ஒரு ஊழியனின் குரல்

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி

Thursday, October 15, 2015

அரசு ரௌடித்தனம்

மேற்கு வங்கத்தில் மம்தா நடத்தி வரும் காட்டாட்சி பற்றி அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தோழர் சூரியகாந்த் மிஸ்ரா அளித்த நேர்காணலின் தமிழாக்கத்தை மின்னஞ்சலில் அனுப்பிய பத்திரிக்கையாளர் தோழர் விமலாவித்யா அவர்களுக்கு நன்றிகள் பல.

மிகவும் முக்கியமான இப்பேட்டியை அவசியம் முழுமையாக படியுங்கள்.


https://i.ytimg.com/vi/F2mFQJ-4n7k/hqdefault.jpg



Press ? for Keyboard Shortcuts.



வங்கத்தில் நடந்துவரும் அரசியல் போராட்டம் …


- சூர்ய காந்த மிஸ்ரா நேர்காணல்
(இந்தியாவின் மிக வலிமையான இடதுசாரி இயக்கமான மேற்குவங்க இடதுசாரி இயக்கம் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு மற்றும் பொதுவாக ஆளும் வர்க்கத்தின் கடும் அடக்குமுறையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான சூர்யகாந்த சூர்ய காந்த மிஸ்ரா, மேற்குவங்க சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித்தலைவர், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுச் செயலாளர் என்ற இரண்டு முக்கியமான பொறுப்புக்களை வகித்து வருகிறார்.
 2015, மே 19 அன்று டாக்டர் சூர்ய காந்த மிஸ்ரா இப்பேட்டியை மாதவ் திப்பு ராமச்சந்திரனுக்கு அளித்தார். கொல்கொத்தாவிலிருந்து நாதியா வரை காரில் பயணித்த படியே இப்பேட்டியை மூன்று மணி நேரத்தில் அவர் அளித்தார். டாக்டர் சூர்ய காந்த மிஸ்ரா இத்தாக்குதலை மூன்றுவகையானதாக குணாம்சப்படுத்துகிறார். மேற்குவங்க ஜனநாயகம் மற்றும் மக்கள் மீதான தாக்குதல், இத்தாக்குதல் இடதுசாரிகளையும், இடதுசாரிக்கட்சிகளையும் தாண்டி நீள்கிறது; மாநிலத்திலுள்ள இடதுசாரி சக்திகள் மீதான தாக்குதல்; 1970 களில் மாநிலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரைப்பாசிசத் தாக்குதலுடன் தற்போதைய தாக்குதலை ஒப்பிடுகிறார்; மே.வங்க மாநிலத்திலும், இந்தியாவிலும் இடதுசாரிகளின் மீட்சி ஏற்படவேண்டிய தேவை குறித்தும் அவர் பேசுகிறார்.)
ராமச்சந்திரன்: இன்று மேற்குவங்கத்தில் அரசியல் அடக்கு முறையின் இயல்பு எப்படி இருக்கிறது?
சூர்ய காந்த மிஸ்ரா: ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இன்று மேற்கு வங்கத்தில் சந்தித்து வரும் அடக்குமுறை ஒரு பல்முனைத் தாக்குதலாகும். மாநில மக்கள் மீது மூன்று வகையாக தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன: முதலாவது, ஜனநாயகம், ஜனநாயக நிறுவனங்கள் மீதான தாக்குதல்; இரண்டாவது மக்கள் வாழ்க்கை நிலை மீதானதாக்குதல்; மூன்றாவது மாநிலத்தில் மதச்சார்பின்மை மீதான தாக்குதல். அதேசமயத்தில், சி.பி.ஐ.எம். மற்றும் இடதுசாரி சக்திகள் மீது தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
ராமச்சந்திரன்: இடதுசாரிகள் எதையெல்லாம் சந்திக்க வேண்டியிருந்தது?
சூர்ய காந்த மிஸ்ரா: இக்காலகட்டத்தில் சுமார் 170 தோழர்கள் கொல்லப்பட்டனர். மிக முக்கியமான ஆயிரக் கணக்கான தோழர்கள் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டது. அவர்களது புகார்கள் பதிவு செய்யப்படவில்லை. அவர்களில் பலர், எனது மதிப்பீட்டின் படி சுமார் 5000 பேருக்கு மேல் தமது மீதமுள்ள வாழ்நாளில் நிரந்தரமாக ஊனமுற்றவர்களாக இருப்பார்கள்.
கட்சி, இடதுசாரி முன்னணி, வெகுஜன ஸ்தாபனங்களின் சுமார் 1500க்கு மேற்பட்ட அலுவலகங்கள் தாக்கப்பட்டு, ஒன்று அவை திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன அல்லது பூட்டப்பட்டுவிட்டன. ஒரு லட்சம் தோழர்களுக்கு மேற்பட்டோர் மீது பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
ஏராளமானோர் தமது வசிப்பிடங்களை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். கடைசியாகக் கிடைத்த தகவலின்படி இது 51000க்கு மேல் உள்ளது. ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தமது வசிப்பிடங்களுக்குத் திரும்பினால் அவர்கள் யாருடனும் பேச அனுமதிக்கப்படுவதில்லை, வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுவதில்லை,
 அவர்களது அலைபேசிகளும், தொலைபேசிகளும் எடுத்துச் செல்லப்பட்டு விடுகின்றன, தபால் மூலம் கடிதம் அனுப்பக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் குண்டர்களுக்கு தண்டம் கட்டுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பல சமயங்களில் இது பல லட்சங்களாக உள்ளது. (எமது மதிப்பீட்டின்படி இத்தகைய முறைகள் மூலம் மாநிலம் முழுதும் மொத்தம் சுமார் ரூ.50 கோடி நிர்ப்பந்தமாக வசூலிக்கப்பட்டுள்ளது)
ராமச்சந்திரன்: இவ்வாறு நிர்ப்பந்தமாக வசூலிப்பது எப்படி நடக்கிறது?
சூர்ய காந்த மிஸ்ரா: மிரட்டல்கள் மூலம் பணம் பிடுங்கப்படுகிறது. எங்களிடம் சில ஆவணங்கள் இருந்தாலும், பொதுவாக எந்த காகித சாட்சியமும் விடப்படுவதில்லை. தமது வீட்டை விட்டு வெளியேறிய சில நபர்கள் திரும்பாதபோது, அவர்களது குடும்பத்தினர் சில சமயம் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். குண்டர்கள் அவர்களிடம் கூறுகிறார்கள்: ”அவனை (அல்லது அவளை) ஊர் திரும்பி வந்து தண்டம் செலுத்துமாறு சொல். இல்லையேல் அவனது/அவளது குடும்பம் இங்கு நிம்மதியாக வாழமுடியாது என்று அவனுக்கு/அவளுக்கு செய்தி அனுப்பு.”
ராமச்சந்திரன்: நீங்கள் முதல் வகைத் தாக்குதலை ஜனநாயகம் அல்லது ஜனநாயக நிறுவனங்கள் மீதான தாக்குதல் என்று வர்ணித்தீர்கள்…
சூர்ய காந்த மிஸ்ரா: நான் விவரித்தது சமுதாயத்தில் ஜனநாயக சக்திகள் மீதான பெரிய தாக்குதல்களின் ஒரு பகுதி. ஒரு பாராளுமன்ற ஜனநாயகத்தில், சட்டசபை எதிர்க் கட்சிக்குரியது என்று கூறப்படுகிறது. அதாவது, எதிர்க் கட்சிதான் அவைக்குள் விஷயங்களை எடுத்துரைப்பதில் முன்கை எடுக்க வேண்டும்.
 மே. வங்கத்தில் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு கேள்விகள் கேட்கிறோம், எத்தனைக்கு பதில் சொல்லாமல் விடப்பட்டுள்ளது, எவ்வாறு எங்கள் ஒத்தி வைப்புக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன, எவ்வாறு அதிகார பூர்வமற்ற விவாதத்திலும், அதிகார பூர்வமற்ற தீர்மானங்களிலும் எந்த நேரமும் செலவிடப்படுவதில்லை, வேறுயாருடைய தீர்மானங்களும் அல்லாமல் அரசு மட்டுமே எப்படி தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்கிறது, எங்களது தீர்மானங்கள் எப்படித் தூக்கியெறியப்பட்டன என்ற விவரங்களை நாங்கள் வெளியிடுகிறோம்.
அவை செயல்படாத போது பத்திரிகையாளர் கூடமும் எதிர்க்கட்சித் தலைவருக்கு திறந்துவிடப்படுவதில்லை.
ராமச்சந்திரன்: பத்திரிகையாளர் கூடம் என்றால் என்ன?
சூர்ய காந்த மிஸ்ரா: எங்களது ஆட்சியின் போது, அவையின் எந்த உறுப்பினரும் விவாதத்திற்குரிய எந்த விஷயத்தையும் பத்திரிகைகளை சந்தித்துப் பேச பத்திரிகையாளர் கூடம் திறந்துவிடப்படும்படி நாங்கள் ஏற்பாடு செய்திருந்தோம். ஒரு அரசு என்ற முறையில், பத்திரிகைகள் மூலமாக நாங்கள் மக்களுக்கு பதிலளிப்பதில் நம்பிக்கை வைத்திருந்தோம். நாங்கள் அடிக்கடி பத்திரிகைக் கூடத்துக்குச் சென்று எங்களது கொள்கைகளை விவாதிப்பது வழக்கம்.
பொதுவாக பத்திரிகையாளர் கூடம் மாலை 5 மணியளவில் மூடப்படும். புதிய ஆட்சி அதிகாரத்துக்கு வந்து சில மாதங்களில், நான் அந்த நேரத்தை 5 நிமிடம் கடந்ததாக என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. நான் காலக் கெடுவை மீறவில்லை என்பதில் நான் உறுதியாக இருந்தாலும், அது எதிர்க் கட்சித் தலைவருக்கு பத்திரிகையாளர் கூடத்தை மறுத்து மூடுவதற்கு எந்த வகையிலும் போதுமான காரணமல்ல.
 அவர்கள் பத்திரிகையாளர் கூடத்தை கடந்த மூன்றரை ஆண்டுகளாக மூடிவிட்டனர். அவை அமர்விலில்லாத போது, நான் பத்திரிகையாளர் சந்திப்பை வெளியே தெருவில்தான் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. (என்னால் அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பை கட்சி அலுவலகத்திலும் வைத்துக் கொள்ளமுடியும்தான்). அமைச்சர்கள் தமது பத்திரிகையாளர் சந்திப்பை தமது அலுவலகங்களில் வைத்துக் கொள்ளமுடியும். ஆனால் ஒரு சாதாரண சட்டமன்ற உறுப்பினருக்கும் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேச உரிமை இருக்க வேண்டும். அதற்காகத்தான் முதலில் பத்திரிகையாளர் கூடம் கட்டப்பட்டது.
ராமச்சந்திரன்: சட்டமன்ற அவையில் பிற சம்பவங்களும் நடந்தன (அல்லவா?)
சூர்ய காந்த மிஸ்ரா: அவை புதிய அரசின் வெளிப்பாடுகள். நாங்கள் சாரதா சிட்ஃபண்ட் ஊழல் குறித்து விவாதிக்க ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுத்த போது, எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆளுங்கட்சி உறுப்பினர்களால் தாக்கப்பட்டுக் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் பெண் உறுப்பினரான தேவலினா ஹேம்ப்ரம். அவர் முன்னாள் அமைச்சர். அவர் ஆளுங் கட்சி வரிசையில் இருக்கைக்கும், மேசைக்குமிடையே தூக்கியெறியப்பட்டார். 
காயமடைந்த எங்கள் இன்னொரு உறுப்பினர் கௌரங்கா சாட்டர்ஜி. அவரது மண்டையோட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவமனை அவருக்கு எந்தக் காயமும் இல்லை என்று கூறி அனுமதிக்க மறுத்துவிட்டது. பிறகு அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, அவரது மண்டையோட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. இந்த விஷயத்தில் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் எதாவது ஒன்று அவைக்குள் நிகழ்ந்திருந்தால், அதன்மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காது. எனவே எதுவும் நடக்கவில்லை.
இவ்வாறாக, ஒரு பாராளுமன்ற ஜனநாயகத்தில் அரசாங்கம் மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை உள்ள இடமாகக் கூறப்படும் சட்டசபையில் கூட, அரசு தனது அரசியல் சாசனப் பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிவிட்டது.
ராமச்சந்திரன்: இந்தத் தாக்குதல்கள் இடதுசாரிகள் மீதுமட்டுமே கட்டவிழ்த்துவிடப் படுகிறதா?
சூர்ய காந்த மிஸ்ரா: இல்லை. முதலில் இந்தத் தாக்குதல்கள் எங்கள் மீது நடத்தப்பட்டன. இப்போது அவை முழு எதிர்க்கட்சிகள் மீதும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மீதேகூட நிகழ்த்தப்படுகின்றன. சாரதா சிட்ஃபண்ட் ஊழல் விஷயத்தில், திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மற்ற ஆளுங்கட்சி ஆதரவாளர்களும்கூட, அவர்கள் இது குறித்த முக்கியமான விஷயங்களை சி.பி.ஐ.எம். முக்கோ, நீதி மன்றத்துக்கோ, காவல்துறைக்கோ கூறியிருப்பார்கள் என்று அதன் தலைவர்கள் நம்புவதால், அவர்கள் இப்போது கைவிடப்படுகிறார்கள் அல்லது கட்சியை விட்டு வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
ராமச்சந்திரன்: மற்ற ஜனநாயக நிறுவனங்களில் என்ன நடக்கிறது?
சூர்ய காந்த மிஸ்ரா: அவையனைத்தும் கடும் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றன. உள்ளாட்சி அமைப்புக்களும், அவற்றின் அதிகாரங்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. தேர்தல்களில் முறைகேடுகள் நடக்கின்றன. ஆளுங்கட்சியைச் சாராதவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே தாக்கல் செய்துவிட்டாலும், அதை திரும்பப்பெற நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதேபோல் கூட்டுறவு அமைப்புகள் “கைப்பற்றப்பட்டுவிட்டன” –
 அங்கு தேர்தல்கள் நடத்தப்படாமல், ‘நிர்வாகிகளால்’ நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கல்வியிடங்களில் ஜனநாயகம் இல்லை. மாணவர்களின் தேர்தல்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன, மாணவர்கள் சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது.
அரசியலமைப்புச் சட்ட அமைப்புக்கள் போன்ற பிற ஜனநாயக நிறுவனங்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. மனித உரிமை ஆணையத்திற்கு தலைவர் இல்லை. ஏனென்றால் ஆணையம் அரசுக்கு ஏற்க முடியாத சில தீர்ப்புக்களையோ, பரிந்துரைகளையோ அளித்த போது, அவர்கள் தலைவரை நீக்குவதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டனர். அதன் பிறகு, அவர்கள் ஒரு முன்னாள் டைரக்டர் ஜெனரலை அதன் தலைவராக நியமித்தனர். 
தேர்வுக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் அந்த நியமனத்தை நான் எதிர்த்தேன். தன் மீது இத்தனை மனித உரிமை மீறல்கள் பற்றிய வழக்குகள் நிலுவையிலிருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி ஒரு போதும் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதில்லை என்று நான் கூறினேன். இப்போது அவர் மனித உரிமை ஆணையத்தின் அதிகார பூர்வமற்ற தலைவராகச் செயல்படுகிறார் – 
இது எமது மாநிலத்தில் மனித உரிமை ஆணையத்தின் பிம்பத்தைக் காட்டுகிறது. மாநில தேர்தல் ஆணையமும் தப்பவில்லை. பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது பற்றிய விஷயத்தில் மாநில தேர்தல் ஆணையத்துடன் மாநில அரசின் மோதலில் இருந்து அதனை அறிந்து கொள்ளலாம். ஒரு அமர்வு நீதி மன்ற நீதிபதி பாதுகாப்புக் கோரி எங்களிடம் வந்தார். அது நீதி மன்ற உறுப்பினர்கள்கூட தனிப்பட்ட மிரட்டல்களுக்கு உள்ளாகியிருப்பதை வெளிப்படுத்துகிறது. சி.பி.ஐ. வழக்கை அலிப்பூர் நீதிமன்றத்திலிருந்து வெளியே எங்காவது மாற்ற உயர் நீதிமன்றத்திடம் கோரியது. ஏனென்றால் அலிப்பூர் நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் என்று அவர்கள் நம்பவில்லை.
ராமச்சந்திரன்: நீங்கள் இரண்டாவது வகைத் தாக்குதலை மக்களின் வாழ்க்கை நிலை மீதான தாக்குதல் என விவரித்தீர்கள்.
சூர்ய காந்த மிஸ்ரா: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிதி இருக்கும் போதுகூட வேலை செய்த பிறகும் மக்களுக்கு கூலி மறுக்கப்படுகிறது. சில சமயம் அரசியல் சார்பின் அடிப்படையில்கூட வேலை மறுக்கப்படுகிறது. ஆளுங்கட்சி ஆதரவாளராக இருந்தால் தவிர மற்றவர்களுக்கு வேலை தரப்படுவதில்லை.
 சில சமயம் ஆறு மாதங்கள், ஒரு வருடம் கூட தராமல் மறுக்கப்பட்டு, சட்டத்தின் அம்சங்களே மீறப்படுகின்றன. விவசாயிகளுக்கு அரசு அறிவித்திருக்கும் குறைந்தபட்ச ஆதரவுவிலை தரப்படுவதில்லை. உற்பத்தியைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கையும் இல்லை. விவசாய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. மே. வங்கத்தில் விவசாயிகளின் தற்கொலை நடக்கிறது. இந்த அரசுக்கு முன் இடதுசாரி முன்னணி 34 ஆண்டுகள் ஆட்சி செய்தபோது இது ஒரு போதும் நிகழவில்லை.
ராமச்சந்திரன்: வாழ்க்கை நிலை மீதான விஷயங்கள் கிராமப்புறத்தில் மட்டுமே நிகழ்கிறதா?
சூர்ய காந்த மிஸ்ரா: இல்லை, சமீப காலத்தில் தொழிற்துறையில் பாரம்பரியத் தொழில்கள் மூடப்படுகின்றன. உதாரணமாக தேயிலை, சணல் தொழில்கள். மற்ற தொழில்களில் புதிய தொழிற்சலைகளைத் திறப்பதில்தோல்வி ஏற்பட்டுள்ளது.
 தொழிற்சாலைகள் மூடப்படுவதாலும், தொழிற்துறையில் ஆளுங்கட்சியினரின் அராஜகத்தாலும் மக்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்படுகிறார்கள். ஏழு சணல் தொழிற்சலைகளை மீண்டும் திறக்குமாறு முதல்வர் ஆணையிட்டுள்ளதாக இன்றைய செய்திப்பத்திரிகை தெரிவிக்கிறது. ஆளுங்கட்சி குண்டர்கள் இந்தநிறுவனங்களிடம் லஞ்சமாக ஏராளமான பணத்தைக் கேட்டதால் இந்தநிறுவனங்கள் செயல்பட முடியாதநிலைக்குத் தள்ளப்பட்டவை. இறுதியாக முதலமைச்சர் அவர்களிடம் இந்தத் தொழிற்சாலைகளைத் திறக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டியிருந்தது.
 எனினும் நிலைமையில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக மாற்றம் ஒவ்வொரு நாளும் அனைத்து இடங்களிலும் நடந்துவருவதைப் பிரதிபலிக்கவில்லை; இந்த விஷயத்தில் அவரது வார்த்தைகள் வெறும் வார்த்தைகளேயன்றி களத்தில் எதுவும் மாறவில்லை.
வர்த்தக சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் ‘பணப்பறிப்பை” சந்திக்க வேண்டியிருப்பதால் தம்மால் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியவில்லை என்று குறைகூறத் தொடங்கிவிட்டனர். நாங்கள் ஆட்சியிலிருந்த போது அமல்படுத்திய காப்பீட்டுத் திட்டம் சரிவர அமல்படுத்தப்படுவதில்லை. அரசாங்கம் தான் தருவதாக ஏற்றுக் கொண்டுள்ள பிரீமியம் தொகையைசெலுத்துவதில்லை. 
கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் ரூ69-70 கோடி தொகை அரசாங்கத்தால் செலுத்தப்படாமல் உள்ளது. (இதில் பெரும் பகுதி பயிர்க் காப்பிட்டுத் தொகை). அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி தரப்படவில்லை; அது சுமார் 48 சதவிகிதம் – இது இதுவரை கேள்விப்பட்டிராத பெரியதொகை. அவர்களது ஊதியம் கூடக் கொடுக்கப்படாமல் உள்ளது. இவ்வாறு ஊதியம் கொடுக்காமல் இருப்பது பல லட்சம் பேரை பாதித்துள்ளது.
ராமச்சந்திரன்: நீங்கள் மூன்றாவது தாக்குதல் “மதச்சார்பின்மை” மீதானது என்று கூறினீர்கள்.
சூர்ய காந்த மிஸ்ரா: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மாநிலத்தில் வகுப்புவாதப் பதற்றம் ஏற்படுத்தும் தீவீரமான சம்பவம் ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை. இடதுசாரி முன்னணியின் கடந்து 34 ஆண்டுகால ஆட்சியில், நாட்டில் எப்போதெல்லாம் வகுப்புவாத பதற்றம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் மாநிலத்தில் அது பரவி விடாமல் தடுக்க அதி விரைவாக இராணுவம் நிறுத்தப்படுவதுடன், அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
