Friday, January 2, 2026

"நானே மகத்தானவன்"

 


நூல் அறிமுகம்

 

நூல் :                             நானே மகத்தானவன்

ஆசிரியர்                          அ.பாக்கியம்

வெளியீடு                         தூவல் கிரியேஷன்ஸ்

                                  சென்னை – 28

விலை                            ரூபாய் 300.00

 

உலகின் மகத்தான குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் போராட்ட வாழ்வை விளக்குகிற முக்கியமான நூல் இது. முகமது அலி பற்றி நாம் அறிந்தவற்றை அறியாத செய்திகள்தான் அதிகம் என்பதை உணர்த்தும் நூல் இது.

 

முகமது அலியின் வாழ்க்கையை பேசும் நூலாக இருந்தாலும் பதினோறாவது அத்தியாயத்தில்தான் முகமது அலியே வருகின்றார். அப்படியென்றால் முதல் பத்து அத்தியாயங்கள் எதைப் பேசியது? அமெரிக்காவில் நிலவிய நிற வெறியின் கொடுமைகளை பேசியது. கருப்பின மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கி அவர்களின் உரிமைகளை முடக்கிய காலத்தை விவரித்தது. கல்வி மறுக்கப்பட்ட கண்ணீர் கதையை சொன்னது. அடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரஹாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு ஜனாதிபதியான ஜான்சன் ஜிம் க்ரோ சட்டம் என்ற சட்டத்தின் மூலம் கருப்பின மக்களை சித்திரவதைக்குள்ளாக்கிய ஆட்சியாளர்களின் கொடூரங்களை விவரித்தது.

 

வெள்ளை இன இளம் பெண்ணோடு பேசிய குற்றத்திற்காக எம்மெட்டில் என்ற 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட அராஜகத்தையும் அந்த கொலை கருப்பின மக்களின் கோபத்தை தூண்டியதையும் அந்த சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதையும் அந்த சிறுவனின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை வெள்ளையின மக்கள் அடித்து நொறுக்கியதையும் அது மீண்டும் அமைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் தகர்க்கப்பட்ட கொடுமையையும் இறுதியில் 230 கிலோ இரும்பில் அமைக்கப்பட்டதையும் சொல்லும் அத்தியாயம் அமெரிக்காவில் நிலவிய நிற வெறிக்கான முக்கியமான சான்று.

 

தற்காப்புக் கலையாக குத்துச்சண்டையை கருப்பின மக்கள் பயின்று தேர்ந்தாலும் வெள்ளை நிறத்தவரோடு அவர்களால் மோத முடியாத தடையைச் சொன்னது. பின்னொரு நாளில் அதற்கான அனுமதி கிடைத்த போது வெள்ளையின குத்துச் சண்டை வீரர்களை முறியடித்த ஜேக் ஜாக்ஸன், ஜோ லூயிஸ் ஆகியவர்களின் வெற்றி எப்படி கருப்பின மக்களுக்கு எழுச்சி அளித்தது என்பதை விவரித்தது.

 

இச்சூழலில்தான் கேஸியஸ் கிளே என்ற இளம் கருப்பின வீரர் குத்துச்சண்டை களத்திற்குள் நுழைகிறார். கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அமெரிக்கா முழுதிலும் அறியப்படுகிறார். 1960 ல் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்கிறார். நாடெங்கிலும் தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாடு திரும்பும் அவருக்கு மிஞ்சியது என்னமோ அதிர்ச்சிதான். லூயிஸ் வில்லி என்ற நகரில் உள்ள உணவு விடுதிக்கு நண்பர்களோடு சென்ற கேஸியஸ் கிளேவிற்கு அங்கு கருப்பினத்தவர் என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட அதுவரையில் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பதக்கத்தை ஓகியோ ஆற்றில் வீசி எறிகிறார். நிற வெறியின் கொடுமையை உணர்ந்து அதற்கு எதிரான போராட்டத்தில் இணைந்தும் கொள்கிறார். அமெரிக்காவின் முக்கிய போராளியான மால்கம் எக்ஸ் உடன் இணைகிறார்.

 

இஸ்லாம் தேசம் என்ற அமைப்புடன் இணைந்து கொள்கிறார். மதம் மாறி முகமது அலி என்று பெயரை மாற்றிக் கொள்கிறார். கேஸியஸ் கிளே என்ற பெயர் அவரது பெற்றோர்களை அடிமைகளாக வைத்திருந்தவர் பெயர் என்பது பெயர் மாற்றத்திற்கான காரணம். வெள்ளியின ஆணவத்தோடு அவரை மீண்டும் மீண்டும் கேஸியஸ் கிளே என்று அழைத்து அவமானப்படுத்த முயன்ற ப்ளாய்ட் பேட்டர்ஸனோடு நடந்த போட்டியை முகமது அலி கையாண்ட விதம் சிறப்பானது. “இப்போது என் பெயரைச் சொல்” என்று ஒவ்வொரு குத்தின் போதும் ஆக்ரோஷமாக முழங்கினார். அவருக்கு பாடம் கற்பிக்கவே அந்த போட்டியை பல சுற்றுக்கள் வரை எடுத்துச் சென்றார்.

 

களத்தில் ஆக்ரோஷ முகம் காண்பிக்கு முகமது அலியின் இன்னொரு முகம் அவரின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துவது. மனித நேயத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் அவர்.

 

கட்டாய ராணுவ சேவைச் சட்டத்தின் படி வியட்னாம் நாட்டிற்கு எதிரான போரில் அவர் கலந்து கொள்ள மறுத்தார். என்னை நீக்ரோ என்றழைக்காத மக்களுக்காக நான் ஏன் போரிட வேண்டும் என்று கேட்ட அவர் வெள்ளையின் வெறி பிடித்த எஜமானர்களுக்காக வெள்ளை நிறமல்லாத மக்கள் வாழும் நாட்டை இருளடையச் செய்ய பத்தாயிரம் மைல்கள் கடந்து நான் செல்ல மாட்டேன் என்று அவர் உறுதியாக இருந்ததால் குத்துச்சண்டை போடுவதற்கான அவரது உரிமம்  ரத்து செய்யப்பட உச்ச நீதிமன்றம் வரை சென்று அதனை மீட்டெடுத்தார். ஆப்பிரிக்க நாடான கானாவிற்குச் சென்று அங்குள்ள மக்களிடன் தன் வேர்களைத் தேடியே இங்கே வந்ததாக பேசியுள்ளார்.

 

அமெரிக்க – இராக் போரின் போது கைது செய்யப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகளை மீட்க அமெரிக்க அரசு இவரை பயன்படுத்தியது. சதாம் ஹூசைனோடு முகமது அலி பேசி அமெரிக்க பிணைக்கைதிகளை மீட்டுக் கொண்டு வந்தார். ஆனால் பாலஸ்தீன கைதிகளை மீட்க இஸ்ரேல் வந்த முகமது அலியை சந்திக்கவே இஸ்ரேல் அரசு மறுத்து விட்டது. ஜியோனிஸக் கொள்கைகளுக்கு எதிராக முகமது அலி பேசியதே காரணம்.

 

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை இருந்த போதும் கியூபாவிற்கு ஏராளமாக உதவியுள்ளார். ஐநா சபையின் யுனிசெப் அனைப்பிற்கும் உதவியுள்ளார். அதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும் சொல்லியுள்ளார். கியூபா, சோவியத்யூனியன், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணித்துள்ளார், இந்தியாவிற்கும் வந்துள்ளார்.

 

தடை விதிக்கப்படுவதற்கு முன்பு பங்கேற்ற 31 பெரிய போட்டிகளில் அனைத்திலும் வென்றதற்காகவும் அதன் பின்பு கலந்து கொண்ட 29 போட்டிகளில் 24ல் வென்றதால் மட்டும் முகமது அலி, மகத்தானவர் என்று மக்கள் மனதில் இடம் பெறவில்லை. அவர் ஆற்றிய மனித நேயப் பணிகளாலும்தான். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மகத்தான மனிதனின் முழு பரிமாணங்களை அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு இந்த நூல்.

 

நிற வெறிக்கு எதிராக அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள் இறுதி அத்தியாயத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்கா நிகழ்த்திய நிற வெறிக் கொடுமைகளை முழுமையாக அறிந்து கொள்ள உதவிய நூலாசிரியர் தோழர் அ.பாக்கியம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்.

 

வேலூர் சுரா

"காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதியது. 



Thursday, January 1, 2026

புத்தாண்டின் முதல் பதிவாய் இனிப்பு - அவல் லட்டு 2.O

 


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

இந்திய ஜனநாயகம் தழைத்திடும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை அணுகுவோம்.

முதல் பதிவாக ஒரு இனிப்பு இருக்கட்டும்.

அதென்ன அவல் லட்டு 2.O ?

தீபாவளியை முன்னிட்டு அவல் லட்டு செய்முறையை எழுதியிருந்தேன். அது இங்கே . . .


தீபாவளிக்கு முன்னோட்டமாக "அவல் லட்டு"

 


மையல் பதிவு போட்டு கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு மேலாகி விட்டதால் இந்த பதிவு, நேற்று செய்தது.

பணி ஓய்வில் வீட்டில் இருப்பதில் ஒரு வசதி இருக்கிறது. திட்டமிட்டதை செய்து விட்டு எந்த சுவடும் தெரியாமல் சமையலறையை சுத்தம் செய்து வைப்பதற்கான நேரம் இருக்கிறது. 

இந்த பதிவு இன்னொரு செய்தியும் சொல்கிறது. ஒரு இனிப்பு செய்யும் அளவிற்கு உடல் நிலை தேறியுள்ளது. இரு சக்கர வாகனத்தை ஓட்ட மருத்துவர் அனுமதி கொடுத்தால் இயல்பு வாழ்க்கை திரும்பி விடும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்ப்போம் இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரிடம் செல்லும் போது என்ன சொல்கிறார் என்று.

சரி,

இப்போது சமையலறைக்கு செல்வோம்.

முதலில் ஒரு வாணலியில் நெய் ஊற்றி அது காய்ந்ததும் முந்திரி பருப்பை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொண்டேன்.

அதே வாணலியில் வெள்ளை (லேசான) அவலை நன்றாக வறுத்துக் கொண்டேன்.

பிறகு துறுவிய தேங்காயையும் வறுத்துக் கொண்டேன்.

வறுத்த அவலை மிக்ஸியில் பொடி செய்து கொண்டேன்.

கொஞ்சம் வெல்லத்தை மிக்ஸியில் பொடி செய்து கொண்டேன். அதிலெயே வறுத்த தேங்காயையும் போட்டு சுற்றி அதனை பொடித்து வைத்த அவலோடு கலந்து கொண்டேன். சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து சூடான நெய் நாலு ஸ்பூன் சேர்த்து அனைத்தையும் கலந்து கைகளில் பிடித்து எடுத்தால் அவல் லட்டு தயார்.

சுவை எப்படி?

என்னுடைய சிக்னேச்சர் டிஷ்ஷான "அவல் புட்டு" எப்படி இருக்குமோ அதே சூப்பர் சுவை.

இப்போது அவல் லட்டு 2.O எப்படியென்று பார்ப்போம்.

அவல் மட்டுமல்லாது, நிலக்கடலை, பொட்டுக்கடலையையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும்,

வெல்லத்திற்கு பதில் சர்க்கரையை பொடி செய்து மாவுக் கலவையுடன் சேர்த்து நெய்யைக் காய்ச்சி ஊற்றி உருண்டை பிடிக்கவும்

அதுதான் அவல் லட்டு 2.O


Wednesday, December 31, 2025

சங்கிகள் வெறுக்கும் "ஆலம்கிர் ஔரங்கசீப்"

 

நூல் அறிமுகம்

 

நூல்                          : ஆலம்கிர் ஔரங்கசீப்

ஆசிரியர்               : புலியூர் முருகேசன்

வெளியீடு              : குறி வெளியீடு,

                                    வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்

விலை                    : ரூபாய் 300.00

 

பிப்ரவரி மாத்த்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கலவரம் வெடித்தது. “சாவா” என்றொரு திரைப்படத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜியை முகலாய மன்னர் ஔரங்கசீப் மிகவும் மோசமாக சித்திரவதைப் படுத்தி கொன்றார் என்று காட்சிப்படுத்தியதைத் தொடர்ந்து வெடித்த கலவரம். அந்த திரைப்படம் மட்டுமல்ல, நாம் பள்ளியில் படித்த பாடப்புத்தகங்கள் கூட ஔரங்கசீப் ஒரு கொடுங்கோல் மன்னர், இசை போன்ற கலைகளை வெறுத்தவர் என்றுதான் கற்றுக் கொடுத்துள்ளது.

 இந்த நூல் ஔரங்கசீப்பின் இன்னொரு பக்கத்தை காண்பிக்கும் நூலாக அமைந்துள்ளது. புனைவு நூலாக இருந்த பின்னும் ஔரங்கசீப் மீது வரலாறு வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு அவர் தரப்பு விளக்கங்களை அளிப்பதாக உள்ளது. ஔரங்க்சீப் வரலாற்றோடு இந்த நூல் சுருங்கி விடவில்லை. கடந்த கால வரலாறு தொடங்கி நிகழ்கால சம்பவங்கள் வரை பலவற்றையும் விவரித்துள்ளது இந்த நாவல்.

 ஔரங்கசீப்பின் வரலாற்றை எழுத வந்த அயர்லாந்து விடுதலைப் போராளி லாவேஜ் மூலம் கதை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. காலத்தை கடந்ததாக லாவேஜின் பயணம் முன்னும் பின்னுமாக அமைந்திருப்பது நூலை மிகுந்த கவனத்தோடு படிக்க வைக்கிறது.  ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த மறுநாள் அமிர்தசரஸில் தொடங்கும் நூல், கும்பமேளா நடக்கும் அலகாபாத் நகரின் யமுனை நதிக்கரையில் நிறைவு பெறுகிறது. இதற்குள்ளாக எத்தனையெத்தனை நிகழ்வுகள்!!!

 ஔரங்கசீப் பக்கம் வருவதற்கு முன்பாக வேறு எவற்றைப் பற்றியெல்லாம் இந்த நாவல் பேசியுள்ளது என்பதை முதலில் பார்ப்போம்.

 ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் காலித் தோட்டாக்களின் குவியல் மீது நிற்கிற லாவேஜிற்கு தன்னுடைய அயர்லாந்து நாட்டு விடுதலைப் போராட்டத்தையும் இங்கிலாந்து ஏகாதிபத்தியம் இப்படித்தானே ஒடுக்கியது என்ற துயரத்தையும் அளிக்கிறது. உத்தம்சிங் இதற்கு பதிலடி தருவான் என்று மைக்கேல் டயரிடமும் சொல்ல வைக்கிறது இந்த படுகொலைக்குக் காரணம் தேசப்பிதாதான் என்று ஒருவர் அங்கே மகாத்மா காந்தி மீது குற்றம் சுமத்துகிறார். யார் அவர் என்று பிறகு பார்ப்போம்.  .

 குஜராத்தில் மேற்கொள்ளும் ரயில் பயணத்தில் ஆச்சாரமான உணவிற்காக மண்ணெணெய் அடுப்பில் சமைப்பதையும் அதில் உள்ள அபாயங்களை விவரிக்கும் போதே கோத்ரா ரயில் விபத்தும் அதைத் தொடர்ந்த குஜராத் கலவரமும் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட்தும் விவரிக்கப்படுகிறது. ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொலையாளிகளிடம் பறி கொடுத்து கூட்டு பாலியல் வன் கொடுமைக்கும் உள்ளாகிய பில்கிஸ் பானுவிற்கு நிகழ்ந்த அராஜகம் இந்த நாவலில் தில்ரஸ் பானுவிற்கு நிகழ்ந்ததாக சொல்லப்பட்டு கண்ணீர் வரவழைக்கிறது.

 காஷ்மீர் நாடோடி இனத்தைச் சேர்ந்த ஆசிபா எனும் சிறுமிக்கு கோயிலுக்குள் நடந்த பாலியல் கொடுமை, கொலை பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.

 வெள்ளையர்களால் நாடு கடத்தப்பட்ட  சிவகங்கை மன்னன்  துரைசாமி பற்றியும் அவரது வீரத்தளபதி சேக் உசேன் பற்றியும் அவர்களின் துயரம் மிகுந்த இறுதி நாட்கள் பற்றியும்  இந்த நூல் விவரிக்கிறது.

 இப்போது ஔரங்கசீப் பற்றி வருவோம். மத வெறியர்களுக்கு அவர் மீது என்ன கோபம்? கணவன் இறந்தால் மனைவி உடன் கட்டை ஏறும் “சதி” க்கு எதிராக உத்தரவிட்டதன் மூலம் பிரச்சினை தொடங்குகிறது. வாரணாசி விஸ்வநாதர் கோயிலை அவர் இடிக்க உத்தரவிட்டார் என்றொரு குற்றச்சாட்டு பேசப்படுகிறதே தவிர கோயிலுக்கு வந்த கட்ச் ராணி கோயில் புரோகிதர் ஒருவரால் கடத்தப்பட்டு கோயில் நிலவறையில் பாலியல் கொடுமைக்கு உள்ளானதன் எதிர்வினைதான் அந்த நடவடிக்கை என்பதைப் பற்றி பேசப்படுவதில்லை என்று இந்த நூல் சொல்கிறது. தன் மனைவிக்காக ருத்ர வீணை என்ற வாத்தியத்தில் ஆஹிர் பைரவ் எனும் ராகம் இசைக்கிற கலைஞராகவும் அவரை இந்த நாவல் காண்பிக்கிறது.

 தண்ணீரின் வேகத்தால் கோதுமை மாவு அறைக்கும் இயந்திரம், காப்பியின் அறிமுகம் போன்ற பகுதிகள் சுவாரஸ்யமான கற்பனைகள்.

 ஔரங்கசீப் – சிவாஜி உறவு பற்றியும் விரிவாக இந்த நூல் பேசுகிறது. சிவாஜி அரசனாக முடியேற்க முதலில் யார் ஆட்சேபித்தார்களோ, அவர்களேதான் இருவருக்கும் இடையில் பிரச்சினைகள் வளர காரணமாக இருந்தார்கள் என்பதையும் சொல்கிறது. அது மட்டுமல்ல அதை செய்வதாக ஒரு பாத்திரம் வருகிறது. அந்த பாத்திரம் விக்ரம் ஜோஷி.

 இன்று இந்தியாவில் மக்களிடையே பிரிவினையை தூண்டும் பரிவாரத்தைத்தான் ஜாலியன் வாலாபாக்கில் மகாத்மா காந்தி மீது பழி போடுவதில் தொடங்கி காலம் தோறும் வரும் விக்ரம் ஜோஷியை சித்தரித்துள்ளார். லாவேஜ் யமுனை நதிக்குள்ளாக விக்ரம் ஜோஷியை கொலை செய்து புதைத்தாலும் அவன் மீண்டும் எப்போது எந்த வடிவில் வருவானோ என்ற அச்சத்துடன் நாவலை நிறைவு செய்கிறார். மத வெறி அபாயம் இன்னும் தொடர்கிறது அல்லவா! ஔரங்கசீப்பிற்கு நற்சான்றிதழ் கொடுப்பது போல இந்த நாவல் அமைந்துள்ளதோ என்றொரு சிந்தனை எழலாம். பல நூறு ஆண்டுகளாக பல்வேறு படைப்புக்கள் மூலம் அவர் அவதூறு செய்யப்பட்டுள்ள போது, அவர் புகழ் பாடத்தான் ஒரு நூல் இருக்கட்டுமே!

 சரியான சமயத்தில் சரியான படைப்பை நல்லதொரு மொழியில் வழங்கிய தோழர் புலியூர் முருகேசனுக்கு வாழ்த்துக்கள்.

-         வேலூர் சுரா


"காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதியது.  

-          

 


Tuesday, December 30, 2025

கான்பூர்- புதுடெல்லி - நாக்பூர்

 



2007 ல் 21 வது மாநாடு கான்பூர் நகரில் நடைபெற்றது. நாங்களும் சேலம் கோட்டத் தோழர்களும் ஆக்ரா சென்று தாஜ் மஹாலைப் பார்த்து விட்டு பின்பு இன்னொரு ரயில் மூலமாக கான்பூர் செல்வதென்று திட்டமிட்டு புறப்பட்டோம். நாங்கள் ஆக்ரா சென்ற வெள்ளிக்கிழமையன்று தாஜ்மஹால் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று எங்களுக்கு தெரியாது. ஷாஜஹான் சிறை வைக்கப்பட்ட செங்கோட்டையிலிருந்து அவரைப்போலவே தூரத்திலிருந்து தாஜ் மஹாலை பார்த்து மனதை தேற்றிக் கொண்டோம்.

