Friday, December 19, 2025

விஜய் என்ன பழைய ஸ்கூல் பையனா?

 


நேற்றைய விஜய் கூட்டத்தின் ஈரோடு கூட்டத்தின் காணொளியை நேற்று  பகிர்ந்து கொண்டிருந்தேன். அதை மறுபடியும் ஒரு முறை பார்த்த போது ஒரு விஷயம் கண்ணில் பட்டது.

அது



நான் கூட முதலில் மோடி போல டெலிப்ராம்ப்டர் பயன்படுத்துகின்றார் என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது. ஒரு அட்டையில் க்ளிப் போட்டு பேசுவதற்கான ஸ்க்ரிப்டை வைத்துள்ளார் என்று. 

ஏன் விஜய், இப்போ தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. அழகழகான, நவீன க்ளிப்புகள் வந்து விட்டது. அதையெல்லாம் விட்டுவிட்டு அந்த காலத்தில் நாங்கள் பள்ளியில் படிக்கும் போது பயன்படுத்திய ஆதி காலத்து க்ளிப்பை பயன்படுத்துகிறீர்களே?

உங்கள் வசதிக்கு மோடி போல நீங்களும் டெலி ப்ராம்ப்டரையே பயன்படுத்தலாம்.

ஒரே ஒரு பிரச்சினைதான்.

என்ன அது?

மேலே உள்ள படத்தை பார்க்கவும். . . .

Thursday, December 18, 2025

கிறுக்கர்கள் சூழ் தவெக . . .

 


ஒரு குறுகிய காலத்திலேயே விஜய் ரசிகர்கள், தற்குறிகள் என்று பெயர் வாங்கி விட்டார்கள். அப்படி சொல்வதால் அவர்களுக்கு கோபம். ஆனால் அது சரிதான் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கீழே உள்ள காணொளியை பாருங்கள்.



கிறுக்கத்தனமாக ஏதாவது செய்தால் விஜயின் முத்தம் கிடைக்கும் என்று ஈரோட்டுக் கூட்டத்தில் விஜய் காண்பித்துள்ளார்.

இனி வரும் கூட்டங்களில் தவெக தற்குறிகள் என்னவெல்லாம் கிறுக்குத்தனங்கள் செய்வார்களோ!

கரூர் போல நடக்காமல் இருந்தால் சரி. . .

அதிசயமாய் ஒரு நல்ல போலீஸ் . . .

 


நேற்று ஓய்வூதியர் தினம். வேலூரில் மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு சிறப்பான கூட்டம் நடந்தது. 

அக்கருத்தரங்கில் பள்ளி, கல்லூரி ஆசிரியர் ஓய்வூதியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.பர்வதராஜன் சிறப்புரையாற்ற வந்திருந்தார்.

அவர் சொன்ன ஒரு தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. ஆச்சர்யமாகவும் இருந்தது.

"மத்தியரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று பல்வேறு இயக்கங்கள் நடந்து கொண்டிருந்தது. இயக்கங்களின் நிறைவாக சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது குடியரசுத்தலைவர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. மிகவும் கடுமையானவர் என்று பெயர் பெற்ற பி.சி.அலெக்ஸாண்டர் ஆளுனர். 500 பேருக்கு மேல் சென்னைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று அறிவித்தார். அன்றைய போலீஸ் கமிஷனர் துரை கையில் துப்பாக்கியோடு சுற்றிக் கொண்டிருந்தார். தாக்குதல் நடத்த குதிரைப்படை போலீஸ் தயாராக இருந்தது.

முற்றுகையில் கலந்து கொள்ள நாங்கள் வேனில் சென்னை சென்று கொண்டிருந்தோம். விருதுநகரில் எங்களை ஒரு போலீஸ் அதிகாரி மறித்தார். உங்களையெல்லாம் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் எங்களுக்கு உத்தரவு. 

நியாயமான கோரிக்கைக்காக செல்லும் உங்களை திருப்பி அனுப்ப எனக்கு மனமில்லை. நான் அனுமதித்தாலும் வழியில் வேறு யாராவது மடக்கி விடுவார்கள். நீங்கள் சென்னை செல்ல ஒரு வழி இருக்கிறது.

சென்னை மெரினா பீச்சில் மெல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்களின் மாநாடு நடக்கிறது. நீங்கள் இந்த ஜாக்டீ (அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு)  பேனர்களை எடுத்து விட்டு வேனில் "ஓம் சக்தி, பராசக்தி" என்று எழுதி விட்டு செல்லுங்கள் என்று சொன்னார்."

தோழர் பர்வதராஜன் இதை சொன்ன போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது.

