Saturday, April 26, 2025

எல்.ஐ.சி யால் மட்டுமே முடியும்

 



பஹல்காம் தாக்குதலில் உயிர் நீத்தவர்களில் எல்.ஐ.சி பாலிசிதாரர்கள் இருந்தால் அவர்களின் பட்டுவாடா கேட்புரிமங்கள் உடனடியாக செய்யப் படும் என்றும் அதற்காக சில சிறப்பு தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் எல்.ஐ.சி அறிவித்துள்ளது. அரசின் பட்டியலில் பெயர் இருந்தால் போது இறப்புச் சான்றிதழ் கூட  அவசியமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24.04.2025 அன்றே நெல்லூர் கோட்டம் ஒரு கேட்புரிமத்தை பட்டுவாடா செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இது போல துயரில் தவிப்பவருக்கு வேகமாக எந்த ஒரு தனியார் நிறுவனமும் சேவை செய்யாது என்றும் பொதுத்துறை எல்.ஐ.சி யால் மட்டுமே சாத்தியம் என்று எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும்.

இது புதிதல்ல.

சுனாமி தாக்கிய போது கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் 24 மணி நேர சேவை செய்தோம்.

காட்பாடி தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை விபத்தில் எண்ணற்ற தொழிலாளர்கள் இறந்த போது வேலூர் மையத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் 24 மணி நேர உதவி மையம் செயல்பட்டது.

இது எல்.ஐ.சி யின் பாரம்பரியம்.

சுனாமி சமயத்தில் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் அவ்வளவாக இந்தியாவில் கால் பதிக்கவில்லை (இப்போதும் கூட அவர்களால் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை). ஆனால் சுனாமி தாக்கிய வேறு சில நாடுகளில் அங்கே இருந்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , "சுனாமி என்பது கடவுளின் செயல். அதனால் பாலிசி பணத்தை தர முடியாது" என்று மறுத்து விட்டன. பாலிசிதாரர்களின் உறவினர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.

மும்பை தாக்குதலின் போது வீர மரணம் அடைந்திட்ட காவல்துறை உயரதிகாரி ஹேமந்த் கார்கரேவின் இறப்புக் கேட்புரிமத்தை எல்.ஐ.சி மறுநாளே வழங்கியது. அவர் இன்னொரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஹேமந்த் கார்கரே மீட்பு நடவடிக்கைக்குச் சென்றார் என்று சொல்லி பணம் கொடுக்க மறுத்து விட்டது.

இப்படிப்பட்ட தனியார் கம்பெனிகள் கொழிக்க வேண்டும் என்பதற்காக மோடி அரசு எல்.ஐ.சி யின் செயல்பாடுகளை, வணிகத்தை சீர்குலைக்க சில சதிகளை செய்து கொண்டிருக்கிறது.

அதை எந்நாளும் நாங்கள் அனுமதியோம்.


No comments:

Post a Comment