Saturday, October 18, 2025

அமித் நிதீஷ் குரங்குக்குளியல்கள்

 


சிவசேனா கட்சியை உடைத்து பாஜக காலில் விழுந்து முதல்வர் பதவியைப் பெற்ற ஏக்நாத் ஷிண்டேவிடமிருந்து அடுத்த தேர்தலுக்குப் பின்பு முதல்வர் பதவியை பறித்து துணை முதல்வராக பதவி இறக்கம் செய்தது பாஜக.

மகா கூட்டணி அரசை கவிழ்த்து பாஜக வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார் நிதீஷ் குமார். பீகார் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் "முதல்வர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகே முடிவு செய்வோம்" என்று அமித்ஷா  நேற்று சொன்னதன் அர்த்தம் என்ன?

நிதீஷ்குமார் முதல்வர் வேட்பாளர் மட்டுமல்ல முதல்வரும்  கூட கிடையாது என்பதுதான் அதன் அர்த்தம்.

தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு வாக்காளர் பட்டியலில் நான் திருட்டுத்தனமும் அயோக்கியத்தனமும் செய்வேன், நீ நோகாமல் முதல்வராவதா என்பதுதான் அமித்தின் எண்ணம்.

யார் முதல்வர் என்று சொல்லாமல் 1980 ல் திமுகவும் காங்கிரஸும் சரிசமமாக சட்டபேரவைத் தேர்தலில்  போட்டியிட்டு ஒருவர் காலை இன்னொருவர் இழுக்க மொத்தத்தில் தோற்றுப் போனதுதான் நினைவுக்கு வருகிறது.

நிதீஷை முதல்வரிலிருந்து தூக்கினால் மோடி தூக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

இது நடக்காமல் இருக்க ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது.

பாஜக-நிதீஷ் கூட்டணி பீகாரில் தோற்றுப் போக வேண்டும். அப்போது யார் முதல்வர் என்ற பிரச்சினை வராதல்லவா!

ஆகவே மோடியே பீகாரில் குறைவாக பொய் சொல்லவும்,,,,

Friday, October 17, 2025

சங்கிக் கழுதைகளுக்கு கம்யூனிஸ்ட் வாசம் தெரியாது

 


மயிலை ரமா எனும் ஜாதி வெறி பிடித்த ஆணவமிக்க, பாஜக மகளிர் அணிப் பொறுப்பாளர் ஒருவரின் மோசமான பதிவொன்றை ஒரு தோழர் பகிர்ந்து கொண்டிருந்தார். அதனால் அவர் பக்கத்தைப் பார்க்கச் சென்றேன்.

அப்போது அவரின் ஒரு பழைய, மிகக் கேவலமான, அசிங்கமான பதிவு ஒன்றை பார்த்தேன்.

ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பி.சண்முகம் கூறியிருந்ததை அந்தம்மா நக்கலடிப்பதாக நினைத்துக் கொண்டு அவருடைய கீழ்த்தரமான புத்தியை வெளிப்படுத்தியிருந்தார். நானும் சூடாகவே ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்.



வாச்சாத்தியில் காவல் துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அனைத்திந்திய ஜனநாயகர் சங்கமும் நடத்திய மகத்தான போராட்டத்தின் தளபதி அவர்.

பழங்குடி மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்களும் அதிலே அவர் காண்பித்த உறுதியும்தான் அவரை மாநிலச் செயலாளராக உயர்த்தியுள்ளது.

அப்படிப்பட்ட தோழர் சண்முகத்தைப் பற்றி பேச அல்ல நினைக்கக் கூட இந்த பெண்மணிக்கு அருகதை கிடையாது. 

மகளி அணிப் பொறுப்பாளர் என்ற பதவியில் இருக்கும் அவரின் பதிவுகள் எல்லாமே ஜாதி வெறி எனும் நச்சில் தோய்த்தெடுக்கப்பட்டவைதான்.

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும் திரைக் கலைஞருமான திருமதி பாத்திமா பாபு இவரை ஒருமுறை கழுவி கழுவி ஊற்றினார்.

இவர் மட்டுமல்ல பாஜகவில் உள்ள எல்லோருமே ஜாதிய மேட்டிமை புத்தியுடன் செயல்படுபவர்கள்தான்.

இவர்களுக்கு கம்யூனிஸ்டுகளின் போராட்டமோ, தியாகமோ, மக்கள் மீது கொண்டுள்ள நேசமோ தெரியாது, புரியாது.

அப்படி புரிந்து கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் ஏன் சங்கிகளாக இருக்கப் போகிறார்கள்!

Thursday, October 16, 2025

வேஷம் போட்ட "ரஸ்தோகி" கைது

 


நேற்று ஆங்கில இந்து இதழில் வெளியான செய்தி இது.



பீகாரைச் சேர்ந்த "ஹேமந்த் ரஸ்தோகி" என்ற நபர், டி.டி.இ போல வேஷம் போட்டு அஸ்ஸாமைச் சேர்ந்த அலி என்ற நபரிடம் டிக்கெட் வாங்கித் தருவதாகச் சொல்லி 7500 ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார். 

பணம் கொடுத்து விட்டு அலி டிக்கெட்டுக்காக காத்த்த்த்த்த்த்த்த்த்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.  ரஸ்தோகியும் வரவில்லை, டிக்கெட்டும் வரவில்லை. 

ஏமாந்து விட்டோம் என்று தெரிந்து போலீசில் புகார் கொடுக்க, அவர்களும் அந்த மோசடிப் பேர்வழியை கண்டு பிடித்து பணத்தை மீட்டுக் கொடுத்து விட்டார்கள்.

இந்த சம்பவம் நடந்தது காட்பாடி ரயில் நிலையத்தில். . . .

பீகாரைச் சேர்ந்த ஒருவன் அஸ்ஸாமைச் சேர்ந்த ஒருவரை தமிழ்நாட்டில் வைத்து ஏமாற்றியுள்ளான்.

பிகு: தலைப்பில் பெயரைப் பார்த்து வேறு யாரோ என்றுதானே நினைத்தீர்கள் 😛😛😛😛😛

தீபாவளிக்கு முன்னோட்டமாக "அவல் லட்டு"

 


சமையல் பதிவு போட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு மேலாகி விட்டதால் இந்த பதிவு, நேற்று செய்தது.

பணி ஓய்வில் வீட்டில் இருப்பதில் ஒரு வசதி இருக்கிறது. திட்டமிட்டதை செய்து விட்டு எந்த சுவடும் தெரியாமல் சமையலறையை சுத்தம் செய்து வைப்பதற்கான நேரம் இருக்கிறது. 

இந்த பதிவு இன்னொரு செய்தியும் சொல்கிறது. ஒரு இனிப்பு செய்யும் அளவிற்கு உடல் நிலை தேறியுள்ளது. இரு சக்கர வாகனத்தை ஓட்ட மருத்துவர் அனுமதி கொடுத்தால் இயல்பு வாழ்க்கை திரும்பி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்ப்போம் இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் செல்லும் போது என்ன சொல்கிறார் என்று.

சரி,

இப்போது சமையலறைக்கு செல்வோம்.

முதலில் ஒரு வாணலியில் நெய் ஊற்றி அது காய்ந்ததும் முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொண்டேன்.

அதே வாணலியில் வெள்ளை (லேசான) அவலை நன்றாக வறுத்துக் கொண்டேன்.

பிறகு துறுவிய தேங்காயையும் வறுத்துக் கொண்டேன்.

வறுத்த அவலை மிக்ஸியில் பொடி செய்து கொண்டேன்.

கொஞ்சம் வெல்லத்தை மிக்ஸியில் பொடி செய்து கொண்டேன். அதிலெயே வறுத்த தேங்காயையும் போட்டு சுற்றி அதனை பொடித்து வைத்த அவலோடு கலந்து கொண்டேன். சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து சூடான நெய் நாலு ஸ்பூன் சேர்த்து அனைத்தையும் கலந்து கைகளில் பிடித்து எடுத்தால் அவல் லட்டு தயார்.

சுவை எப்படி?

என்னுடைய சிக்னேச்சர் டிஷ்ஷான "அவல் புட்டு" எப்படி இருக்குமோ அதே சூப்பர் சுவை.

அவல் புட்டு செய்வது எப்படி?

கீழேயுள்ள இணைப்பில் பாருங்கள்.

அதுதான் என்னுடைய முதல் சமையல் பதிவும் கூட . . .


அவல் புட்டு சுவையாய் செய்வது எப்படி? ஒரு ஆணின் சமையல் குறிப்பு





Wednesday, October 15, 2025

அசிங்கப்பட்டது இந்திய கிரிக்கெட்தான்

 


அசிங்கத்துக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது இந்தியாவின் துரதிர்ஷ்டமான நரேந்திர மோடிதான்.

ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தானை வென்றது. அந்த வெற்றியை ட்ரம்ப் நிறுத்தியதாக சொல்லிக் கொண்டிருக்கிற ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டு தான் ஒரு பொறுப்பற்ற போர் வெறியன் என்பதை நிரூபித்துக் கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க முடியாது என்று இந்திய அணியின் தலைவராக இருந்த சூரியகுமார் யாதவ் மறுத்து விட்டார்.

பாகிஸ்தானியர் கையிலிருந்து கோப்பையை பெற முடியாது என்று சொல்லியுள்ளார்கள், பாஜக சங்கி கவுதம் கம்பீர் பயிற்சியாளராக உள்ள வீரர்கள் இப்படிப்பட்ட நிலை எடுத்ததை தேச பக்தி என்று கூட முட்டாள்தனமாக வர்ணிக்கிறார்கள் மூடச்சங்கிகள்.

பாகிஸ்தானியரிடமிருந்து கோப்பையை பெறுவது தேச பக்தி என்றால் பாகிஸ்தானோடு விளையாடுவதை தேசத்துரோகம் என்றுதான் அழைக்க வேண்டும்.

இவ்வளவு தேசப்பற்று உள்ளதாக காண்பித்துக் கொள்ளும் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே!

பாகிஸ்தானுடன் விளையாடினால் நெறய டிக்கெட் விற்கும், நெறய ஸ்பான்ஸர் கிடைக்கும்,  டிவி களுக்கும் நெறய விளம்பரம் கிடைக்கும். பாகிஸ்தானுடன் விளையாடினால் கோடி கோடியாய் துட்டு கிடைக்கும். கொலை செய்வதற்காக பெறப்பட்ட கூலிப் பணத்தில் ரத்தக்கறை இருக்காதல்லவா! அது போல துட்டுக்கு முன்பு தேசப்பற்று எல்லாம் ஜூம்லா.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கையிலிருந்து கோப்பையை பெற முடியாது என்று நிலை எடுத்து இந்திய கிரிக்கெட்டை அசிங்கப்படுத்தி உள்ளார்கள் இந்திய அணி வீரர்களும் அவர்களின் பின் புலத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியமும்.

நியாயப்படி பார்த்தால் இந்திய கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலலில் இருந்து வெளியேற்ற வேண்டும்.

ஆனால் 

அது நடக்காது.

அமித்ஷா மகன் ஜெய்ஷா சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கையில் அது சாத்தியமற்றது.

எதுவாக இருப்பினும் 

நடந்த சம்பவம் இந்தியாவிற்கு இழிவுதான்.

பிகு 1 : எழுதி பல நாளாகி விட்டது. கரூர் நெரிசல் மரணங்கள் இந்த பிரச்சினையை பின்னுக்கு தள்ளி விட்டது.

பிகு 2 : இன்னும் இரண்டு கிரிக்கெட் பதிவுகள் இருக்கிறது. 

போதைப் பொருள் கடத்திய ஆறு நாள் முதல்வர்


 

ரவி நாயக் எனும் கோவா மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் ரவி நாயக் இறந்து போனார் என்பதை ட்விட்டரில் மோடி எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பின் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன்.

பல கட்சிகளுக்கு தாவிய பெருமை கொண்ட ரவி நாயக் இரண்டு முறை கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார்.  

கோவாவிற்லு மாநில அந்தஸ்து கிடைத்த பின்பு 1989 ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலுக்குப் பிறகு ஐந்து வருடங்களுக்குள் ஏழு முறை முதலமைச்சர்கள் மாறியுள்ளனர்.  இரண்டு பேர் இரண்டு முறை முதலமைச்சராகியுள்ளனர். 