தொழிலாளி வர்க்கம் எந்த போராட்டம் நடத்தினாலும் அதன் கோரிக்கைகள் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் அந்த போராட்டம் வெற்றி பெற்றால் அதன் பலன் அவர்களுக்கும் கிடைக்கும் என்றாலும் போராடும் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்வதுதான் இன்றைய வாடிக்கையாக இருக்கையில் 

ஒரு காவல்துறை அதிகாரி போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டது அதிசயமாகவே எனக்கு தோன்றியது.

என்ன சரிதானே!



Wednesday, December 17, 2025

கேவலமான பின்னூட்டத்திற்கு சூடான பதில்

 


சங்கிகள் ராஜஸ்தானில் நிகழ்த்திய வந்தேமாதர காமெடி பற்றிய பதிவில் ஒரு அனாமதேயம் "அவங்க முட்டாப்பசங்க" என்று பின்னூட்டமிட அதற்கு இன்னொரு பின்னூட்டம் ஆங்கிலத்தில் வந்தது. "உண்டியல் குலுக்கி கோஷ்டிகள் பற்றியும் தெலுங்கு தேவதாசி கோஷ்டி பற்றியும் என்ன சொல்கிறீர்கள்?" என்பதுதான் நான் பிரசுரிக்காத அந்த பின்னூட்டம்.

நாங்கள் உண்டியல் குலுக்கிகள் என்ற பட்டத்திற்காக என்றைக்கும் கவலைப்பட்டதில்லை. மக்களுக்காக போராடுகின்ற கம்யூனிஸ்டுகள் மக்களிடம் நேரடியாக உண்டியல் குலுக்கி நிதி திரட்டுகிறோம். இது வெளிப்படையானது. 

பாஜக போல அமலாக்கப் பிரிவை அனுப்பி விட்டு பின்பு அந்த முதலாளிகளிடம் பணத்தை பறிக்கும் கொள்ளைக்காரக் கட்சி அல்ல கம்யூனிஸ்டுகள். அடுத்து திமுக கொடுத்த பத்து கோடி என்று ஒரு அனாமதேய கோஷ்டி வரும். அது நன் கொடை. முறையாக கணக்குகளில் பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட பணம்.  உண்டியலை நாங்கள் மட்டுமா பயன்படுத்துகிறோம்? யாரெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் என்று பட்டியல் போட்டால் "மனம் புண்பட்டு விட்டது " என்று புலம்பும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த பிரச்சினைக்கு வருகிறேன்.

கலைஞர் குடும்பத்தை இழிவு படுத்த சங்கிகளும் அதிமுகவினரும் ட்ம்ப்ளர்களும் இப்போது தவெக தற்குறிகளும் பயன்படுத்துகின்ற அவதூறு.

திருவாரூர் மாவட்டம் திருக்குவளையை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரை ஆந்திராவைச் சேர்ந்தவர் என்று கட்டமைத்து அந்த பிரச்சாரத்தை மீண்டும் மீண்டும் பரப்பி அவர்களே  உண்மை என்று நம்பத் தொடங்கி விட்டார்கள். கலைஞரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து எனக்கும ஏற்கக் கூடிய அதே நேரம் நிராகரிக்க வேண்டியது என்று இரண்டும் உண்டு. ஆனால் அவருடைய தமிழ் உணர்வையோ தமிழுக்கான பணிகளையோ யாராலும் நிராகரிக்க முடியாது. அவரது தமிழறிவின் நிழல் அளவு  கூட எம்.ஜி.ஆரை சொல்ல முடியாது என்ற கையாலாகத தனம், இந்த பிரச்சாரத்தின் பின்னணியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அவரது பூர்வீகத்தை ஆராய்வது போல ஒவ்வொருவருடைய பூர்வீகத்தை ஆய்வு செய்தால் அது ஆப்கானிஸ்தானத்தை தாண்டிச் செல்லுமல்லவா! நம் எல்லோரின் பூர்வீகமுமே ஆப்பிரிக்க மூதாய்தானே!

தேவதாசி முறை என்பது இந்திய சமூகத்தின் இழிவு. மன்னராட்சிக் காலத்தின் திமிர். ஆதிக்க சக்திகளின் வெறிக்கு சில குறிப்பிட்ட சமூகங்களை பலியாக்கிய கொடுமை. 

தேவதாசி முறை தடைச்சட்டத்தை சட்டமன்றத்தில்  காமராஜரின் குரு சத்தியமூர்த்தி எதிர்க்கிறார். தந்தை பெரியாரின் ஆலோசனைப்படி  டாக்டர் முத்துலட்சுமி "இம்முறை புனிதமானது, புண்ணியம் அளிப்பது என்றால் இனிமேல் உங்கள் குடும்பப் பெண்களை பயன்படுத்துங்கள்" என்று பதிலளிக்க அவர் வாயடைத்துப் போனார்.

