Monday, December 15, 2025

தகுதியற்றவர்களின் ஆட்சியின் மரணங்கள்

 


போன மாதம் சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்த ரயில் விபத்து நினைவில் உள்ளதல்லவா!

பதினைந்து பேரை காவு வாங்கிய அந்த விபத்து குறித்து ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் பிரிஜேஷ் குமார் மிஷ்ரா கொடுத்த அறிக்கையின் விபரங்கள் என்ன சொல்கிறது தெரியுமா?

அந்த ரயிலின் இஞ்சின் ட்ரைவர் அந்த ரக ரயில்களை ஓட்டுவதற்காக நடத்தப்படும் தேர்வில் தோற்றுப் போனவராம். அதே போல அந்த ரயிலின் கார்டும் அந்த பதவிக்கான தகுதி வரம்பை எட்டாதவராம். உதவி இஞ்சின் ட்ரைவரும் சிவப்பு சிக்னலை பார்த்தும் வண்டியை நிறுத்த முயற்சிக்கவில்லை.

தகுதித் தேர்வில் தோற்றுப் போன பலரும் பல ரயில்வே கோட்டங்களில் ரயில்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அந்த அறிக்கை அளிக்கும் இன்னொரு செய்தி.

உண்மையில் சொல்ல வேண்டுமானால்

ரயில்களை இயக்கியவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல.

பயணிகள் நலன் பற்றி கவலைப்படாத, ஆட்சி நடத்த தகுதியற்ற மோடி அரசுதான் பயணிகளின் மரணத்துக்கான உண்மையான காரணம். 

அந்த வக்கீல்கள் அனாமதேயங்களா?

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி பார்த்தேன். 

தி.குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்தால் ஒட்டு மொத்த நீதித்துறையே நிலை குலைந்து போய்விடும் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய அளித்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் உள்ள வக்கீல்கள் மக்களவை தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளார்களாம்.



சரி, இதை அனுப்பியவர்கள் யார் என்று பார்த்தால் இந்த செய்தியில் யாருடைய பெயரும் இல்லை. எந்த வழக்கறிஞர் அமைப்பின் பெயரும் இல்லை. ஜாதி, மத அமைப்புக்களின் பெயர் கூட இல்லை. இந்த மனுவில் எத்தனை வக்கீல்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்ற விபரமமும் இல்லை. ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தீர்ப்புக்கள் வழங்கியுள்ளார் என்ற சங்கிகளின் கட்டுக்கதை மட்டும் மனுவில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் சங்கிகள் எப்படி அனாமதேயமாக, போலி ஐடிக்களில் பின்னூட்டம் போடுவார்களோ அது போல சபாநாயகருக்கு அனாமதேயமாக, மொட்டைக் கடிதம் அனுப்பி விட்டார்கள் போல. . .


Sunday, December 14, 2025

கேரளா - பின்னடைவும் முன்னேற்றமும்

 


கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அச்சத்தையும் கவலையையும் அதே நேரம் நம்பிக்கையையும் அளிக்கிறது.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் அதிக இடங்களை (பெரும்பான்மை இடங்களை அல்ல, ஆனாலும் பாஜக வாஷிங் மெஷினில் கொலைக்குற்றத்திலிருந்து விடுபட்ட காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் உதவியுடன் சில கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி விடுவார்கள்) பெற்றுள்ளது அச்சத்தை அளிக்கிறது ஈறை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் கேடு கெட்ட சூட்சுமத்தை அறிந்த சங்கிகள் ஒட்டு மொத்த கேரளத்திலிருந்தும் இடதுசாரிகளை வீழ்த்தி விட்டோம் என்று பிரச்சாரம் செய்வார்கள் என்பதுதான் அச்சம்.

இடது முன்னணிக்கு பின்னடைவா?

ஆம். பின்னடைவுதான். ஏற்கனவே பொறுப்பிலிருந்த பல இடங்களை இழந்துள்ளது என்பது நிச்சயமாக பின்னடைவுதானே!

மோடியும் காங்கிரஸும் சொல்வது போல இடது முன்னணி கேரளத்திலிருந்து முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டு விட்டது.

பொய், மிகப் பெரிய பொய்


மேலே உள்ள பட்டியலே உண்மையைச் சொல்லும்.  மாநகராட்சிகளில் பெரிய இழப்பு இருந்தாலும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும்  ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துக்களிலும்  கணிசமான எண்ணிக்கை கிடைத்துள்ளது.

திருவனந்தபுரத்தைத் தவிர மற்ற பகுதிகளில் பாஜக இழந்ததுதான் அதிகம். 

வழக்கறிஞர் தோழர் பிரதாபன் வாக்கு சதவிகிதம் பற்றிய புள்ளி விபரத்தை பகிர்ந்திருந்தார். அது கீழே


2024 ல் நாடாளுமன்ற தேர்தலின் போது,
காங்கிரஸ்:- 45.40%
இடதுசாரி:- 33.60%
தேஜகூ:- 19.40%
வாக்குகள் பெற்றன.

தற்போது உள்ளாட்சி தேர்தலில்
காங்கிரஸ்:- 42%
இடதுசாரி:- 40%
தேஜகூ:-9%. வாக்குகள் பெற்றுள்ளன.
2024 ஐ விட கூடுதலான வாக்கு சதவீதத்தை இடது ஜனநாயக முன்னணி பெற்றும் வெற்றி பெற இயலவில்லை.



