Sunday, January 18, 2026

தமிழ்நாட்டு முதல்வருக்கு நன்றியும் பாராட்டுக்களும் . . .

 



சாகித்ய அகாடமி விருதுகள் இறுதி செய்யப்பட்ட நிலையில் மோடி அரசின் கலாச்சாரத்துறை அராஜகமாக செயல்பட்டு விருதுக்கான அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளது.

இச்சூழலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழ் எழுத்தாளர்களுக்கு சர்வதேச அளவிலான விருதுகளை அறிவிக்க வேண்டும் என்று  மாநில அரசிடம்  கோரிக்கை வைத்தது. 

அந்த கோரிக்கை  இன்று ஏற்கப்பட்டுள்ளது.

தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஒடியா, வங்காளம்  ஆகிய மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் வருடம் தோறும் செம்மொழி விருது அளிக்கப்படும் என்றும் ஐந்து லட்ச ரூபாய் ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த முடிவை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். நன்றி சொல்கிறேன். 

இலக்கியத்தில் கூட கேடு கெட்ட சங்கி அரசியலை செய்யும் மோடி அரசின் செவிட்டில் விழுந்த அடி இது. 

இதே போன்றதொரு கோரிக்கையை தானும் வைத்ததாக எழுத்தாளர் இமையம் முகநூலில் எழுதியிருந்தார்.

எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கம்டூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் கே.சுவாமிநாதன் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். 

நச்சென்ற அந்த பின்னூட்டம் கீழே

உங்கள் கோரிக்கையும்
தமுஎகச கோரிக்கையும்
காலத்தே ஆற்றிய வினை.
கருத்துச் சுதந்திரத்தின்
கள்வர்களுக்கு
வைத்த கடும் சூடு.

எனக்கு ஒரே ஒரு அச்சம்தான்.

புளிச்ச மாவு ஆஜான், சோ.அதர்மன், மாலன் போன்றோர் ஏதேனும் மோசடிகள் செய்து இந்த விருதுகளை பெற்று விடுவார்களோ என்பதுதான். 

தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் கலைஞர் கருணாநிதியையும் வசை பாடி "சூல்" நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மனுக்கான வீட்டுக்கான ஆவணங்களை முதல்வரே நேரில் வழங்கியது எனக்கு இன்னும் எரிச்சலாகவே இருக்கிறது. 

அவங்க கல்விக் கொள்ளையர்கள் யுவர் ஆனர்

 


தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் தன் வளாகத்திற்கு அருகாமையில் உள்ள 31 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து எண்ணற்ற கட்டுமானங்களை செய்து விட்டது.

திறந்த வெளி சிறைச்சாலைக்காக அரசு முடிவெடுத்திருந்த இடம் அது. அங்கே அத்து மீறி நுழைந்து ஆக்கிரமித்தது சாஸ்த்ரா. 

அந்த இடத்தை மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டங்கள் நடத்துகின்றன.







அரசு நீதிமன்றம் செல்கிறது. இருபதாண்டுகள் நடந்த சட்டப் போராட்டத்தின் விளைவாக அந்த இடத்தை மாநில அரசு கையகப் படுத்திக் கொள்ளச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளிக்கிறது.

நாங்கள் ஆக்கிரமித்த இடத்திற்கு பதிலாக அதே நெடுஞ்சாலையில் வேறு இடத்தை தருகிறோம்.

அந்த இடத்திற்கான விலையை கொடுத்து விடுகிறோம்.

வேறு ஏதாவது இடத்தைக் கூட தர தயாராக இருக்கிறோம் 

என்று மூன்று ஆப்ஷன் இருப்பதாக சாஸ்த்ரா சொல்ல சட்ட விரோத செயலை செய்த உனக்கு ஆப்ஷன் கொடுக்க எல்லாம் உரிமை கிடையாது. முதலில் அங்கிருந்து வெளியேறு என்று சொன்னது உயர் நீதிமன்றம்.





ஆஹா, அதிசயம் நடந்துள்ளதே என்று ஆச்சர்யப்பட வேண்டாம்.

வழக்கு உச்ச நீதிமன்றம் சொன்னது.

"அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்கிறார்கள். அரசால் அவர்கள் போல செயல்பட முடியுமா? அவர்கள்தான் மூன்று ஆப்ஷன் அளிக்கிறார்களே, அதை ஆய்வு செய்வதில் அரசுக்கு என்ன கேடு? இந்த மூன்றில் எதை ஏற்கிறார்கள் என்று சொல்லுங்கள். அவர்கள் தொழிற்சாலை நடத்தி லாபம் சம்பாதிக்கவில்லை. பல்கலைக்கழகம் நடத்தி கல்வியை பரப்புகிறார்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டும்?

இதெல்லாம் நம் தற்போதைய தலைமை நீதிபதி உதிர்த்த முத்து.

அவர்கள் செய்தது சட்ட விரோத ஆக்கிரமிப்பு என்பதை நீங்கள் உணரவே இல்லையா? தொழிற்சாலை மூலம் வரும் லாபத்தை விட பல மடங்கு லாபல் கல்வி வணிகம் மூலம்தான் வருகிறது என்பது கூட தெரியாத அப்பாவியா நீங்கள்? அவர்கள் கல்வி வள்ளல்கள் அல்ல, கல்விக் கொள்ளையர்கள். அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை நீங்கள் சொல்வது துரதிர்ஷ்டவசமானது யுவர் ஆனர். 


பிகு: மேலே உள்ள படங்களை தஞ்சை வழக்கறிஞரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான தோழர் வெ.ஜீவக்குமார் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளேன். 

Saturday, January 17, 2026

மீண்டும் கொல்லப்பட்டார் கௌரி லங்கேஷ்

 


மத வெறியர்களுக்கு எதிராக எழுதியதால் சமூக செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் சங்கிகளால் கொல்லப்பட்டார். 

எட்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற அவரது கொலை நாடெங்கிலும் அதிர்ச்சியலைகளையும் கொந்தளிப்பையும் உருவாக்கியது.

இன்று அவர் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட்டுள்ளார்.

ஆமாம்.

அவரை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவனான, பிணையில் உள்ள ஸ்ரீகாந்த் பங்கர்கர், மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் ஜல்னா என்ற நகராட்சியில் கவுன்சிலராக சுயேட்சை வேட்பாளராக வென்றுள்ளான்.



இந்த முறை கௌரி லங்கேஷை அவன் மட்டும் கொல்லவில்லை. அவனுக்கு வாக்களித்த மக்களும் சேர்ந்து கொன்றுள்ளனர்.

கொலையாளிக்கு வாக்களித்தவர்களும் குற்றவாளிகள்,

மன்னிக்க முடியாத குற்றவாளிகள் 

சுற்றுச் சூழலா? கோடிகள்தானே முக்கியம் மைலார்ட்?

 


"இப்போதெல்லாம் நீதிபதிகள் தீர்ப்புக்களை எழுதுவதில்லை. பணி ஓய்வுக்குப் பிந்தைய பதவிகளுக்கான நுழைவுத் தேர்வை எழுதுகிறார்கள்."

இன்றைய  நீதித்துறை மீது  வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இது.  

பணி ஓய்வுக்குப் பிறகு நான் எந்த பதவியையும் நாட மாட்டேன் என்று சொன்ன தலைமை நீதிபதி தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு விட்டாரோ என்று சந்தேகமளிக்கும் வகையில் ஒரு தீர்ப்பினை அளித்துள்ளார்.  சொல்லப்போனால் உச்ச நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பை திரும்பப் பெற்றுள்ளார்.

எந்த ஒரு பெரிய தொழிற்சாலையோ அல்லது வேறு எந்த பெரிய கட்டுமானப் பணியோ செய்தால் அதற்கு சுற்றுச் சூழல்  அனுமதி பெற வேண்டும் என்பது விதி. அப்படி அனுமதி பெறாத கட்டுமானங்களை இடித்துத் தள்ள வேண்டும் என்பதும் விதி. 

மோடி ஆட்சிக்கு வந்ததும் 2017 ல் ஒரு அரசாணை வெளியிடுகிறார்கள். அதன் படி சுற்றுச் சூழல் அனுமதி இல்லாவிட்டாலும் கட்டுமானப் பணி முடிந்து விட்டால் முன் தேதியிட்ட அனுமதி கொடுக்கலாம் என்பதே அந்த ஆணை. இந்த ஆணை 2018 வரை நீடிக்கிறது.

அப்படியென்றால் 2018 க்குப் பிறகு சுற்றுச்சூழல் அனுமதியோடுதான் கட்டுமானங்கள் நடந்ததா?

அதெப்படி நடக்கும்.

2017 போல 2021 லும் இன்னொரு அரசாணை வெளியிட்டு கட்டுமானத்துறை மாஃபியாக்களின் வயிற்றில் பாலை வார்த்தது மோடி அரசு.

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இவ்வாறு முன்தேதியிட்ட  அனுமதி கொடுப்பது சரியல்ல என்று ஒரு வழக்கு தொடரப்பட மே 2025 ல் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு 2017, 2021 அரசாணைகளை ரத்து செய்து அனுமதி பெறாமல் செய்யப்பட்ட கட்டுமானங்களை இடிக்குமாறு உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட் மாஃபியா மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல மூன்று பேர் அமர்வு விசாரிக்கிறது. ஒரு நீதிபதி முந்தைய தீர்ப்பு செல்லும் என்று சொல்ல தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதியும் மே 2025 தீர்ப்பை திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன தெரியுமா?

அனுமதி பெறாத கட்டுமானங்களை இடித்தால் அவற்றுக்காக முதலீடு செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வீணாகி விடுமாம். 

அதாவது சுற்றுச் சூழலை பாதுகாப்பதை விட, சட்டங்களையும் விதிகளையும் காப்பதை விட சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் முதலீடு செய்து கொண்ட ரியல் எஸ்டேட் மாஃபியாவின் நலனே முக்கியம். 

அநேகமாக நாளை போதைப் பொருட்களின் கடத்தலை நியாயப்படுத்தக் கூட ஏதாவது அரசாணை வெளிவரலாம். அதுவும் அதானியின் துறைமுகம்தான் போதைப் பொருள் கடத்தலின் கேந்திரமாக உள்ளது.  அப்படிப்பட்ட அரசாணை வந்தாலும் அதைப் பாதுகாக்கத்தான் இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

பிகு: இப்பதிவை எழுதி ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. கிட்டத்தட்ட இதே போன்றதொரு சட்ட விரோத கட்டுமானத்திற்கு பாதுகாப்பளிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதால் நீண்ட காலமாக ட்ராப்டிலேயே இருந்த பதிவை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்திய தீர்ப்பைப் பற்றி மாலையில் எழுதுகிறேன்.

Friday, January 16, 2026

எம் நினைவுகளில் எந்நாளும் வாழ்வீர்கள் . . .

 



இன்றைய நாள் ஒரு துயரச் செய்தியுடன் விடிந்தது. 

எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிதாமகர், நிறுவனத் தலைவர்களில் ஒருவர்,  1955 முதல் 1994 வரை பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தலைவர் ஆகிய பொறுப்புக்களில் அகில இந்திய இன்சூரனஸ் ஊழியர் சங்கத்தை வழி நடத்தியவர். 

செப்டம்பர் 1957 ல் இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழ் தோழர் சந்திரசேகர போஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வரத் தொடங்கியது. இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழ் நவம்பர் 1997 ல் சென்னையிலிருந்து வெளிவர தொடங்கும் வரை நாற்பதாண்டுகள் அதன் ஆசிரியராக செயல்பட்டவர்.

ஹிந்துஸ்தான் கோவபரேட்டிவ் என்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். அங்கேயிருந்த சங்கத்திற்கு வேகம் கொடுக்கிறார். சுரண்டலுக்கு எதிராக போராட்டத்தை துவக்குகிறார். போனஸ் கோரிக்கைக்காக  போராட்டம் நடக்கிறது. ட்ரிப்யூனலுக்கு பிரச்சினை செல்கிறது. லாபம் இல்லை என்று நிர்வாகம் பொய்க்கணக்கு காண்பிக்கிறது. மிகுந்த சிரமத்துடன் உண்மையான கணக்குகளை போட்டோ எடுத்து ட்ரிப்யூனலிடம் சமர்ப்பிக்கிறார். நிர்வாகம் மட்டுமல்ல ட்ரிப்யூனலின் நீதிபதி கூட இது துரோகம் என்று கொந்தளிக்கிறார். அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். என்னை என்ன வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள், ஊழியர்களுக்கு நியாயமான போனஸை அளியுங்கள் என்பதே அவர் நிலையாக இருந்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீண்டும் ஊழியர்களின் போராட்டத்தால் பணியில் இணைகிறார்.

நாடெங்கிலும் இருந்த பல்வேறு இன்சூரன்ஸ் கம்பெனிகளின் சங்கங்களை ஒன்றிணைத்து ஒரு அகில இந்திய அமைப்பை உருவாக்க ஒரு கூட்டம் பம்பாய் நகரில் நடந்த போது மேற்கு வங்க ஊழியர்களின் சார்பாக அவர் கல்கத்தாவிலிருந்து பம்பாய் செல்கிறார். 01.07.1951 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் உருவாகிறது. அகில இந்திய செயற்குழு உறுப்பினராகிறார் தோழர் போஸ். 1953 ல் முதல் மாநாடு. 1955 ல் இரண்டாவது மாநாடு. அம்மாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலாளராகிறார் தோழர் போஸ்.

இதற்கிடையில் 1954 ல் ஒரு சம்பவம். மெட்ரோபாலிடன்  இன்சூரன்ஸ் கம்பெனி என்ற தனியார் கம்பெனியில் சங்கம் அமைக்க முயற்சித்த 55 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட அங்கே கல்கத்தா நகர இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக தோழர் சந்திரசேகர் போஸ் மற்றும் பின்னாளில் சங்கத்தை பொதுச்செயலாளராக வழி நடத்திய தோழர் சரோஜ் சவுத்ரி ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.  கீழமை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

1956 ல் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமயமாக்கப்பட்ட போது அதனை வரவேற்று அகில இந்திய இன்சூர்ன்ஸ் ஊழியர் சங்கம் தந்தி அனுப்பியது. அனுப்பியவர் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் போஸ். முதலாளித்துவ சிந்தனை கொண்ட சில காங்கிரஸ் எம்.பி க்களும் என்றைக்குமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பாஜகவின் அன்றைய வடிவமான ஜனசங்கும் தேசியமயத்தை கடுமையாக எதிர்த்த போது "ஊழியர்கள் ஆதரிக்கிறார்கள்" என்று அன்றைய நிதியமைச்சர் சி.டி.தேஷ்முக் அந்த தந்தியை காண்பித்து உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தில் இது பதிவாகியுள்ளது.

ஊழியர்களுக்கான பலன்களை பெறுவதில் கவனம் செலுத்துபவர் என்றும் நிர்வாகத்தின் முன்மொழிவுகளுக்கு சரியான எதிர்வினைகளை உடனுக்குடன் தருவதில் வல்லவர் என்று எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அவர் ஒரு திறந்த புத்தகம் என்பதை அவரது தன் வரலாறு நூல் உணர்த்தியது. 

1983 . அவர் எல்.ஐ.சி பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் சங்கத்திலிருந்து அவர் ஓய்வு பெறவே இல்லை. 1994 ல் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாலும் சங்க இயக்கங்களிலிருந்து அவருக்கு ஓய்வு என்பதே இல்லை. 

அவரை முதன் முதலாக பார்க்கும் வாய்ப்பு 1988 ல் கிடைத்தது. அகில இந்திய தலைமையகம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறிய போது சென்னை எல்.ஐ,சி கட்டிடத்தில் பிரம்மாண்டமான கூட்டம் ஒன்று நடந்தது. பெரிய ஆரவாரம் இல்லாத தெளிவான நீரோடை போன்றது அவர் பேச்சு. அந்த தெளிவும் அழுத்தமும் இறுதி நாள் வரை மாறவே இல்லை. எங்கள் வேலூர் கோட்டத்திற்கு ஒரு முறை வந்துள்ளார்.

1998 ல் நான் வேலூர் கோட்டப் பொதுச்செயலாளராகிறேன். 2000 ம் ஆண்டு சென்னையில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது என்னை அழைத்து பேசி உற்சாகமும் நம்பிக்கையும் கொடுத்தார். அந்த காலகட்டத்தில் புதிதாக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற வேறு சிலரையும் அழைத்து உற்சாகப்படுத்தினார் என்று பின்பு அறிந்து கொண்டேன்.