பொது உடமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் சுபாஷினி அலி வரவேற்புக்குழுவின் தலைவர். விடுதலைப் போராட்ட வேங்கை தோழர் கேப்டன் லட்சுலி அவர்களின் வருகையே மிகுந்த உற்சாகமளித்தது. பத்திரிக்கையாளர் திரு சாய்நாத் மாநாட்டை துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  இம்மாநாட்டிற்காக தற்காலிக அரங்கம் உருவாக்கப் பட்டது. 

நேரடி ரயில் இல்லாததால் ஜான்சி வந்து வேறு ரயிலை பிடித்து திரும்பினோம். புறப்படும் போது வெள்ளை வெளேர் என்றிருந்த டாடா சுமோ ஜான்சியை வந்தடைந்த போது பழுப்பு நிறமாக மாறியிருந்தது. சாலையில் அவ்வளவு புழுதி.அதுதான் உத்திரப்பிரதேசத்தின் சிறப்பு. 




தோழர் அமானுல்லா கான் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 





22 வது பொது மாநாடு 2010 நவம்பரில் புதுடெல்லியில் நடைபெற்றது. இம்முறையும் ஆக்ரா சென்று தாஜ் மஹால் பார்க்கவும் அந்த நாள் வெள்ளிக்கிழமை இல்லாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டோம். ஒரு டிராவல் ஏஜென்சியோடு முன்பே பேசி முன்பதிவு எல்லாம் செய்திருந்தோம். ஆனாலும் எங்களை ஆக்ராவில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யாமல் அந்த ட்ராவல் ஏஜென்சி டெல்லி வரச் சொல்லி சொதப்பி  ரயிலின் கால தாமதம், போக்குவரத்து இடையூறு ஆகியவற்றால் நாங்கள் தாஜ்மஹால் சென்ற நேரத்தில் கதவுகளை அடைத்துக் கொண்டிருந்தார்கள். தன் முயற்சியில் சற்றும் தளராத தோழர்கள், டெல்லி வந்த பின்பு வெள்ளி நள்ளிரவில் தனி வேனில் ஆக்ரா புறப்பட்டு பேரணி துவங்கும் முன்பாக தாஜ் மஹால் பார்த்து விட்டு திரும்பினார்கள். அந்த பயணத்தில் எங்களுக்கு கைப்பிள்ளையாக திகழ்ந்தவர் மூத்த தோழர் வி.ஆர்.ராதாகிருஷ்ணன்.

ஒரு சிறப்பான பேரணிக்குப் பின்பு ராம்லீலா மைதானத்தில் துவக்க விழா நடைபெற்றது. திரிபுரா முதல்வர் தோழர் மாணிக் சர்க்கார் மாநாட்டை துவக்கி வைத்தார். அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்காக தயாரிக்கப்பட்ட சிரிஃபோர்ட் அரங்கில்தான் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. 

பஞ்சாபின் பாங்க்ரா நடனம், கவாலி இசை என்று கலை நிகழ்ச்சிகள் அட்டகாசமாக இருந்தது. தகுதி காண் அறிக்கை தயாரிக்கும் மகுழுவில் நான் இடம் பெற்றிருந்தேன். எங்கள் தென் மண்டலத் தோழர்களின் படிவங்களை சேகரித்துக் கொடுத்ததைத் தவிர வேறு பணி எதுவும் நான் செய்யவில்லை. இப்போதைய தென் மத்திய மண்டலத் தலைவரும் அன்றைய ராஜமுந்திரி கோட்டச் செயலாளருமான தோழர் பி.சதீஷ்,தன் கோட்டத் தோழர்களின் உதவியோடு அறிக்கையை தயார் செய்தார். 

மாநாட்டில் தோழர் என்.எம்.சுந்தரம் கௌரவிக்கப்பட்டார். உணர்ச்சி பொங்கிய, நெகிழ்வான தருணமாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது.




மாநாடு முடிந்து பாலிகா பஜார் சென்று ஷாப்பிங் முடித்து தங்குமிடத்தில் இருந்து பெட்டிகளை எடுத்து புறப்பட்டோம். ஆட்டோவில் சென்றால் மாட்டிக் கொள்வீர்கள் என்று டெல்லி தோழர்கள் அருகில் இருந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் உணவுப் பொட்டலங்களோடு கொண்டு சேர்த்தார்கள். நியூ டெல்லி ரயில் நிலையத்திற்கு முந்தைய நிறுத்தத்தில் ஏறிய கும்பலால் நாங்கள் உள்ளே தள்ளப்பட்டோம். நியூ டெல்லி ரயில் நிலையத்தில் என்னாலும் திருப்பத்தூர் தோழர் சி.செல்வத்தாலும் இறங்க முடியவில்லை. அடுத்த நிறுத்ததில் இறங்கி எதிர் திசையில் செல்லும் ரயிலில் ஏறி வந்து சேர்ந்தோம்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் செல்லும் பிளாட்பாரத்திற்கு செல்லவே பதினைந்து நிமிடங்கள் ஆகி விட்டது. அங்கிருந்து எங்கள் பெட்டி இருக்கும் இடம் செல்ல இன்னொரு பத்து நிமிடம். ரயிலில் ஏறி  பெட்டிகளை அடுக்கி வைக்கவும் ரயில் புறப்படவும் சரியாக இருந்தது. 