இந்த புள்ளி விபரம் நம்பிக்கையையும் அளிக்கிறது. கவலையும் அளிக்கிறது.

திருச்சூரில் காங்கிரஸ் தன் வாக்குகளை சுரேஷ் கோபிக்கு மடை மாற்றிக் கொடுத்தமைக்கு பாஜக இப்போது நன்றிக் கடன் ஆற்றியுள்ளதோ என்றொரு சின்ன சந்தேகம் வருகிறது.

அதே நேரம் பின்னடைவு ஏற்பட்டாலும் தளம் அப்படியே இருப்பதால் இடது முன்னணி தன் பலவீனங்களை கண்டறிந்து அவற்றை களைந்திடும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தோழர் பினராயி விஜயன் தலைமையிலான மாநில ஆட்சி எவ்வளவு சிறப்பான பணிகளை செய்திருந்தாலும் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் அந்த வார்டில் நிற்பவர் யார்? அந்த தெருவில் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதெல்லாம்தான் முக்கியமான காரணிகள்.

பத்தாண்டு கால கேரள மக்களுக்கு செழிப்பான ஆட்சியில் சில களைகளும் முளைத்திருக்கும். அந்த களைகளை கறாராக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இடது முன்னணி எடுத்திடும் என்று நம்புகிறேன்.

காலத்தே களைகளை அகற்றத் தயங்கினால் அது பெரும் புதராக மாறி பின்னடைவுகளை உருவாக்கிடும், மேற்கு வங்கத்தைப் போல.

கேரளா மேற்கு வங்கம் அல்ல என்பதை 2025 ல் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.

வாக்குகளின் சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதால் அலட்சியம் வந்திடுமோ என்பது கவலையளிக்கிறது.

Saturday, December 13, 2025

மோடியும் நேருவின் கொள்ளு பேத்தியும்

 


உருப்படியாக எதையும் செய்ய இயலாத மோடி, நாடாளுமன்றத்தில் நடத்திய ஒரு வெட்டி விவாதம்தான் "வந்தே மாதரம்" 150 வது ஆண்டு.

அதையும் ஜவஹர்லால் நேருவை வசை பாடத்தான் பயன்படுத்திக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து நேருவின் கொள்ளுப் பேத்தி பிரியங்கா கொடுத்த பதிலடி சிறப்பாகவே இருந்தது. 

அந்த காணொளி கீழே


ஆமாம். நேரு பற்றி ஒரு விவாதம் வைத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு மோடியும் அவர் அல்லக்கைகளும் பதில் சொல்லவே இல்லையே! 

ஏற்கனவே பட்ட அசிங்கம் போதும் என்ற அறிவு கூட மோடிக்கு கிடையாதா என்ன!

Thursday, December 11, 2025

தி.குன்றம் தீர்ப்பாளரின் வழக்கு கணக்கு

 திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் அதி வேகமாக வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்ததாக பாஜக பொய்யன் நாராயணன் திருப்பதி பீற்றிக் கொண்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முகநூல் பதிவில் அட்டகாசமான விளக்கத்தை அளித்துள்ளார்.  நம்ம தீர்ப்பாளர் அளித்த தீர்ப்புக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கு மேல் என்றால் எந்த லட்சணத்தில் அவர் வேலை செய்துள்ளார் என்பதையும் இப்பதிவு அம்பலப்படுத்துகிறது.



கணக்கு வழக்கல்ல; இது வழக்கு கணக்கு சார் !
2017 முதல் 2025 வரை 9 வருடங்களில் 1,20,426 வழக்குகளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் வழக்கை ஏற்று விசாரித்து தீர்ப்பையும் எழுதியதாக இன்று ஒரு செய்தி பகிரப்படுகிறது.
உண்மையிலேயே அப்படி நடந்திருந்தால் அது ஒரு அசாதாரணமான வேகம் . அதை பகிர்ந்துள்ள பாஜகவின் BJP Tamilnadu திரு நாராயணன் திருப்பதி Narayanan Thirupathy BJP அவர்கள் நீதிபதி சுவாமிநாதன் அவர்களை
"பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திராவிட மாடல் ஏன் துடிக்கிறது என்று இப்போது புரிகிறதா?"
என்று எழுதியிருக்கிறார்.
இதை உண்மை என்று கொண்டால் எந்த விதமான வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, மருத்துவ விடுப்பு, தேசிய விடுமுறை என எந்த விடுப்பும் எடுக்காமல் எல்லா நாட்களும் அதாவது வருடத்தில் 365 நாட்களும் பணி செய்ததாக கொண்டால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அதாவது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை (அதுவும் சாப்பாடு டீ அல்லது வேறு எந்த ஓய்வுக்கும் செல்லாமல்) பணி செய்து இருந்தால் நாளைக்கு எத்தனை வழக்குகளை சராசரியாக தீர்ப்பு சொல்லியிருக்க முடியும் என்று கணக்கு போடலாமா ?
இந்த வருடம் முடிய இன்னும் ஒரு 20 நாட்கள் இருக்கிறது .
அந்த நாளையும் சேர்த்து நாம் கணக்கிடலாம் .
மொத்த வழக்குகள் -1,20,426
மொத்த வருடங்கள் -9
ஆண்டுக்கு சராசரி வழக்குகள்-13,380.6
நாளைக்கு சராசரி வழக்கு-36.66
ஒரு மணி நேரத்திற்கு சராசரி வழக்கு -4.58
அதாவது ஒரு வழக்கிற்கு ஆன சராசரி நேரம்-13.1 நிமிடங்கள் .
அதாவது சராசரியாக ஒவ்வொரு வழக்கையும் ஏற்று விசாரித்து குறுக்கு விசாரணை செய்து அதன் பிறகு அதை பரிசீலித்து தீர்ப்பு எழுதுவதற்கு 13 நிமிடங்கள் ஒரு நொடிதான் சராசரியாக எடுத்திருக்கிறார்.
உண்மையில் மந்திரவாதிகளால் மட்டுமே சாத்தியமானதை நீதிபதி ஜிஆர் சாமிநாதன் அவர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்.
நம்முடைய பாராட்டுக்களை அவருக்கு உரித்தாக்குவோம்.

மகிழ்ச்சியளித்த கூட்டம்

 


நேற்று முன் தினம் போளூர் கிளைச்சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்றேன். பணி ஓய்வுக்குப் பிறகு சேலத்தில் தென் மண்டல மாநாடு, நெய்வேலி, வேலூரில் கோட்ட மகளிர் மாநாடு, சென்னையில் மாநில மகளிர் மாநாடு, இரண்டு தோழமைச்சங்கங்களின் கருத்தரங்குகளில் சிறப்புரை என்று சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் ஒரு கிளைச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டது முதல் முறை. பணி ஓய்வுக்குப் பிறகு கலந்து கொண்ட முதல் கூட்டம் மட்டுமல்ல, 1993 ல் கோட்டச்சங்கப் பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு கலந்து கொண்ட முதல்  கூட்டம், போளூர் கிளைச்சங்கத்தின் துவக்கக் கூட்டம்தான். அன்றைய பொதுச்செயலாளர் தோழர் ஆர்,ஜகதீசனோடு நானும் சென்றிருந்தேன்.

இப்போது எதற்கு போளூர் பயணம்? இந்த பதிவில் எதற்கு நேருவின் படம்?

இதோ கேள்விகளுக்கு பதில்.

இம்மாத இறுதியில் அகில இந்திய மாநாடு புவனேஸ்வரில் நடைபெறுகின்றது. அதற்கு முன்பாக அனைத்து கோட்டங்களும் தங்களுக்கு பொருத்தமான ஒரு நாளில் புது வணிக இயக்கம் நடத்திட வேண்டும் என்பது தென் மண்டல கூட்டமைப்பின் முடிவு.

சங்கம் எதற்கு புது வணிக இயக்கம் நடத்திட வேண்டும்?

எல்.ஐ.சி யின் மீது தொடர்ந்து பல தாக்குதல்கள் நடந்து வருகிறது. அதன் உடமையாளராக ஆவணங்களில் உள்ள ஒன்றிய அரசு ( எல்.ஐ.சி நிறுவனத்தின் நாற்பது கோடி பாலிசிதாரர்கள்தான் உண்மையான உடமையாளர்கள் ) , தனியார் நிறுவனங்கள், எல்.ஐ.சி க்கு கட்டுப்பாட்டு ஆணையமாகவும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு வளர்ச்சி ஆணையமாகவும் உள்ள இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று 9IRDA) ஆணையம், கார்ப்பரேட் ஊடகங்கள் ஆகியோர்தான் அந்த தாக்குதல்களை நிகழ்த்தும் சுய நலப் பேர்வழிகள்.

அந்த தாக்குதலை சந்திக்க எல்.ஐ.சி நிறுவனத்தின் வளர்ச்சிதான் முக்கியமான ஆயுதம் என்பது சங்கத்தின் ஆயுதம். 

வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, முகவர்கள் மத்தியில் வேகத்தை உருவாக்க சங்கம் வருடத்திற்கு ஒரு முறையாவது புது வணிக இயக்கம் நடத்துவது வழக்கம்.

எல்.ஐ.சி யை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான 14.11.2025 அன்று புது வணிக இயக்கம் நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று வேலூர் கோட்டச்சங்கம் முடிவெடுத்தது. மோடியால் இன்றளவும் தூற்றப்படும் ஒருவரை முன்னிறுத்துவதும் ஒரு முக்கியமான நடவடிக்கை அல்லவா!

அந்த இயக்கம் வெற்றிகரமாகவே நடந்தது. அன்று மட்டும் 2775 புதிய பாலிசிகள் கிடைக்கப் பெற்றன. கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் கிளைகள் முதல் மூன்று இடங்களை பெற்றன.

இதிலே போளூர் பெற்ற மூன்றாவது இடம் சிறப்பானது. மற்ற கிளைகளை ஒப்பிடுகையில் போளூர் மிகவும் சிறிய கிளை. வணிகத்திற்கான வாய்ப்பு தொடங்கி முகவர் எண்ணிக்கை, ஊழியர் எண்ணிக்கை வரை போளூர் சிறிய கிளைதான். 2023 ல் நாங்கள் நடத்திய புது வணிக இயக்கத்தில் கடைசி இடத்தில் வந்தது போளூர்தான் எனும் போது இப்போது அவர்கள் பெற்ற மூன்றாம் இடத்தின் மகத்துவம் புரியும்.

இப்போதைய திரைப்படங்களில் எல்லாம் TRANSERMATION SCENE என்று வரும். பாட்சா வின் "உள்ளே போ" விஸ்வரூபம் முதல் சண்டை போன்றவை உதாரணம்.