ஏழாண்டுகள் முன்பாக அவரை அவரது வீட்டில் சந்தித்தேன். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரத்திற்கும் மேல் நடந்த சந்திப்பு அது. இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தை நாவல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்ற வேட்கையில் கொல்கத்தா சென்று அவருடன் பேசி பல்வேறு விபரங்களை அறிந்து கொண்டேன். அறுபதுகளின் சம்பவங்களை முழுமையாக தன் நினைவிலிருந்து சொன்னவர் மறைந்த தன் சகாக்களான தோழர் சரோஜ், தோழர் சுனில் பற்றி பேசும் போது மட்டும் உணர்ச்சிவயப்பட்டார். 



 வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இது. தமிழ்நாட்டிலிருந்து தோழர் வந்துள்ளார். அதனால் எங்கள் இருவருக்குமே தோசை ஆர்டர் செய்து விடு என்று பேரனிடம் சொன்னார். இரவு 10.30 க்கு புறப்படுகையில் ஊபரில் டாக்ஸி புக் செய்த போது, பக்கத்தில்தான் டாக்ஸி ஸ்டாண்ட் உள்ளது. நானே ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவர் புறப்பட்ட போது அவரது வயது அதிகமில்லை, வெறும் 96 தான். 

அந்த போராட்டத்தை "முற்றுகை" எனும் நூலாகஆறாண்டுகளுக்கு முன்பாக   விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவரே வெளியிட்டது வாழ்வில் எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு.



நூறாண்டுகளை கடந்த நிலையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் அவர் தினமும் வந்து கலந்து கொண்டார். மாநாட்டின் போது மட்டுமல்ல அதற்கு முன்பாக மம்தாவின் அடாவடி காரணமாக தற்காலிக அரங்கம் அமைக்கப்பட்ட போது அதன் பணிகளை அன்றாடம் வந்து பார்த்து ஆலோசனை வழங்கியுள்ளார்.




அவரை நாங்கள் இறுதியாக பார்த்தது 31.12.2025 அன்றுதான். 28.12.2025 முதல் 01.01.2026 வரை புவனேஸ்வரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் 29.12.2025 முதல் 31.12.2025 வரை அவர் 104 வயதில் கலந்து கொண்டார். மிகவும் தெளிவான உரை ஒன்றையும் நிகழ்த்தினார். அவரது வருகையும் இருப்புமே அனைவருக்கும் உற்சாகமளித்தது, வேகம் கொடுத்தது.




அதன் பின்பு உடல் நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தோழர் சந்திரசேகர் போஸ் இன்று இயற்கையுடன் இணைந்து விட்டார்.

அவர் 

எளிமையின் வடிவம்,'

தியாகத்தின் உருவம்,

உறுதிக்கு உதாரணம்,

வரலாற்றுப் பொக்கிஷம்,

இயக்கத்திற்கு எழுச்சி தந்த நாயகன்.

சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத தலைவர்.

எந்நாளும் அவர் எங்களின் நினைவில் வாழ்வார், வழி காட்டுவார்.




அது ஒரு வீர காவியம்



 நேற்றைய பதிவில் இந்திரா காந்தி முன்னிலையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி ஒரு அறிக்கையை படிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அந்த சம்பவம் என்ன?


தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வார்த்தைகளிலேயே விவரிக்கிறேன்.


“இந்திரா அவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற பின்னும் ஜேஎன்யு வேந்தர் பதவியில் தொடர்ந்தார். அவசர நிலைக் காலம் கொண்டு வந்ததாலும் அப்போது நிகழ்ந்த அநீதிகளாலும் அவர் அந்த பதவியில் தொடரக்கூடாது என நாங்கள் கூறினோம். நான்கு பக்க குற்றப்பத்திரிக்கை ஒன்றை எழுதி அனைத்து மாணவர்களும் வெலிங்டன் க்ரெஸெண்டில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். அவசர நிலைக்காலத்தின் போது தலை மறைவாக இருந்த மாணவர்களின் கைது வாரண்டுகளை ஜேஎன்யு விடுதியில் உள்ள அவர்களின் அறைக்கதவுகளில் ஒட்டி விட்டுச் செல்வார்கள். நாங்கள் எங்கள் மனுவை அவர் வீட்டுக் கதவில் ஒட்ட நினைத்தோம்.