23 வது மாநாடு ஜனவரி 2014 ல் நாக்பூரில் நடைபெற்றது. முதல் நாள் மதியமே சென்ற நாங்கள் மாலை அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய தீட்சா பூமிக்கு சென்று வந்தோம். 

நாக்பூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில்தான் எங்களுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணியில் வேலூர் கோட்டத் தோழர்கள் வெள்ளை சட்டை, வேட்டியில் நடை போட்டோம். தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டை துவக்கி வைத்தார். "தலைவர்கள் முக்கியமா, கொள்கைகள் முக்கியமா?" என்ற முக்கியமான கேள்வியை அவர் எழுப்பினார். இன்றளவும் இந்திய மக்கள் புரிந்து கொள்ளாத விஷயம் அது. 


அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்க இந்த முறை எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 



தோழர் வி.ரமேஷ் புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இம்மாநாடு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 

முதல் முறையாக ஒரு மகளிர் தோழர் அகில இந்திய செயலகத்தில் இடம் பெற்றார். தோழர் எம்.கிரிஜா அகில இந்திய இணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இறுதி நாள் மாநாடு முடிந்து புறப்பட்ட அனைவருக்கும் நாக்பூரின் பிரசித்தி பெற்ற ஆரஞ்சு சோன்பப்டியை நாக்பூர் கோட்டச் சங்கம் கொடுத்தனுப்பியது. 

இரண்டு மாதங்கள் முன்பு முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டுக்கள், கடைசி வரைக்கும் காத்திருப்போர் பட்டியலிலேயே இருந்தது. வேறு வழியின்றி தட்காலில் பதிவு செய்து வீடு திரும்பினோம். 

Monday, December 29, 2025

சென்னையிலிருந்து ராய்ப்பூர் வழியாக பெங்களூர்

 



பொன் விழா ஆண்டு மாநாடாக புத்தாயிரத்தாண்டில்  டிசம்பரில் நடைபெற்றது. இம்மாநாட்டை ஒட்டி குமரியிலிருந்தும் கூடலூரிலிருந்தும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கூடலூரிலிருந்து திருப்பூர் வரைக்கும் பின்பு திருப்பத்தூரிலிருந்து திருத்தணி வரையிலும் பிரச்சாரத்திலும் கலந்து கொண்டேன். தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநாட்டை துவக்கி வைத்தார். பேரணி பிரம்மாண்டமாக அமைந்திருந்தது. எங்கள் கோட்டத்திலிருந்து இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். வேலூரிலிருந்து மட்டும் மூன்று வேன்களில் சென்றிருந்தோம். நான் முதன் முதலில் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது இம்மாநாட்டில்தான். 




அதற்கடுத்த மாநாடு சத்திஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில்.  மிக நீண்ட பயணம் மேற்கொண்டோம். மாநாடு தொடங்குவதற்கு முதல் நாளே சென்றோம். அது போல ஒரு நாளைக்குப் பிறகே புறப்பட்டோம். அன்றாட ரயில்கள் கிடையாது. வாராந்திர ரயில்கள் மட்டும்தான். முன்னாள் பிரதமர் திரு வி.பி.சிங் கலந்து கொண்ட மாநாடு இது. மறைந்த தோழர் சன்யால் அவர்களின் அஞ்சலி பதிவில் பல விபரங்களை எழுதி இருந்தேன்.  அதன் இணைப்பு கீழே. கொஞ்சம் படித்து விடுங்களேன்.


இடியாய் தாக்கிய இரட்டைத் துயரம்

இம்மாநாட்டில் தோழர் என்.எம்.சுந்தரம் தலைவராகவும் தோழர் கே.வேணுகோபால் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அகில இந்திய தலைமையகம் சென்னையிலிருந்து ஹைதராபாத் நகருக்கு மாற்றப்பட்டது.

அறிக்கை மீதான விவாதத்தில் நான் பேசியிருக்க வேண்டும். நேரமின்மை காரணமாக அந்த வாய்ப்பு பறிபோனது. 

அறிக்கை மீதான விவாதத்தில் ஒடிஷாவின் சம்பல்பூர் கோட்டத்தின் அமைப்புச் செயலாளராக இருந்த ஒரு இளம் தோழர் ஒரு கலக்கு கலக்கினார். 

அவர்தான் இன்றைய அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா.

எங்கள் கோட்டக்குழுவின் இடம் பெற்று எங்களை உற்சாகப்படுத்திய (அதாவது ஓட்டுவதற்கு கண்டெண்ட் கொடுத்து)  தோழர்கள் ஆர்.சிவகுமார், கே.ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் இப்போது இல்லாதது ஒரு துயரம். 



மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாநாடு. வரவேற்புக்குழுவின் செயலாளராக செயல்பட்டவர், இந்தியாவின் முதல் பெண் கோட்டப் பொதுச்செயலாளர், பெங்களூர் கோட்டம் 1 ன் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.கே.கீதா. 