போளூர் கிளையில் வெற்றி பெற்ற முகவர்களுக்கு பரிசளிக்கும் கூட்டம் உள்ளது, நீங்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கர் அழைத்த போது கடைசி இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய இந்த TRANSFERMATION க்காவே ஒப்புக் கொண்டேன். இது சொல்லி அடித்த வெற்றி வேறு.

இந்த கூட்டம் மிகவும் மகிழ்ச்சியளித்தது. அதற்கு பல காரணங்கள் உண்டு.

முகவர்களின் பங்கேற்பு மிகவும் அருமையாக இருந்தது.  இதற்கு முன்பாக வேறு பல கிளைகளிலும் சங்கம் ஏற்பாடு செய்த முகவர் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன். போளூர் கூட்டம் அளவிற்கு வேறு எந்த கிளையிலும் முகவர்கள் பங்கேற்பு அவ்வளவு அதிக எண்ணிக்கையில் இல்லை.

நான்கு மூத்த முகவர்கள் பேசினார்கள். போளூர் கிளையின் ஊழியர்களின் சேவை மிகவும் சிறப்பாக உள்ளது. எங்களின் வணிகத்தின் வலிமையே அவர்கள்தான் என்று பாராட்டுகையில் மனதிற்குள் மழை பெய்தது. அந்த மூத்த முகவர்கள் தங்கள் வெற்றி ரகசியங்களை பகிர்ந்து கொண்டு நீங்களும் இவற்றை முயற்சி செய்யுங்கள் என்று சொன்னது நெகிழ்ச்சியூட்டியது. போட்டியாளராக கருதாமல் சக முகவராக கருதுகின்ற சிறந்த மனப்பான்மை அது.

கோட்டச்சங்கத் தலைவர் தோழர் பி.எஸ்.பாலாஜி, பொதுச்செயலாளர் தோழர் எஸ்.பழனிராஜ், இணைச்செயலாளர் தோழர் பி.கங்காதேவி ஆகிய மூவருமே அற்புதமாக பேசினார்கள். "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்" ஃபீலிங்கில் இருந்தேன்.

போளூர் கிளை மேலாளர் தோழர் டி.கஜராஜும் (நீண்ட காலம் எங்கள் வாணியம்பாடி கிளையின் செயலாளராக இருந்தவர்) நன்றாக பேசினார். 


தோழர் பி.எஸ்.பாலாஜி


தோழர் எஸ்.பழனிராஜ்


தோழர் டி.கஜராஜ்


தோழர் பி.சங்கர்




அருமையானதொரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அவர்கள் பெற்ற வெற்றியால் விளைந்தது. அந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். புது வணிக வெற்றிக்கும் கூட்டத்தின் வெற்றிக்கும் அடித்தளமாக இருந்து செயல்பட்ட போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கருக்கு பிரத்யேக வாழ்த்துக்கள். 

 




Wednesday, December 10, 2025

நீதிபதி இம்பீச்மெண்ட் - உமக்கென்ன பயம் சுமந்து?

 


திருப்பரங்குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இந்தியா கூட்டணி அளித்த மனு சங்கி சுமந்தின் உறக்கத்தை கலைத்து விட்டது போல . . .

ட்விட்டரில் நேற்று ஒரே புலம்பல்.

காங்கிரஸ் கட்சி ஆதரிக்குதா?

ம்ம்ம்ம், அவங்களும் கையெழுத்து போட்டுட்டாங்க போல.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு இந்து விரோத முத்திரை வந்துடுச்சு, பிரயோசனமில்லாத இந்த நடவடிக்கையால் அது இன்னும் தீவிரமாகும்னு கூட புரியலையே.

நிச்சயமாக தோத்துப் போகும்னு தெரிஞ்சே இப்படி செய்யறாங்களே! நீதிபதியோட ஜாதி மேல வெறுப்பால செய்யறாங்க. மைனாரிட்டி மதத்தை சேர்ந்தவர் என்றாலோ ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர் என்றாலோ இப்படி செய்ய தைரியம் வருமா?





திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் மீது நடவடிக்கை என்றால் சுமந்திற்கு ஏன் பதறுகிறது?

இதுவே தாமதம்.

சகோதரி செய்த விபத்தை தான் ஏற்றுக் கொண்டு சிறை சென்றது என்பது ஒரு மோசடி. அப்படி மோசடி செய்தவரை  வேதம் படித்தவர் என்பதற்காக நான் காப்பாற்றினேன் என்று சொன்ன போதே அவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.

இதிலே ஜாதியின் பெயரால் ஒளித்து வைக்க சுமந்து முயல்கிறார். அய்யா சுமந்து, தீர்ப்பாளரின் பல நடவடிக்கைகளுக்கு காரணமே அவருடைய ஜாதிய மேட்டிமை மனோபாவம்தான். அதையே அவருக்கு அனுதாபம் தேட நீர் முயற்சிப்பது அயோக்கியத்தனம்.

சரி உமக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?

திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் போல நமது மனைவியின் செயல்பாடுகள் அமைந்தால் அவர் மீதும் பதவி நீக்க நடவடிக்கை வரும் என்பதால் உருவான பயமா சுமந்து?

Tuesday, December 9, 2025

மோடியே பதில் சொல் . .

 


நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய அற்புதமான, ஆவேசமான, அர்த்தம் மிக்க உரை.

அவசியம் கேளுங்கள். 

என்னைப் போல மீண்டும் மீண்டும் கேட்பீர்கள் . . .


வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டை கொண்டாடுவதில் உள்ள போலித்தனத்தை மட்டுமல்ல பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய தீர்ப்பாளர் பற்றியும் பேசுவது ஆணித்தரமானது.

இந்த உரையில் தோழர் சு.வெ எழுப்புகிற மூன்று கேள்விகளுக்கு மோடியாலோ அல்லது சங்கிகளாலோ பதில் சொல்ல முடியுமா?

வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், இன்குலாப்  ஜிந்தாபாத் ஆகிய மூன்று முழக்கங்களின் பின்னணியில் லட்சக்கணக்கானவர்கள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

எந்த முழக்கத்தின் கீழ் நீங்கள் விடுதலைக்காக திரண்டீர்கள்?

"ஈஸ்வர அல்லா தேரா நாம்" என்ற முழக்கத்தை ஒரு முறையாவது உங்கள் உதடுகள் உச்சரித்துள்ளதா?

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிவன், விஷ்ணு, துர்கா என்று பனிரெண்டு திரு உருவச் சிலைகளை வைத்துள்ளீர்கள். கிறிஸ்துவத்திலிருந்து ஒரு திரு உருவச்சிலையோ, திருக்குரானின் அடையாளத்தில் எதுவுமோ உங்களுக்குக் கிடைக்கவில்லையா?

பதில் சொல் மோடி. 

உம்மால் முடியாது, முடியாது, முடியாது.  

Monday, December 8, 2025

நீதிபதி பதவி நீக்கம் - சரியான முடிவு

 


திருப்பரங்குன்றம் தீபத்தூண் புகழ் நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ( IMPEACHMENT MOTION) எடுக்கப் போவதாக "இந்தியா" கூட்டணி முடிவு செய்துள்ளது.

அரசியல் சாசனத்தின் விழுமியங்களைப் பற்றி கவலைப்படாமல், ஜன நாயகத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டு  காவிக் கண்ணாடி அணிந்து கொண்டு தீர்ப்புக்கள் மூலம் கலவரத்துக்கு வித்திடுபவர் நிச்சயம் நீதிபதி பொறுப்பிற்கு தகுதியற்றவர்தான்.

அவரை பணி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் முன்மொழிவு கொண்டு வர்ய்வது மிகவும் நல்ல விஷயம்.

எண்ணிக்கை அடிப்படையில் அந்த தீர்மானம் வெற்றி பெறாது.

ஆனால்

உங்கள் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது, ஏற்றுக் கொள்ள முடியாதது, நீதிபதி பதவிக்கு பொருத்தமற்றது என்று இந்திய ஜனநாயகத்தின் அடையாளமான நாடாளுமன்றத்தில் பதிவாவது மிகவும் முக்கியமானது. 

சரியான முடிவை எடுத்த அனைத்து தலைவர்களுக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும் . . .

பொறுப்பவர்களால் கொல்லப்பட்ட 25 பேர்

 


கோவாவில்  ஒரு இரவு விடுதியில் நேற்று நடைபெற்ற தீ விபத்தில் 25 பேர் இறந்து போயுள்ளனர்.



இதனை ஒரு எதிர்பாராத விபத்து என்று கடந்து போய் விட முடியாது.

விடுதியின் உரிமையாளர்கள், கோவா மாநில நிர்வாகம் சேர்ந்து செய்த கொலை என்றுதான் சொல்ல வேண்டும்.

குறுகிய நுழைவாயில், குறுகிய வெளியே செல்லும் வழி என்று இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் உள்ளே சிக்கிக் கொண்டவர்களால் வெளியேற முடியவில்லை. ஆக முதல் குற்றவாளி விடுதியின் உரிமையாளர்.  

கழிமுகக் கரையில் (BACK WATERS) அமைக்கப்பட்ட இந்த விடுதி மிகவும் பிரம்மாண்டமானது என்பதை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது.

இவ்வளவு பெரிய விடுதிக்கு அனுமதி பெறப்படவில்லை. அளவில் மிகவும் பெரிய இந்த விடுதி செயல்படுவதை  அரசு நிர்வாகம் அறிந்திருக்கவில்லை என்றால் அது எத்தனை பொறுப்பற்றதாக இருக்கும்! 

அரசு அனுமதி இல்லாமல் ஒரு பிரம்மாண்டமான விடுதி செயல்படுகிறது என்றால் அதற்காக எத்தனை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்திருப்பார்கள்!

ஆக இதில் தொடர்புடைய அத்தனை பேரையும் கொலையாளிகள் என்று கருதியே நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

கோவாவில் உள்ள பாஜக அரசு உறுதியோடு செயல்படுமா?

எனக்கு நம்பிக்கை இல்லை.

Sunday, December 7, 2025

வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன்

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் புதிய பொதுச்செயலாளராக தோழர் களப்பிரன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டத்தின் துடிப்பு மிக்க தோழர் ராஜனாக அறிமுகமானவர். தஞ்சைக் கோட்டத்தின் பொறுப்பாளராகவும் செயல்பட்டார். தொழிற்சங்க தளத்தில் பணியாற்றுவதை விட கலை, பண்பாட்டு தளத்தில் பணியாற்றுவதில் அதிக ஆர்வம் காண்பித்தார். அதன் தொடர்ச்சியாய் ஒரு முக்கியமான அமைப்பின் முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ளார். 

