Thursday, October 17, 2024

சுமந்து பூமர் விங்கா?

 


சென்னையில் மழை நின்று போனதில் மக்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் சங்கிகளுக்கோ வருத்தமோ வருத்தம்.

 


மழை தொடங்கும் முன்பே “மழை கடுமையாக பெய்தால் பலருடைய பெருமை கெட்டுப் போகும்” என்று திருவாய் மலர்ந்தவர் சுமந்து. மழை நீர் வெள்ளமாக மாறி மக்கள் அவதிப்பட வேண்டும், அதனால் தமிழக அரசின் பெயர் கெட்டுப் போகும் என்று ஆசைப்பட்டவர் அவர்.  சங்கிகளும் அதே மன நிலையில்தான் இருந்தார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் அத்தனை பேரும் மழையை விட அதிகமான பதிவுகளை எழுதித்தள்ளினர். “கணுக்கால் அளவு தண்ணீரில் படகில் போவது போல போஸ் கொடுத்த” ஆட்டுக்காரன் வந்தால்தான் இந்த  சூழ்நிலையை சமாளிக்க முடியும் என்பதால் இந்தியன் 2 படத்தில் “கம் பேக் இந்தியன் தாத்தா” என்று சமூக ஊடகத்தில் இயக்கம் நடத்தியது போல “கம் பேக் அண்ணாமலை” என்று இயக்கம் நடத்த வேண்டும் என்றொரு காமெடி பதிவு கூட பார்த்தேன்.

 மழை நின்று போனது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. மழையும் நின்றது, பதிவுகளும் நின்றது.

 ஆனால் சுமந்துவால் முடியவில்லை. மழை வராது என்று வெதர்மேன் பிரதீப் சொன்னது போல நடப்பதை அவரால் சகிக்க முடியவில்லை.

 சில கட்சிகளில் டாக்டர்கள் அணி, வக்கீல்கள் அணி  என்று இருப்பது போல

இப்போதெல்லாம் “வெதர்மேன்” அணி கூட  வைத்துள்ளார்கள் என்று ட்வீட்ட,

வெதர் மேன் பிரதீப் சுமந்துக்கு செவுட்டுலயே ஒன்று கொடுத்தார்

  “நீங்க எந்த அணி சார்? பூமர் அணியா? எல்லாம் தெரிஞ்ச எக்ஸ்பெர்ட் அணியா? சும்மா நொய் நொய்ன்னுட்டு”

 


மழை நின்று போன சோகத்தில் இருக்கும் சுமந்து இப்படிப்பட்ட அசிங்கம் வேறு. பேசாமல் அவர் டாக்டர் வேலையை ஒழுங்காகப் பார்க்கலாம்.

Wednesday, October 16, 2024

நாகரீகமான அனாமதேயமும் நாசுக்கான பதிலும்.

 


கனடா கொலையும் அமித்ஷாவும் என்ற நேற்றைய பதிவிற்கு அனாமதயேமாக ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். போலிப் பெயரிலும் அனாமதேயமாகவும் கீழ்த்தரமான மொழியில் பின்னூட்டமிடுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் என்னால் பணி பாதுகாக்கப்பட்ட ஒரு நன்றி மறந்த துரோகி போல அல்லாமல் அவரின் மொழி மிகவும் நாகரீகமாக இருந்தது.

 அவருக்கு நன்றி சொல்லி ஒரு விரிவான பதிலும் அளித்தேன். அவரின் பின்னூட்டத்தையும் என் பதிலையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 நாகரீகமான பின்னூட்டம்

 உங்களுடைய கருத்துக்களில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை தோழரே.மொழிவாரியாக பிரிவினையை ஊக்குவிப்பது தான் மார்க்கசியமா?அமெரிக்க ஆதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த சோவியத்து ஒன்றியம் பல துண்டுகளாக உடைந்து தன் சொந்த சகோதர நாடுகளுடனே சண்டையிட்டுக் கொண்டு அழிந்து வரும் நிலை இந்தியாவிற்கும் வரவேண்டும் எதிர்பார்க்கிறீர்களா? 320 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம் காலிஸ்தான் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். அப்பொழுது இதே ஜஸ்டின் ட்ருடோவின் தந்தை தான் கனடாவின் பிரதமராக இருந்தார்.இத்தனைக்கும் 284 பயணிகள் கனடா நாட்டவர்கள்.அக்கால கட்டத்தில் இந்திய விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கன்னடிய மக்களால் தூக்கி எறியப்பட்டார் என்பதை நீங்கள் அறியவில்லை போலும்.வளர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தியாவிற்கு மறைமுகமாக பல தடங்கல்களை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற மேலை நாடுக எதிர்க்க முடியாத நிர்பந்தத்தினால் இந்தியாவின் நிலைத்தன்மையை சீர்குலைத்து தன் கை பாவையாக வைத்திருக்க முயன்று வருவதை பன்னாட்டு அரசியல் அறிந்தோர்க்கு நன்கு தெரியும்.நானும் 25 ஆண்டுகளுக்கு மேல் ஒரு முதன்மையான மத்திய அரசு நிறுவனத்தின் முதன்மையான இடதுசாரி சார்பு தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக பல ஆண்டுகள் பணிபுரிந்தவன். என்றைக்கு தேசவிரோத கருத்துக்களை முன்னெடுத்ததோ அப்போதே இடதுசாரிகளின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

