Thursday, September 15, 2011

தீவிரவாதிகள் அழகாகவே இருப்பார்கள்

நேற்று  இரவு அன்பே சிவம் திரைப்படம் வீடியோவில் 
பார்த்தேன். திருட்டு வீடியோ அல்ல, கம்பெனி வெளியீடுதான்.
அதிலே கமல் மாதவ்னைப்  பார்த்து  தீவிரவாதிகள் 
பயங்கரமாக இருக்க மாட்டார்கள். அழகாகவே 
இருப்பார்கள் என்பார். என்னைப் போல என மாதவன்
முடிப்பார்.


அதைப்  பார்த்தபோது  நினைவுக்கு  வந்த ஒரு சம்பவம்
கீழே.    


1990 ல் கட்டாக் நகரில்  எங்கள்  சங்க அகில இந்திய 
மாநாடு. மாநாடு முடிந்து  கல்கத்தா  சென்று  வர 
திட்டமிட்டிருந்தோம்.  எந்த ஒரு புகை வண்டியிலும் 
முன் பதிவு கிடைக்கவில்லை. 


அதனால் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில்  காத்திருந்து
கல்கத்தா  செல்லும்  ஒரு புகைவண்டியில்  முன்பதிவு
செய்யாத ஒரு பெட்டியில்  ஏற முயற்சித்தோம். 
மூடியிருந்த  பெட்டியின்   கதவுகளை திறக்க 
தட்டி, தட்டி ஒரு வழியாக உள்ளே நுழைந்தோம்.


உள்ளே போனால் அதிர்ச்சி, காவல் துறையினரும்
ராணுவத்தினரும்  கையில் துப்பாக்கிகளோடு 
கடு கடு முகத்தோடு ஹிந்தியில்  திட்டிக் கொண்டே
உள்ளே  எங்களை அனுமதித்தார்கள்.


நடுவே  ஒரு இளைஞன்  25 வயது கூட  இருக்காது.
திரைப்பட நடிகர் அப்பாஸ் போல நல்ல வெள்ளை
நிறம், கண்களில் தீட்சண்யம், கதா நாயகன் 
போன்ற தோற்றம்.


என்ன அந்த இளைஞன் கையில் விலங்கு, கால்களில்
விலங்கு, இடுப்பில் இரும்புப் பட்டை கட்டி சங்கிலியை
ரயிலோடு இணைத்திருந்தார்கள். 


யார் எந்த இளைஞன் என்று ஆங்கிலம்  தெரிந்த ஒரு
ராணுவ வீரரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்
அதிர்ச்சி அளித்தது. 


உல்ஃபா  அமைப்பினைச் சேர்ந்த தீவிரவாதி 
அந்த இளைஞன் என்றும்  ஐந்து இடங்களில் 
வெடிகுண்டு வைத்தவன், நான்கு பேரை  
துப்பாக்கியால்  சுட்டுக் கொன்றவன்  என்றும்
விசாகப்பட்டினத்தில்  தலைமறைவாக  இருந்தவனை
மடக்கி கைது செய்து  கவுகாத்தி கூட்டிச் செல்கிறோம்
என்று  தெரிவித்தார். 


அந்த பால் வடியும் முகம் இன்னமும் நினைவில்
உள்ளது. 


ஆக தீவிரவாதிகள்  அழகாகவே  இருப்பார்கள்.  
     

1 comment: