Wednesday, October 16, 2024

நாகரீகமான அனாமதேயமும் நாசுக்கான பதிலும்.

 


கனடா கொலையும் அமித்ஷாவும் என்ற நேற்றைய பதிவிற்கு அனாமதயேமாக ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். போலிப் பெயரிலும் அனாமதேயமாகவும் கீழ்த்தரமான மொழியில் பின்னூட்டமிடுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் என்னால் பணி பாதுகாக்கப்பட்ட ஒரு நன்றி மறந்த துரோகி போல அல்லாமல் அவரின் மொழி மிகவும் நாகரீகமாக இருந்தது.

 அவருக்கு நன்றி சொல்லி ஒரு விரிவான பதிலும் அளித்தேன். அவரின் பின்னூட்டத்தையும் என் பதிலையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 நாகரீகமான பின்னூட்டம்

 உங்களுடைய கருத்துக்களில் எனக்கு துளியும் உடன்பாடு இல்லை தோழரே.மொழிவாரியாக பிரிவினையை ஊக்குவிப்பது தான் மார்க்கசியமா?அமெரிக்க ஆதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த சோவியத்து ஒன்றியம் பல துண்டுகளாக உடைந்து தன் சொந்த சகோதர நாடுகளுடனே சண்டையிட்டுக் கொண்டு அழிந்து வரும் நிலை இந்தியாவிற்கும் வரவேண்டும் எதிர்பார்க்கிறீர்களா? 320 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானம் காலிஸ்தான் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். அப்பொழுது இதே ஜஸ்டின் ட்ருடோவின் தந்தை தான் கனடாவின் பிரதமராக இருந்தார்.இத்தனைக்கும் 284 பயணிகள் கனடா நாட்டவர்கள்.அக்கால கட்டத்தில் இந்திய விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கன்னடிய மக்களால் தூக்கி எறியப்பட்டார் என்பதை நீங்கள் அறியவில்லை போலும்.வளர்ந்து வரும் இந்தியாவின் செல்வாக்கை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தியாவிற்கு மறைமுகமாக பல தடங்கல்களை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற மேலை நாடுக எதிர்க்க முடியாத நிர்பந்தத்தினால் இந்தியாவின் நிலைத்தன்மையை சீர்குலைத்து தன் கை பாவையாக வைத்திருக்க முயன்று வருவதை பன்னாட்டு அரசியல் அறிந்தோர்க்கு நன்கு தெரியும்.நானும் 25 ஆண்டுகளுக்கு மேல் ஒரு முதன்மையான மத்திய அரசு நிறுவனத்தின் முதன்மையான இடதுசாரி சார்பு தொழிற்சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக பல ஆண்டுகள் பணிபுரிந்தவன். என்றைக்கு தேசவிரோத கருத்துக்களை முன்னெடுத்ததோ அப்போதே இடதுசாரிகளின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

விரிவான பதில்

 சில அனாமதேயங்கள் போல அல்லாமல் நாகரீகமான முறையில் உங்கள் கருத்துக்களை முன் வைத்தமைக்கு மனமார்ந்த நன்றி. உங்கள் புரிதல்கள் சில சரியில்லை என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன். மொழி உணர்வைத் தூண்டி நாட்டை பிரிக்கும் வேலையில் இடதுசாரிகள் என்றும் ஈடுபட்டதில்லை. மாறாக இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாத்து இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்,  மத வெறியைத் தூண்டி மக்கள் ஒற்றுமையை சிதைக்க முயல்வது சங்கிகளின் வேலை. என் கருத்துக்கள் அனைத்தும் அந்த சங்கிகளை அம்பலப்படுத்துவதுதான்.

 காலிஸ்தான் பிரிவினைகளை எதிர்த்த காரணத்தால் மார்க்சிஸ்டுகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுதான் வரலாறு. ஏன் எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஜலந்தர் கோட்டச்சங்கத்தின் தலைவராக இருந்த தோழர் குருபச்சன்சிங் சென்ற ஜீப் தாக்கப்பட்டு அந்த விபத்தில் நேர்ந்த காயங்களால் அவர் இறந்து போனார்..