ஏராளமான பயணங்களை மேற்கொண்டு அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்பவர். அதில் காஷ்மீர் பயண அனுபவமும் பாகிஸ்தான் பயண அனுபவமும் மிக முக்கியமானது.

அவரது தலைமையில் தமுஎகச புதிய சிகரங்களை அடையட்டும்.

வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன் . . .


அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் கோட்ட இணைச்செயலாளர் தோழர் கே.வேலாயுதத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். . .

பிகு : மேலே உள்ள படங்கள் எங்கள் வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டில் 2013 ல் திருவண்ணாமலையில் நடைபெற்ற வேலூர் கலை விழாவின் போது எடுக்கப்பட்டவை.

காங்கிரஸ் கட்சியின் கருங்காலி

 


ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மோடி ஒரு விருந்து கொடுக்கிறார். தாமோதர் தாஸ் சேர்த்து வைத்த சொத்திலிருந்து அல்ல, பிரதமராக இந்திய கஜானாவிலிருந்துதான்.

நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு  அழைப்பு கிடையாது.

மாநிலங்களவையின் எதிர்க்கட்சித்தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் அழைப்பு கிடையாது.

ஆனால் ஏதோ ஒரு நாடாளுமன்ற ஜும்லா குழுவின் தலைவராக உள்ள சசி தரூருக்கும் மட்டும் அழைப்பு உண்டு.

தன் கட்சியில் தன்னௌ விட உயர்ந்த பொறுப்புக்களில் உள்ளவர்களை அவமானப்படுத்து விட்டு தன்னை மட்டும் அழைப்பது கட்சிக்குள் சிண்டு முடிக்கும் வேலை என்று சசி தரூர் கண்டித்திருக்க வேண்டும். விருந்தை புறக்கணித்திருக்க வேண்டும்.

ஆனால் . . .


எனக்கான அழைப்பு,  எனக்கான கௌரவம் என்று சொல்லிக் கொண்டு விருந்தில் கலந்து கொண்டு விட்டார், கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் . . .

என்ன இருந்தாலும் அவரது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க மோடிதானே உதவினார்!

எல்லா காலங்களிலும் எட்டப்பர்கள் வாழ்கிறார்கள். 

Saturday, December 6, 2025

ஜட்ஜய்யா சென்சார் அதிகாரியாக இருந்திருந்தால் ????

 


நம்ம திருப்பரங்குன்றம் புகழாளர் மட்டும் சென்சார் அதிகாரியாக இருந்திருந்தால் ???

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கல்தூண் திரைப்படத்தின் பெயரை மேலே உள்ளது போல மாற்றி அமைக்க உத்தரவிட்டிருப்பார்.

அணிந்துள்ளது காவிக்கண்ணாடி அல்லவா!

அதிகாலை அழகே

 


இன்றைய "ஆங்கில இந்து" நாளிதழில்  முதல் பக்கத்தில் வெளியான படம்தான் மே#லே உள்ளது.

காஷ்மீர் தால் ஏரியின் அழகான காட்சி.

காஷ்மீர் எழில் மிகுந்த அழகான இடம்.

அமைதியான இடமா?

மோடி ஆட்சி அதை  அமைதியாய் இருக்க அனுமதிக்காது என்பது சோகமான உண்மை. 

இதே வேலைதானா ஜட்ஜய்யா?

 


திருப்பரங்குன்றம் புகழாளர் நேற்று கொடுத்த ஒரு தீர்ப்பை படித்தவுடன் மனதில் தோன்றிய காட்சிதான் மேலே உள்ளது.



அதெப்படி இது போன்ற மதம், கோயில் தொடர்பான வழக்குகள் எல்லாம் அவரிடமே செல்கிறது?


பிகு: இதே வேலையாதான் இருக்காரோ என்ற வசனத்திற்காக மட்டும்தான் அந்த படத்தை பயன்படுத்தியுள்ளேனே தவிர, விலாசம் கேட்டு வடிவேலை டார்ச்சர் செய்யும் நபருடைய குணாம்சத்திற்காக அல்ல. 

Friday, December 5, 2025

திருப்பரங்குன்றமும் மத்தவிலாசப் பிரகசனமும்

 


தோழர் பிரளயன் 2018 ல் நடத்திய நாடகமான "மத்தவிலாச பிரகசனம்" படித்துக் கொண்டிருக்கிறேன். 

அதில் ஒரு வசனத்தையும் பாடலையும் படித்த போது இன்றைய திருப்பரங்குன்றம் நிலைமைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளதால்  அதனை பகிர்ந்து கொள்கிறேன்.


பொறுப்பில்லாத மனிதர் மூட்டும் பகை நெருப்பு இன்னமும் பரவிக் கொண்டிருப்பதுதான் இந்தியாவின் துயரம். 

எரிச்சலூட்டும் காமெடி இது . . .

 


கீழேயுள்ள செய்தியை படிக்கையில் சிரிப்பும் வந்தது. கோபமும் வந்தது.  பாஜக "பொறுக்கி" எடுத்ததால் அதன் விசுவாசியாக வாலை ஆட்டிக் கொண்டு செயல்பட்டு இந்திய ஜனநாயகத்தையே கொலை செய்து கொண்டிருக்கும் ஒரு அயோக்கியப் பதரை "நடுநிலையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்துபவர்" என்று சொல்வது எவ்வளவு மோசமானது!!!! 




Thursday, December 4, 2025

நீங்கள் நீதிபதியாக இல்லாதிருந்தால் ????