விரிவான பதில்

 சில அனாமதேயங்கள் போல அல்லாமல் நாகரீகமான முறையில் உங்கள் கருத்துக்களை முன் வைத்தமைக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் புரிதல்கள் சில சரியில்லை என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன். மொழி உணர்வைத் தூண்டி நாட்டை பிரிக்கும் வேலையில் இடதுசாரிகள் என்றும் ஈடுபட்டதில்லை. மாறாக இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாத்து இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்,  மத வெறியைத் தூண்டி மக்கள் ஒற்றுமையை சிதைக்க முயல்வது சங்கிகளின் வேலை. என் கருத்துக்கள் அனைத்தும் அந்த சங்கிகளை அம்பலப்படுத்துவதுதான்.

 காலிஸ்தான் பிரிவினைகளை எதிர்த்த காரணத்தால் மார்க்சிஸ்டுகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுதான் வரலாறு. ஏன் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஜலந்தர் கோட்டச்சங்கத்தின் தலைவராக இருந்த தோழர் குருபச்சன்சிங் சென்ற ஜீப் தாக்கப்பட்டு அந்த விபத்தில் நேர்ந்த காயங்களால் அவர் இறந்து போனார்..

 1966 ல் பிறந்தாலும் 1975 அவஸ்ர நிலைக்காலம் முதலே இந்திய அரசியலை பின்பற்றி வருகிற நான் கனிஷ்கா விமானம் தகர்க்கப்பட்டது, அதன் தொடர்ச்சி பற்றியெல்லாம்  நன்கு அறிவேன். காலிஸ்தானி என்று சொல்லி வேறு நாட்டில் கொலை செய்வதெல்லாம் ஒரு அரசின் வேலையா? கீழ்த்தரமான செயல். இதை கண்டிக்காமல் இருக்க முடியுமா? கிரிமினல் உள்துறை அமைச்சராக இருந்தால் கிரிமினல் வேலைதான் நடக்கும்.

 மற்ற நாடுகள் சிக்கலை உருவாக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீண்டும் அளவிற்கு இந்தியா வளர்ந்து விட்டது என்பதெல்லாம் கற்பனாவாதம். முதலாளிகள் வளர்ந்துள்ளனர். மக்கள் வளரவில்லை. பல புள்ளி விபரங்கள் அதைச் சொல்லும்.

 எங்கள் கோட்ட மாநாட்டு அறிக்கைக்காக எழுதப்பட்டவற்றி சிலவற்றை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

 *****************************************************************

 இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போவதாக ஆட்சியாளர்கள் பீற்றிக் கொண்டிருப்பது தொடர்பாக கடந்த மாநாட்டில் விவாதித்தோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி எட்டு சதவிகிதம் இருக்கும், ஏழரை சதவிகிதம் இருக்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்டு வந்தாலும் கடந்தாண்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி 4.6 % என்ற அளவில்தான் இருந்தது. இந்தியாவின் சராசரி தனி நபர் வருமானம் என்பது 2411 டாலர்கள் மட்டுமே. உலக அளவில் 141 வது இடத்தில் உள்ளது.

  இது எதைக் குறிக்கிறது?

 இந்தியாவில் நிலவும் அசமத்துவத்தின் வெளிப்பாடு இது.  டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவின் டாலர் பில்லியனர்கள் 200 பேர்.  உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடம் முகேஷ் அம்பானிக்கும் கௌதம் அதானிக்கும் இடையே ஊசலாடுகிறது.

 சர்வதேச அளவில் பல குறியீடுகளில் இந்தியா மிகவும் பின் தங்கி உள்ளது என்பதை பின் வரும் புள்ளி விபரங்கள் உணர்த்தும்.

 மனித வளர்ச்சி குறியீட்டில் 193 நாடுகளில் இந்தியாவின் இடம் 193 நாடுகளில் 134 வது இடம்தான். அதே போல  உலக வறுமைக் குறியீட்டிலும் இந்தியாவின் இடம் 193 நாடுகளில் 134 வது இடமே. இந்திய மக்கட்தொகையில் 14.96 % பேர் வறுமையின் பிடியில் உள்ளனர்.

 மகிழ்ச்சிக்கான குறியீட்டில் நிலைமை இன்னும் மோசம். 146 நாடுகளில் இந்தியா பெற்ற இடம் 126.

 உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 125 நாடுகளில் 111வது  இடம் பெற்றுள்ளது. நம் அண்டை நாடுகளில் நிலைமை இந்தியாவை விட மேலாக உள்ளது. மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் 102 வது இடத்திலும் இலங்கை 60 வது இடத்திலும் வங்க தேசம் 81 வது இடத்திலும் நேபாளம்  69 வது இடத்திலும் உள்ளது.

 இதன் காரணம் என்ன?

 இந்தியாவின் செல்வாதாரங்களில் 40 % இந்தியாவின் பெரும் செல்வந்தர்களாக உள்ள 1 % பேரிடமே உள்ளன. இந்த சமத்துவமின்மைதான் மேலே உள்ள நிலைமைக்குக் காரணம்.

 இவற்றை சரி செய்ய வேண்டிய மத்தியரசோ நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதிச்சட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து வெட்டி வருவதைப் பற்றி கடந்தாண்டே விவாதித்தோம். இப்போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. ஆதார் அட்டையை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று கெடுபிடி செய்ததில் பத்து கோடி பேர் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். வங்கிக் கணக்கு எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதில் உள்ள தொழில்நுட்பப் பிரச்சினைகளால் பணி செய்தும் இரண்டு கோடி தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. இவர்கள் எல்லாம் வறுமையின் பிடியில் சிக்காமல் எப்படி தப்பிக்க முடியும்!

 இன்னொரு செய்தியும் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய கவலைகளை அதிகரிக்கிறது.

 இந்தியாவின் வீட்டுச் சேமிப்புக்கள் (DOMESTIC SAVINGS) ஒட்டு மொத்த உற்பத்தியில் 5 % மட்டுமே என்ற அளவில் சுருங்கிப் போயுள்ள நிலையில் வீட்டுக் கடன்கள் (DOMESTIC DEBTS) என்பதோ 40 % ஆக இருக்கிறது. சேமிப்பு சுருங்குவதும் கடன் தொகை அதிகரிப்பதும் நாட்டிற்கு நல்லதல்ல. வீட்டு வசதிக் கடன் வாங்குவதால்தான் இந்த நிலை என்று காரணம் சொல்லப்படுகிறது. திருப்பி செலுத்தும் சக்தியை உரிய முறையில் ஆய்வு செய்து கடன் வ்ழங்கப்படுகிறதா என்பது ஒரு கேள்விக்குறி. வங்கிகளின் தற்போதைய முன்னுரிமை டெபாசிட் சேகரிப்பது என்பதிலிருந்து கடன் கொடுப்பது என்று மாறி விட்டது.

 ஏற்கனவே வங்கிகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் வாராக்கடன் பிரச்சினையால் தவித்துக் கொண்டிருக்கும் போது சாதாரண மக்கள் வாங்கும் கடனும் இணைந்து கொண்டால் வங்கித்துறையின் நிலைமை இன்னும் மோசமாகும். அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடி போன்றதொரு சூழ்நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிற்து.

 இந்தியாவின் உற்பத்தித்துறையிலும் பெரிய முன்னேற்றமில்லை. இறக்குமதி என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது  என்ற தோற்றத்தை இந்தியா  காண்பித்துக் கொண்டே சீனாவுடனான இறக்குமதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 2018 – 19 ல் ஐந்து லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூறு கோடியாக இருந்த இறக்குமதி 2023- 24 ல் எட்டு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி ஐம்பது கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரம் இந்தியாவின் ஏற்றுமதியோ      ஐந்து வருடங்களாக ஒரு லட்சத்தி முப்பத்தி மூன்றாயிரம் கோடியாக  தொடர்கிறது.

 வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையையும் ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. சாமானிய மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவகம் செய்வதிலேயே கவனம் செலுத்தினார்கள்.

*********************************************************************************

 இடதுசாரிகள் தேச விரோத செயல்களை செய்வதாக சிறு குழந்தை கூட சொல்லாது. இன்று பின்னடைவை சந்தித்திருக்கிறோம். நாளை பீனிக்ஸ் பறவையாய் எழுவோம்.

 நாகரீகமான முறையில் உங்கள் கருத்துக்களை முன்வைத்தமைக்கு மீண்டும் நன்றி.

 

அருமையான, அதிசயமான,அற்புதமான புகைப்படம்

 சமூக செயற்பாட்டாளர் தோழர் அ.முத்துகிருஷ்ணன், முகநூலில் பகிர்ந்து கொண்ட பதிவையும் புகைப்படத்தையும் அவருக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த புகைப்படத்தைக் கண்டு நீங்களும் நிச்சயம் அதிசயிப்பீர்கள்.

இதோ தோழர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களின் பதிவு

புகைப்பட கலைஞர் ஆண்டிரியு மெக் கேர்த்தியின் பிரமிக்கவைக்கும் படம்

சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) பூமியில் இருந்து 400கிமி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது, அது நொடிக்கு 8கிமி வேகத்தை சென்றுகொண்டிருக்கிறது (அதாவது மணிக்கு 28,800 கிமி ) அது நிலவை கடக்கும் தருணத்தில் அதனை படம் பிடிக்க திட்டமிடுகிறார். இத்தனை வேகமாக கடந்து செல்லும் விண்வெளி நிலையத்தை படம் பிடிப்பது அத்தனை சாதாரன விசயம் அல்ல, அதற்கு நிறைய இயற்பியலும் கணிதமும் வேண்டும், நிலவின் சுற்றுப்பாதை குறித்த கச்சிதமான கணக்குகள் வேண்டும்...

0.05 நொடிகள் தான் இந்த மொத்த காட்சியும் நிலைக்கும் அதற்கும் மிக கச்சிதமாக இந்த நொடியை தனது காமிராவில் உறையவைக்க வேண்டும். இந்த வரலாற்று புகைப்படத்தை அத்தனை சிரத்தையும் படம் பிடித்துள்ளார் புகைப்பட கலைஞர் ஆண்டிரியு மெக் கேர்த்தி.

அசாத்தியத்தை சாத்தியமாக்குவது தான் மனித மனம், இந்த செயலை செய்து முடிக்கும் போது கேர்த்தி எப்படி உணர்ந்திருப்பார் என்று யோசித்துப் பார்க்கிறேன். Hugs and Kisses Andrew McCarthy...

இதோ அந்த புகைப்படம்




Tuesday, October 15, 2024

கனடா கொலைகளும் அமித்ஷாவும்

 


கனடா இந்திய ஹைகமிஷனரையும் எட்டு தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளது.

காரணம் என்ன?

சில மாதங்களாகவே கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கிற பிரச்சினைதான்.

கனடா குடிமகனான ஒரு சீக்கியர், காலிஸ்தானி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறவர், கனடாவிலேயே கொல்லப்படுகிறார்.

அக்கொலைக்கான உத்தரவு இந்திய அரசிடமிருந்துதான் வந்தது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சுமத்தினார்.

கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் அமெரிக்காவிலும் ஒரு சீக்கியர் கொல்லப்படுகிறார். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்தே கொலைக்கான ஏற்பாடு நடந்தது அமெரிக்க காவல் துறை ஃஎப்.பி.ஐ கூறுகிறது.

கனடா நடத்திய விசாரணைக்குப் பிறகு அங்கே நடந்த கொலைக்கான ஏற்பாடுகள் இந்திய தூதரகத்தின் மூலமே செய்யப்பட்டது என்றும் அதற்கான உத்தரவை பிறப்பித்தது இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்று தெரிய வருகிறது.

வழக்கு விசாரணைக்காக தூதரக அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்று கனடா அரசு கேட்டதற்கு இந்தியா மறுத்து விட்டது. அதன் எதிர்வினையாகத்தான் கனடா இந்திய ஹைகமிஷனரையும் தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளது.

இந்தியாவும் அதே போல செய்துள்ளது.

இந்தியாவின் உள்துறை அமைச்சர், வெளி நாட்டு குடிமகனை கொலை செய்ய ஏற்பாடு செய்துள்ளார் என்று கனடாவில் இந்தியாவின் மானம் கப்பலேறியுள்ளது என்பதுதான் கொடுமையான யதார்த்தம்.

அமித்ஷா அப்படியெல்லாம் செய்வாரா என்றெல்லாம் உங்களுக்கு சந்தேகம் தேவையில்லை.

குஜராத்தில் மோடியின் செல்வாக்கு சரிந்த நேரத்தில் சொராபூதீன், பிரஜாபதி என்ற இருவர் மோடியை கொலை செய்யப்பார்த்தார்கள் என்று போலி எண்கவுண்டர் கொலைகள் செய்தவர்.

அந்த வழக்கினால் பலனடைந்தவர் கேரள ஆளுனராக இருந்த திரு சதாசிவம். அமித்தை அவர்தானே விடுதலை செய்தார்!

இந்தியா கனடா உறவு பாதிக்கப்படுகிறதே! அதனால் இந்தியர்கள்தானே மிகவும் பாதிக்கப்படுவார்கள்!

அதைப் பற்றியெல்லாம் மோடிக்கு என்ன கவலை! 

சங்கிகளுக்கு அறிவே கிடையாதா?

 


சங்கிகள் அறிவில்லாத முட்டாள்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.



பாலங்களின் மீது கார்களை நிறுத்தி விட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா? ஆம்புலன்ஸோ அல்லது தீயணைப்பு வாகனமோ போக முடியவில்லையென்றால் எப்படிப்பட்ட பாதிப்பு வரும், இழப்பு ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம் பதிவு போடும் முட்டாள்களை என்ன செய்வது?