சுனாமியில் தந்தையை இழந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணின் கல்விக்காக நாங்கள் தயாரித்திருந்த சுனாமி நிவாரணப் பணிகள் குறித்த காணொளியை தோழர் என்.எம்.எஸ் வெளியிட தோழர் கே.வேணுகோபால் பெற்றுக் கொண்டார். அரங்கில் அது பின்னர் ஒளிபரப்பானது. அந்த பெண்ணின் கல்விக்காக மூத்த தலைவர் தோழர் சந்திரசேகர் போஸ் எங்களை தேடி வந்து ரூபாய் 500 கொடுத்த போது மிகவும் பெருமையாக இருந்தது. 



இம்மாநாட்டின் தீர்மானக்குழுவில் நான் இடம் பெற்று சில தீர்மானங்களை முன் மொழியும் வாய்ப்பு கிடைத்தது. 

Sunday, December 28, 2025

பெருமையாக இருக்கிறது.


 முன்னாள் ராணுவ வீரர், அஞ்சல் துறை ஊழியர், தொழிற்சங்கத் தலைவர், மிகச்சிறந்த எழுத்தாளர், அறிவொளி இயக்க செயற்பாட்டாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக, தலைவராக, மதிப்புறு தலைவராக செயல்பட்டு அந்த இயக்கத்தின் ஆணிவேராக திகழ்பவர், "திருப்பி அடித்த கதை" என்ற பெயரில் தஞ்சை மாவட்ட செங்கொடி இயக்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளவர், மகளிர் உரிமைகளுக்காக போராடுபவர், சிறப்பான வகுப்பாசிரியர், இந்தாண்டு சாகித்ய அகாடமி விருதிற்காக ஒரிஜினலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோழர் ச.தமிழ் செல்வன்.

அவருடைய முக நூல் பக்கத்தில் இந்த படத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.

ஆம், எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தால் வெண்மணி புதிய நினைவகத்திற்கு வழங்கப்பட்ட தியாகிகள் நினைவுச் சின்னத்தின் முன்பாக எடுத்துக் கொண்ட படத்தைத்தான் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

அது எங்களுக்கு பெருமையாக உள்ளது.

பிகு: மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிமுகத்தை தோழர் தமிழ்ச்செல்வன் விரும்ப மாட்டார்.  அவர் விருதுக்கு தேர்வாகியுள்ளார் என்ற செய்தி வெளியானதும் வன்மத்தை அள்ளித்தெளித்த சில வயிற்றெரிச்சல் பேர்வழிகளுக்காக இப்பதிவு. 

அகமதாபத்திலிருந்து ஹைதராபாத் வரை


 



1994 ன் துவக்கத்தில் அகமதாபாத் நகரில் நகரில் நடைபெற்ற பதினைந்தாவது மாநாடு, நான் கலந்து கொண்ட இரண்டாவது அகில இந்திய மாநாடு.

மாநாட்டுக்கு புறப்படும் நாளன்று எங்கள் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அவர்களின் தாயார் காலமாகி விட அவரால் வர இயலவில்லை. தலைமையகத்திலிருந்து கலந்து கொண்ட ஒரே பொறுப்பாளர் நான் மட்டுமே. இந்த மாநாடு 1993 ஜனவரியில் நடந்திருக்க வேண்டும். 6, டிசம்பர், 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் வட இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்ற கலவரங்களின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு ஒரு வருடத்திற்குப் பின்பே நடந்தது. 

மும்பை தாதர் வரை ஒரு ரயில், பிறகு அகமதாபாத் வரை இன்னொரு ரயில். மாநாட்டு அறிக்கைகளை தாதர் ரயில் நிலையத்தின் ஒரு ப்ளாட்பார்மிலிருந்து நீண்ட தூரத்திலிருந்த இன்னொரு பிளாட்பார்மிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்த பணி எங்கள் கோட்டத்திற்கு கொடுக்கப்பட்டது. ட்ராலியில் எடுத்துச் செல்ல சொத்தயையே கேட்க மறைந்த தோழர்கள் சிவகுமாரும் மனோகரும் காலியாய் இருந்த ஒரு ட்ராலியை எங்கிருந்தோ எடுத்து வர நாங்கள் தள்ளிக் கொண்டு சென்றோம். 

அந்த மாநாட்டில் ஒரு கின்னஸ் சாதனை நிகழ்ந்தது. ஆமாம். நிகழ்ச்சி நிரலில் தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு நன்றியுரை என்று சொல்லப்பட்டிருந்தது. இன்சூரன்ஸ் துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று மல்கோத்ரா குழு பரிந்துரை அளித்திருக்க தோழர் என்.எம்.எஸ் ஒரு மணி நேரம் நன்றியுரை ஆற்றினார். மாநாட்டை துவக்கி வைத்தவர் (பெயர் நினைவில் இல்லை) ஒரு பொருளாதார டாக்டர். அந்த டாக்டரையும் அன்றைய நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கையும் ஒப்பிட்டு தோழர் என்.எம்.எஸ் பேசியதை கேட்டிருந்தால் மன்மோகன்சிங் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஓடியிருப்பார். 

 பணி ஓய்வுக்குப் பிறகும்  நீண்ட காலம் தலைவராக செயல்பட்ட , இன்றைக்கும் பிதாமகராக வழிகாட்டி வரும் தோழர் சந்திரசேகர் போஸ் அந்த  மாநாட்டில் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தோழர் சரோஜ் சவுத்ரி புதிய தலைவரானார். 

மாநாடு நிறைவுற்ற மறு நாள் நாங்கள் சபர்மதி ஆஸ்ரம் சென்றோம். காந்தியடிகள் கொல்லப்பட்டபோது அணிந்திருந்த உடை என்று ரத்தக்கறையுடன் ஒரு ஆடை அங்கே இருந்தது. இது போலவே மதுரை காந்தி மியூசியத்திலும் இருக்கிறதே, இது எப்படி சாத்தியம் என்று அருகில் இருந்த எங்கள் கோட்டத் துணைத்தலைவர் தோழர் புதுவை ஆர்.பி.எஸ் அவர்களிடம் கேட்க ஒரு வாலிபர் அங்கே வந்து "பாபு இங்கே இன்னமும் உயிருடன் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். தயவு செய்து சத்தம் போடாதீர்கள்" என்று மென்மையாக கடிந்து கொண்டார்.  

இப்போதைய மத்தியரசு மகாத்மாவின் பெயரை வேலை உறுதிச் சட்டத்திலிருந்து நீக்கியதை அறிந்திருந்தால் அந்த வாலிபர் என்ன செய்திருப்பாரோ!



அடுத்தது மதுரையில் பதினாறாவது மாநாடு, 1996 ன் இறுதியில்.

மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்க மதுரை, கோவை, சென்னைக் கோட்டங்கள் போட்டியிட தென் மண்டல செயற்குழுக் கூட்டத்தில் அதிக வ்பாக்குகளைப் பெற்று வென்றது மதுரை. அந்த  செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற கிளை 1 வளாகத்தில்தான் இப்போது தீ விபத்து ஏற்பட்டு முதுநிலை கிளை மேலாளர் திருமதி கல்யாணி நம்பி இறந்து போனார்.

இந்த மாநாட்டிற்கு முன்பாக நான்கு  முனைகளிலிருந்து வேன் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதில் இரண்டு வேன்கள் எங்கள் கோட்டம் வழியே பயணித்தது. அரக்கோண்த்திலிருந்து அரியலூர் வரையிலான பிரச்சாரத்திற்கு பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் பொறுப்பேற்க நானும் கோட்டத் துணைத்தலைவர் ஆர்.முருகேசனும் திண்டிவனத்திலிருந்து சீர்காழி வரை சென்றோம். 

கொட்டும் மழையின் ஊடே பிரச்சாரம் நடைபெற்றது. மக்கள் மத்தியில் எப்படி பேசுவது என்ற பயிற்சிக் களமாக அந்த பிரச்சாரம் அமைந்திருந்தது.  

மேற்கு வங்க நிதியமைச்சர்  டாக்டர் அசிம்தாஸ் கப்தாவும் மக்களவை உறுப்பினர் தோழர் பாசுதேவ் ஆச்சார்யாவும் துவக்க நிகழ்வில் பேசி இருக்க வேண்டும். மழை காரணமாக விமானங்கள் ரத்தானதால் இருவராலும் வர இயலவில்லை. முதுபெரும் பொது உடமை இயக்கத் தலைவர் தோழர் ஆர்.உமாநாத் மாநாட்டை துவக்கி வைத்தார்.

இம்மாநாட்டில் தோழர் சரோஜ் தலைவர் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொள்ள பஞ்சாப் சிங்கம் தோழர் ஆர்.பி.மான்சந்தா புதிய தலைவரானார்.  அன்றைய தேதியில் மிகவும் இளையவரான தோழர் கே.வேணுகோபால் இணைச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

"இந்த இளைஞன் அகில இந்திய செயலகத்தில் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று நான் சொன்னவுடனேயே தன் இணைச்செயலாளர் பொறுப்பை துறக்க முன்வந்த தென் மத்திய மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் சுகுனாகர் ராவ்வை நாம் பாராட்ட வேண்டும்" என்று தோழர் என்.எம்.சுந்தரம் சொல்ல, அரங்கம் கரவொலிகளால் அதிர்ந்தது. 


முதல் இரண்டு மாநாடுகளில் பார்வையாளராக கலந்து கொள்ள இம்மாநாட்டில்தான் முதல் முறையாக பிரதிநிதியாக கலந்து கொண்டேன். என் மனைவி பார்வையாளராக பங்கேற்றார். எங்கள் மகனை கும்பகோணத்திலிருந்த மாமனார் வீட்டில் விட்டு விட்டு நாங்கள் மாநாட்டில் பங்கேற்றோம். 




அடுத்த மாநாடு ஹைதராபாத் நகரில். இந்து ஆசிரியர் தோழர் என்.ராம் துவக்கி வைத்தார். ஒரு நாள் முன் கூட்டியே வந்து விட்டதால் கோல்கொண்டா கோட்டை, சாலார் ஜங் மியூசியம் எல்லாம் சென்றோம். இன்சூரன்ஸ் மசோதாவிற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று இம்மாநாட்டில்தான் முடிவெடுக்கப்பட்டது. எண்ணற்ற செயல்வீரர்களை அடையாளம் காண்பித்தது  இந்த கையெழுத்து இயக்கம்தான், 

மாநாடு முடிந்து திரும்பும் போது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் ஏற்பட்டது. 

வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய காலத்தில் அந்த சம்பவத்தை எழுதியுள்ளேன்.  வழி மறித்த உளவுத்துறை  என்ற அந்த பதிவை இணைப்பின் மூலம் படித்து விடவும்.