 தமிழ்நாட்டின் கலவர மையமாக திருப்பரங்குன்றத்தை மாற்ற சங்கிகள் முயற்சிக்கின்றனர். ராமரை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால் முருகரை கையில் எடுத்துள்ளனர். வேல் யாத்திரை, முருகர் மாநாடு ஆகியவை காமெடிகளாக முடிந்து போனதால் ரத யாத்திரை என்ற பெயரில் ரத்தத்தை ஓட விட்டது போல இங்கேயும் கலவரத்தை தூண்டி மக்களை மத ரீதியில் மோத வைக்க முயல்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் கோயில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதை அங்கே உள்ள தர்காவின் வாசலில் உள்ள தூணில்தான் ஏற்றுவோம் என்று கலவர நோக்கில் சங்கிகள் பிரச்சினை எழுப்பி வருகின்றனர். அதை தீபத்தூண் என்று சொல்வதே தவறு, நில அளவைக் கல் என்று பலரால் சொல்லப்படுகிறது.

இப்போது பிரச்சினை ஏன் தீவிரமானது? கலவரம் வெடிக்கும் சூழல் யாரால் உருவானது?

சாமி படத்தில் விக்ரம் பேசும் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. அதையே "நான் நீதிபதி இல்லை சங்கி" என்று பேசுவதற்குப் பதிலாக நடவடிக்கைகளில் காண்பித்துக் கொண்டிருக்கிற ஒருவர். அந்த மனிதருக்கு என் அப்பாவின் பெயர். எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பெயரும் அதுதான். அவர்களால் சுவாமிநாதன் என்ற பெயருக்கு பெருமை. இவராலோ?

கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற அவர் வழி வகுக்கிறார். தர்காவின் வாசலில் உள்ள தூணில் இன்று முதல் தீபம் ஏற்றுங்கள் எம்று தீர்ப்பளிக்கிறார். தர்கா வழிபாட்டை எல்லாம் முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளலலாமா? அது குரானுக்கு முரணானது இல்லையா என்றும் முஸ்லீம்களுக்குள் சிண்டு முடிய முயற்சி செய்தார்.

அவர் அளித்த தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கின் நோக்கமும் தீர்ப்பின் நோக்கமும் பக்தியின் அடிப்படையில் ஆனது என்ற தெளிவு இருந்ததால் அத்தீர்ப்பை அமலாக்கவில்லை. தமிழ்நாட்டை குஜராத் ஆக மாற்ற நடந்த முயற்சியும் வெற்றி பெறவில்லையும்.

அதனால் வெகுண்டெழுந்து வழக்கு போட்டவர் பத்து பேரோடு போய் மத்திய தொழிற்சாலை காவல் படையின் துணையோடு அந்த தூணில்தான்  விளக்கேற்ற வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். 144 தடை உத்தரவு இருந்ததால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

மத்திய , மாநில காவல் படைகளுக்குள் மோதலை உருவாக்க நினைத்ததும் நடக்கவில்லை. 

"நான் மட்டும் நீதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் நானே அங்கே தீபமேற்றியிருப்பேன்" என்று வஜனம் பேசியதாக வேறு சொல்கிறார்கள். 

அவருக்கு சிலவற்றை பணிவோடு சொல்ல ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் நீதிபதியாக இல்லாதிருந்தால்

144 தடைச்சட்டத்தின் படி நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

மத மோதல்களை தூண்டிய குற்றத்திற்காக உங்களைப் போல அல்லாமல் வேறு நியாயமான நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டிருந்தால் சிறைத் தண்டனை கூட வழங்கப்பட்டிருக்கலாம்.

உங்களை பாதுகாத்து வருவது உங்கள் நீதிபதி பதவிதான், அதற்கு நீங்கள் கொஞ்சமும் அருகதை அற்றவர் என்ற போதிலும் . . . .



Wednesday, December 3, 2025

கோயிலை இடித்ததா பாஜக அரசு?

 


சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் செய்தி ஒன்று.

புது டெல்லியில் உள்ள 1500 ஆண்டு பழமையான கோரக்நாதர் கோயிலை டெல்லி பாஜக அரசு இடித்து விட்டதாகத்தான் அந்த செய்தி சொல்கிறது.

அந்த கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு வாகன நிறுத்தமிடம் வேண்டுமென்பதற்காக கோயில் இடிக்கப்பட்டதற்காகவும் அந்த செய்தி சொல்கிறது.

முக்கிய ஊடகங்கள் எதுவும் இதைப் பற்றி வாய் திறக்கவே இல்லை.

ஏன்?

பாஜகவின் போலித்தனத்தை அம்பலப்படுத்த அச்சமா?

செய்தி வதந்தி என்றால் அதை ஏன் சொல்லவில்லை?

என்னமோ நடக்குது . . .மர்மமா இருக்குது . . .


பிகு: கோரக்நாதர் என்பவர் சிவனின் சிஷ்யர்களின் ஒருவர், சித்தர், முனிவர் என்று சொல்கிறார்கள். அவருக்கான முக்கியமான கோயில் உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருக்கிறது. உபி முதல்வர் மொட்டைச்சாமியார்தான் அந்த கோயிலின் தலைமைப் பூசாரி. 