 1966 ல் பிறந்தாலும் 1975 அவஸ்ர நிலைக்காலம் முதலே இந்திய அரசியலை பின்பற்றி வருகிற நான் கனிஷ்கா விமானம் தகர்க்கப்பட்டது, அதன் தொடர்ச்சி பற்றியெல்லாம்  நன்கு அறிவேன். காலிஸ்தானி என்று சொல்லி வேறு நாட்டில் கொலை செய்வதெல்லாம் ஒரு அரசின் வேலையா? கீழ்த்தரமான செயல். இதை கண்டிக்காமல் இருக்க முடியுமா? கிரிமினல் உள்துறை அமைச்சராக இருந்தால் கிரிமினல் வேலைதான் நடக்கும்.

 மற்ற நாடுகள் சிக்கலை உருவாக்க வேண்டும் என்று சதித்திட்டம் தீண்டும் அளவிற்கு இந்தியா வளர்ந்து விட்டது என்பதெல்லாம் கற்பனாவாதம். முதலாளிகள் வளர்ந்துள்ளனர். மக்கள் வளரவில்லை. பல புள்ளி விபரங்கள் அதைச் சொல்லும்.

 எங்கள் கோட்ட மாநாட்டு அறிக்கைக்காக எழுதப்பட்டவற்றி சிலவற்றை உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.

 *****************************************************************

 இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போவதாக ஆட்சியாளர்கள் பீற்றிக் கொண்டிருப்பது தொடர்பாக கடந்த மாநாட்டில் விவாதித்தோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி எட்டு சதவிகிதம் இருக்கும், ஏழரை சதவிகிதம் இருக்கும் என்றெல்லாம் ஆரூடம் சொல்லப்பட்டு வந்தாலும் கடந்தாண்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி 4.6 % என்ற அளவில்தான் இருந்தது. இந்தியாவின் சராசரி தனி நபர் வருமானம் என்பது 2411 டாலர்கள் மட்டுமே. உலக அளவில் 141 வது இடத்தில் உள்ளது.

  இது எதைக் குறிக்கிறது?

 இந்தியாவில் நிலவும் அசமத்துவத்தின் வெளிப்பாடு இது.  டாலர் பில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவின் டாலர் பில்லியனர்கள் 200 பேர்.  உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டியலில் முதலிடம் முகேஷ் அம்பானிக்கும் கௌதம் அதானிக்கும் இடையே ஊசலாடுகிறது.

 சர்வதேச அளவில் பல குறியீடுகளில் இந்தியா மிகவும் பின் தங்கி உள்ளது என்பதை பின் வரும் புள்ளி விபரங்கள் உணர்த்தும்.

 மனித வளர்ச்சி குறியீட்டில் 193 நாடுகளில் இந்தியாவின் இடம் 193 நாடுகளில் 134 வது இடம்தான். அதே போல  உலக வறுமைக் குறியீட்டிலும் இந்தியாவின் இடம் 193 நாடுகளில் 134 வது இடமே. இந்திய மக்கட்தொகையில் 14.96 % பேர் வறுமையின் பிடியில் உள்ளனர்.

 மகிழ்ச்சிக்கான குறியீட்டில் நிலைமை இன்னும் மோசம். 146 நாடுகளில் இந்தியா பெற்ற இடம் 126.

 உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 125 நாடுகளில் 111வது  இடம் பெற்றுள்ளது. நம் அண்டை நாடுகளில் நிலைமை இந்தியாவை விட மேலாக உள்ளது. மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் 102 வது இடத்திலும் இலங்கை 60 வது இடத்திலும் வங்க தேசம் 81 வது இடத்திலும் நேபாளம்  69 வது இடத்திலும் உள்ளது.

 இதன் காரணம் என்ன?

 இந்தியாவின் செல்வாதாரங்களில் 40 % இந்தியாவின் பெரும் செல்வந்தர்களாக உள்ள 1 % பேரிடமே உள்ளன. இந்த சமத்துவமின்மைதான் மேலே உள்ள நிலைமைக்குக் காரணம்.

 இவற்றை சரி செய்ய வேண்டிய மத்தியரசோ நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலையுறுதிச்சட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து வெட்டி வருவதைப் பற்றி கடந்தாண்டே விவாதித்தோம். இப்போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. ஆதார் அட்டையை கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்று கெடுபிடி செய்ததில் பத்து கோடி பேர் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். வங்கிக் கணக்கு எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பதில் உள்ள தொழில்நுட்பப் பிரச்சினைகளால் பணி செய்தும் இரண்டு கோடி தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்கவில்லை. இவர்கள் எல்லாம் வறுமையின் பிடியில் சிக்காமல் எப்படி தப்பிக்க முடியும்!