உடன்பிறப்புக்களும் ஒன்றை மறந்து விடக்கூடாது. சாம்சங் பிரச்சினையில் வேண்டுமானால் சங்கிகள் உங்களை ஆதரிக்கலாம். ஆனால் மற்ற சமயங்களில் எல்லாம் அவர்கள் உங்களுக்கு எதிராகவே இருப்பார்கள். அதனால் எச்சரிக்கையாக இருங்கள். நேச சக்திகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். 

Monday, October 14, 2024

டாடாவை வெளியேற்றிய குற்றவாளிகள் யார்?

 


டாடா நானோ மேற்கு வங்கத்திலிருந்து வெளியேறியது யாராலே?

 சாம்சங் போராட்டத்திற்கு எதிரான பல்வேறு அபத்தமான பதிவுகளில் டாடா மோட்டார்ஸ் வெளியேறியது போல சாம்சங்கும் வெளியேற வேண்டுமா என்றொரு கேள்வி முன்வைக்கப்பட்டது.

 கொஞ்சம் கூட புரிதல் இல்லாத கருத்து அது.

 டாடா நானோ வெளியேறியதற்கு எந்த தொழிற்சங்கப் போராட்டமும் காரணம் கிடையாது. அது முழுக்க முழுக்க இடது முன்னணிக்கு எதிரான சதிச்செயல்.

 அந்த சதியை பற்றி பேசும் முன்னர்  இடது முன்னணி அரசு மேற்கு வங்கத்தில் எப்படி செயல்பட்டது என்பது பற்றியும் டாடா நிறுவனத்திற்கு விதித்த நிபந்தனைகள் பற்றியும் டாடா நானோ தொழிற்சாலைக்கு ஏன் சிங்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது பற்றியும் கொஞ்சம் பார்ப்போம்.

 1972 முதல் 1977 வரை மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த சித்தார்த்த சங்கர் ரே தலைமையிலான காங்கிரஸ் அரசு, தற்போதைய மம்தா ஆட்சியைப் போலவே ஒரு அரைப் பாசிச ஆட்சியையே நடத்தியது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விவசாயமும் தொழில் வளமும் இல்லாமல் மின்சாரமே அரிதாகிப் போன மாநிலமாகவே மேற்கு வங்க மாநிலம் இருந்தது.

 அதிகாரங்களையும் நிதியையும் தன் கையிலே குவித்து வைத்துள்ள மத்திய அரசாங்கம் முறைத்துக் கொண்டு நிற்கிற போது ஒரு மாநில அரசின் பணிகள் என்பது சிரமமானது. சவாலானது. ஆனால் அந்த சவாலை எதிர் கொண்டது இடது முன்னணி ஆட்சி.

 பானர்ஜி, சட்டர்ஜி, பட்டாச்சார்ஜி உண்டு ஆனால் எனர்ஜி மட்டும் கிடையாது என்று ஜோக்கடிக்கும் நிலையில் இருந்த மேற்கு வங்க மாநிலத்தை உண்மையிலேயே மின் மிகை மாநிலமாக மாற்றி மற்ற மாநிலங்களுக்கும் மின்சாரம் அளிக்கும் மாநிலமாக மாற்றிய பெருமை இடது முன்னணி ஆட்சிக்கே உண்டு. இத்தனைக்கும் மேற்கு மாநிலத்திற்கான மின் திட்டங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்வோடு ஏராளமான தடைகளை போட்டது இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அரசாங்கங்கள்.

 இந்தியாவில் இடதுசாரிகளைத் தவிர வேறு எந்த ஒரு கட்சியாலும் செய்ய முடியாத மகத்தான சாதனையை செய்தது மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசு. இந்தியாவில் முதன் முதலாக தேர்தல் மூலம் உருவான தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் தலைமையிலான கேரள கம்யூனிச ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நிலச்சீர்திருத்தங்களை மேற்கு வங்க அரசு அமலாக்கியது.

 இடது முன்னணி தனது ஆட்சிக்காலத்தில் முப்பது லட்சத்து நாற்பதாயிரம் குடும்பங்களுக்கு பதினோரு லட்சத்து முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களை வினியோகம் செய்துள்ளது. இந்தியாவில் செய்யப்பட்ட நில வினியோகத்தில் அறுபது சதவிகித நிலம் மேற்கு வங்க மாநிலத்தில் கொடுக்கப்பட்டதுதான். மூன்று லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கப்பட்டது. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்காக ஒரு அமைச்சர் இருந்தார் என்றால் மேற்கு வங்க இடது முன்னணி அரசிலோ நிலத்தை ஏழை மக்களுக்கு அளிப்பதற்காக ஒரு அமைச்சர் இருந்தார்.

