சூரியன் உதிப்பதும் தெரியாமல் அஸ்தமிப்பதும் தெரியாமல்
உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை வேண்டும்
என்று கேட்டார்கள். பேரணியாய் திரண்டு கேட்டார்கள். முதலாளிகளால் முதலாளிகளுக்காக
நடத்தப்படும் முதலாளிகள் அரசால் இந்த கோரிக்கை வைக்கப்படுவதையே சகிக்க
முடியவில்லை.
சிக்காகோ ஹே மார்க்கெட் சதுக்கத்தில் நடந்த பொதுக்
கூட்டத்தில் இன்றும் ஏவல் துறையாகவே
செயல்படும் காவல் துறை குண்டாந்தடிகளால் தாக்கியது. துப்பாக்கியால் தோட்டாக்களை
உமிழ்ந்தது. கொலை வெறி அடங்காததால் தலைமை தாங்கியவர்களை தூக்கிலிட்டு குரல் வளையை
நெறித்தது.
அந்த தியாகிகளின் நினைவைப் போற்றத்தான் உலகத் தொழிலாளர்கள்
எல்லோருமே மே தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
தோழர்களே உங்கள் தியாகம்தான் பல முன்னேற்றங்களை உழைப்பாளி
வர்க்கம் அடைய அடி உரமாக இருந்தது.
உயிரைக் கொடுத்து நீங்கள் நடத்திய போராட்டம்தான் உரிமைக்குரல்
எழுப்ப உற்சாகம் தருகிறது.
லாப வெறியில் தகிக்கும் முதலாளிகளின் வெறி இன்னும்
அடங்கவில்லை. வாரத்திற்கு நூறு மணி நேரம் வேலை செய், மனைவியின் முகத்தை எவ்வளவு
நேரம் பார்ப்பாய் என்றெல்லாம் உபதேசிக்கிறது.
முதலாளிகளின் விசுவாசிகளாகவே ஆட்சிகளும் இருக்கிறது.
போராட்டங்களை ஒடுக்க காவல் துறையை ஏவி விடும் போக்கு அப்படியே தொடர்கிறது.
நீங்கள் சென்ற வழியில் போராட்டப்பாதையில் உழைப்பாளி மக்களின்
உரிமை காக்க உறுதியோடு செயல்படுவோம் என்று மே தின சூளுரை ஏற்கிறோம்.
மே தினம் வெல்க, மே தினத் தியாகிகளுக்கு செவ்வணக்கம்.
அனைவருக்கும் புரட்சிகர மே தின வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment