. மருத்துவரின் தைலாபுரம்  தோட்டம் நெருங்கும் போது பார்த்தால் சாலையில் ஏதோ  எரிந்து கொண்டிருந்தது. கொஞ்சம் வேகத்தை குறைத்து  அருகில் நெருங்கினால் ஒரு இருபது வாலிபர்கள் இருப்பார்கள்.
அவர்கள் எனது காரின் மீது கல்லெறியத் தொடங்கினார்கள்.
தூரம் ஒரு முப்பது நாற்பது அடிதான் இருக்கும். ஒருவன் ஒரு பெரிய பாறையை தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.  இருள்  நேரத்திலும் அவன் முகத்தில் பார்த்த வெறியை வாழ்வில்
என்னால் என்றும் மறக்க முடியாது. மற்றவர்களும் காரை
நோக்கி ஓடி வந்தார்கள். அங்கே எரிந்து கொண்டிருந்தது  ஒரு இரு சக்கர வாகனம்.


டிரைவர் திரு வெங்கடேஷ் சமயோசிதமாக ரிவர்ஸ் கியர்
  போட்டு பின்னாலே ஓட்டி வந்தார். நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ரிவர்ஸ் கியர். நல்ல வேளையாக பின்னால் வேறு எந்த வாகனமும் வரவில்லை. ஒரு அரை கிலோ மீட்டர் சென்ற பின்பு மயிலம் செல்வதற்கான மாற்றுப் பாதை வந்தது.

பாதையின் துவக்கத்தில் இருந்த கிராமத்திலோ திருவிழா
நடந்து கொண்டிருந்தது. வாண வேடிக்கை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து கொண்டிருந்த அராஜகத்தின் நிழல் அந்த கிராமத்தின் மீது படியவில்லை.

மயிலம் வழியாக திண்டிவனம் வந்தால் மேம்பாலம் அருகே
  ஒரு போர் நடந்ததன்  அடையாளங்களாக கற்களும் கண்ணாடி  துகள்களும் சாலையெங்கும் கிடந்தன. காவலர்கள் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் திண்டிவனம் பஜாரில் எந்த பாதிப்பும் இருந்ததாக தெரியவில்லை. பதினோரு  மணிக்குக் கூட காய்கறி கடைகள் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தன.


சரி இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைத்தால் 
செய்யாறு தாண்டியவுடன் சாலையில் ஒரு இடத்தில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. பாமக காரர்கள் வழக்கம் போல் மரத்தை வெட்டி சாலையை அடைத்திருந்தார்கள். காவல்துறைக்கு தகவல்  வந்திருந்ததால் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வழி உருவாக்கிக் கொடுத்தார்கள். 

ஆனால் இந்த நிம்மதி நிலைக்கவில்லை. ஒரு பத்து கிலோமீட்டர்
  கடந்திருப்போம். ஆற்காடிற்கு இருபத்தி ஐந்து கிலோ மீட்டர்கள்  முன்பாக மரம் வெட்டிகள் மீண்டும் கைவரிசையை காண்பித்து விட்டார்கள். ஒரே ஒரு கான்ஸ்டபிள் இருந்தார். இப்போதான் சார் வெட்டிட்டு ஓடிட்டாங்க, நான் யதேச்சையா வீடு திரும்பும் போது  பார்த்தேன். ஸ்டேசனுக்கு   சொல்லியிருக்கேன். ஜேசிபி வர நேரமாகும்.  வேறு வழியில் போயிடுங்க என்று வழிகாட்ட ஒரு பத்து கிலோ மீட்டர் சுற்றி ஆற்காடு சாலையையே மீண்டும் பிடித்தோம்

சென்னை- பெங்களூர் நாற்கர சாலையை அடைந்ததும்தான் இனி 
சிக்கல் கிடையாது என்று நம்பிக்கை வந்தது. மரம் வெட்டிகளுக்கு வாய்ப்பு தராமல் சாலை அமைக்கும்போதே எல்லா மரங்களையும் அரசே வெட்டி விட்டது.


பாமக காரர்களுக்கு சில கேள்விகள்.

கைது செய்யப்பட்டது உங்கள் தலைவர். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் ஜாமீன் போடுங்கள், சாலை மறியல் போராட்டம் நடத்தி கைதாகுங்கள். சம்பந்தமே இல்லாதவர்களை தாக்குவது என்ன போராட்ட வடிவம்?


மரக்காணம் கலவரங்கள், தர்மபுரி கலவரங்களுக்கும் உங்களுக்கும்
  எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கலாம். தைலாபுரம் தோட்டத்தின் வாசலில் கலவரம் நடத்த மற்ற கட்சிக்காரர்களுக்கோ, ஜாதிக்காரர்களுக்கோ தைரியம் உள்ளதா என்ன?

மரம் வெட்டி என்றால் கோபம் வருகிறது. இப்படி மரத்தை வெட்டி
போக்குவரத்தை தடை செய்பவர்களை வேறு எப்படி அழைப்பது?

உங்கள் குடும்பத்தவர்களே உயிர் போகும் நிலையில் ஆம்புலன்ஸில் சென்றாலும் இப்படித்தான் வழியை அடைப்பீர்களா?
உங்கள் ஐயாவும் சின்னய்யாவும் உயிர் காக்கும் மருத்துவத்தை படித்தார்களா? அல்லது உயிரெடுக்கும் படிப்பா?


குடிக்கக் கற்றுக் கொடுத்து இளைய சமுதாயத்தை கழகங்கள்

சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்த என்ன யோக்கியதை உங்களுக்கு
உள்ளது? ஜாதிய வெறியையும் வன்முறைக் கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுத்து சீரழிப்பது நீங்கள் அல்லவா?


அசம்பாவிதம் எதுவும் நிகழாததால் என்னால் ப்படி பதிவு  எழுதி கேள்வி கேட்க முடிகிறது. திகிலான அனுபவம் என்று சொல்ல முடிகிறது.

ஏதேனும் நிகழ்ந்திருந்தால்?????????

நாம் வெல்லுவோம், நாம் வெல்லுவோம்

 We shall Overcome என்ற பாடலின் தமிழ் வடிவம் கீழே உள்ளது.  இறுதி வெற்றி என்றும் உழைக்கும் மக்களுக்கே என்ற நம்பிக்கையை அளிக்கும் பாடலை மே தினத்தன்று பகிர்ந்து கொள்வது பொறுத்தமாக இருக்கும்.

கரத்தாலும் கருத்தாலும் உழைக்கும் அனைவருக்கும்

மே தின வாழ்த்துக்கள்.



நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம்

 

நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம்

 

நாம் வெல்லுவோம், நாம் வெல்லுவோம்

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

ஒருவரல்ல,

நாம் ஒருவரல்ல,

நாம் ஒருவரல்ல, இந்நாள்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

வாழ்வோம் அமைதியாய்,

வாழ்வோம் அமைதியாய்,

வாழ்வோம் அமைதியாய் ஓர் நாள்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

விடுதலை வரும்

விடுதலை வரும்

விடுதலை வரும் உண்மையாய்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

அஞ்சவில்லை

நாம் அஞ்சவில்லை

நாம் அஞ்சவில்லை இந்நாள்

என் நெஞ்சமெல்லாம்

முழு நம்பிக்கை

நாம் வெல்லுவோம், ஓர் நாள்

 

நாம் வெல்லுவோம் நாம் வெல்லுவோம்

நாம் வெல்லுவோம் ஓர் நாள்

நாம் வெல்லுவோம் ஓர் நாள்

 


 

Thursday, April 30, 2026

கருத்துக் கணிப்பு எனும் கொசுத்தொல்லை

 


நேற்றைய கருத்துக் கணிப்பு ஆராய்ச்சி முடிவுகளை பார்த்த போது மனதில் தோன்றிய வார்த்தை "கொசுத் தொல்லை"

தேர்தல் நடக்கும் எல்லா மாநிலங்களிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்தி மறு நாளே வாக்கு எண்ணிக்கையை நடத்தினால் மட்டுமே இந்த கொசுத்தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். 

Wednesday, April 29, 2026

யார் சிறந்த கலைஞர் மோடி?

 


கீழேயுள்ள இரண்டு நொடி காணொளியை அவசியம் பாருங்கள்.


படகில் கஷ்டப்பட்டு உட்கார்ந்து கொண்டு படமெடுக்கிற மோடி சிறந்த புகைப்படக் கலைஞரா?

அவரை அவர் விரும்பும் கோணங்களில் புகைப்படமும் காணொளியும் எடுத்தவர் சிறந்த புகைப்படக் கலைஞரா?

மோடியிடம் வேலை பார்க்கும் புகைப்படக் கலைஞர்கள் வேறு இடங்களில் வேலை பார்க்கப் போனால் மிக நல்ல பெயர் எடுப்பார்கள். மோடியால் அவர்களின் உழைப்பு காமெடியாகி வீணாகி விடுகிறது.