அந்த சமூக இழிவை ஒரு குடும்பத்தை இழிவு படுத்த பயன்படுத்துவது என்பது கேவலமான சிந்தனை. அழுகிப்போன ஜாதிய மேட்டிமை புத்தி. ஆணாதிக்க திமிர்.

அந்த அனாமதயேத்திற்கு முடிவாக ஒன்றை சொல்கிறேன்.

நான் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டேன் என்று உன்னுடைய அம்மா, சகோதரி, மனைவி, மகள், பெண் நண்பர்கள் ஆகியோரிடம் சொல்லவும். 

உனக்கு அவர்களிடமிருந்து செருப்படி நிச்சயம். . .

பிகு" கடைசி இரண்டு பத்திகள் அந்த ஆங்கில அனாமதேயத்திற்கு மட்டுமல்ல, அதே போல அவதூறு பரப்பும் அனைத்து ஜந்துக்களுக்கும் பொருந்தும். 



Tuesday, December 16, 2025

சங்கிகளின் வந்தே மாதர காமெடி - DON'T MISS

 


மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்காக 'வந்தே மாதரம்" பாடலின் 150 ஆவது ஆண்டு என்றொரு நாடகத்தை மோடி வகையறாக்கள் நடத்தினார்கள்.

நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியோடு நிறுத்திக் கொள்ளாமல் மாநிலங்களிலும் நடத்தியுள்ளார்கள்.

அப்படி ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 150 ஆண்டுகளுக்கு முன்பாக பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய பாடலுக்கு பதிலாக எந்த பாடலை ஒலிபரப்பியுள்ளார்கள் என்பதை கீழே உள்ள காணொளியில் பார்த்து மகிழ்ந்து சிரியுங்கள். அந்த மாநில முதல்வர் வேறு அங்கே இருந்துள்ளார்.



தங்கள் கட்சித்தலைவர் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக இயக்குனர் சந்தான பாரதி, அம்மன் பட வில்லன் ஜண்டா ஆகியோரின் படங்களை போட்டு சுவரொட்டி அடித்த கும்பல்தானே!

மகாத்மா பெயரைச் சொல்ல வெட்கமா மோடி



 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) என்று மோடி அரசு மாற்றியுள்ளது.

மகாத்மா காந்தியை கொன்றவர்கள்  அவரது கொள்கைகளையும் கொன்று விட்டார்கள். அதனால் அந்த கொலைகாரர்களுக்கு ஒரு திட்டத்தின் பெயரில் கூட மகாத்மா காந்தியின் பெயர் இருப்பது வெட்கமாக உள்ளது போல.

அதனால் திட்டத்தின் பெயரை Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)  என்று மாற்றி விட்டார்கள். எந்த எழவாவது புரிகிறதா?

நேருவை இன்றளவும் வசை பாடுகிறார்கள். நேரு அளவிற்கு மகாத்மா காந்தியையும் வசை பாடினால் அசிங்கமாக போய் விடும். அதனால் பெயரை தூக்கி விட்டார்கள்.

இன்னும் மிச்சம் இருப்பது ரூபாய் நோட்டுக்கள் மட்டும்தான். 

அதில் என்றைக்கு கோழை சாவர்க்கர்/கோட்சே வகையறாக்களின் படத்தை போடப் போகிறார்களோ? 

Monday, December 15, 2025

தகுதியற்றவர்களின் ஆட்சியின் மரணங்கள்

 


போன மாதம் சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த ரயில் விபத்து நினைவில் உள்ளதல்லவா!

பதினைந்து பேரை காவு வாங்கிய அந்த விபத்து குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பிரிஜேஷ் குமார் மிஷ்ரா கொடுத்த அறிக்கையின் விபரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா?

அந்த ரயிலின் இஞ்சின் ட்ரைவர் அந்த ரக ரயில்களை ஓட்டுவதற்காக நடத்தப்படும் தேர்வில் தோற்றுப் போனவராம். அதே போல அந்த ரயிலின் கார்டும் அந்த பதவிக்கான தகுதி வரம்பை எட்டாதவராம். உதவி இஞ்சின் ட்ரைவரும் சிவப்பு சிக்னலை பார்த்தும் வண்டியை நிறுத்த முயற்சிக்கவில்லை.

தகுதித் தேர்வில் தோற்றுப் போன பலரும் பல ரயில்வே கோட்டங்களில் ரயில்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த அறிக்கை அளிக்கும் இன்னொரு செய்தி.

உண்மையில் சொல்ல வேண்டுமானால்

ரயில்களை இயக்கியவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல.

பயணிகள் நலன் பற்றி கவலைப்படாத, ஆட்சி நடத்த தகுதியற்ற மோடி அரசுதான் பயணிகளின் மரணத்துக்கான உண்மையான காரணம்.