கடத்தலை குடும்பத் தொழிலாகக் கொண்ட ரவி நாயக் முதல் முறை முதல்வரான போது இரண்டு வருடங்கள் முதலமைச்சராக இருந்துள்ளார். இவரைக் கவிழ்த்து விட்டு வில்ஃப்ரெட் டிசோஸா என்பவர் 319 நாட்கள் முதல்வராக இருந்திருக்கிறார்.

வில்ஃப்ரெட் டிசோஸா வை கவிழ்த்து விட்டு மீண்டும் ரவி நாயக்கே முதலமைச்சராகிறார்.

முதலமைச்சரானாலும் குடும்பத் தொழிலை கைவிடக் கூடாது என்று போதைப் பொருட்களை கடத்த  வேலு நாயக்கர் போல அவரே கடலுக்குள் செல்கிறார். கையும் களவுமாக சிக்கிக் கொண்டதால் போலீஸ் அவரை கைது செய்கிறது. 

அதனால் ஆறே நாட்களில் அவரது முதலமைச்சர் பதவி பறி போகிறது.

அதனால் எல்லாம் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து போகவில்லை.

பதவி பெறுவதற்காக பல கட்சிகளை பார்த்து விட்டு இறுதியாக பாஜக சென்று வாஷ்ங் மெஷின் துணையோடு உத்தமராகி விட்டார். 

ரவி நாயக்கும் அவரது மகள் ராய் நாயக்கும் போதைப் பொருட்கள் கடத்துவதாக குற்றம் சுமத்தி அவரை உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்று கூச்சல் போட்ட பாஜகவே ரவி நாயக் பல எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு கூண்டோடு பாஜக தாவிய பின்பு  அமைச்சராக்கியது.

மோடி உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்தது இந்த மனிதனுக்குத்தான்.



அதானால்தான் கவுண்டர் மகான் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"  என்று சொல்லியுள்ளார்.  

Tuesday, October 14, 2025

தூக்கிலிருந்து விடுதலை - யார் குற்றம்????

 


உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பு மிகவும் அதிர்ச்சியளித்தது. கரூர் வழக்கைச் சொல்லவில்லை. இது வேறு வழக்கு.

ஹாசினி என்ற ஒரு சிறுமியை பாலியன் வன் கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த் என்பவனுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.

அந்த சம்பவம் நிகழ்ந்த காலகட்டம் நினைவில் உள்ளது. தமிழ்நாட்டு மக்களை அதிரச் செய்த சம்பவம் அது. சி.சி டி வி காட்சிகள் மூலமாக அதே அடுக்கு மாளிகைக்குடியிருப்பில் இருந்த தஷ்வந்த்தான் குற்றவாளி என தெரிந்து கைது செய்யப்பட்டு விட்டான்.

பிணையில் வெளிவந்தவன் தன்னுடைய அம்மாவை கொன்று விட்டு தலைமறைவாகி விட்டான். பின் அவனை மும்பையில் கைது செய்தார்கள்.

மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து தூக்கு தண்டனை கொடுத்தது. உயர் நீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியது.

இப்போது அந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டது.

போதுமான ஆதாரங்களை அரசு தரப்பு அளிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.

தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றத்துக்கு ஆதாரங்கள் போதாது என்றால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தது? உயர் நீதிமன்றம் உறுதி செய்தது?

மாவட்ட நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் உச்ச நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டதா?

அப்படி அளிக்கப்படவில்லையென்றால் அது யார் குற்றம்?

ஒரு வேளை அந்த ஆதாரங்கள் சரியில்லை என்றால் அதை நம்பி தூக்கு தண்டனை கொடுத்த மாவட்ட நீதிமன்றமும் உறுதி செய்த உயர் நீதிமன்றமும் தவறிழைத்ததா? அது யார் குற்றம்?

அம்மாவை கொன்ற வழக்கில் அப்பா பிறழ் சாட்சியானதால் அந்த வழக்கிலிருந்து அவர் தப்பித்து விட்டார். அது போல பிறழ் சாட்சிகள் யாராவது இந்த வழக்கிலும் உண்டா?

தஷ்வந்த் குற்றவாளி இல்லையென்றால் ஹாசினிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் காரணம்? அந்த கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளி யார்? 

பிகு: எழுதி நாலு நாள் ஆன பதிவுதான். இன்னும் கொஞ்சம் பழைய பதிவுகள் கூட இருக்கிறது. அவையும் வரும். . .