 இன்னொரு செய்தியும் இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றிய கவலைகளை அதிகரிக்கிறது.

 இந்தியாவின் வீட்டுச் சேமிப்புக்கள் (DOMESTIC SAVINGS) ஒட்டு மொத்த உற்பத்தியில் 5 % மட்டுமே என்ற அளவில் சுருங்கிப் போயுள்ள நிலையில் வீட்டுக் கடன்கள் (DOMESTIC DEBTS) என்பதோ 40 % ஆக இருக்கிறது. சேமிப்பு சுருங்குவதும் கடன் தொகை அதிகரிப்பதும் நாட்டிற்கு நல்லதல்ல. வீட்டு வசதிக் கடன் வாங்குவதால்தான் இந்த நிலை என்று காரணம் சொல்லப்படுகிறது. திருப்பி செலுத்தும் சக்தியை உரிய முறையில் ஆய்வு செய்து கடன் வ்ழங்கப்படுகிறதா என்பது ஒரு கேள்விக்குறி. வங்கிகளின் தற்போதைய முன்னுரிமை டெபாசிட் சேகரிப்பது என்பதிலிருந்து கடன் கொடுப்பது என்று மாறி விட்டது.

 ஏற்கனவே வங்கிகள் கார்ப்பரேட் கம்பெனிகளின் வாராக்கடன் பிரச்சினையால் தவித்துக் கொண்டிருக்கும் போது சாதாரண மக்கள் வாங்கும் கடனும் இணைந்து கொண்டால் வங்கித்துறையின் நிலைமை இன்னும் மோசமாகும். அமெரிக்காவில் உருவான பொருளாதார நெருக்கடி போன்றதொரு சூழ்நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிற்து.

 இந்தியாவின் உற்பத்தித்துறையிலும் பெரிய முன்னேற்றமில்லை. இறக்குமதி என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது  என்ற தோற்றத்தை இந்தியா  காண்பித்துக் கொண்டே சீனாவுடனான இறக்குமதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 2018 – 19 ல் ஐந்து லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து ஐநூறு கோடியாக இருந்த இறக்குமதி 2023- 24 ல் எட்டு லட்சத்து நாற்பத்தி மூன்றாயிரத்து முன்னூற்றி ஐம்பது கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால் அதே நேரம் இந்தியாவின் ஏற்றுமதியோ      ஐந்து வருடங்களாக ஒரு லட்சத்தி முப்பத்தி மூன்றாயிரம் கோடியாக  தொடர்கிறது.

 வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையையும் ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. சாமானிய மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவகம் செய்வதிலேயே கவனம் செலுத்தினார்கள்.

*********************************************************************************

 இடதுசாரிகள் தேச விரோத செயல்களை செய்வதாக சிறு குழந்தை கூட சொல்லாது. இன்று பின்னடைவை சந்தித்திருக்கிறோம். நாளை பீனிக்ஸ் பறவையாய் எழுவோம்.

 நாகரீகமான முறையில் உங்கள் கருத்துக்களை முன்வைத்தமைக்கு மீண்டும் நன்றி.

 

1 comment:

  1. //போலிப் பெயரிலும் அனாமதேயமாகவும் கீழ்த்தரமான மொழியில் பின்னூட்டமிடுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் என்னால் பணி பாதுகாக்கப்பட்ட ஒரு நன்றி மறந்த துரோகி// மேலே பதிவில் சொன்ன அந்த இழி பிறவி, அது உண்ணும் நரகல் மொழியில் ஒரு பின்னூட்டமிட்டு தைரியமிருந்தால் பப்ளிஷ் செய் என்று எழுதியிருந்தது. ஒளிந்து கொண்டு கீழ்த்தரமான பல வேலைகளை செய்யும் அந்த இரண்டு கால் திருட்டு நாய் தைரியமிருந்தால் அதன் சொந்த அடையாளத்துடன் வரட்டும், இங்கே மட்டும் அல்ல, அது பொறுக்கித்தனம் செய்யும் எல்லா இடங்களிலும்

    ReplyDelete