Tuesday, December 2, 2025

ராஜ்பவனிலிருந்து ரெவியே வெளியேறு

 


ராஜ் பவன் என்ற பெயர் ஏதோ முடியரசு ஆட்சி போன்ற தோற்றத்தை உருவாக்குவதால் அதன் பெயரை லோக் பவன், அதாவது மக்கள் பவன் என்று மாற்ற வேண்டும் என்று ஆட்டுத்தாடிகளுக்கான கூட்டத்தில் ஆரெஸெஸ் ரெவி சொன்னாராம். மோடி அரசு அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாம்.

இந்த படத்தில் பார்ப்பதுதான் சென்னையில் உள்ள ராஜ் பவன், தற்போது 156 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. கட்டிடத்தின் அளவு  என்ன? எத்தனை அறைகள் இருக்கிறது என்றெல்லாம் இணையத்தில் தேடிய போது கிடைக்கவில்லை. 

தரைக்குக் கீழே ஒரு தளம் அமைக்கப்பட்டிருந்த தளம் 15,000 சதுர அடியில் 13 அறைகள் உள்ளதாக மட்டும் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பிரம்மாண்டமான மாளிகைக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

மக்கள் அங்கே சென்று சுற்றிப் பார்க்க முடியுமா? உள்ளே நுழையத்தான் முடியுமா?

மக்களை அப்பால் நிறுத்தி வைத்து விட்டு பின்பு எதற்கு மக்கள் பவன் என்று பெயர் வைக்க வேண்டும்?

இப்படிப்பட்ட மாளிகை ஒரு ஆட்டுத்தாடிக்கு எதற்கு அவசியம்?

ஆட்டுத்தாடி எனும் பதவியில் இருப்பவர்கள் எல்லாம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மத்தியரசின் உளவாளிகள், சதிகாரர்கள்.

அவர்கள் சொகுசாக தங்குவதற்கான செலவினங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியது என்னமோ மாநில அரசுகள்.

பெயர் மாற்றுவது முக்கியமில்லை. ஆளுனர்  என்ற பதவியில் உட்கார்ந்து கொண்டு மாநில மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுனர்களை ராஜ்பவனிலிருந்து துரத்தி அந்த பிரம்மாண்டமான மாளிகையிலிருந்து வெளியேற்றுவதுதான் முக்கிய்ஸ்ம். 

எனவே ஆரெஸெஸ் ரெவியே வெளியேறு.


விஜய்- 41, எடப்பாடி கணக்கில் 1

 


கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் இறந்தது பற்றி நிறைய எழுதியாகி விட்டது. 

நேற்று முன் தினம் கோபிச்செட்டிப்பாளையத்தில் எடப்பாடி கலந்து கொண்ட கூட்டத்தில் அர்ஜூனன் என்ற தொண்டர் மயங்கி விழுந்து விட்டார். மருத்துவமனைக்குஅழைத்துச் சென்றதில் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று சொல்லியுள்ளனர்.

ஆக பொதுக்கூட்ட மரணங்கள் என்பது எடப்பாடியின் கணக்கிலும் தொடங்கி விட்டது.

இந்த விஷயம் அனைத்து அரசியல் கட்சிகளின் தொண்டர்களுக்கு ஒரு பாடம்.

உங்கள் உடல் நிலையை கணக்கில் கொண்டு உங்கள் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். 

Monday, December 1, 2025

பிரபாகரனை செஃபாகவே முன்னிறுத்தும் சீமான்

 


பிரபாகரனை சீமான் வெறும் பத்து நிமிடம்தான் சந்தித்தார் என்று விஷயம் தெரிந்தவர்கள் முன்பே சொல்லியுள்ளனர். ஒரே ஒரு புகைப்படம் மட்டும்தான் எடுத்துக் கொண்டுள்ளார். அது கூட இவர் பெருமையுடன் காண்பிக்கும் படமல்ல, அது  போட்டோஷாப் செய்யப்பட்டது என்று போட்டோஷாப் செய்தவரே சொல்லியுள்ளார்.

ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்தவரை சீமான் இதுவரை எப்படியெல்லாம் முன்னிறுத்தியுள்ளார்.

இவருக்கு ஆமைக்கறி செய்து கொடுத்ததாக சொல்லியுள்ளார்.

அடுத்து இட்லிக்குள் கறியை வைத்து கொடுத்ததாக சொல்லியுள்ளார்.

இவர் சாப்பிடும் பொருட்களை துல்லியமாக கவனித்து அதற்கேற்றார் போல அடுத்த வேளை சாப்பாடுகளை போட்டார் என்றும் சொல்லி உள்ளார்.

இதோ இப்போது மான் ஊறுகாய் சாப்பிடச் சொன்னதாக சொல்லியுள்ளார். 

அந்த காணொளியை இங்கே பாருங்கள்.


"அடேய் சீமான், நான் ஒரு இயக்கத்தின் தலைவனடா! என்னை ஒரு செஃப் என்ற அளவில் சுருக்கிவிட்டாயடா"

என்று கேட்க பிரபாகரன் இல்லாத துணிவுதான் சீமானுக்கு. . .

எல்லோரும் தற்குறி வெட்டிக் கழகத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று கவன ஈர்ப்புக்காகக் கூட சீமான் இந்த கதையை உருட்டியிருக்கலாம். 


பிகு என்னத்தான் கதை விட்டாலும் சீமான் எச்சரிக்கையான மனிதர்தான். இதே மான் ஊறுகாயை இந்தியாவில் சாப்பிட்டதாக உருட்டியிருந்தால் சிறைக்கு போக வேண்டியிருக்கும் என்று தெரிந்தவர் அல்லவா அவர்!