 உதாரணமாக இந்திரா காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து நாட்டில் சீக்கிய விரோதக் கலவரம் பரவலாக நடந்தபோது, மே. வங்கத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சி கூடப் பதிவாகவில்லை. அதேபோல், பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு, அரசாங்கம் எடுத்த உறுதியான மதச்சார்பற்ற நிலைபாட்டால் மே.வங்கத்தில் வகுப்புவாத வன்முறை தடுக்கப்பட்டது. வகுப்புவாத வன்முறைக்கெதிராக எங்களது அரசியல் திறனும், மக்களை கருத்தியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் திரட்டியதும் வகுப்புவாத சக்திகள் தமது வாளை உயர்த்த முடியாமல் பார்த்துக் கொண்டன.
இப்போது மாநிலத்தில் ஒரு ஆபத்தான நிலைமை உருவாகிவருகிறது. மத்தியில் ஆளுங் கட்சி இந்துத்துவா நிலையெடுக்க, மாநிலத்தில் ஆளுங்கட்சி எல்லைக்கப்பாலிருந்து ஜமாஅ துல் முஜாஹிதீன் அடிப்படைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறது. வங்க தேச அரசு அவர்களைத் தேட, அவர்களுக்கு இங்கு ஆளுங்கட்சியும், அதன் நிர்வாகமும் பாதுகாப்பை வழங்குகின்றன.
 காக்ர கார் சம்பவத்துக்குப் பிறகு உளவுத்துறையால் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்படவில்லை; உண்மையில் நிர்வாகம் மறுத்துரைக்கும் நிலைக்குச் சென்றதுடன், காக்ர கார் குண்டு வெடிப்பின் தடயங்களை அழித்துவிட்டது.
 ஆளுங் கட்சியில் யார் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. மத்தியில் ஆளும் கட்சிக்கும், மாநிலத்தில் ஆளும் கட்சிக்கும் இடையே மறைமுகமான புரிதல் உள்ளது. அவை எதிரெதிர் நிலையெடுத்தாலும் இதனால் இரு சமூகங்களுக்கிடையே மேலும் வகுப்புவாதக் குவிதல் நிகழ்கிறது. தற்காலத்தில் மாநிலத்தின் மிகப்பெரும் ஆபத்துக்களில் ஒன்று, 
நீண்ட காலமாக ஏதோ ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் நிலையெடுக்காத ஒரு மாநிலத்தில், இடதுசாரி, ஜனநாயக, மதச் சார்பற்ற சக்திகளை தொடர்பற்றதாக ஆக்கும் முயற்சியும், மக்களை வகுப்புவாத வழிகளில் பிரிக்கவும் நடக்கும்முயற்சியுமாகும். 1970 களில் அரைப் பாசிசத் தாக்குதலின் போதோ, நெருக்கடி காலகட்டத்தில் கூட இத்தகைய வகுப்புவாதப் பதற்றம் மே. வங்கத்தில் காணப்பட்டதில்லை.
ராமச்சந்திரன்: தற்கால நிலைமை மற்றும் 1970களில் மே. வங்கத்தில் காணப்பட்ட அரைப் பாசிச நிலைமைகளுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை எவ்வாறு குணாம்சப்படுத்துவீர்கள்?
சூர்ய காந்த மிஸ்ரா: அரசியல் அடக்குமுறை நடைபெறும் இந்த இரு கால கட்டங்களுக்கிடையே பல வேறுபாடுகள் உண்டு. 1970 களில் அது வேறு ஒரு காலம். மாநில நிலைமை, தேசிய நிலைமை மற்றும் சர்வ தேசிய நிலைமைகள் வேறு. வரலாறு மீண்டும் நடப்பதில்லை. அப்போது தாக்குதல் சி.பி.ஐ.எம். மற்றும் அதனுடன் இணைந்த இடதுசாரிக் கட்சிகள் வேகமாக வளர்ந்து வந்த கால கட்டம். தேர்தல் வெற்றிகளைப் பொறுத்தவரை, 1967 ல் மாநில சட்டப் பேரவையில் எங்களுக்கு 40+ உறுப்பினர்களும், 1969ல் 80+ உறுப்பினர்களும், 1971ல் 110+ உறுப்பினர்களும்இருந்தனர். 1972ல் மோசடி நடைபெற்ற தேர்தல்களையும் தாண்டி, அந்த அரைப் பாசிச மிரட்டல் கால கட்டத்தில் வேகமாக வளர்ந்து வந்த சக்திதான் கடும் அடக்குமுறைக்கு ஆளானது.
1972 க்குப் பிறகு, நாங்கள் மாநில சட்டமன்றத்தை ஐந்தாண்டுகளுக்கு நிராகரித்தோம். அந்தக் காலத்தில் நாங்கள்பாராளு மன்றத்துக்கு வெளியேயான செயல்பாட்டை மட்டுமே சார்ந்திருந்தோம். அந்தத் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் சுமார் 114 இடங்களிலிருந்து வெறும் 14 இடங்களுக்குக் குறைந்தோம்;
 1972 தேர்தல்தான் “தேர்தல் மோசடி” என்ற சொல்லை அரசியல் அகராதியில் ஒரு புதிய வழியில் நுழைய வைத்தது. 1977 ல் தேர்தல் நடந்த போது, இடதுசாரி முன்னணி ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது; அதற்குப் பரந்த ஆதரவு கிடைத்ததுடன், 34 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. அதன் பரந்த ஆதரவானது எப்போதுமே 45 லிருந்து 50 சதவிகிதத்துக்குள் 
இருந்தது. 2009 தேர்தலிலும், 2011 தேர்தலிலும் இடதுசாரி வாக்கு விகிதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டதை நாங்கள் கண்டோம். 1972 தேர்தலைப் போல் 2009, 2011 தேர்தல்களில் மோசடி நடைபெறவில்லை. இவ்விரு தேர்தல்களும் ஆளுங்கட்சிக்கு பரந்த ஆதரவை நல்கின. வேறு வார்த்தைகளில் 1970 களைப்போல் 2009, 2011ல் நாங்கள் வளரும் கட்சியாக இல்லை.
ராமச்சந்திரன்: வேறு வேறுபாடுகள் உண்டா? மரணங்களின் எண்ணிக்கை, முறைகளில் வேறுபாடு உள்ளதா? அவை ஒரே மாதிரியானவையா?
சூர்ய காந்த மிஸ்ரா: தாக்குதலின் இயல்பு மாறிவிட்டதால், அந்த ஆண்டுகளின் மரணஎண்ணிக்கையை இப்போதுள்ளதுடன் ஒப்பிட முடியாது: அதிகத் தாக்குதல்கள், மரணத்தைவிட அதிகமாக ஊனம் அதிகமாக ஏற்பட்டுள்ளது – எனவே தாக்குதல் உத்தியில் ஒரு மாற்றம் உள்ளது.
 மேலும் 1970 களை விட தாக்குதல் மிக விரிவாக, பரவலாக உள்ளது. அரைப் பாசிசத் தாக்குதல் நகர்ப்புறங்களில் சில மாவட்டங்களிலும், குறிப்பிட்ட கிராமப்புறப் பகுதிகளிலும்தான் குவிந்திருந்தது. தற்போதைய அரசியல் அடக்குமுறை பெரும்பாலும் கிராமப்புறப் பகுதிகளில்நடக்கிறது. ஒன்றிரண்டு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. வேறு வடிவத்தில் இருந்தாலும், அதிக அடக்குமுறை நடைபெறுகிறது.
சர்வதேசப் பின்னணியும் வேறு மாதிரியாகவே உள்ளது. இறுதியாக வியட்னாம் போர் வெல்லப்பட்டிருந்தது, தெற்கு வியட்னாம் முழுவது, சைகானும் தேசிய விடுதலை முன்னணியால் வெல்லப்பட்டிருந்தது, இன்றிருப்பது போல் சர்வதேச சமூகமும், சோஷலிச முகாமும் ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கவில்லை. அது வங்க தேச விடுதலை இயக்கத்தின் காலம். பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டிருந்த இந்திய-சோவியத் ஒப்பந்தம் வங்க தேசத்தில் போரிட ஒருவகையான ஒற்றுமையை ஏற்படுத்தியிருந்தது.
ராமச்சந்திரன்: நீங்கள் மாநிலத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பு பற்றி குறிப்பிட்டீர்கள்…
சூர்ய காந்த மிஸ்ரா: ஆம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலையும் தாண்டி, மாநிலத்தில் வகுப்புவாத சக்திகள் காலூன்ற முடியவில்லை. வங்கத்தில், மக்கள் எல்லையின் எந்தப்புறத்தில் இருந்தார்கள் என்ற வேறுபாடின்றி வங்க தேச விடுதலை சக்திகளின் பின்னால் திரண்டிருந்தனர். 
ஒருவர்இந்துவா, முஸ்லீமா என்ற வேறு பாடின்றி ரஜாக்கர்கள் மக்களின் எதிரிகள் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். நிலைமை இப்போது மாறிவிட்டது. இப்போது வகுப்பு வாதசக்திகளின் பகுதியாக இருக்கும் அப்போதைய ரஜாக்கர்கள் எல்லை தாண்டிவரும் போது எல்லையின் இப்பகுதியில் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்கப்படுகிறது.
ராமச்சந்திரன்: இன்று ஒரு புதிய அரசியல் தலைமுறையின் முன்னுள்ள பணிகள்-போராட்டங்கள் எவை?
சூர்ய காந்த மிஸ்ரா: இன்று தற்போதைய தலைமுறை சந்திப்பது ஒரு புதிய அனுபவம், முக்கியமானதுமாகும். எங்கள் தலைமுறை அரைப்பாசிச மிரட்டலை எதிர்த்துப் போராடும் அனுபவத்தைப் பெற்றதுடன் நெருக்கடி நிலையில் பணியாற்றும் அனுபவத்தையும் பெற்றது. இன்றைய இளைஞர்கள் புதிய உலக நிலைமையை எதிர்த்துப் போராடுவதிலும், ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவான உலகசக்திகளின் புதிய ஒட்டுறவு ஏற்பட்டுள்ள நிலையில் பணிபுரியவும், உலகமயம், புதியதாராள மயத்துக்கும்,
 அவை தேசியக் கொள்கைகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை எதிர்த்துப் போராடவும், உலக அளவில் பரப்பப்படும் அடையாள அரசியல், எதிர்ப் புரட்சி பின் நவீனத்துவக் கோட்பாடுகளுக் கெதிராகவும் போராடுவதிலும் அனுபவம் பெறவேண்டும். இவ்வாறாக நிலைமையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
 ஒரே சமயத்தில் இந்த சவால்களை எதிர்கொள்ளும் அனுபவம் எங்களது தலைமுறைக்கு இல்லை. இளைய தலைமுறையானது தேசிய, உலகளாவிய, மாநிலம் தழுவிய ஒவ்வொரு நிலையிலும் மிகக் கடினமான, சிக்கலான பல்முனைச் சவாலை எதிர்கொள்கிறது. நாங்கள் எங்களது வாழும் காலத்தில் பெற்றதைவிட அதிக அனுபவத்தை அவர்கள் பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
ராமச்சந்திரன்: அந்தப் பின்னணியில், இடதுசாரி புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புக்கள் என்ன?
சூர்ய காந்த மிஸ்ரா: நாட்டில் ஒரு சோஷலிச, ஜனநாயக முறையை அமைக்கும் அடிப்படையான நோக்கம் சர்வதேச நிலையுடனும், மற்ற நாடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதுடனும் தொடர்புடையதாக இருந்தாலும்,
 நான் இந்தக் கேள்வியின் உலகளாவிய பரப்புக்குள் செல்லப்போவதில்லை. ஒருவர் மற்றவரின் அனுபவங்களிலிருந்து அறிந்து கொள்ளவும் ஏராளமாக உள்ளது. உலகளாவிய நிலையிலோ, மேற்கு வங்க மாநிலத்திலோ இடதுசாரிகள் வெற்றிகரமாகப் புத்துயிர் பெற இவைதான் சரியான புறச்சூழ்நிலைமைகள் என நான் நம்புகிறேன்.
ராமச்சந்திரன்: மே. வங்கம் குறித்துக் குறிப்பாக என்ன சொல்கிறீர்கள்?
சூர்ய காந்த மிஸ்ரா: நாங்கள் எங்களது ஆதரவுத்தளம் குறைவதை முதன்முதலாக 2008 பஞ்சாயத்துத் தேர்தலில் கவனித்தோம். (இது 2009 பாராளுமன்றத் தேர்தலுக்கும் முன்பாகும்) அதன் பிறகு நடந்த தேர்தல்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதன் பின் மாநிலத்தில் பல்வேறு சக்திகளுக்கிடையேயான உறவுகளில் எந்த அடிப்படைமாற்றமும் இல்லை என நாங்கள் நம்புகிறோம். 
சிறிது தேய்வு இருந்தாலும், ஆளுங்கட்சி தொடர்ந்து தனது பரந்த பெரும்பான்மை ஆதரவைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது அவர்கள் நிர்ப்பந்தத்தை பயன்படுத்தி தேர்தல் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். மாநிலத்தில் வாக்குகளின் ஒப்பீட்டுறவை திரிக்க அவர்கள் இதைச் செய்கிறார்கள். மாநிலத்தில் நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடந்தால் அவர்களது வாக்குகள் கணிசமாகச்சரியும், இடதுசாரிகளின் வாக்குகள் பெருமளவு உயரும் என்ற பயத்தில் அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். 
அவர்களது வாக்குகள் பெரும்பான்மையை அவர்கள் அனேகமாக இழக்காவிட்டாலும், அவர்கள் வெற்றி பெறும் வித்தியாசம் குறையும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அவர்கள் இடதுசாரிகள் வலுவாக இருக்கக்கூடிய, சிறிது எதிர்த்து நிற்கக்கூடிய இடங்களில் குறிப்பாக அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
ராமச்சந்திரன்: இந்த வகையில் நேர்மறையான வளர்ச்சிப் போக்குகள் யாவை?
சூர்ய காந்த மிஸ்ரா: முதலாளித்துவப் பத்திரிகைகள் மீண்டும் மீண்டும் கூற விருப்பப்படும் வார்த்தைகளான, “இடதுசாரிகள் தொடர்ந்து ரத்தம் சிந்துகின்றனர்” (தொடர்ந்து தோல்வியடைகின்றனர்) என்பதை சுய வெளிப்பாடாக இனியும் தோன்ற வைக்க முடியாது. முனிசிபல் தேர்தல்களின் முடிவுகளைப் பார்க்கும்போது, பரந்த ஆதரவைப் பொறுத்தவரையில் சரிவை இடதுசாரிகள் தடுத்துநிறுத்த முடிந்துள்ளது. 
உதாரணமாக சிலிகுரி. சிலிகுரியில் மட்டுமல்ல, பல இடங்களில் திரிணாமுலின் மிரட்டலை எதிர்த்து நிற்பதும், முறியடிப்பதும் சாத்தியமே என்பதைக் காட்டியுள்ளன. இது ஒரு நேர்மறை வளர்ச்சிப் போக்கு. நான்காண்டுகளில் இது முதன்முறையாக ஏற்பட்டுள்ளது.
ராமச்சந்திரன்: வங்கத்தில் பாஜக எழுச்சி பெறும் ஆபத்து குறித்து?
சூர்ய காந்த மிஸ்ரா: அது ஒரு முக்கியமான வளர்ச்சிப் போக்கு. அது முனிசிபல் தேர்தல் முடிவுகளில் பிரதிபலித்துள்ளது. சுமார் ஓராண்டுக்கு முன்பு, திரிணாமுலுக்கு மாற்றாக பாஜக உருவெடுத்து வருகிறது என்றொரு பிரச்சாரம் நடந்தது. நாங்கள் அப்போது இடதுசாரிக்கு வேறு மாற்று இல்லை என்று உறுதியாகக் கூறினோம். 
முனிசிபல் தேர்தல் முடிவுகள் அதை உறுதிப்படுத்துகின்றன. திரிணாமுலுக்கு மாற்றாக பாஜக உருவெடுத்துவருகிறது என்ற ஆபத்து தவறானது என்பதை பாஜக ஆதரவு பெருமளவு சரிந்திருப்பதானது நிரூபித்துள்ளது. அது பாஜகவோ அல்லது காங்கிரசோ, மற்ற கட்சிகளனைத்தும் வாக்கு விகிதத்தைப் பொறுத்தவரை இடதுசாரிகளைவிடப்பின் தங்கியே உள்ளன என்பது நிறுவப்பட்ட முக்கியமான உண்மைகளில் ஒன்று.
ஆனால் என்ன சொன்னாலும், செய்தாலும், பாஜகவின் வாக்குவிகிதம் குறைந்துள்ளது என்று யாரும் விட்டேற்றியாக இருந்துவிட முடியாத அளவுக்கு நிலைமை சிக்கலானதும், கடுமையானதும் ஆகும். வகுப்புவாதம் மக்களின் ஒற்றுமைக்கும், மதசார்பின்மைக்கும் தொடர்ந்து ஒரு அச்சுறுத்தலாக உள்ளது என்பதையும், அந்த அச்சுறுத்தலை குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்பதையும் ஒருவர் மனதில் கொள்ள வேண்டும். வகுப்புவாதத்தை வாக்கு விகிதத்தைக் கொண்டு மட்டுமே மதிப்பிட்டுவிட முடியாது. மாநிலத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பைக் கடுமையாக பாதித்துவிடும் ஆற்றல் அதற்கு உண்டு.
ராமச்சந்திரன்: சமீபத்திய வளர்ச்சிப் போக்குகளிலிருந்து நீங்கள் என்ன முடிவுக்கு வருகிறீர்கள்?
சூர்ய காந்த மிஸ்ரா: எங்களது முடிவு என்னவென்றால், அனைத்து சிக்கல்களையும் மீறி, தற்போதைய நிலையானது இடதுசாரிகள் முன்னேறி, மேலும் வளர்ச்சியடையத் திறனுடையநிலை என்பதேயாகும். 