 நாங்கள் அங்கே சென்ற போது வி.சி.சுக்லா எங்களிடம் என்னவென்று வினவினார். நாங்கள் இந்த மனுவை அவர்களிடம் தர வந்துள்ளோம் என்று சொன்னேன்.அவர் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். ஐந்து பேர் மட்டும் உள்ளே வரலாம் என்றார். நான் முடியாது என்று மறுத்தேன்.  அனைத்து மாணவர்களும்தான் வருவோம் என்று சொன்னேன். அவர் மீண்டும் உள்ளே சென்றார்,  இம்முறை இந்திரா அம்மையாரே கதவுக்கருகில் வந்தார்.  அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். என்ன இதெல்லாம் என்று அவர் கேட்டார். நான் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர், இந்த மனுவை உங்களிடம் அளிக்க வந்துள்ளோம் என்று அவரிடம் சொன்னேன். அங்கே போலீஸ் காவல் எதுவும் இல்லை. நீங்கள் வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னேன். நீங்கள்  அப்பதவியில் தொடர்வது சரியல்ல என்றேன். அவர் அந்த மனுவை வாசிக்குமாறு என்னிடம் சொன்னார்.  நாங்கள் சற்று தயங்கினோம். ஏனென்றால் அதில் ஏராளமான வசைகள் இருந்தன. நான் படித்தேன். முகத்தில் ஒரு நிரந்தரமான புன்னகையுடன் அவர் அதனை முழுமையாகக் கேட்டார்.



 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து இந்திரா காந்தி உடன் விலகி விட்டார். 


நான் முன்பே பகிர்ந்து கொண்டதுதான். ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மெய் சிலிர்க்கும்.

நிஜ வாழ்வின் உண்மையான கதாநாயகன் இவர்தான்.

இந்த சம்பவம் ஒரு வீர காவியம்.

மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய காவியம்.

தோழர் யெச்சூரி போன்ற மிகுந்த ஞானம் கொண்ட தலைவரை இழந்தது இந்தியாவின் துயரம்.



Thursday, January 15, 2026

இந்திரா காந்தி இரும்புப் பெண்மணியாம் - என்னா பல்டி !!!!

 


மோடிக்கு மட்டுமல்ல, மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ள சங்கிகள், சிகண்டிகளுக்கும் நேரு குடும்பம் என்றால் எப்போதும் பிடிக்காது. 

அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நாள் வரும் போது அப்படியே பொங்கி எழுந்து ஜனநாயகக் காவலர்களாக சீன் போடுவார்கள் பாருங்கள், அப்போது நமக்கே புல்லரிக்கும். அப்போதெல்லாம் இந்திரா காந்தியை எந்த அளவிற்கு சாட முடியுமோ அந்த அளவிற்கு சாடுவார்கள்.

அவசரநிலைக்காலத்தில் அன்றைய ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் தேவரஸ், மன்னிப்புக் கடிதம் எழுதி இருபது அம்சத் திட்டத்திற்காக பிரச்சாரம் செய்தார் என்பதை மறந்து விடுவார்கள் என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் இரண்டு பதிவுகள் பார்த்தேன்.



பராசக்தி திரைப்படம் வந்த பிறகு  அது சொல்லும் செய்தி பாஜக கருத்தியலுக்கும் எதிரானது என்பதால் 

இந்திரா காந்தி இரும்புப் பெண்மணியாகி விட்டார்.

பக்தவத்சலம் பெரியவராகி விட்டார்.

காங்கிரஸிற்கும் திமுகவிற்கும் இடையில் சிண்டு முடிய இப்போது பராசக்தி படத்தை கீழிறக்கி இந்திராவை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

மோடியின் விருந்தில் பராசக்தி குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இதிலே சிவ கார்த்திகேயனும் ஜி.வி.பிரகாஷும் பாஜகவும் சேர்ந்து விட்டதாக வேறு  பாஜகவின் பெண் ரௌடிகள் கோஷ்டியின் தலைவி மயிலை ரமா பதிவிட்டுள்ளார். 

அந்த செய்தி உண்மையென்றால் இன்னும் என்னென்ன பல்டிகள் அடிப்பார்களோ?

பிகு: மேலே உள்ள படம் - அது தோழர் யெச்சூரி நடத்திய ஒரு வீரப் போர். ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். இருப்பினும் நாளை மீண்டும் பகிர்கிறேன். மீண்டும் மீண்டும் நாம் பேச வேண்டிய வீர காவியம் அல்லவா அது!