Friday, June 1, 2012

ஹை ! அத்வானிக்கு ஞானம் வந்தாச்சு .. .. அவருக்கு ஒரு கவிதை- யாரும் திட்டாதீர்கள்



ரத்த யாத்திரை நாயகன் அத்வானி மனம் திறந்து
பேசியுள்ளார்.

" காங்கிரஸ் மீது மக்கள் கோபம் கொண்டுள்ளார்கள்.
ஆனால் பாஜக மீதும் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
காங்கிரஸ் கட்சியின் ஊழல்களால் வெறுப்படைந்துள்ளார்கள்.
ஆனால்  பாஜக தொண்டர்கள் உற்சாகமாக இல்லை.
ஏனென்றால் அவர்களால் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரத்தை
முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை.
மாயாவதியால் ஊழல் புகாரால் நீக்கப்பட்ட அமைச்சர்களை
கட்சியில் இணைத்துக் கொண்டது, கர்னாடகா, ஜார்கண்ட்
விவகாரங்கள் பாஜக விற்கு நல்ல பெயர் தரவில்லை.
நான் பத்திரிக்கைக்காரனாக இருந்தவன். என்னால் மக்களின்
உணர்வுகளை துல்லியமாக கணிக்க முடியும்.
முன்பு இரண்டே இரண்டு எம்.பிக்கள் மட்டும் இருந்தோம்.
ஆனால் இப்போது பல எம்.பிக்கள், பல மாநில முதல்வர்கள்
இருந்த போதும், முன்பிருந்த உற்சாகம், வலிமை இப்போது
இல்லை"

இதுதான் அண்ணன் அத்வானி உதிர்த்துள்ள தத்துவ முத்துக்கள்.
அடுத்த பிரதமராக மோடி, மீண்டும் தலைவராக கட்காரி 
என்றெல்லாம் முடிவு செய்யப்பட்ட பின்பு விரக்தியில் 
மனம் திறந்துள்ளார் அத்வானி. 

பிரதமர் கனவு பறி போன வேதனையும் அதில் பிரதிபலிக்கிறது.

ஆசையை வேரறுக்க வேண்டும் என்று புத்தருக்கு ஞானம் 
போதி மரத்தின் கீழ் வந்தது. 

பேராசை நிறைவேற வாய்ப்பே இல்லை என்ற நிலை
வரும் போது முதலாளித்துவ கட்சித்தலைவர்களுக்கு
ஞானம் வருகின்றது. 

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக
அத்வானியை முன்னிறுத்துவோம் என்று பாஜக முடிவு
செய்திருந்தால் அண்ணன் அத்வானி இதையெல்லாம்
இப்போது வெளிப்படையாக பேசியிருப்பாரா?

அவருக்கு ஒரு கவிதை சமர்ப்பணம்.


எட்டாது என தெரிகின்ற போதுதான் 
திராட்சைகள் புளிக்கிறது.

பதவி கிட்டாது என தெளிவாகின்ற போதுதான்
இயக்கத்தின் ஓட்டைகள் தெரிகின்றது.

இனி கௌரவம் கிடைக்காது என்றால்
இயக்கம் மோசம் என்பேன்.

என்னை நீக்கினால் 
எல்லாமே அழிந்து போகும் என
சாபமும் கொடுப்பேன்.

நாற்காலி பறி போனதால்
ஞானம் கிடைக்கப் பெற்றவன் நான்.

கிடைக்கவே கிடைக்காது என
புரிந்ததால் முற்றும் துறந்த
முனிவன் நான்.

ரத்த யாத்திரைக்கு இனி வேலையில்லை,
ஏனென்றால் என் கட்சிக்கு நானும் 
இனி தேவையில்லை.  

No comments:

Post a Comment