இது மக்களின் மன நிலையிலிருந்தும், கடந்த முனிசிபல் தேர்தலில் தாக்குதலை வெற்றிகரமாகத் தடுத்து நின்றதிலிருந்தும் தெளிவாகிறது. இந்தத் தாக்குதலை ஆளுங்கட்சி உள்ளாட்சி நிர்வாகத்தின் ஆதரவுடன் நிகழ்த்தியது. (மாநிலத் தேர்தல் ஆணையம் தனது கையறு நிலையைத் தெரிவித்துவிட்டது) மேலும் இந்த எதிர்த்துத் தடுக்கும் நிலையானது ஏறத்தாழ உடனடியாக நிகழ்ந்தது என்பதும், போராட்டத்தின் முன்னணியில் பெண்கள் நின்றனர் என்பதும் தெளிவு.
எனவே வளர்ச்சியடைந்துள்ள புற நிலைமைகள் இடதுசாரிகளுக்கு அதரவானவை. இடதுசாரிகள் தம்மை ஜனநாயகத்துக்கும், மதச்சார்பின்மைக்குமான போராட்டத்தில் உண்மையான மாற்றாக முன்னிறுத்திக் கொள்ளஆதரவானவை, மக்களின் வாழ்க்கை நிலைமீது அதிகரிக்கும் தாக்குதலுக்கெதிராக முன்னிறுத்திக் கொள்வதற்கும் ஆதரவானவை.
 அக நிலமைகள் ஸ்தல அளவில் பரந்துபட்ட போராட்டத்தை உருவாக்குவதிலும், மக்களையும், இடதுசாரிகளையும்இணைப்பதிலும், மதச்சார்பற்ற, ஜனநாயகப்போராட்டத்தில் இணைந்துள்ள கட்சிகளையும், மக்களையும் இணைப்பதிலும், அமைப்பை உருவாக்குவதிலும், உடனடியான எதிர்ப்புக்களை மட்டுமே நம்பியிருக்காமலும் இருப்பதை மிகவும் முக்கியமான பணியாக நாங்கள் கருதுகிறோம்.
 அக நிலைக் காரணங்கள் மனித விருப்பத்துக்கு மாறாக சுதந்திரமாக ஏற்படுவது; அதேசமயத்தில் அகநிலைமைகளை சூழலை சாதகமாக மாற்றிக் கொண்டு அகநிலைமைகளின் சிக்கல்களை வெற்றிகொள்ள உபயோகிக்க முடியும் – அது எமது முயற்சியையும், உறுதிப் பாட்டையும் சார்ந்தது. ஜனநாயகத்துக்கான இந்தப் போராட்டத்தில் இடதுசாரிகள் தான் – இடதுசாரிகள் மட்டுமே மாற்றை அளிக்க முடியும்.
தமிழில்- கி.ரமேஷ்


S.Raman, Vellore at 10:41 PM
Share

2 comments:

  1. Thamizh ThesiyamOctober 29, 2015 at 6:52 PM

    The same arrogance was done to them when CPM was in power, so now its their turn to give it back. around 20+ years jungle rule of CPM is responsible for this mess.

    ReplyDelete
    Replies
    1. S.Raman, VelloreOctober 29, 2015 at 8:13 PM

      தமிழ்தேசியம் என்றால் அபத்தம் என்று அர்த்தமோ? சி.பி.எம் வெறுப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது போல

      Delete
      Replies
        Reply
    2. Reply
Add comment
Load more...

‹
›
Home
View web version

About Me

My photo
S.Raman, Vellore
Trade Union Worker
View my complete profile
Powered by Blogger.