 நிலம் என்பது சாதாரண விஷயமில்லை. அடிமைகளாய், கூலிகளாய் துயரத்தில் உழன்று கொண்டிருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப் பெரிய உரிமை. மிகப் பெரிய வாழ்வாதாரம். மிகப் பெரிய நம்பிக்கை. நிலக்குவியல் அங்கே உடைக்கப்பட்டது. சாகுபடிக்கு வாய்ப்பிருக்கிற அரசு நிலங்களெல்லாம் ஏழைகளின் சொத்தானது. ஏழை விவசாயத் தொழிலாளி அங்கே சொந்த நிலமுடைய விவசாயியாக மாறினான். உழைப்புக்கான கருவிகள் வழங்கப்பட்டது, பாசன வசதிகள் பெருக்கப்பட்டது.

 அதனால்தான் மேற்கு வங்கம் விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. அரிசி விளைச்சலிலும் காய்கறி சாகுபடியிலும் மேற்கு வங்கம் இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது என்றால் அதற்கு இடது முன்னணியின் முயற்சிகள் மட்டுமே காரணம்.

 இதை விட இன்னொரு மகத்தான சாதனை அதிகாரப் பரவல். மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பு முறையை அறிமுகம் செய்து பஞ்சாயத்துக்களை உண்மையிலேயே சக்தி மிக்கதாய் மாற்றி அமைத்த பெருமை இடதுசாரிகளையே சாரும். ஜமீன்தார்களும் மிராசுதார்களுமே பஞ்சாயத்து தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்பதை ஒரு ஏழை விவசாயி கூட  பஞ்சாயத்து தலைவராக முடியும் என்று மாற்றி அமைத்தது இடது முன்னணி ஆட்சிதான். தலித் மக்கள் சுய கௌரவத்தோடு தலை நிமிர்ந்து நிற்பதை உத்தரவாதப்படுத்தியதும் மேற்கு வங்க இடது முன்னணி அரசுதான். தீண்டாமை இல்லாத மாநிலமாக திகழ்வதும் இடது முன்னணி ஆட்சியால்தான்.

 தொழில்துறையில் முன்னேற்றத்தை உருவாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அத்தனை கம்யூனிச எதிரிகளும் சேர்ந்து சீரழித்தது ஒரு தனிக்கதை. அதன் பின்னணி பற்றி நாளை விவாதிப்போம்.

 டார்ஜிலிங்கில் கூர்க்காலாந்து பிரச்சினை பற்றி எரிந்த போது கூர்க்காலாந்து பிராந்திய கவுன்சிலை உருவாக்கி பனி படர்ந்த இமய மலையில் மீண்டும் அமைதி தவழ்வதை உருவாக்கியது இடது முன்னணி அரசு. தனி மாநிலம் பிரித்து தருகிறோம் என்று மம்தாவால் தூண்டி விடப்பட்டதை நம்பி இன்று அந்த மக்கள் ஏமாந்து நிற்பது வேறு கதை

 2009 – 10 ல் விவசாயத்துறை வளர்ச்சி தேசிய அளவில் 2.1 % ஆக இருந்த போது மேற்கு வங்கத்தில் 3.1 % ஆக இருந்தது. குஜராத்தில் விவசாய வளர்ச்சி எதிர்மறையாக இருந்த போதே 11%, 12% என்றெல்லாம் நமோ பஜனையாளர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்ததை கேஜ்ரிவால் அம்பலப் படுத்தியதை படித்திருப்பீர்கள்.

 அந்த ஆண்டில் அரிசி உற்பத்தி 14.3 மில்லியன் டன். இது நாட்டின் உற்பத்தியில் 16 %. அதே போல் காய்கறி உற்பத்தி 12.8 %.

 தொழிலாளிகளின் அரசாக இடது முன்னணி அரசாங்கம் இருந்த காரணத்தால்தான் ஒருங்கிணைக்கப் படாத தொழிலாளர்களுக்காக வருங்கால வைப்புத் தொகையை முதலில் அறிமுகம் செய்தது. தனது ஏழாவது ஆட்சிக்காலத்தில் மருத்துவக் காப்பீட்டையும் அறிமுகம் செய்தது. விவசாயத்தொழிலாளர்களுக்கும் வருங்கால வைப்புத் திட்டத்தையும் மருத்துவக் காப்பீட்டையும் விரிவு படுத்தியது. இடது முன்னணி ஆட்சிக்காலம் முடிகிற போது அரசின் சமூக நலத்திட்டங்கள் முப்பத்தி எட்டு லட்சம் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்தது.  மூடப்பட்ட ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1500 அளிக்கத் தொடங்கியதும் இடது முன்னணி அரசு.

 விவசாயத்துறையை தன்னிறைவு பெற்ற துறையாக முன்னேற்றிய பின்பு, தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்த பின்பு தொழில் துறையை முன்னேற்ற கவனம் மேற்கொண்டது.

 இடது முன்னணியின் ஏழாவது ஆட்சிக்காலத்தில் மட்டும் சிறிய, பெரிய, நடுத்தர          தொழிலகங்களாக  36,000 கோடி  ரூபாய்  முதலீட்டிலான  1313  தொழிற்சாலைகள்  உருவாகின. இதில்  2010 ல்  மட்டும்  322  தொழிற்சாலைகள்  அமைக்கப்பட்டு  1,41,0000  புதிய வேலைகள்  உருவாகின.  மற்ற  இடங்களில்  எல்லாம்  சிறு தொழில்  அழிந்து  கொண்டிருக்கையில் மேற்கு வங்கத்தில் மட்டும் 4000 சிறு தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்தது.

 தகவல் தொழில்நுட்பத் துறையிலும் அனைத்து பெரிய நிறுவனங்களும் மேற்கு வங்கத்தில் அலுவலகங்களை துவக்கினர்.  2006 ல்  தகவல்  தொழில்  நுட்பத்துறையில்  36,000  ஆக  இருந்த  ஊழியர்  எண்ணிக்கை  2010 ல் 1,10,000 ஆக உயர்ந்தது.

 ஆனால் மேற்கு வங்க இடது முன்னணி அரசு இந்த வளர்ச்சி போதும் என்று இருந்து விடவில்லை. நிலத்தை பெற்ற விவசாயிகளின் மகனோ மகளோ படித்து விட்டு வருகையில் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்பதால் தொழில் துறையில் மேலும் முன்னேற்றம் காண்பது அவசியம் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியது.

 அதற்கான முதல் நடவடிக்கைதான் டாடா நானோ தொழிற்சாலை.

 மேற்கு வங்கத்தில் பெரும்பாலானவை சாகுபடி நிலங்கள்தான். ஆகவே மூன்று போகங்களோ இல்லை இரண்டு போகங்களோ விளைச்சல் இல்லாத ஒரு போகம் மட்டுமே விளையக்கூடிய நிலத்தை கண்டறிய வேண்டியிருந்தது. அப்படி கிடைத்ததுதான் சிங்கூர்.

 சிங்கூரில் மேற்கு வங்க அரசு டாடாவிற்கு ஒதுக்கியது வெறும் 990 ஏக்கர் நிலம் மட்டுமே. நிலத்தின் கட்டுப்பாடு அரசின் வசமே இருக்கும். இழப்பீடு எப்படி தரப்பட்டது தெரியுமா?

 சந்தை விலையைப் போல ஒன்றரை மடங்கு. குத்தகைதாரருக்கு தனியாக இழப்பீடு. நிலம் கொடுத்தவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, அதைத் தவிர நிலம் கொடுத்தவர்களது குடும்பத்து பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுய உதவிக்குழுக்கள் மூலமாகவே நானோ நிறுவன ஊழியர்களுக்கு சீருடை தைக்கப்பட வேண்டும். உணவகமும் அவர்கள் அமைப்பார்கள்.

 சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் மற்ற மாநிலங்களில் விவசாய நிலங்கள் தேவையை விட பல மடங்கு அதிகமாக பறிக்கப்பட்டது. அடிமாட்டு விலை கூட விவசாயிகளுக்கு தரப்படவில்லை. மற்ற இழப்பீடுகளுக்கும் சிங்கூர் இழப்பீட்டிற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்தான்.

 டாடா ஒப்புக் கொண்டது போன்ற நிபந்தனைகளை மற்ற மாநிலங்களும் விதித்தால் அது கார்ப்பரேட்டுகளுக்கு சிக்கலாகி விடும். ஆகவே அவர்கள் டாடா நானோ சிங்கூரில் வருவதை தடுக்கப்பார்த்தார்கள். 95 % விவசாயிகள் தங்கள் நிலங்களை மனமுவந்து கொடுத்த சூழலில் மம்தா பானர்ஜி கலவரத்தை தூண்ட நானோ தொழிற்சாலை மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

 எங்கள் சங்கத்தின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் 2007 ம் ஆண்டு கொல்கத்தா நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் அன்றைய தொழிலமைச்சரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் நிருபம் சென், மேற்கு வங்க தொழிற்கொள்கை  தொடர்பாக எங்களிடம் உரையாற்றினார்.

 அப்போது அவர் சொன்ன ஒரு வாசகம் இன்றும் மனதில் நினைவில் உள்ளது. From the Right Fundamentalists to the Ultra Left, every one joined hands to destabilize the Industrial Growth of West Bengal. மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை சீரழிக்க வலதுசாரி அடிப்படைவாதிகள் தொடங்கி இடது தீவிரவாதிகள் வரை கை கோர்த்துக் கொண்டனர்.

 இடது முன்னணிக்கு எதிரான கலவரத்தில் துப்பாக்கி தூக்கிய மாவோயிஸ்டுகள் நிலை என்ன ஆனது?

 மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த ஒரு வருட காலத்திற்குள்ளாக அவர்கள் அழித்தொழிப்பு செய்யப்பட்டார்கள். குறிப்பாக மாவோயிஸ்ட் கட்சியின் தலைமை கமாண்டராக இருந்த கிஷண்ஜி. இவர்தான் மேற்கு மித்னாபூரில் தோழர் புத்ததேப் பட்டாச்சார்யாவை படுகொலை செய்ய தாக்குதல் நடத்தியவர். அதே கிஷண்ஜி அதே மேற்கு மித்னாபூரில் மம்தா அரசால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 குஜராத்திற்குப் போன டாடா நானோவிற்கு எவ்வளவு நிலம் கிடைத்தது?

 990  ஏக்கர்  நிலத்திற்கு  பதிலாக  20,000  ஏக்கர்  நிலம்  அங்கே  வாரி  வழங்கப்பட்டது.    அதுவும்  அடிமாட்டு  விலையை  விட  கேவலமாக. இருபது மடங்கு கூடுதல் நிலம் எதற்காக? ரியல் எஸ்டேட் வணிகம் செய்யத்தான்.

 சிங்கூரை விட்டு நானோ போனாலும் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் வரை நிலம் விவசாயிகளுக்கு திரும்பி வழங்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு 2017 ம் ஆண்டுதான் மம்தா அந்த நிலங்களை திருப்பிக் கொடுத்தார்.

இப்போது டாடா நானோ உற்பத்தி நிறுத்தப்பட்டு அந்த தொழிற்சாலை முடங்கி விட்டது. அதற்கு எந்த தொழிற்சங்கப் போராட்டமும் காரணமில்லை. ஏராளமான கோளாறுகள் காரணமாக விற்பனை சரிந்து விட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலம் என்ன ஆனது என்பதை சரி பார்க்க அவகாசமில்லை. யாராவது சொன்னால் நல்லது. 

 மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசு வீழ்த்தப்பட்டதற்கு பிறகு அங்கே எந்த புதிய தொழிலும் வரவில்லை.

 டாடா நானோ வை மேற்கு வங்கத்திலிருந்து துரத்தி அம்மாநில தொழில் வளர்ச்சியை முடக்கிய வலதுசாரி அடிப்படைவாதிகள்தான் இப்போது சாம்சங் நிர்வாகத்துக்கு முட்டு கொடுத்து கம்யூனிஸ்டுகள் பற்றி பொய்ப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த பொய்களை பரப்பும் கருவிகளாக உடன்பிறப்புக்களில் ஒரு பகுதியினர் (தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்தும் திமுகவினரும் உண்டு) மாறியுள்ளதுதான் அவர்கள் செய்யும் வரலாற்றுப் பிழை.

 பிழையை இப்போதாவது திருத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு,

 

 

இந்தியர்கள் செத்தாலும் இஸ்ரேல் பக்கம்தானா மோடி?

 


இஸ்ரேலின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் வளாகத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.

நேற்று இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகள் அந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் கதவுகளை தகர்த்து உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு அமைதிப் படையின் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. தீவிரவாத இயக்கங்கள் கூட செய்யத் துணியாத, தயங்குகிற ஒரு வேலையை இஸ்ரேல் ராணுவம் செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு மிரட்டல் வீடியோ அனுப்பியுள்ளார். அந்த மிரட்டல் வீடியோவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை லெபனானை விட்டு வெளியேறாவிட்டால் அதன் மீது தாக்குதல் நடத்தி முற்றிலுமாக அழித்து விடுவேன் என்று சொல்லியுள்ளார்,

இஸ்ரேல் குரைக்கும் நாய் அல்ல, கடிக்கும் நாய்.

நெதன்யாகு தான் மிரட்டியது போல செய்யக்கூடிய ஆசாமிதான்.

இதிலே மோடி எங்கே வருகிறார் என்ற கேள்வி எழலாம்.

லெபனானில் செயல்படும் ஐ.நா அமைதிப்படையில் 20 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர்.  இந்திய ராணுவ வீரர்கள் மட்டும் 903 பேர் உள்ளனர். இஸ்ரேல் தாக்கினால் அவர்களும் செத்துப் போவார்கள்.

மோடிக்கு இது ஏற்புடையதுதானா?

மோடி அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார் என்பதுதான் சோகமான யதார்த்தம்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாலஸ்தீனம் உபட இஸ்ரேலின் மண்ணில் கால் வைக்கக் கூடாது என்று இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

இத்தடைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் 125 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது இரண்டு நாடுகள். ஒன்று அமெரிக்கா.

இன்னொன்று.

ஆம். அது இந்தியாதான்.

இஸ்ரேல் என்ன அராஜகம் செய்தாலும் அதற்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் நாடாக இந்தியாவை மாற்றி விட்டது மோடியின் அரசு.

இப்படிப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய மனிதப் பிறவியா மோடி?

அப்படிப்பட்ட கவலையெல்லாம் இருந்திருந்தால் உளவுத்துறை எச்சரித்தும் 44 வீரர்களை புல்வாமாவில் சாகவிட்டிருப்பாரா?